வியாழன், 30 ஜனவரி, 2014

“அக்கரைப் பச்சை.”



இன்னும் எத்தனை நாட்கள்......

விவசாயம்-விவசாயி என்று பேசப்போகிறேனோ ?......


தெரியவில்லை...
கல்லூரி முடித்தேன்........
கனவுகள் கண்டேன்....
இரவு-பகல் ஒன்றாய் ஓடி...ஆடிய
சங்காத்திகள்......
என்னை விட்டு ஒவ்வொருவராய்...
வெளி நாடுகள் சென்றார்கள்...
ஒரு சிலரைத்தவிர

தனிமை....அவ்வளவு தனிமை....அப்போதான் .
எப்போதாவது வரும் கடிதங்கள்,
பெருநாட்களில் வரும் தொலைபேசி அழைப்புகள்....
அவைதான் நட்புச்சங்கிலியை பாதுகாத்தன....
 
என்னால் முடியவில்லை......
என் காலில் நானே போட்டு வைத்தேன்...
விலங்குகள்.......
அங்க இங்க ஓடமுடியாமல் .......
சமூகப் பணிஎன்றும்....கல்விப்பணி என்றும்....
நம்மைவிட்டால் யார் செய்வா?”......
நான் கொண்டது .........
என்னை....பித்து நிலை.....கண்டுவிட்டான்
என்றார்கள்.
எல்லா தந்தைக்கும் வரும் கவலைகள்
என் தந்தைக்கும்.

என்னிடம்,
கோபமே கொள்ளாமல்....
வெளிநாடு போறியாப்பா?....” என்று கேட்டுப்பார்த்தார்..
இல்ல....வாப்பா.....நான் இங்கதான்....
இந்தியால தான்.”...என்றே சொல்லிவைத்தேன்..
வேறென்ன செய்யப்போற?.”....
கவலைகள் சூழக்கேட்டார்.

அதான்....நான் விவசாயம் செய்யப்போறேன்என்றேன்...
உனக்கு சரியா வருமாப்பா?”
ஏன்....வாப்பா.?”......
நம்ம சொல்ல மனுஷனும் கேக்க மாட்டான்,
மண்ணும் கேக்காதுப்பா”.....
சலனமே இல்லாமல்....
எங்க வாப்பா சொன்ன போது
கலக்கமாகத் தெரிந்தார்......
இல்லை......நீங்க நினைப்பது தப்பு.”....
நவீன தொழில் நுட்பம்.....கருவிகள் என்று சொல்லி
சம்திக்க வைத்தேன்...
அதைச்செயலிலும் காட்டினேன்.

தினமும்.....நான் பார்க்கிற
விவசாயிகள் வாழ்க்கை
போராட்டங்கள் தான்.......


காடுவெட்டி என்று ஒரு ஊர்..
நெல்லை மாவட்டம் களக்காடுபக்கம்.
அங்கும் பாலைநிலம் போல்....
சில நிலங்கள்....
அதைப் பார்க்கச்சென்றேன்.
அப்போது தண்ணீர் மட்டம் பக்கத்தில்...
அதை வைத்து பயிர் வளர்த்தேன்....
இல்லை....உயிர் வளர்த்தேன்....
செடிகளும்,கொடிகளும்,மரங்களும்.

இரவு-பகல் எந்நேரமும்
பச்சைக் கனவுகள்......
அதே நினைவாய்....

பல நேரம் போன் பேச
மூன்று கிலோ மீட்டர் வரவேண்டும்...
ஒரே நாளில் தோட்டத்துக்கும் வீட்டுக்கும்
பலமைல்கள் படைஎடுத்தேன்...
மங்கம்மா சாலையில் போயிருந்தால்
அதே தூரத்தில் மதுரை.....வந்திருக்கும்.

அவ்வளவு உழைப்பு......
அவ்வளவு வெறி.....
அவ்வளவு ஆர்வம்....

அன்று இருந்த வேகம் என்னிடம் இன்று இல்லை....
துணிவு இல்லாமை என்றும் இல்லை...
இயலாமை...... மட்டும்தான்.
இன்னொரு இல்லாமை
எது?.....
தண்ணீர்....தண்ணீர் தான்..

நம்மில் பலருக்கு
நெல்லும்,வாழையும் எப்படி விளைகிறது என்று
பாலபாடம் கூடத்தெரிவதில்லை......

கடந்த இரண்டு ஆண்டுகளாய்...கிராமத்தில்
பருவமழை பொய்த்து.... பொய் சொல்லிவிட்டது....
இருக்கிற தண்ணீரை உயிர் தண்ணீராய்......
சொட்டு நீராய் ஊற்றிக் கொடுக்கிறோம்.....
ஆறுகளில் மண் எடுத்து போய்விட்டதால்
ஆற்றின் நீரும் ஆழத்துக்கு ....
அதுவும் வறண்டு .......இல்லாமல் போய்விட்டது.
காலம் காலமாய் வற்றாமல் ஓடி வந்த
பச்சை ஆற்றுத் தண்ணீர்
அனைக்கட்டால் தவளவே இல்லை....
அதனால் தண்ணீரும் இல்லை...

மனுஷனுக்கு சாப்பிட பல இடங்கள்....
தண்ணி குடிக்கவும்-அடிக்கவும்
பல இடங்கள்....
கோடை வந்தால் குடிக்க மடங்கள்....
'
ஒருநாள் பெருமை காட்ட'
ஆடம்பரம் காட்டும்
தண்ணீர் பந்தல்கள்...
ஆனால்.....மாடுகளும்,ஆடுகளும்
எந்தக் கடைக்குப் போய்
மினரல் வாட்டர்வாங்கிக் குடிக்க?
பசித்த வயித்துக்கு அதுகள் திங்க
புல் கூட கரைகளில் இல்லாமல் போச்சு.......

அதுங்க கைல என்ன ஒட்டா இருக்கு?
எல்லாரும் பார்த்து கையேந்த?.....

கையேந்தி பவன் முதல், நட்சத்திர ஓட்டல் வரை
பலவகை உணவுகள் .....மனுஷனுக்கு உண்டு.
ஆனால் வாயில்லா ஜீவன்கள்......
வயித்துப் பசி ஆத்த ......
எந்த கடையில்
வைக்கோலும்.....புல்லும் விக்கிறாக?
என்று கேக்குமா?
அதுகளுக்கு வாங்கத்தெரியாதே....

அதுங்க கிட்ட மணி பர்ஸ் ஏது?
எ.டி,எம்.கார்டு ஏது?

ஆனாலும் என்னால் பார்த்துக் கொண்டு
இருக்க முடியாதே....
அதுங்களுக்கு
என்ன விலை கொடுத்தாவது
வாங்கித்தருகிறேன்....
எவ்வளவோ...இழந்துவிட்டேன்.....
அதற்காக.....

அந்த வாயில்லா ஜீவன்களை.....
கசாப்புக்கா நான் அனுப்ப முடியும்?
சொன்னால் நம்ப மாட்டார்கள்
என்னை பார்க்க விட்டால்......
'
கண்ணீர் விடுபவை' அவை....

எய்யா.. நீ இப்படிக் கலங்கி நின்னா?
ஒன்னு மில்லாத விவசாயி
எங்கையா போவான்?.....
எங்க தேவர்; என்கிட்டே கேட்டார்.
பதில் சொல்வார் யாரும் இல்லை...

கடைக்காரர்களுக்கு
தினமும் லாபம் கிடைக்கிறது.

அரசாங்க ஊழியர்கள்...
மாதம்
ஒன்னாம் தேதி வந்துவிட்டால்
கையிலே காசு....
அதையும் தாண்டி.....
பலர் பை நிறைய வாங்குகிறார்கள்
எந்த ஆத்மி வந்தால் நமக்கென்ன ?
அப்புறம் திபாவளி போனஸ்
பொங்கல் பரிசு’.. வேற.....
எத்தனையோ ஓய்வூதியங்கள் வேறு....
திருவிழாக்கள் வராதா?.....
என்று ஏங்குவோர் பலர்.....

இன்னும் மூணு மாசம் தள்ளி வராதா?
என்று தவிப்போர்.......
கிராமங்களில் நிறைய இருக்கிறார்கள்...
பாழாப் போன பொருளாதாரம்
நோய் நொடி வந்து,
படிப்புக் கனவுகள் வந்து,
கொடுக்கல் வாங்கலை
வாழ்வித்துக் கொண்டு இருக்கிறது...

பொஞ்சாதியோடும்,பிள்ளை குட்டியோடும்
டவுன் பக்கம்
என்னைக்காவது வந்தால்
தொலைஞ்ஞான்.....

"
எங்கையா......லைசன்சு....
எல்மட்டு ஏய்யா போடல்ல?
கட்டுயா பைன"........
.
"
ஆத்துக்குல குளிக்க வந்தன்.....
அப்புமாயா எல்மட்டு?"....
அவன் குரல் யாருக்கு கேக்கும்?
அதுக்குள்ளே...அவன்
பொண்டாட்டியும் பிள்ளைகளும்
அதைப் பார்க்கும் மிரட்சி
மனசு....தாங்காது.....

சட்டத்தின் காவலர்களுக்கு
சட்டத்தைக் "காக்க வேண்டிய"
'
கடமை" இருக்கிறதே .........
அன்னைக்கு அந்த விவசாயிதான்
"
ஆப்புட்டான்.".......

பாவேந்தர் சொன்னது போல
தன் பெண்டு....தன் பிள்ளை...தன் வீடு,
தன் சுற்றம் வாழ்ந்தால் போதும்
என நினைக்கின்றார்கள் .......

மாசச் சம்பளக் காரர்கள்
கொடுத்து வைத்தவர்கள்.....

ஆனாலும் விவசாயிக்கு
பச்சையையே பார்த்து வளர்ந்ததால்
தூரத்தில் தெரிவதெல்லாம்
பச்சையாய் தெரிகிறதே....

அக்கரைப் பச்சை.
விவசாயிகள் பற்றி பேசிக் கொண்டு இருந்த
அந்த பச்சை தலைப்பாகிழவனும்
இயற்கையோடு
போய் சேர்ந்து விட்டான்
ஈரோட்டுச்சிங்கம் தந்தை பெரியார் போல...

 இந்தப்பழம் ஏரோட்டிகளின் சிங்கம்......

வயக்காட்டுக்கு போக வழியில்லாமல்
முன் முகப்பை எல்லாம்
பிளாட் போட்டு வீடு கட்டி தடுத்தால்....
சோத்த விளைய வைக்க எங்க போக?...
எப்படிப் போக?

அந்த மனைகளில்.......
கட்டப்படும் வீடுகளுக்கு
எந்த நடை முறையும் இல்லாமல்
திட்டமும் இல்லாமல் கொடுக்கப்பட்ட
மின் விளக்குகள்
வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
இவ்வளவு கொடுத்து கரண்ட் வந்தது
"
இவ்வளோ கொடுத்து தண்ணி வந்தது."....

பாவம் விவசாயி.....
நானும் தான்.


வியாழன், 9 ஜனவரி, 2014

அன்பின் வலிகள் .....



இயற்கையும் அது சார்ந்த தொழிலிலும் இருக்கும்போது வரும் மகிழ்ச்சியும்,வருத்தமும் இயற்கையாகவே இருக்கும்.

இதென்ன புதுசா ஒரு தத்துவமுன்னு யாரும் கேக்க மாட்டாங்க... வயலில்,வரப்பில் நடக்கும் போது வேளாண் தொழில் இருப்பவர்கள் எறும்புக்கடிகளுக்கும், முள் குத்தல்களுக்கும் ஆளாவது என்பது, தினசரி நடக்கும் மாமூலானவிஷயங்கள் தான்.

அது தேள், நட்டுவாக்களி, பாம்புக்கடி என்பது அசாதாராணமானது...தேள்கடிக்கு மருத்துவம் செய்யாமல் மண்டையைப் போடுபவர்கள் கதை, கிராமங்களில் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படியெல்லாம் நடக்கும் என்பதற்காக யாரும் வயல், வரப்புகள் பக்கம் போகாமல் இருப்பதில்லை.
அண்மையில் குற்றாலம்,வைரம்ஸ் நகர், சீனாதானா விருந்தினர் இல்லம் பக்கம், ஒரு மாலை நேரத்தில் சர்வ சாதாரணமாக ஊர்ந்து வந்த மிகப் பெரிய மலைப்பாம்பை பார்த்துவிட்டு, “உதவி,.....ஓடிவாங்க,......பாம்பு.....  அப்படீன்னு வார்த்தைகள் கூட  வெளியே வராமல்,வேர்த்து விறுவிறுத்து,  விக்கித்துப் போன நண்பர் ஒருவரைப் பார்த்து நான் சிரித்த சிரிப்பால், அவர் இன்று வரை என்னோடு பேச்சே இல்லாமல் இருக்கிறார்....அடுத்த அஞ்சாவது நிமிஷம், என்னை கூப்பிடக்கூட நேரமில்லாமல் அல்லது பயந்து   அங்கிருந்து புறப்பட்டு  திருனவேலிக்கு.ஓடோடி வந்துவிட்டார்...
"மனுஷன் குற்றாலத்துல  இருப்பானா?"  அப்படீன்னு அவர் கேட்ட கேள்வி என்னை இன்னும் அதிகமாக சிரிக்க வைத்தது....
பாம்புகள் நடமாடும் காட்டில் நாம், இருந்தால் அதுங்க  வரத்தானே செய்யும்...அதுங்க, உங்களுக்காக வெளி ஊருக்கா போக முடியும்?”..... அப்படின்னு அவருக்கு புரிகிற மாதிரி கேட்டாச்சு...”.நீ என்னை தனியா விட்டுட்டு போனப்பாரு ?அத..... அதத்தான் ஏத்துக்க முடியல்லைங்கான்...அடேய் ....உன்ன பாம்பு கடிக்கனும்ன்னு, எனக்கு என்னடா ஆசை?” அப்படி இப்படின்னு எவ்வளவோ சொல்லியாச்சி ஆனாலும் மனுஷன் பேசித்தொலைக்க மாட்டேங்கான்.மசிய மாட்டுக்கான்.
பலருக்குத்  தெரியாது; கடந்த இருபது ஆண்டுகள் காலமாக தாமிரபரணி நதியோரம் பிடிபடுகிற பாம்புகள் குற்றாலம் சித்தருவி பக்கம் தான் விடப்படுகிறது என்பது. அது தெரிஞ்சால்  பலர், அந்தப் பக்கம் கூட வரமாட்டார்கள்..... 
நான் விவசாய வேலைகள் செய்கிற காலம் முதற்கொண்டு, பலவகை பாம்புகளைப் பார்த்து வந்துள்ளேன்....கால் மிதிக்கும் பக்கத்தில், அதைப் பார்த்த அதிர்ச்சியில, சுருண்டு கிடக்கும் பாம்பைத்தாண்டி குதித்து வந்து இதயம் படபடக்க ஓடியும் வந்துள்ளேன்.
பாம்புன்னா நடுக்கம் வரத்தானே செய்யும்..அதுவும் படம் எடுத்து மூஸ்....ஸ்...ஸ்..என்று பாயும்  நாகப் பாம்புகள் பயமுறுத்தும் போது?...வேறு என்ன செய்ய?......அதப் பார்த்து சிரிப்பதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும்....
எங்க தோட்டத்தில் பரம சிவக்கோனார் என்கிறவர்  கொஞ்சம் வயசாளி...அந்த ஆள் பாம்பைக் கண்டால், கையில் கம்பிருந்தாலும் அதை அப்படியே தரையில் போட்டு விட்டு,  பய பக்தியோடு,மேல் துண்டை இடுப்பில் அவசர அவசரமாக கட்டிக் கொண்டு  ....... நாகராசா......எய்யா.....போயிடுய்யாஅப்படீன்னு பாட்டு வேறு படிப்பார்....ஏன்யா...இப்படி?” என்று கேட்டால்...எங்க அப்பாரு...சொல்லி இருக்காங்கையாஅப்படீம்பார்.
எங்க வீட்டில் நான் ராத்திரி வேளைகளில் தோட்டத்தில் தண்ணி பாய்ச்சலுக்காக புறப்படும்போதெல்லாம் எங்க உம்மா சுலைமான் நபியை நினைச்சுக்கோ....அவங்களுக்குத்தான் எல்லா விலங்குகளும் வசப்பட்டுச்சுஅப்படீம்பாள்..எங்க வீட்டம்மாவோ கையில லைட்,கம்பு  இல்லாம அங்க, இங்க போகாதீங்கஎன்று ..ஒரு ஆலோசனையும் தருவார்.
விலங்குகளால், ஊர்வனவற்றால் பகலில் வெளிச்சத்திலும்,இரவில் இருட்டிலும் விவாசாயத்தொழிலில் உள்ளவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டியதுள்ளது....அது பயம் இல்லை...கொஞ்சம் முன்எச்சரிக்கைதான்.
ஆனால.....பறப்பனவற்றால்?...... 

மே மாத இறுதியில் ஒருநாள் மதியம்
,கோடை விடுமுறை முடியப்போகும் நேரம்....பள்ளிக்கூடம் திறக்க இன்னும் ஐந்து  நாட்கள் இருந்தது. சரி, ”எங்க  போறோம்? எங்க வாறோம்?  இன்னைக்கு பிள்ளைகளோட தோட்டத்துக்கு போவோம்ன்னு எல்லோரையும் அழைச்சிக்கிட்டு போனேன். அன்னைக்கு, காரோட்டியும் நானே.
எம் பிள்ளை சின்னவள் இன்னைக்கு நான் பிறந்தநாள்.....இன்னைக்கு நாம எல்லோரும் தோட்டத்துக்கு போறோம்என்று சந்தோஷமாகச் சொன்னாள்...

வீட்டில் இருந்து கொண்டுபோன சாப்பாட்டைத்  தட்டில் வைக்கச்சொல்லிவிட்டு, பம்ப் செட்டில் இருந்து, செல்லும்  தண்ணீர் , தென்னந் தோப்பில் சரியாகப் பாய்கிறதா? என்று பார்த்து வரப் போனேன்.

ஒரு இடத்தில்  தென்னைக்கு அடியில், சொட்டு நீர் வருகிற அந்தக் குழாயின் மேல்,  ஒரு காய்ந்த தென்னை ஓலை ஒன்று, குறுக்காகக் கிடந்தது..  மட்டையின்  அழுத்தத்தினால் மற்ற மரங்களுக்குத் தண்ணீர் சரியாகப் பாயாதே,என்கிற கவலையால் அந்த ஓலையைத்தூக்கினேன்...

அந்த மட்டை ஒரு,இரு நாட்களுக்கு முன்பாகத்தான் மரத்திலிருந்து கீழே விழுந்திருக்க வேண்டும். அதை நான் தூக்கியவுடன்......நான் எதிர் பார்க்காத ஒன்று நடந்தது......

புஸ்.....என்று கரும்புகை போன்று ஏதோ கூட்டமாகக் கிளம்பியது..முதலில் நான் கொசுக்களோ என்றே நினைத்தேன்....அது தேனீக்களும் அல்ல,குளவிகளும் அல்ல என்பது புரிந்தது...அய்யோ இது விஷ வண்டுகளாச்சே...என்று கொஞ்சம் சுதாரிக்க ஆரம்பித்தேன்... நான் படபடப்புடன் ஓடத்துவங்கினேன்... நூற்றுக்கணக்கான கடந்தைவண்டுகள் என்னைத்தாக்க மூர்க்கமாக பறந்து வந்தன...ட்ராக்டர் மூலம் உழுது போட்ட அந்த நிலத்தில், தட்டுத் தடுமாறி என்னால் முடிந்த மட்டும்  ஓட ஆரம்பித்தேன்.

என் பிள்ளைகளும்,என் மனைவியும் இருந்த திசையில் வந்த போதுதான், நாம் அந்தப்பக்கம் போககக் கூடாது.போனால் அவர்களையும் அந்தக் கூட்டம் கொட்டித்தீர்த்துவிடும் என பயந்து எதிர் திசையில் போகவேண்டுமென முடிவு கட்டி,கிணற்றில் குதிக்க மறுபுறம் ஓடினேன்...ஆனாலும் அந்த வண்டுகள் விடவில்லை...நூற்றுக்கணக்கில் என்னைத்துரத்திக் கொண்டு வந்தன...
என்னால்  ஒருகட்டத்துக்கு மேல் ஓட முடியவில்லை..என் கைகளால் அவைகளை விரட்டினேன்.....பலனளிக்கவில்ல...என் முதுகு,பிட்டம்,தொடைகள் கால்கள்,இன்னும்தலை,கழுத்துப்பகுதிகளில் கொட்டிதீர்த்தது..எல்லா இடங்களிலும் தீக்கங்குளை வைத்து பொசுக்கினால் எப்படி வலிக்குமோ அப்படி ஒரு வேதனை....என்னால் தாங்க முடியவில்லை..

இதற்கிடையே நான் அங்கும், இங்கும் ஒடுவதைப்பார்த்த எங்க பாண்டியன் பதறிப்போய்விட்டார். வயோதிகரான அவர்  நான் ஓடிய திசைக்கு அவரும் ஓடிவந்தார்...என் முதுகில், டி சர்ட்டில்,பேண்ட்டில்  ஒட்டிக்கொண்டு, கொட்டிக் கொண்டு இருந்த அந்த வண்டுகளை தன்,கைகளாளாலும் , மேல் துண்டாலும் அடித்து விரட்டினார்... அது பலனளிக்கவில்லை.

கொஞ்ச வண்டுகள் மட்டும் பறந்து விட்டன..வண்டுகள் கொட்டித்தீர்த்த வலி தாங்காமல்....தரையில் சாய்ந்து துடித்துக் கொண்டு இருந்தேன்.... அவர்  கைதாங்கலாக,என்னைத்தூக்கி , தம் தோள் மீது சாய்த்து .... என்னை கூட்டிவந்தார்..நான் என் உடல் முழுதும் சொரிந்து கொண்டே வந்தேன்....எங்கு தொடுவது என்றே தெரியவில்லை...உடல் முழுதும் வலி மயம் தான்..."என்னய்யா....இப்படிப் பண்ணிப்புட்டீக "  ? என்று கண்ணீரோடு அவரும் கேட்டுக்கொண்டார்...

" யாராவது இங்க ஓடியாங்களேன்....." எங்க பாண்டியன் போட்ட சப்தம் கேட்டு பிறந்தநாள் குதூகலம் பாடி வந்த என் மகளும்,  பிள்ளைகளும், மருமக்களும் என் மனைவியும்,  நான் தள்ளாடியபடி, மெல்ல நடந்து வந்த இடத்துக்கு என்னவோ 

ஏதோன்னு ஓடி வந்து விட்டார்கள்...எல்லோரும் ஒரு சேர அழ ஆரம்பித்தார்கள்....என்னால் ஒன்றும் சொல்ல முடிய வில்லை..


திடீரென ஆவேசம் வந்தவராக எங்க இசக்கி முத்து பாண்டியன்...எய்யா....இன்னைக்கு பார்க்க இங்க ஆள் யாரும் இல்லையே......நான் என்ன செய்யட்டும்...?நீங்க உடனே இங்கிருந்து போய் ஆஸ்பத்திரில போய் சேர்ந்துடுங்க......கொஞ்ச நேரத்தில காய்ச்சலும் அதோடு ஜன்னியும்வந்துரும்...நீங்க இங்க நிக்காதியன்னு....என்னை காரில் உள்ளே தள்ளினார்...காரில் உள்ள  எல்லோரும் அழுதபடிஇருந்தார்கள்.......என்னால் கார் ஓட்ட கூட முடியாத வேதனையும் வலியும்....

எங்க தோட்டம் நெல்லை மேலப்பாளையத்தில்  இருந்து  2கிலோ மீட்டர் தூரம். முக்கிய சாலையைத்தொட பத்து கிலோ மீட்டர் தூரம் தாண்ட வேண்டும்..அது வரை எனக்கு உடம்பில் ஓரளவு தெம்பு இருந்தது....

இன்னும் பத்து  கிலோ மீட்டர் தூரத்தில் மேலப்பாளையம்....
அப்போது காரை ஓட்டுவதில் எனக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது....கைகள்  தடுமாறுவதை  உணர முடிந்தது...
பாண்டியன் சொன்னது போல என் உடல் முழுதும் கடும் சூடு ஏறிக்கொண்டு இருந்தது....

தருவை,முன்னீர் பள்ளம்,தாண்டி எங்கள் ஊர், வி.எஸ்.டி.பள்ளிவாசல் சந்திப்பு வந்தது. 

எனக்குத்தெரிந்த ஆட்டோ டிரைவரை தட்டுத்தடுமாறி ......அழைத்து  என் பிள்ளைகள் மற்றும் மருமக்களை என் வீட்டில் விடச்சொன்னேன்..

நாக்கு குழறியபடி நான் சொன்ன அந்த நிலைமையை பார்த்து அந்த ஆட்டோ டிரைவர் காருக்குள் முகம்  நுழைத்து ,   என் முகம் பக்கம் வந்து ,தன் நாசியை சோதித்துக் கொண்டார்....

பக்கத்தில் என்னைத் தடவிய படி  அழுது கொண்டு இருந்த என் மனைவியைப் பார்த்து,  அவர்களின் நண்பர்களிடத்தில் என்னவோ சொல்லிக் கொண்டார்...


அதற்கு மேல் அங்கு நின்று கால தாமதம் செய்யவில்லை....என்னால் இவ்வளவு முடியுமோ அவ்வளவு தெம்பை திரட்டிக் கொண்டு வைராக்கியமாக,பாதி மயக்கத்தில்  டாக்டர் பிரேமச்சந்திரன் அவர்கள் முன்னால் போய் நின்றது மட்டுமே தெரியும்...

இரவு 11.00 மணியளவில் கண் விழித்தேன்...அதுவரை மயங்கிய நிலைதான்.....என்னைச்சுற்றிலும் அழுத கண்களோடு என் தாயும்,மனைவியும்,என் தலையைக் கோதியபடி என் அப்பாம்மா......மற்றும் பிள்ளைகள், மருமக்கள்,சகோதரிகள்,மச்சான்கள்,மைத்துனர்கள்,சுற்றிலும் பார்த்தேன்....

அந்தக்காட்சியினைக் கண்டு கலங்கிப் போய்.....  என் சின்ன மகளைத்தேடினேன்....,....அவள் அழுது முகமெல்லாம் வீங்கிப் போய் இருந்தாள்....


 அவள்,  நான் கண் விழித்தும் என்னைப்பார்த்து அதிகமாக அழுதுவிட்டாள். நானும் தான்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்என்றேன்.....
அவள்....அழுகை கூடிவிட்டது.
இன்றும் அவளது ஒவ்வொரு பிறந்தநாள் தேதி வரும் போதெல்லாம்.....நான் இதையே சொல்லி என் மகளைக் கோபப்படுத்துகிறேன்......அவளாலும், என்னாலும்,......மறக்க முடியவில்லை...அந்த நாளை.
என் உடலில் உள்ள வண்டுகள் கடித்த ஆழமான சில  வடுக்கள் வேறு அவளது பிறந்த நாளை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது....