ஞாயிறு, 24 மே, 2020

மேலப்பாளையம் தெருக்கள்....பெயர் மாறிய கதை



எனக்கும் ....எங்க தெரு காரங்களுக்கும் ...லெட்டர் , கிட்டர் போட்டா...ஆதியில் அய்யர் தெரு அப்படின்னு போட்டு அனுப்புவாங்க.

அதுக்குப் பொறவு உச்சிலி லெப்பைத் தெருவுன்னு போட்டு அனுப்புவாக.... இப்பம் எல்லாம் புகாரி தங்கள் தைக்கா தெருன்னு நெடுப்பமா தெருப்பேர எழுதி போடுறாங்க.

இப்போ உள்ள சின்ன ஊரார்லாம் "அதென்னங்க உங்க தெருவுக்கு இத்ண தினுசா பேரு? "...அப்படின்னு கேள்வி வேற கேட்கிறாங்க .

" எப்பா எங்க தெருவுக்கு மட்டுமில்லே... நம்ம ஊர்ல பல பேருக்கு பழைய தெருவுங்க பேரு தெரியாது" ன்னு ஒரு போடு போட்டேன்.

"என்னத்த இப்பிடி சொல்றிய?
" பழய பேரா?"....

"ஆமாண்டே...பழய பேர் தான்" .
நம்ம ஊருக்கு அசல் பேரே...மங்கை நகர்.அது திரு மங்கை நகர்ன்னு ஆகி...திருவி...மேல் பாளையம், மேலப்பாளையமா ஆகிப்போச்சு.

சரீ... தெருப்பேருக்கு வா...அந்த விஷயத்த பேசுவோம்.

மஞ்சி வீட்டுத்தெரு...சீக்கா லெப்பை தெரு...அதுக்கு ஆதிப்பேரு ஷேக் அப்துல் காதர் லெப்பை என்கிற சிக்கலார் லெப்பை தெரு மாறி....அப்பிடி ஒரு பேர் இருந்து பஷீர் அப்பா தெருன்னு ஆச்சு.

சரக்கி மூப்பன் தெரு...காயிதேமில்லத் தெரு ஆச்சு.

தண்ட லெப்பை தெரு ஜமாலியா தைக்கா தெருன்னு வந்துச்சு.

பள்ளிவாசல் மூப்பன் தெரு உமறுப்புலவர் தெரு....ஆச்சு.
அதுக்கு நம்ம புலவர் .த.மு.சா.காஜா முகைதீன் காரணம்.

தமிழ் இலக்கியத்தில் சீராப்புராணம் பாடிய உமறுப்புலவர் மீது அந்தக்காலத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது....ஆகவே உமறுப்புலவர் தெருன்னு பேர் வந்துச்சு.....இன்றைய உஸ்மானியா அரபிக்கல்லூரி இருந்த பழைய இடத்தில் இலாஹி பிரஸ் என்று அச்சகம் வைத்து இருந்தார். அன்றைய காலத்தில் அவர் அ.தி.மு.க.இயக்கத்தில் அமைப்பாளராக MGR அவர்களால் நியமிக்கப்பட்டு இருந்தார்..

முகம்மது லெப்பைதெரு, ஹஸ்ரத் பிலால் தெரு...ஆச்சு.அதுக்கு MOA. சுக்கூர் மாமா தான். காரணம்.அதுக்கு தனி கதை இருக்கு.

1976-77 ஆம் ஆண்டுகளில் இசைமுரசு நாகூர் ஹனீபா...பெரியார் பிலாலின் தியாக வாழ்வை கூறுவேன் இதோ...என்ற ஒரு பாடலை இசைத் தட்டாகவெளியிட்டார். பொறவு...அது கேசட்டாக பதிஞ்சு ஊர் முச்சூடும் பரவியது.

இசைத்தட்டு பாட்ட விட...மேடைகள்ள  இசைமுரசு நம்ம...நாகூரனிபா அண்ணன் பாடுறது...ரொம்ப உருக்கமா...கடைசில பிலால் பாங்கு சொல்லி...அப்படியே சரிஞ்சு ரூஹ விடுற சரித்திரத்தை.... முழுசும் பார்த்த மாதிரி இருக்கும்....

இந்தப்பாட்டு வர்றதுக்கு முந்திலாம்...யாராவது ஆலிம்சா மாருங்கதான் ஹஸ்ரத் பிலால் வரலாறை கூட்டங்கள்ல சொன்னாத்தான் உண்டு....

பெரும்பாலான அப்பாவிகள் அப்ப மார்க்கம் மற்றும் நபித்தோழர்கள் வரலாறு  தெரியாத ஆட்களாத்தான் இருந்தாங்க....

அந்தக் கேசட்ல இசைமுரசு நாகூர் ஹனீபா பாடுனதக்  கேட்டுட்டு பல பேர்கள் கண்ணீர் பொங்க... விக்கி விக்கி அழுவாங்க...அவ்வளவு ஈடுபாட்டோடு பாடுகிற இசைமுரசுவை பார்த்துக் கொண்டு பாடல்களைக் கேட்பார்கள்.குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள் கச்சேரி நடக்கும்.அதுவும் நள்ளிரவுகள் தாண்டியும் நடக்கும்.

மேலப்பாளையத்து ஜின்னா மைதானத்துல 1977 ல முஸ்லிம் ஏழைப்பெண்கள் திருமண வாழ்வு அமைப்புச் சங்கம் நிதி வசதி பெற... சங்கத்துக்கு உதவி செய்ய இசைமுரசு அவர்கள் இலவசமாக ஒரு கச்சேரியை நடத்தி...
அதிலே வசூலான தொகை முழுசையும் ஏழைப்பெண்கள் வாழ்வமைப்புச் சங்கத்துக்கு கொடுத்தார்கள் .

அந்த இசை நிகழ்ச்சியில் பெரியார் பிலாலின் தியாக வாழ்வை பற்றி பாடியதைக் கேட்ட ஆண்களும் பெண்களும் அழுது கொண்டே இருந்தார்கள் என்கிற காட்சி இன்றும் என் கண் முன்னே நிழலாடுகிறது.

முஹம்மது லெப்பைத் தெரு MOA.சுக்கூர் மாமா அவர்கள் தன்னுடைய வீட்டு வாசலில் டேப் ரிகார்டரில் இந்த பாடலை போடும் போது.... அவரைச் சுற்றி வயசு வித்யாசம் இல்லாமல் இருந்துகொண்டு இந்த பாடலை ரசித்து கேட்பார்கள். அங்கேயும் கண்ணீர் சிந்துவார்கள்.

காலை.... மாலை... இரவு என்று இந்த காட்சிகள் நடக்கும்.
சுக்கூர் மாமா பக்கத்தில் முகம்மது லெப்பை தெரு மறைந்த பச்சை வேட்டி கச்சா மஸ்தான், காளை மைம்பிச்சை இன்னும் சில பேர்கள் அமர்ந்து கண்ணீர் மல்க இப்பாடலைக் கேட்பார்கள்.

அப்போது தெருப்பேர மாத்த நகராட்சி ஏற்பாடு செஞ்சுது.

இதுதான் ஒரு வாய்ப்பு என்று அந்த முகமது லெப்பை தெரு பேரை நீக்கிவிட்டு ....ஹஸரத் பிலால் தெரு என்று தன்னுடைய செல்வாக்கை ....மேலப்பாளையம் நகர் மன்றத்தில் முன்னிறுத்தி பெயரை மாற்றினார்.

தெருவின் பெயராக தொலங்கிய முகம்மது லெப்பை ஆலிம் அவருக்கு பெத்தவாப்பா என்பது இன்னொரு தகவல்.அவர் பேர தான் அந்தத் தெருவுக்கு வச்சு இருந்தாங்க.

"லட்சுமிபுரம் தெரு தெரியுமா?"...
"லட்சுமிபுரம் தெரா?"
"ஆமோ...வ்"
"அது எங்க இருந்துச்சு?"
"குண்டு தெரு...தெரியுமா"
"ஆமா...நம்ம காஜா நாயகம் தெரு.அதுக்கும் தனி  வரலாறு இருக்கு"....

குட்டி மூப்பன் தெரு செய்யது
" இஸ்மாயீல் தங்கள் தைக்கா தெரு...
ராவுத்தர் லெப்பை தெரு, அத்தியடி தெரு.... பெரிய கொத்துபா மேல, கீழ, வடக்கு, தெற்கு... என்று நீண்ட பெயர்த்தொடரோடு ஆகிவிட்டது.
பள்ளிலெப்பை தெரு
ஆசுரா தெரு ஆச்சு... எங்க தெரு இதுக்கெல்லாம் பேர் வச்சது RMA. அப்துல் சமது மாமா தான்.

வீராத்தெரு...கீழ வீரராகவத்தெரு செய்து லெப்பை தெருவாய் இருந்து செய்குல் அக்பர் தெருவாச்சி.
மூப்பன் பக்கீர் தெரு... அக்பர் தெரு ஆச்சு....

ஹாமீம்புரம் தெற்குத்தெருவுக்கு அப்புறம் உள்ள தெருக்கள் யாவும்...1985 க்கு பிறகே உருவாகின.

சரீ.... எதுக்கு இந்தப் பழைய பேர...எதுக்கு மாத்தினாங்கன்னு தெரியனுமே...

1977 ஆம் ஆண்டு மொத தடவையா மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட MGR ஆட்சிக்கு வந்தார்.... ADMK முதல்வர் .....MGR அவர்கள்   தெருக்களின் பெயர்களில் உள்ள  உள்ள சாதிப்பெயரை எடுக்கப் போறதா சொல்லி  உத்திரவு போட்டார்....அதன் தொடர்ச்சியா.....மேலப்பாளையம் தெருக்களின் பெயரில் இருந்த.....லெப்பை........., பிள்ளை.....,மூப்பன்.... இதுவும் ஜாதி ன்னு சொல்லி அந்த பெயர்களை அரசாங்கம் நீக்கி உத்தரவு போட்டது...

சென்னையில் பல தெருப்பெயர்கள் ஜாதிப்பெயர்களோடு தான் இருந்தன.புரட்சித்தலைவர் MGR குடியிருந்த ஆற்காடு முதலியார் தெரு ஆற்காடு தெரு என்றும்...மல்லன் பொன்னப்ப முதலி தெரு பொன்னப்ப தெரு என்றும்....லெப்பை பள்ளித்தெரு,  பள்ளித்தெரு என்றும் புது நாமங்கள் கொண்டன......அவை சிரிப்பைத்தந்தன.

அத வச்சித்தான்
குட்டி மூப்பன் தெரு,
உச்சிலி லெப்பை தெரு,
மைலக்காதர் லெப்பை தெரு
செல்வக்காதர் லெப்பை தெரு
பள்ளிவாசல் மூப்பன் தெரு
சரக்கி மூப்பன் தெரு
ராவுத்தர் லெப்பை தெரு
அத்தியடி தெரு
பள்ளி லெப்பை தெரு
சப்பாணி லெப்பை தெரு

முன்னாள் சேர்மன்கள் LKM. அப்துர் ரகுமான் சாகிப், MAS. அபூபக்கர் சாகிப், ஆகியோர் முயற்சியால் அவர்கள் வாழ்ந்த தெருக்களில் இருந்த லெப்பைகள் நீக்கப்பட்டு மைலக்காதர் தெரு, சப்பாணி ஆலிம் தெரு என்று ஆகியது....MAS அபூபக்கர் சாகிப் சப்பாணி ஆலிமின் குடும்பம் என்பது கூடுதல் தகவல்.

பிள்ளை, மூப்பன் என்பது இங்கே ஜாதிப்பெயரான்னு கேட்டால் ஆமான்னு தான் சொல்லணும்...சண்டைக்கி கிண்டைக்கி வந்துராதிய...அதிலும் வரலாறு இருக்கு.

ஆலப்பிள்ளை தெரு,
மொத்தை மீராப் பிள்ளைத்தெரு,
மூலன் அகமது பிள்ளை தெரு....
 இன்னும் அந்தப் " பிள்ளை" பெயரில் தான் உள்ளன..
சமாயினா காதர் மீத்தீன் மூப்பன் தெரு, சமாயினா ஷேக் முகமது மூப்பன் தெரு என்கிற பெயரில் மூப்பனை தூக்கிவிட்டார்கள்.

அது போல....மூப்பன் பக்கீர் தெரு என்கிற பெயரை மாற்றித்தான் அக்பர் தெரு என்று வந்தது...பள்ளி வாசல் மூப்பன் தெருவை மாற்றித்தான் உமறுப்புலவரும்,சரக்கி மூப்பனை மாற்றி காயிதேமில்லத் பெயர்களும் வந்தன.

ஞானியார் அப்பா பெரிய தெரு, சின்னத்தெரு...இப்போது வெறும் பெரிய தெரு சின்னத் தெருவா...இருக்குது.

யாதவாள் தெரு, மறக்குடித் தெரு என்பவை .... பாரதியார் தெரு என்றும்
மருது பாண்டியர் தெரு என்றும் ஆட்டுவாணியர் குடியிருப்பு ஆண்டவர் தெரு என்றும்......மரைக்காயர் தெரு முகைதீன் ஆண்டவர்  தெரு என்றும் மாறிப்போனது.

இன்றைய அண்ணா வீதிக்கு....அப்போதெல்லாம் மேல நத்தம் மெயின் ரோடுன்னு  தான் பேர் இருந்தது.MAS.அபூபக்கர் சாகிப் காலத்தில் அது அண்ணா வீதியாக மாறியது.

1969-75 ஆண்டு அன்றைய கால கட்டத்தில் LKM,அப்துர் ரகுமான் சாகிப்
 மேலப்பாளைய நகர்மன்றத்தில் முஸ்லிம் லீக் சேர்மனாக இருந்த போது,
அரசு நடுநிலைப்பள்ளி காயிதே மில்லத் நடு நிலைப்பள்ளியாகி உயர்நிலைப்பள்ளி யாக மாறி...தற்போது மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து நிற்கிறது.....

அதற்கு முன்னரே அபுல் கலாம் ஆசாத் ரோடும், நகர் மன்றத்தில் மௌலானா முகம்மது அலி மண்டபமும் வந்து விட்டன.

1977ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் MGR அவர்கள் ,அ.தி.மு.க ஆட்சி அமைக்க தேர்தல் பிரச்சாரம் செய்ய மேலப்பாளையம் முனிசிபல் அலுவலகம் மேற்கே இருந்த காலியிடத்தில் மேடை அமைக்கப்பட்டு நள்ளிரவும் தாண்டி பேச  வந்து இருந்தார்.....அதனை அண்ணா திடல் என்று அழைத்தார்கள்....


எந்தப்பேர் எப்பிடிப்போனாலும் எங்க தெருவை ஐயர் தெருன்னு தான் இப்பவும்...கூப்பிடுதாக.

கருத்துகள் இல்லை: