திங்கள், 30 ஏப்ரல், 2012

"பாய்"......ன்னு அழைக்கனுமா?................



பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி:  படிப்பு சம்பந்தமானவை  மட்டுமே எங்களுக்குக் கற்றுத்ததந்ததோடு  தம் கடமையைச் செய்து முடிக்க வில்லை..
என் போன்ற "ஒன்னும் தெரியாமல் இருந்தவர்களுக்கு" , எப்படி பழகவேண்டும்?,  எப்படி எழுதவேண்டும்?,.மேடைகளில் தட்டில்லாமல் எப்படி பேசுவது?,போன்றவைகள் பற்றியெல்லாம் பாடம் நடத்தித் தந்தது.
கல்லூரி, கற்றுத் தந்தது என்று சொல்லும் போது அங்குள்ள சுவர்கள், .கரும் பலகைகள் ,பெஞ்ச்சுகள் ,டெஸ்க்குகள் போன்ற உயிரற்றவையா சொல்லிக்கொடுத்ததன? இல்லை.

கல்லூரியில் கடமைக்குப் பணிசெய்யாமல்,நம் மாணவர்கள் தன்மான மிக்கவர்கள் அவர்களுக்கு வாழ்வின் அடிப்படை அமைத்துத் தரவேண்டும் என்று உழைத்த மாமணிகள் எனது பேராசிரியர்கள்,
அவர்கள் ஊட்டிய கல்வி , உயிர் வாழும் வரை நினைவில் நிற்கும். பாடத்தோடு பண்பையும்,பண்பாட்டையும் சேர்த்துக் கற்றுத் தந்தார்களே அது கல்லூரிக் கற்றுத் தந்தது என்று தான் சொல்ல வைக்கும்.
 
எங்கள் கல்லூரியில், எங்கள் காலம் பற்றி தனியே எழுத வேண்டும்.
 
ஒரு நாள் தமிழ்ப் பேராசிரியர் தமிழ்ஆசான்,கா,முகம்மது பாரூக் அவர்களும்.தமிழ் ஆசான்,பேராசிரியர் ராமையா அவர்களும், கல்லூரி முதல்வர் மற்றும் அலுவலகம் இருக்கும் பகுதி, நாங்கள் படிக்கும் காலத்தில் உள்ளரங்கக் கூட்டங்கள் நடக்கும் தரைத் தளத்தின் வகுப்புக்களுக்குப் போகும் பாதை, மாடிப்படி இறங்கி வரும் பாதை ஆகிய மூன்று பாதைகள் சந்திக்கும் இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
பேராசிரியர்கள் வழக்கமாக அங்கே தானே நிற்பார்கள்,என்று நினைத்துக்கொண்டு ஒரு சலாத்தைஅவர்களுக்கு அவசரமாகச் சொல்லிவிட்டு விறுவிறு என கடக்க முயற்சித்தேன். “தம்பி,......கொஞ்சம் நில்லுங்க.”......கணீர் குரலில் பேராசிரியர் பாரூக் அவர்கள் என்னை அழைத்தார்கள்.
“வாங்க.... வாங்க..... வாங்க”...., மீசைக்குள்ளிருந்து அட்சர சுத்தமாக பேராசிரியர் ராமையா சிரித்துக் கொண்டே அழைத்தார்.
."என்ன சார்?"
“என்ன..... உங்கள.... மேடைப் பக்கமே பார்க்க  முடியல்லையே?மேடைன்னா அவ்ளோ பயம் வந்து விட்டதா?
"அப்படில்லாம் இல்லை சார்".
"உங்களுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது......நீங்கள் மாட்டேன் என்றெல்லாம் தப்பிவிடக் கூடாது..
“வலம்புரி ஜான் வர்றார்,கவியரங்கம் இருக்கு.ஆறு பேர் கவி பாடனும்.அஞ்சு பேர் வந்தாச்சு ஆறாவது ஆள் யார் தெரியுமா?”.....
 
“யாரு சார்?....அது"...
“நீங்க தான்”........சார்"
“சார் ...நான் எப்படி சார் கவி அரங்கத்தில் பாடுவது? என்னவோ பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டின்னு கலந்து கொள்கிறேன்..என்னை விட்டுருங்க சார்.” என்று என்னால் முடிஞ்ச மட்டும் தூரத்துல நின்ன மத்தவங்க காதுல,  கேக்காமல் முனங்கிப்பார்த்தேன்.....
“ஆறாவது ஆள் நீங்கதான்,தயாராகிக்கிடுங்க”ன்னு சொல்லிட்டு சபையை கலைச்சிட்டு  போய்விட்டார்கள்.
வகுப்பறைக்குப் போய் பேனாவும்,கையுமா ஒரே சிந்தனை மயம் தான் .
“.....அய்யய்யோ........ எதைப் பாட?...... எப்பிடிப் பாட?
 "ஏய்.....தருமி ஸ்டைலில், தனியே பொலம்புற அளவு போயிட்டியே.....
 கவிதை எழுத உனக்கென்ன தெரியும்?     வைரமுத்து எழுதுற கவிதைகளையே,கண்ணா பின்னான்னு, தப்பு தண்டான்னு சொல்லுவே.... .உனக்கு ரொம்பத் தெரியுமோ?. நீ மட்டும் தப்பா, கவிதை கிவிதையின்னு எதையாவது படிச்சியோ,..... அவ்வளவு தான்.................நானே உன்னை மேடையை விட்டு இறங்க விட மாட்டேன்........ தொலைஞ்சே...... பாத்துக்கோ....”ன்னு நண்பன் முத்துப் பாண்டி எனக்கு பேதியைக் கொடுத்தான்.
 
மேலப்பாளையம் அம்பிகா புரத்தைச் சேர்ந்த நண்பன் முத்துப் பாண்டியன், சின்ன வயதில் இருந்தே என்னுடைய வகுப்புத் தோழன்.பென்ச் மேட்டும் ஆவான்..பின்னாட்களில் அந்த அம்பிக புரம் பள்ளிக்கூடத்துக்கு நான் கீழக்கரை வள்ளல் பி.எஸ்.எ.ரகுமான்  அவர்களிடம் ஆறு வகுப்பறைகள் கட்ட நிதி வாங்கித்தர காரணமாக இருந்தவன்.....இன்று நெல்லை ஆவின் பால் பண்ணையில் உயர் அதிகாரியாகப் பணி புரிகிறான்.
    நாங்கள் இருவரும் மேலப்பாளையத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள  பாளயங்கோட்டை ,ஹைக்கிரவுண்ட்,ரஹ்மத் நகர் எங்கள் சதக்கத்துல்லா அப்பா கல்லூரிக்கு,  தினமும் சைக்கிளில் தான்  செல்வோம்.
பயணத்தின் போதே பல்வேறு வாக்குவாதங்கள், எனக்கும் அவனுக்கும் நடக்கும்.
அவன் எப்போதும் இளைய ராஜாஇசை அமைத்த ,பாடல்களை “ஆஹா...... ஓஹோன்னு.”....... சொல்லுவான்.நான்  எம்.எஸ்.விஸ்வநாதனை மட்டுமே இசையில் நேசித்தேன்....
 
“உனக்கு தெரியுமா இந்த டியூன், நாகூர் ஹனீபா பாட்டில் நான் கேட்டது......அந்த சாயலில் இளைய ராஜா பாட்டு இருக்கு...., தெரிஞ்சிக்கோ”ன்னு சொல்லி பாடி ? காட்டுவேன்.அவன் கடுப்பாயிடுவான்.
 சைக்கிளில் வரும் போதும், போகும் சண்டை தான்.
ஆனால்,என்னை அவனும். அவனை நானும் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.
வாதங்கள் செல்லமாக இருக்கும்.......கடுமையா இருக்காது.
 
இப்போ மட்டும் தான் கல்லூரிக் காளைகள், தமது நண்பர்களை “மாப்பிளை”ன்னு கூப்பிடுவதா யாரும் நெனைச்சுக்க வேண்டாம். முத்துப் பாண்டியை நானும்,என்னை அவனும் மாப்பிளை முறை வச்சுத் தான் கூப்பிடுவோம்.
 
அவன் வீட்டிலில் இருந்து வரும் சைவச் சாப்பாட்டை நானும், என் உம்மா கொடுத்துவிடும் அசைவ ஐட்டங்களை, அவனும் எங்கள் வகுப்பறையில் பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்வோம்.
 
கவியரங்க நாளும் வந்தது. கவியரங்க சிறப்பு விருந்தினர் வலம்புரி ஜானும் வந்தாச்சு..
அப்போது வலம்புரி ஜான் நாடாளுமன்ற மேலவையில்  .அ.தி.மு.க.உறுப்பினர் என நினைவு.
அப்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், இலங்கைத் தமிழர்கள் படும் துன்பத்தை மத்திய அரசுக்கு உணர்த்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள்,அவரது கட்சிக்காரர்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்.
வலம்புரி ஜான் அவர்களும் அந்த நேரத்தில், அண்ணா தி.மு.க.வின் நாடறிந்த உரையாளர்.ஆகையால் அவர் கல்லூரியில் நடந்த அந்தக் கவி அரங்கத்துக்குக் கரும் சட்டை அணிந்து வந்திருந்தார்.
 
“அடியே வசந்தா உன் முகத்தைக் காட்டு
என்னை நான் அலங்கரித்துக் கொள்ளட்டும்...”இப்படி அவர் கவியரங்கதைத் துவக்கிவைத்துப் பேசியதாக நினைவு.
நண்பர்கள் பலரும் கவி பாடினார்கள்.
என் முறை வந்தது,
என் தலைப்பு “பாய்” என்பதாகும்.
பாய்....
பாய்...... போனார்
து... பாய் போனார் 
பாய்... ந்து... பாய்... ந்து பாய் போனார்,
து....பாய் போக
பம்...பாய் போனார்,
தெம்....பாய்போனார்,
அன்....பாய் போனார்,
பணம்சேர்த்து
வம்.....பாய்ப் போனார்.......இப்படிப் போயின அந்தக்கவிதைவரிகள் .
கைத்தட்டு அள்ளி எடுத்தது அந்தக் கவிதை.
ஒண்ணுமே இல்லை எல்லாம் சொல்லடுக்குத் தோரணம் தான் 
.சரக்கு குறைவு தான்.ஆனால்....கொடுத்த விதம்?...........
என் தோழன முத்துப் பாண்டி தூரத்தில் எங்காவது தெரிகின்றானா? என்று மேடையில் இருந்து பார்த்தேன்.ஆளையே காணோம்.
மறுநாள் எல்லாம் கேட்டான்.     கவிதைப் பற்றியோ கவியரங்கம் பற்றியோ மட்டும் அவன் கேக்கவில்லை.... நாமே கேப்போமுன்னு ஆரம்பிச்சேன்."ஏம்பா நீ கவியரங்கம் வந்தியா?"
"நான் எதுக்கு வரணும்" முத்து பாண்டி சுரத்தே இல்லாமல் சொன்னான்.
 
 
என் முகம் வாடியதைப் பார்த்ததும்,
 “அட அட ..நாம் போவனா? முழு கவியரங்கமும் பார்த்துட்டுத் தான் போனேன்.நீங தாண்ட நல்லா பாட்டு பாடுன...இல்லையில்லை கவிதை படிச்சே.”.என்று திருத்த வெளியீடு செய்தான்."இவன் நெசமாத்தான் சொல்லுரானா?அப்படீன்னு பார்த்தேன்.
இந்தக்கவிதையை இப்போ எதற்குச் சொல்லிக் காட்ட வேண்டும்?
அதற்க்கு காரணம் என்ன?
முன்னொரு காலத்தில்,அதாவது ரொம்ப வருசத்துக்கு முந்தியெல்லாம் இல்லை ஒரு இருபது வருசத்துக்கு முந்திவரை மேலப்பாளையம் மக்கள் ஒருவருக் கொருவர் யாரைப் பார்த்தாலும் அண்ணன் என்றும் தம்பி.மாமா,மருமகனே,பெத்தாப்பா,பெத்தும்மா,பேரப்பிள்ளை ன்னு தான் கூப்பிட்டு வந்தாங்க... 
 ரொம்ப பாசமாக அண்ணன் வயதைக் கொண்டவர்களை “காக்கா” என்பார்கள்.
“மாமா” என்றால் “மருமகனே”ன்னும்,
“பெத்தாப்பா” ன்னு கூப்பிட்டால் “என்னவே பேரப்பிள்ளை”ன்னும்.
“சின்னாப்ப்பா,சாச்சான்னாலோ என்னப்பா”ன்னு பதில் மரியாதை செய்தார்கள்.
காக்கா என்கிற பிரியமான சொற்றொடர் கீழக்கரை,காயல் பட்டணம்.மேலப்பாளையம்,அதிராம் பட்டினம்,போன்ற பகுதி மக்களால், பண்பாடு மிக்க வார்த்தையாக நீண்ட தலைமுறைகளாய் அழைக்கப் பட்டு வருகிறது.
“ஹக்”என்கிற அரபு பதத்திலிருந்து “ஹக்கான்”....”,ஹாக்கா”....என்று அழைத்து “காக்கா” என்று மருவி விட்டது.
“அண்ணன் என்பவர் தம்பிக்கு “உண்மையாளன்” என்பதைத் தான் காக்கா என்கிற பதம் சொல்லிக் காட்டியது.”
 
கீழக்கரை வள்ளல் பி.எஸ்.அப்துல் ரஹ்மான்.மற்றும் அவர்களது சகோதரர்களான செய்யதுசலாஹுத்தீன்,செய்யது அப்துல் காதர் சீனா தானா போன்ற பெரு மக்களை "காக்கா" என்று யாரும் அழைத்தால் அப்படியே உருகிவிடுவார்கள்.
அவர்களிடம் பணிசெய்யும் மிகச் சாமான்யர்கள் கூட “முதலாளி” என்று அழைக்க மாட்டார்கள்.அதை அந்த பெருமக்களும் விரும்ப மாட்டார்கள்.ஆனால் காக்கா என்றே சகலரும் அழைப்பார்கள்.அதற்கு ஒரு தனி பாசம் காட்டுவார்கள்.அது போன்று தான் காயல்  பட்டணம் வாவு,பல்லாக்கு,மற்றும் பாசுல் அஸ்ஹாப் போன்ற பெருமக்களும்.

இன்று காலம் எப்படி ஆகிவிட்டது என்றால்,நம் சகோதர சமுதாய நண்பர்கள் முஸ்லிம் மக்களைப் பார்த்து உறவு முறை சொல்லி அழைக்கிறார்கள்.ஆனால் கலிமா சொல்லி உறவு கொண்டாடும் மேலப்பாளையத்தில் இவர்கள் எப்படி அழைக்கிறார்கள் என்பதை நினைத்தால் வேதனை தான் வருகிறது.
 
சகோதர மக்களான தேவர்கள்.கோனார்கள்,நாயக்கர்கள்.நாயிடுகள்.ரெட்டியார்கள்,முதலான சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் ,முஸ்லிம்களை “மாமா” என்று தான் பாசமாக அழைக்கிறார்கள்.
 
முஸ்லிம் மக்களோடு பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து வாழ்கிற தலித் மக்கள் தாத்தான்னு தான் அழைப்பார்கள்.
 
ஆசாரிமார்கள்.அவர்கள் கொல்லுத்தொழில் செய்பவர்களாக இருந்தாலும்,தங்க நகை,தச்சுத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் முஸ்லிம் மக்களை “சின்னையா” என்று தான் கூப்பிடுவார்கள்.
கடற்கரை ஓரம் மீன்பிடித் தொழில் செய்கின்ற பரத குல மக்கள் அதாவது பெர்னாண்டோக்கள் முஸ்லிம் மக்களை “சாச்சா” என்று அழைப்பார்கள்.
தமிழகத்தின் மத்திய பகுதிகளில் முஸ்லிம் மக்களை “ஷியான்” மற்றும் “மாப்பிள்ளை “ என்றே முக்குலத்தோர் அழைக்கிறார்கள்.
இவ்வாறு மற்ற மக்களெல்லாம் உறவு சொல்லி அழைக்கும் போது இந்த சமூகத்திலே பிறந்து, வளர்ந்து, வருபவன் தற்போதெல்லாம்.ஒருவரை ஒருவன் சுருக்கமாக “பாய்” என்றே அழைக்கிறான்.
 
“என்ன பாய் சோறு வைக்கட்டுமா?”
 
“பாய்,உங்களப் பார்க்க.... உங்க ஊட்டுக்கு வந்தேன்,நீங்க இல்ல.”
இதில் "பாய்" மட்டும் தான் இரவல் மொழி.மற்றதெல்லாம் மேலப்பாளையம் பாஷை தான்.
ரோட்டில் போகும் போது பா.................ய்.என்று அழைக்கிற அழகு இருக்குதே அதச் சொல்லி மாளாது.
பொதுவாக “ஹிந்து முசல்மான்.......பாயி பாயி ஹே” என்று காந்தி அடிகள் சொன்ன வாரத்தைகளில் “பாய்”ங்கிற சொல்லை, ரொம்ப்பப் பிடிவாதமா மேலப்பாளையத்து இந்தத் தலைமுறை பின்பற்றத் தொடங்கிட்டதோன்னு நினைக்க வேண்டியதுள்ளது.
 
அதற்காகத்தான் பாய் கவிதை யை நினைவூட்டினேன்.
 
எங்கள் வீட்டில் விருந்தினர்கள் யாரவது வந்தால்,எங்க மாமாகிட்டேயோ வாப்பா கிட்டயோ சொல்லும் போது “ஒரு பெத்தாப்பா வந்திருக்கிறார்”. “ஒரு மாமா டெலி போனில் லைனில் இருக்கிறார்.” “எதிர்த்த வீட்டு காக்கா வந்துட்டுப் போனார்ன்னு” தான் சொல்லணும்.தப்பித் தவறி “ஒரு ஆள் அல்லது ஒருத்தர் அன்தூட்டுக் காரர் வந்துட்டுப் போனார்”ன்னு சொன்னால் கண்டிப்பார்கள்.
 
என் மீது மிக்க அக்கறையும் பாசமும் கொண்ட நெல்லை பேட்டையில் வாழும் ஜமாத்துல் உலமா தலைவர் டி.ஜே.எம்.சலாஹுத்தீன் ஹசரத் அவர்கள் ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது.” மீரான்.உங்கள் ஊருக்கு சமீபத்திலே ஒரு ஆட்டோவிலே வந்தோம்.. எங்களை ஆலிம்ஷான்னு பண்போடு அழைத்த நிலைமை இன்று எப்படி ஆகிட்டது தெரியுமா? “பாய் எங்க போகணும்?”.
 
“நீங்க எந்த ஊர் பாய்?”
 
“என்ன பாய் .நான் போகட்டுமா”?
இப்படி தொடர்து பாய் மயமான மரியாதைகள் தான்.
 
என்ன  ஒரு அற்புதமான பாசம் காட்டிய பாசமான மக்கள் இப்படி அழைக்கிறார்களேன்னு”ரொம்ப வருத்தப்பட்டார்கள்,அவர்களின் அந்த ஆதங்கம் என்னை மனதளவில் வாட்டியது.
 
“பாய்”ன்னா சகோதரன் தானே?” “உங்கள மாதிரி ஆளுங்கள் இதையும் விடமாட்டீங்களோ? “அப்படீன்னு யாரும் கேட்கமாட்டார்கள்ன்னு நினைக்கிறேன்.மலையாளத்தில் சின்ன வய்துக்கார்கள் யாரையும் பெரிய ஆட்கள் பார்த்தால் "மோனே"..."மோளே" என்றுதான் அழைக்கிறார்கள்...அதில் பாசம் தெரியும்..அங்கு பெரும்பாலும் "பாய்" இல்லை.
 
பாய் என்கிற சொல்லாடல் எங்கிருந்தோ நம் ஊருக்கு இறக்குமதி செய்யப்பட்ட வார்த்தை.
உர்து மொழியை தாய் மொழியாகக் கொண்டமக்கள் அப்படி சொன்னால் அது அவர்களுக்கு சரிதான்.
 
“பாய் சாப் எப்படி இருக்கீங்க? “அது அவர்கள் பண்பாடு. “பாய் ஹைரியத் ஹே”
 
அதுக்காக உடன்பிறப்பேன்னு தனித் தமிழ் தாண்டவமாட நான் ஒரு போதும் அழைக்கச் சொல்லவில்லை.
 
நாம் பேசி வருகிற வார்த்தைகள் இஸ்லாமிய கலாச்சாரத்தை பன்மொழித் தன்மைமிக்கவர்கள் ஏற்றுக்கொண்ட அதன் காலத்தையும் வரலாற்றையும் செழுமை மிக்க அதன் பரப்பையும் காட்டுவதாகும்.
காக்கா,பெத்தாப்பா,சின்னாப்பா,போன்ற வார்த்தைகளால் அழைப்பது நம் ஊரின் நல்ல பண்பாடு. அதை மீட்டு நம் மொழி வார்த்தைகளை மீண்டும் உயிர் வாழச் செய்வோம்.நாம் ஒன்னும் குறைந்துவிட மாட்டோம்.இல்லை என்றால் இன்னும் கொஞ்ச நாட்களில் கண்டிப்பா  ஹல்லோ பிரதர்,அங்கிள்,ஆண்டி.மம்மி, டாடின்னு சொல்லித்தான் அழைக்கணும்.  அதுவும் வேறு பாஷை தானே?.






திங்கள், 23 ஏப்ரல், 2012

மேலப்பாளையம் V.S.T.@ வி.எஸ்.தம்தாசீன் தரகனார்.


மேலப்பாளையம்நகரில் வாழ்வாங்கு வாழும் தலைமுறையில், வி.எஸ்.டி குடும்பமும் ஒன்று...
 .வி.எஸ்.டி.என்பதன்தமிழாக்கம் வ.செ.த. என்பதாகும்.
 
ஒருமுறை சதாவதானி செய்குத் தம்பி பாவலர் அவர்கள் அந்த மூன்று எழுத்து களுக்கு விளக்கம் கூறும்போது வ:வரவு,செ:செலவு ,த:தர்மம் என்றுசொன்னார்கள். அந்த மூன்றெழுத்தின் பிதா மகன் பற்றிக் காண்போம்.

மேலப்பாளையத்துக்கு அணிகலனாய் வாய்த்த, வி.எஸ்.தம்தாசீன் தரகனார். அவர்கள்,ஒரு மாபெரும் வள்ளலாகத் திகழ்ந்தவர்.ஏழை எளியவர்கள் மீது பிரியமும் மாறாத பாசமும் கொண்டவராகத் தம வாழ் நாள் எல்லாம் இருந்தவர். சம்சு தாசீன் என்கிற அந்த கண்ணியப் பெயர் மக்களால் தம்தாசீன் என்று அழைக்கப்பட லாயிற்று.


மேலப்பாளையம் கன்னிமார் குளம் என்ற பெயருடைய குளம் காலப்போக்கில் கனிமாக்குளம்என்று மாறி கலிமாக் குளமாக ஆகி விட்டது.கலிமாக்குளத்தின் வடகரையில் இருந்ததனால் வடகரையார் வீடு என்பது வடகரை தம்தாசீன் தரகரனார் வீடு என்று சொல்லப்பட்டது.

சின்னஞ்சிறு வயது முதற் கொண்டே ஒரு இளவரசன் போல வாழ்வு வாழ்ந்து, இளைஞனான காலம்தொடங்கி, முதுமைப் பருவம் எய்தி மன்னனைப் போல வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தார்.

அதற்காக ஆடம்பர வாழ்வு வாழ்ந்தார் என்பது அர்த்தமல்ல.செல்வமும் செழிப்பும் அவர் வீட்டு வாசல் கதவை தட்டி இதோ வருகிறேன் என்று நுழைந்து கொண்டே இருந்தது.

அந்த மாமனிதர் தனக்கு போக இருந்த செல்வங்களைத் தன்னை நாடி, உதவி என்று வந்தவர்களுக்கும், பிறர் கேட்காமல் மற்றவர்களுக்கும், தானே போய் நின்று உதவிகள் செய்தார்.
மேலப்பாளையம் தற்போது உள்ளது போல் குருவிகளை ஒழிச்சுக்கட்டிய கான்க்ரீட் கட்டிடங்கள் நிறைந்த ஊராக இல்லாமல், ஓலைக் குடிசைகள் நிறைந்த ஊராய் இருந்தது ஒரு காலம். விரல் விட்டு எண்ணிடும் அளவு காரைக் கட்டு வீடுகளும்,ஓலை வீடுகளும் மட்டுமே ஆயிரத்து தொளாயிரத்து ஐந்து வரை இருந்துள்ளன. ஓலை வீடுகள் மழைக் காலத்தில் சேதமானால் புது ஓலைகள் மேய வடகரை காட்டுக்குத் தான் செல்லவேண்டும்.
 
மழைக்காலம் ஓட்டையும் ஒழுக்கும் என்றால், கோடைக் காலம் கொடுமையானது.திடீர் திடீர் என்று ஊரில் பல வீடுகள் தீப்ப்பிடித்துக் கொள்ளும்.ஒரு வீட்டில் பற்றும் தீ, மளமளவென பரவி ஊரில் பல வீடுகளை பதம் பார்த்தே அடங்கும்.தீப்பிடித்த வீடுகளைப் புதுப்பிக்க ஓலைகளும் கம்புகளும் வேண்டுமே.பணம் இல்லாதவர்கள் எங்கே போவார்கள்?வடகரையில் இருந்த வற்றாத மனமுடையவரின் வாசல் தேடித் தான் போவார்கள். அவர் “காட்டுக்குப் போய் பணங்கம்புகளும் ஓலைகளும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அனுப்புவாராம்.
.
செழித்து வளர்ந்த பனங் காடுகளில், சின்னச்சின்னக் குளம் குட்டைகளும் அதைச் சுற்றி நரிகளும், மனிதர்களைச் சுற்றி வாழும் காட்டு நாய்,வெருகு பூனை, மயில்கள்,கட்டுக்கோட்டான்களும்,பறவைகளும் குடியிருந்தன.
புதுசா அந்தப்பகுதிக்கு செல்பவர்களுக்கு மிக்க பயம் தரும் சூழ்நிலையில் அந்த வட்டாரம் இருந்தது. களக்காடு புலிகள் சரணாலய மலையில் இருந்து, மேலப்பாளையம் நாற்பது கிலோ மீட்டர் தூரம் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

மேலப்பாளையத்தில் அன்று இருந்த அந்தக்காடு, எங்கேப் போச்சுன்னு யோசிக்க வேண்டாம். அது எங்கேயும் போகாமல் ஒரு எம்பதுக்கும் மேலான வருஷம் சந்தையாகவும். பனங்காடாகவும் மாறிஇருந்து, இப்பம் ஹாமீம் புரமாகவும்,பங்களா அப்பா நகராகவும் ஞானியாரப்பா நகர்.ஹக் காலனி என்றும் மாறிவிட்டது

இன்று சுமார் பத்து வருஷத்துக்கு முன்புவரை மூன்றடைப்பு கிராமத்தின் சாலை ஓரங்களில் வெளி நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் பறந்து. பயணித்துவந்து பறவைகள் கூடு கட்டி,முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அங்கே சில காலம் வாழ்வதை முந்தய தலைமுறை கண்டது. ஆனால் தற்போது அந்த மாதிரி பறவைகளின் வாரிசுகள் மூன்றடைப்பை விட்டுவிட்டு கொஞ்சம் கிழக்கே கூந்தன்குளத்திற்குப் போய்விட்டன.

அவைகளை யாரும் வால் போஸ்ட்டர் அடிச்சோ, உண்ணாவிரதம் இருந்தோ ,மெயில் அனுப்பியோ, தந்தி கொடுத்தோ வராதீங்கன்னு அபாய அறிவிப்பு தெரிவிக்கல. பறவைகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் தகவல் சொல்லலை. அதுங்க ஊர் கூட்டம் போட்டும் பேசல்லே.அதுங்களாகவே எடுத்த முடிவு அது.அதுக்கும் காரணம் உண்டு. பாழாப் போன மனுஷங்களில் சில பேரால வந்த வினை அது.

ஊர் பேர் தெரியாத பறவைகளை வறுத்தும்,பொரித்தும் மசாலா தடவி உங்கவும் திங்கவும் வேட்டையாடினான் . அதுக்கும் மேலே கொடுமையாய், அந்த அப்பாவி பறவைகள் காடுகளில் கேட்டறியாத, சப்தமான வெடிகளைப் போட்டு அந்தப் பறவைகளின் நிம்மதியையும் ஒழிய வச்சு அவைகளை அந்த ஊர் பகுதியை விட்டு வெரட்டி அடிச்சான். தூரமாக போக வச்சான்.இப்பம் மூன்றடைப்பில் நடந்த கொடுமை, அந்தக் காலத்தில் கலிமாக் குளத்தின் தெற்கே இருந்த கிராமங்களில் நடந்தது, மேலப்பாளையம் எல்லையில் நடந்தது.

வித விதமான செடிகளும், மூலிகைகளும் கலிமாக் குளத்தின் அருகில் நிரம்பி இருந்தன.வீடுகளில் இருந்து அந்த காட்டுக்குள் தப்பி போய் பெருசா வளர்ந்து ஆடுகளும்,மாடுகளும் மீண்டும் திரும்பி வந்ததும் உண்டு. அதுக்கும் சிலதுகள் “நான் நேம்சம் வச்சேம்ல அதான் திரும்பி வந்துருச்சி.”ன்னு கதைகளும் திரிச்சார்கள்.

எந்நேரமும் மரம் செடி கொடிகளின் வாசமும், மூலிகைகளின் மனமும், காற்றில் கலந்து வந்த அந்தப்பகுதியில் தன்னந்தனியே ஒரு மாளிகை கட்டினார் வள்ளல் சம்சு தாசீன் அவர்கள்.

"சரி.... வீட்டக் கட்டிட்டோம். அதுக்கு பக்கத்தில் பள்ளிவாசலும் பெருசா கட்டுவோம்"னு திட்டமிட்டு. அவர் வாழ்ந்த பங்களாவின் மத்தி வாசலில் இருந்து நேரா கதவை திறந்தாபள்ளிவாசலுக்குத் தொழுகைக்குப் போக வசதியாக தன் சொந்தப் பணத்தில் கல்லால் பள்ளிவாசல் கட்டினார் அந்த புண்ணிய வான் வ.செ.சம்சு தாசீன் தரகனார்.

மேலப்பாளையத்தில் எத்தனையோ பணக்காரர்கள் வாழ்ந்தார்கள்.மறைந்தார்கள். அவர்களில் பலர் சேர்ந்து பள்ளிவாசல் மற்றும் திக்ருகள் செய்ய தைக்காக்கள் பல உருவாக்கினார்கள்.பள்ளிவாசல்கள் பலவற்றிக்குச் சொத்துக்கள் எழுதி வைத்தார்கள்.

ஆனால், தன்னந் தனிமனிதராய், தமது பொருளைக்கொண்டு அவருக்கு சொந்தமான இடத்தில் பள்ளி வாசல் கட்டியது தம்தாசீன் தரகனார் அவர்கள் மட்டுமே.. அந்தக்காலத்தில். அந்தப் பாக்கியம் அவருக்கு மட்டும் தான் கிடைத்தது.அங்கே மார்க்கக் கல்வியை இஸ்லாமியர்கள் கற்றுக்கொள்ள, ,ஆய்வு செய்ய மதரசா ஒன்றையும் தோற்றுவித்தார்.ஹாமீம் பள்ளிவாசல் மதரசா என்று அதற்குப் பெயர். அத்துடன் தாம் வாழ்நாளில் சம்பாதித்த .சொத்துக்கள் முழுவதையும் அந்தப் பள்ளிவாசல்,மற்றும் மதரசாவுக்கே எழுதி வைத்தார்.

அவர்களின் ஆண் வாரிசுகள், அவர்கள் விட்டுச் செல்லும் சொத்துக்களின் வருவாயை இன்னின நலகாரியங்களுக்குச் செலவிட கல் வெட்டு உத்திரவிட்டு,மீதி பணத்தை பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று எழுதி வைத்தார் அந்த வள்ளல்.

"பள்ளிவாசலை உருவாக்கிட்டோமே, அதில் தொழுகை நடத்த ஆட்கள் தூரத்தில் இருந்து வருகிறார்களே, என்ன செய்ய?” என்று அந்த மாமனிதர் யோசித்தார். அதன் விளைவு மகத்தானதாக அமைந்தது.
அவர் வீட்டுக்குப் பக்கத்தில் அவர்களிடம் யார் குடியிருக்க இடம் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் இலவசமாகவே குடியிருக்க இடம் கொடுத்தார், பலர் “வாப்பா, மனையை தந்துட்டீங்க, வீட்டை கட்ட பணமில்லையே”ன்னு மெல்லிய குரலில் அழுதபோது எவ்வளவு பணம் வேணும்? எடுத்துக்கோன்னு சொல்லி பலருக்கு வீடுகளையும் கட்டி கொடுத்தார்.அந்த தெரு தான் ஹாமீம் புரம் தெற்கு தெருவாகும்.இன்று ஒரு தச்சு மனை விலை எவ்வளவு.?கணக்கு போட்டால் நூறு கோடியை தாண்டும்.

பர்மாவில் அவர்களின் வணிகம் மிகச் செழிப்பாகவே நடந்தது. அந்த நாட்டின் மொத்த உணவு எண்ணெய் வணிகமும் அவர் கையில் தான்.கன்னியாகுமரி மாவட்டம்,தாமரை குளத்தில் பரந்து விரிந்திருந்த உப்பளமும் அது தந்த உப்பு மூலமான வருமானமும் கணிசமாகவே அமைந்தது.அத்தோடு பருத்தி பஞ்சு வணிகத்திலும் அவரது லாபம் அபாரமாகவே இருந்தது.இந்த வருமானங் களின் உதவியைக் கொண்டு தாய்நாட்டில்.,திருநெல்வேலியில், மேலப்பாளையத்தில், பலருக்கு நன்மைகள் செய்தார்.

பல்வேறு பகுதிகளில் மக்கள் தாகம் தீர்க்கவும் ஆடு மாடுகளின் தாகம் தீர்க்கவும் நீர் நிலையங்கள் கட்டிவைத்தார்.திருநெல்வேலி மாவட்டம் அப்போது தூத்துக்குடி தாண்டி ராமநாதபுரம் எல்லை வரை பரவி இருந்தது.தூரங்களில் இருந்து திருநெல்வேலி தாலுகா அலுவலகம் வரும் மக்கள்.தாகம் தீர்க்கவும் குழித்து சுத்தம் செய்யவும் சொந்த செலவில் குடிநீர் கிணறு அமைத்து வைத்தார்.அந்தக் காலத்தில் ஆங்கில ஆட்சி நினைத்தால் பல கிணறுகளைத் தோண்ட முடியும்.ஆனால் தாலூக்கா ஆபீசில் அவர் தான் மக்கள் குறை தீர்த்து வைத்தார்.

மக்கள் பசியால், பட்டினியால் வாடிய போதெல்லாம் பல நாட்கள் மூன்று வேளையும் உணவு தந்து ஆதரவுக் கரம் நீட்டியவர் அவர்.. ஒருவர் இருவர் என்றில்லாமல் நூற்றுக்கணக்கில் வந்தவர்களுக்கு தாயாக இருந்து சோறு போட்டவர் அவர்.

நாடெங்கும் தலை விரித்த்தாடிய பஞ்ச நேரத்தில் அரிசி சோறு திங்க வழியோ,வாய்ப்போ இல்லாத வேளைகளில் இருக்கிற கொஞ்ச அரிசியை அனைவரும் கஞ்சியாக உண்ண வேண்டியிருந்தது. அதை மக்கள்.மனைவி,பேரன்கள் பேத்திகள் வாப்பா, உம்மா.பெத்தும்மா.பெத்தாப்பாமார்கள் குடிப்பார்கள். .

ஊர் மக்களுக்காக கஞ்சி காய்ச்சும் இடத்திற்குப் பெயர் கஞ்சித்தொட்டி என்பதாகும். பசியால் சாமான்யர்கள் தவித்தபோது.நெசவுத் தொழில் செய்து வாடிய மக்களுக்கு மட்டுமின்றி, முஸ்லிம் மக்கள் மட்டுமில்லாமல் யாராக இருந்தாலும் அவர்களின் பசி பட்டினியைத் தீர்க்க. கஞ்சி தொட்டிகள் பல திறந்த வேளைகள் உள்ளத்தை உருக வைக்கும்.

அத்தோடு காலரா,வாந்தி பேதி நோய்களின் பாதிப்பால், ஊரில் கொத்து கொத்தாக மக்கள் இறந்து மடிந்த காலம் மிகக் கொடுமையானது.ஒரு தெருவில் அடுத்தடுத்து இறந்தவர்களைச் சுமந்து செல்ல முடியாமல், சோர்ந்து போய் மக்கள் மயங்கி விழுந்தார்கள்.பள்ளிவாசல் மைய வாடிகளில் ஒரே நேரத்தில்.ஒரே நாளில் பத்து,அம்பதுன்னு கபர்க் குழிகள் தினமும் தோன்றின..

கபன் துணிகள் வாங்கவும் மையித் செலவுக்கும் பள்ளிவாசல் மற்றும் ஊர் பணத்தில் இருந்து பணம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. இந்தக் கொடுமையான காலத்தில் தன்னோடு செல்வந்தர்கள் பலரையும் சேர்த்துக் கொண்டு களத்தில் இறக்கி கடமைகள் செய்தவர் அவர்.தமது சொந்த நிதியில் மருந்து மாத்திரைகள் வாங்கி ஒரு அரசாங்கம் போல் செயல் பட்டார் அவர் காட்டிய முன் மாதிரியில் மேலப்பாளையத்தின் மற்ற தனவந்தர்களும் இதைத் செய்தார்கள்.

ஒரு காலத்தில் மேலப்பாளையம் நகரில் வீ.எஸ்.டி. வீட்டில் சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை என்கிற நிலைமை இருந்தது. ஒரு பொது கூட்டத்தில் பேசிய பிரமுகர் ஒருவர் அங்கு கூடி இருந்த மக்களைப் பார்த்து, “இந்த ஊரில் வ,செ.த. வீட்டில் சாப்பிடாதவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று கேட்டார்.
“அந்த வூட்டுலே சோறு உங்காதவங்க யார் இந்த ஊர்ல இருக்கா?” அந்த அளவுக்கு யாவரும் அந்த வீட்டில் உண்டவர்களாகவே இருந்தார்கள்.

ஒரு காலத்தில் பெண்கள் விருந்துக்கு போக வில்லை என்றாலோ, .விருந்துக்கு போன வீட்டில் பெண் மக்களுக்கு சோறு வேண்டும் என்று உரிமையுடன் கேட்டாலோ, செம்பு தாலாவில் சோறு,கறி.கத்திரிக்காயோடு போதுமான அளவில் சாப்பிடப்போன ஆட்களிடம் கொடுத்துவிடுவார்களாம். ஒன்னு ரெண்டு நாட்கள் கழித்து தெருத் தெரு வாக வீ.எஸ்.டி.வீட்டில் இருந்து மாட்டு வண்டியில் வந்து அந்தத் தாலாவை திரும்பி வாங்கிச்செல்லுவார்களாம்.

வள்ளல்கள் என்றால் வாழ்த்தப் புலவர்கள் இருப்பார்கள் என்பது சங்க காலத்திலிருந்து நடந்து வருவது தான்.சம்சுத் தாசீன் வள்ளலை தானே முன் வந்து வாழ்த்தியவர் சதாவதானி செய்குத் தம்பி பாவலராவார்.இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஷம்சுத் தாசீன் கோவை என்பது அக இலக்கியம் பேசுவதாகும். பாட்டுடைத் தலைவனாக வள்ளல் சம்சுத் தாசீனும் துணைவியார் அசன் பாத்திமா தலைவியாகவும் புனயப்பட்டுப் பாடப்பட்ட தாகும்.

கோவை இலக்கிய வகையில் தமிழ் அறிஞர்கள் பலராலும் பாராட்டிப் பேசப்படுவதும் உவமை சொல்லாப்படுவதும் ஷம்சுத் தாசீன் கோவையாகும்.நீண்ட நாட்களாக அரங்கேற்றப் படாமல் இருந்த இந்தக் கோவை பன்நூலாசிரியர், வரலாற்று ஆய்வாளர் செ.திவான் அவர்கள் ஏற்பாட்டில் வி.எஸ்.டி.குடும்ப வாரிசுகளின் ஒத்துழைப்பில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்களால் வெளியிடப்பட்டது.

வள்ளல் ஷம்சுத் தாசீன் அவர்கள் தலை சிறந்த வணிகராகவும் மனிதாபி மானம் மிக்கவராகவும் இருந்தார் என்பதை அவரது சிறந்த நெறி முறைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்தியாவிலிருந்து நீண்ட தொலைவில் இருந்த பர்மா நாட்டின் ரங்கூன் நகரில், அவருடைய தொழில் நிறுவனங்களை ஆய்வுசெய்யவும். பணியாட்களைப் பார்த்து உற்சாகப் படுத்தவும் கடல் வழியே பயணித்துச்சென்றார்கள்.

வழக்கம் போல் அங்கே மாதக் கணக்கில் தங்கி தொழில் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் சொல்லிவிட்டு ஊர் புறப்பட ஆயத்தமானார்கள். தம்மிடம் பணி செய்த பணியாளர்கள் அனைவரிடமும், “ஊர் போகிறேன் ,உங்களின் வீடுகளுக்கு ஏதாவது பொருட்கள் தருகிறீர்களா?“என்று கேட்டார்.

முதலாளி கேட்கிறாரே அவசியம் கொடுத்து அனுப்ப வேண்டியது தான் என்று, அங்கு பணிபுரிந்தோர் யாவரும், தங்களால் முடிந்த அளவு சவக்காரக் கட்டிகள் அதான் சோப்பு, பூஎண்ணெய்பாட்டில்கள்,தலையிடி மருந்துகள்,அந்தக் காலத்திலும் பிரபலமாக இருந்த டைகர் பாம்.செண்டு.,.துப்பட்டாக்கள்.வேஷ்ட்டி.சட்டைகள் கொண்டை ஊசிகள், பிள்ளைகள் விளையாட பொம்மைகள் போன்ற யாவும் கொடுத்து விட்டார்கள்.
ஒரு பணியாள் மட்டும் அவர் மனைவிக்கு ஒரு பழைய துணியால் சுற்றப்பட்ட சிறிய பொட்டலம் ஒன்றைக் கொடுத்து விட்டார்.ஊர் திரும்பியதும் அமானித சாமான்கள் யாவும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப் பட்டன. அந்தப் பழைய துணிப் பொட்டலம் மட்டும் கொடுபடாமல் இருந்தது. அந்த பொருளுக்குரிய பெண் தமது கணவன் பர்மாவிலிருந்து ஏதாவது கொடுத்துவிட்டாரா? எனக்கேட்டு வந்தார். “ஆமாம் உன் கணவன் உனக்கு சாமான்கள் தந்துள்ளான். நீ வீட்டுக்கு போமா. நான் நாளைக்கு கொடுத்து விடுகிறேன்” என்று சொல்லி தம் தாசீன் தரகனார் அனுப்பி விட்டார்.

சொன்ன வாக்குப்படி தம்தாசீன் தரகனார் அந்த வீட்டுக்கு தானே நேரில் சென்றார். வீட்டுக்குள் நுழைந்தார்.இந்தப் பொண்ணோட மாப்பிளை தங்களுடைய கம்பெனியில் சின்ன சம்பளக்காரனாகத் தானே இருக்கிறான் என்ன கொடுத்து அனுப்பி உள்ளானோ என்று பலவாறாக யோசித்துவிட்டு தாம் கொண்டு வந்த அந்த பொட்டலத்தை அவ வளிடம் தந்தார்.அதை வாங்கியதும், அந்தப் பெண் முகத்தில் அப்படி ஒரு தக தகன்னு ஒரு பிரகாசம் வெளிச்சம் காட்டியது.நான் போயிட்டு “வாரேன்மா”ன்னு சொல்லிட்டு அவர்கள் புறப்பட்டு வந்து விட்டார்கள்

ஒரு வாரம் போயிருக்கும்.வேறு ஒருநண்பரைப் பார்க்க பக்கத்து தெருவிற்கு வந்த தம்தாசீன் தரகனார் “போன வாரம் பொட்டலம் கொடுத்த வீடும் பக்கத்தில் தானே இருக்கு, ஒரு நடை போய் பாத்துட்டு வருவோமேன்னு அந்த வீட்டுக்கு வண்டியை போகச் சொன்னார். அந்த வீட்டில் உள்ளே சென்று அமர்ந்தார்.அப்போது வளவு வீட்டில் இருந்து பொட்டலம் வாங்கியப் பெண் கழுத்தில் காசு மாலை மின்னலிட சாவாசமா தெரு வீட்டுக்கு வந்தார். வீட்டில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும் அவசர அவசரமாக கழுத்தில் உள்ள காசு மாலையை அந்தப் பெண் மூடினார்.
.
"அன்னைக்கி நாம் இந்த பெண்ணை பார்க்கும் போது, சின்ன அளவில் நகை போட்டிருந்தாள்.பரவாயில்லையே, இன்னைக்கு காசு மாலை போடுற அளவில் வந்து இருக்கிறாளே"ன்னு நெனைச்சுகிட்டு “எம்மா,...... நான் உன்னை பாக்கணும் தான் வந்தேன், மற்ற சம்பளக் காரர்கள் எல்லாம் பொன்ஜாதி புள்ளைகளுக்கு சாமான்களைக் கொடுத்து அனுப்பும் போது உன் மாப்பிள்ளை மட்டும், ஒன்னும் கொடுத்து விடல்ல பாரு, அதனாலே நான் கொண்டுவந்த சாமாங்கள்ள சிலத உனக்கு கொண்டுவந்திருக்கேன். வங்கிக்கோமா”ன்னு சில பொருட்களை கொடுத்தார்.

அந்தப் பெண்ணுக்கு கையும் ஓடல காலும் ஒடல.நாடி நரம்புகள் நடிங்கிக்கொண்டே அந்தப் பொருட்களை வாங்கிக்கொண்டாள்.

ஒரு மூணு மாசம் போச்சுது. .அந்த சம்பளக் காரரும் பர்மாவிலிருந்து ஊர் வந்துவிட்டார். முதலாளியைப் பார்க்க வரும் போது தமது மனைவியையும் கூட்டி வந்தார். இதென்னடா இந்த ஆள் மனைவியையும் கூட்டி வந்திருக்கிறாரேன்னு மற்றவர்கள் பேசிக்கொண்டார்கள்.
முதலாளி வந்தார்.”என்னப்பா,பிரயாணமெல்லாம் எப்பிடிப்பா? கப்பல் ரொம்ப ஆட்டமில்லியே?.பசியாற சாப்பாடெல்லாம் ஆச்சுதா”ன்னுவழக்கமாக கேட்கும் கேள்விகளைக் கேட்க, அந்த ஆள் திருதிருன்னு முழிச்சிட்டு இருந்தார்.

“என்ன ஆளுப்பா நீ.... எவ்வளவு நாளா .பர்மாவிலே இருக்க.?புள்ள குட்டிகளுக்கு உங்க திங்க பண்டம் பலகாரம்.ஓடி ஆடி விளையாட பொம்மைகள் நீ கொடுத்து விடலியே.ஆச்சரியமா இருக்கே?சரி ..சொல்லு”..
“முதலாளி....... மன்னிச்சுக்கோங்கோ...... வாப்பா, நீங்க தந்தது, தருவது எல்லாமே எங்களுக்கு அதிகம் தான்.இவ இருக்காளே எம் பொஞ்சாதி, .வானா ..சேனா.வீட்டு கடையில் வேலை பாக்கிற ஒவ்வொருத்தணும் எப்படி இருக்கான்.அங்க வேலைப் பாப்பவம் வீட்டுல உள்ள பொன்னுகள் பொஞ்சாதிகள் கையிலும்,சொய்யிலும்,கழுத்திலும்,மூக்கிலும் நகை நட்டுகளாக தொங்குது.நீங்களும் இருக்கீங்களேன்னு, என்னை சதா தொந்தரவு பண்ணிக் கொண்டே இருப்பா.அதனாலே....... நான் மளிகை கடை காய்கறிக் கடைவெளிகளுக்கு போய்ச்சாமான்கள் வாங்கிவரும் போது....... ஒட்டிக்கு ரட்டியா கணக்கு எழுதி..... கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து...... இவ இதோட ஒழியட்டும்னு,..... நீங்க பர்மா வந்த நேரத்துல மத்தவர்கள் குடுத்த மாதிரி சவக்காரக் கட்டியும்.பண்டம் பிஸ்கோத்தும் கொடுத்து விடாம........ ஒரு காசு மாலை கொடுத்துவிட்டேன் வாப்பா. அது வாங்க னான் கொடுத்தது எம் பணம் இல்லே....... அது உங்க பணம் வாப்பா.”.......
“ம்ம்”,சொல்லு ,
“நீங்க ஊர் வந்ததுக்கு பிறகு, மத்த சம்பள சிப்பந்திகள் ஊட்டுக்கு எல்லாம் சாமான் நீங்க கொடுத்து முடிச்சிட்டு, ஒன்னும் கொடுத்து விடாத என் வீட்டுக்கும் போய் தாய் மனசோட உங்க பண்டம்,பாத்திரங்கள்,எம் பிள்ளைகளுக்கு விளையாட்டு சாமாங்கள்லாம் கொடுத்தியளே.... அது தெரிஞ்சு துடிச்சுப் போயிட்டேன்....எங்களை மன்னிச் சிடுங்க வாப்பா......இந்தாங்க நான் தெரியாமச் சேர்த்த காசு மாலையை பிடிங்க வாப்பா”....ன்னு தம்தாசீன் தரகனார் கிட்ட காசுமாலையை அந்த சிப்பந்தி கொடுத்தார்.

அடுத்து என்ன நடக்கப் போகுதோன்னு சின்ன முதலாளிகள்,.கணக்குப்பிள்ளை மார்களும். “தொலைஞ்சாம்லே இவன்”னு மத்த ஊழியக் காரர்களும் திகைச்சுப்போய் பார்த்துக்கிட்டிருந்தார்கள்.
காசு மாலை ஆசாமி அவம்பொஞ்சாதியோடு மலங்க மலங்க பார்த்துக் கொண்டு, முழிச்சிக் கொண்டிருந்தான்.கண்களில் கண்ணீர் வடிஞ்சி, மூஞ்சி எல்லாம் வாடிப் போய் இருந்தது.அந்த இருவரையும்,முதலாளி முகத்தையும் அந்த சபையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.
ரொம்ப நேரம் சபை அமைதியாக இருந்தது.முதலாளி தம் தாசீன் தரகனார் சின்னக் குரலில்.கடுகளவு கோபம் கூட இல்லாமல் ”கணாப் பிள்ளை, இங்க வாரும்.இவங் கைல இருக்கிற நகை எம்ம்புட்டு பொறும்.?சொல்லுவே”.
“சரி முதலாளி.”
“ஒரு இருபது பவுன் தேறும்”.

“அப்பிடியா? சரி: இவங்கைல அதுக்கு உன்டான தொகையை கொடுத்திரும்.அந்த காசு மாலையும் திரும்பக் கொடுத்து அனுப்பிடும்”.
.அங்கு இருந்த யாரும் இந்தத் தீர்ப்ப எதிர் பார்க்கவே இல்லை.கை கால்கால்களெல்லாம். நடுங்கி வாப்பா “எங்கள மன்னிச் ச்ருங்க வாப்பா”ன்னு அந்த சிப்பந்தி போட்ட கூப்பாடு கொட்டி குளம், வரை கேட்டது.
பழைய படி பர்மாக் கடைக்கே அந்த ஊழியர் மீண்டும் அனுப்பப் பட்டார். அதுக்கு பிறகு தம் தாசீன் தரகனார் கிட்ட,”களவாங்க” யாருக்குத் தான் மனசு வரும்?.
“அவம் பொஞ்சாதி படுத்தின பாடு தாங்காம, அவம் அப்பிடி செஞ்சுட்டான்.மத்தபடி அவம் நல்ல வேலைக்காரன் தான்.“ இப்பிடி ஒரு வார்த்தை மட்டுமே தம்தாசீன் வள்ளலின் நாவிலிருந்து வந்தது. .வேற வேலையை பாருங்கப்பா” ன்னு குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் ஏறிப் புறப்பட்டு போய்விட்டார்.

அந்தக் காலத்தில் மாலை நேரங்களில் பணக்காரர்கள் வழக்கமாக கிளப்புக்குப் போவார்கள்.அல்லது எங்கேயாவது போய், பூங்காக்களில் நேரத்தை ஓட்டுவார்கள்.ஆனால் தம்தாசீன் தரகனார் அவர்கள்.தமது பணியாட்களோடு ஒரு ஊரையும் மற்றொரு ஊரையும் இணைக்கும் நெடும் சாலைகளுக்கு.காட்டுவழியில் சாரட்டு வண்டியில் பயணம் செய்வார்.ஆறு குதிரைகள்.நான்கு குதிரைகள்.பூட்டிய வண்டிகள் அவரிடம் சர்வ சாதாரணம்.
அவரைப் பின் தொடர்ந்து வேறு வண்டிகளில் பணியாட்கள் செல்வார்கள்.தண்ணீர் சூழ நிற்கும் குளங்கள்,ஓடைகள்.ஒத்தையடிப்பாதைகள் கண்ணில் தென்பட்டால்.”பாருங்கள்,....நல்லாப் பாருங்கள்” என்று சொல்லுவார்.அவர் என்ன வேட்டைக்கா வந்துள்ளார்.இல்லை.விலங்குகள்.பறவைகள் எதுவும் தட்டுப் படுகிறதா என்று தேடவா சொல்லுகிறார் என்றால் அதுவும் இல்லை.
 
யாராவது வழிப்போக்கர்கள் நோய் வாய்ப்பட்டு மயங்கி கிடக்கிறார்களா?,திருடர்கள் தாக்கி யாவாரிகள் மயங்கிக் கிடக்கிறார்களா? என்று பார்த்து,அவர்களை மீட்டு தமது வண்டியில் தூக்கிக் கொண்டுவருவார்.பாதி பேர்கள் பட்டினியால் இருப்பார்கள்.அப்படி கொண்டு வந்தவர்களை முதலாவதாக குளிக்கச்செய்துவிட்டு விட்டு சைவமோ,அசைவமோ உணவு கொடுத்து ஆசுவாசப் படுத்துவாராம்.
“யாரப்பா நீ? நீ எங்கே வந்தாய்?எந்த ஊர்?”என்கிற விபரம் கேட்டுவிட்டு,அவரவர் வீடு போய்ச் சேர உதவிகள் செய்வாராம்.சிலர் “ஐயா முதலாளி,நான் ஒரு வியாபாரி.என்னுடைய பொருட்கள் கொள்ளை போய் விட்டன”, என்று அழுது புலம்புவோர்க்கு மீண்டும் முதலீடு செய்ய பணம் கொடுத்து அனுப்பி வைப்பாராம்.

வள்ளல் சம்சுதாசீன் தரகனார் அவர்களைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ செய்திகள் உள்ளன.அவையெல்லாம் சொல்லிக்காட்ட வேண்டும்.தனிப் பதிப்பாகக் கூட புத்தகம் போடும் அளவு உள்ளது.முயற்சி செய்வோம்.மேலப்பாளையத்தில் இப்படியும் மனிதர்கள் என்று மாணிக்கங்கள் இருந்தார்கள் என்பது பற்றி பின்னர் காண்போம்.
இவ்வாறு பண்பாடுமிக்க வாழ்வு வாழ்ந்த வள்ளல்,சம்சுதாசீன் தரகனார் அவர்கள் 1936 ஆம் ஆண்டுமறைந்தார்கள்.மேலப்பாளையம் நகரில் அவரது ஜனாஸா நல்லடக்கத்திற்குக்கும் 15000 க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டார்கள்.
இறைவன் அவர்களை நல்லடியார் கூட்டத்தில் சேர்த்தருள் புரிவானாகவும்.

அவர்களின் மக்களாகிய,  வி.எஸ்.டி.சேக் மன்சூர்,Ex.M.L.A. வி.எஸ்.டி.செய்து தாமீம், வி.எஸ்.டி.முகம்மது இபுராஹீம் Ex.Melapalaiyam Chaiman ஆகியோர் பற்றியும் பின்னர் தொடர்ந்து காண்போம்.

சனி, 21 ஏப்ரல், 2012

லெப்பார் மாமா (லெப் பைக் காதர் மாமா)


கூட்டுக்குடும்பம்: அந்த மகிழ்ச்சியும் அதன் கலகலப்பும் உவமை சொல்ல முடியாத தனி ரகம்.எங்க வீட்டில் நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய வாப்பா மற்றும்அவர்களின் தம்பிமார்கள்,அதாவது என் சின்ன வாப்பா மார்கள்,மாமிகள், என் தாயார், எனது தங்கைகள்.மற்றும் தம்பி,உள்ளிட்டபேரப்பிள்ளைகள்கூட்டம் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தோம்.



எங்கள் குடும்பத்தில் ஆண் மக்கள் மூவர் பெண் மக்கள் மூவர் என எனது பாட்டனாருக்கு பிள்ளைகள் இருந்தார்கள்.
அவர்களோடு என் பாட்டனார் இறந்த பின்னர் எனது பாட்டி தம் கண்மணிகள் என தம் மக்களையும்,அவர்கள் பெற்று எடுத்த பேரன் பேத்திகளையும் பாசமும் பிரியமும் கொண்டு அரவணைத்துக் கொண்டாள்.
.மேலப்பாளையம் முஸ்லிம் குடும்பங்களில் பாட்டியை பெத்தும்மா என்றும் பாட்டன்னாரை பெத்தாப்பா என்றும் அழைப்பார்கள்.எங்கள் குடும்பத்தில் மூன்று பாட்டனார்கள் இருந்து அவர்கள் அனைவரும் இறந்து.அவர்களின் மனைவிமார்களில் இருவர் இறந்து எனது பாட்டி மட்டும் இருந்ததனால் எங்கள் பெத்தும்மாவை குடும்பத்தினர் மற்றும் தெருமக்கள் யாவரும் அப்பாம்மா என்றே அழைப்பார்கள்,
. .எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்தே எங்களுடனே உண்டு.,உறங்கி.,வளர்ந்து, வாழ்ந்தும் என் வாப்பா மற்றும் சின்ன வாப்பாக்களுக்கு ஒரு சகோதரன் போலவே இருந்தும் வந்தார் ஒருவர்.
நண்பனாய் மந்திரியாய் .பச்சபுள்ளை மனசுடன் வாழும் காலம் முழுதும் இருந்த அவர் பெயர்லெப்பைக்காதர் முஹம்மதுலெப்பை என்பதாகும்.காலப்போக்கில் லெப்பை காதர் என்கிற பெயர் லெப்பார் என்று ஆகி விட்டது. அவரை லெப்பார் மாமான்னு தான் நாங்கள் எல்லோரும் அழைப்போம்.
சின்ன வயசிலேயே தாய் தந்தையை இழந்து எங்க அப்பாம்மவே அவருக்கு தாயும் தந்தையும் என்று ஆனவர். பெரு நாட்களுக்கு எங்களுக்கு சட்டை வேஷ்ட்டி துணிமணிகள்  எடுக்கும் போது அவருக்கும் சேர்த்தே அனைத்தும் எடுத்து வருவார்கள்,
எங்கள் குடும்பமும் லெப்பார் மாமாவின் குடும்பமும் நெருக்கமானதுதான்.என் தாய் வழியில் மிகவும் நெருக்கம் மிகுந்த உறவுக்காரர்.
எங்கள் மீது ஒரு தந்தையைப் போல் பாசம் மிகக் கொண்டவராக இருந்தார். 
எனக்கும் என்னுடைய சகோதர சகோதரிகளுக்கும் ஏதாவது காச்சல் மண்டையிடி என்றால் அழுதே விடுவார். எங்களை டாக்டர்களிடம் சுமந்தே கொண்டு போவார்.
விடிய விடிய கண்விழித்து பார்த்துக்கொள்ளும் எங்க பெத்தும்மா மருந்து மாத்திரை கொடுப்பா.
இவரோ .அடிக்கடி கழுத்திலும் நெற்றியிலும் கை வைத்துப் பார்துக்கொள்ளுவார்."அப்பாம்மா, சூடு இல்லம்மா ஜுரம் போயிருச்சு ", அப்பிடீன்னு அவ முகத்தப் பார்த்து சொல்லுவார்.
அப்பவெல்லாம் திருநெல்வேலி கீழ ரத வீதியில் ஆஸ்பத்திரி நடத்திக்கொண்டிருந்த டாக்டர் ஏ.வி.முகைதீன் மாமாக் கிட்ட கூட்டிப் போவார்கள்.சில வேளைகளில் அவரின் பேட்டை ரோட்டு வீட்டுக்கும் அப்பாம்மா தூக்கிட்டுப் போய் விடுவாள்.
எங்களுக்கு டாக்டர்கள் ஏதாவது ஊசி போட்டாகனும் என்றால் "எதுக்கு ஊசி...வேண்டாமே" என்று முடிந்த மட்டும் லெப்பார் மாமா தடுத்துப் பார்ப்பார்.
எப்படியும் ஊசி போட்டு தான் ஆகவேண்டும் என்கிற நிலை வரும்போது நாங்கள் பல்லை கடிச்சிக்கிட்டு அழுகையை அடக்கிக் கொண்டு இருந்தாலும் எங்கள் பிட்டியில் ஊசியை சொருகும் போது அவர் சப்தம் போட்டு அழுதுவிடுவார்.முகைதீன் டாக்டர் மாமா இந்தக் காட்சியைப் பார்த்து சிரிப்பார்.
.மாலை இருட்டிவிட்டால் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் இருட்டை தாண்டி பஜார் போய்ஏதாவது ஒரு சாமான் வாங்கிட்டு வா என்றால் அவர்கிட்ட அது நடக்கவே நடக்காது. இருட்டில் போய் வர அவருக்கு அம்புட்டு தைரியம்.
"உங்களுக்கு இந்தப் பொருள் தானே வேண்டும்,நாளைக்கு காலைல முதல் வேலையா வாங்கித்தாறேன் இப்போ எனக்கு வேற வேலை இருக்கு"ன்னு சொல்லி இரவு இஷா தொழுகை முடிந்ததும்,சின்ன வயசுக்காரர்கள் சாப்பிட உட்காரும்போது அவரும் சேர்ந்துஒண்ணா உக்காந்து சாப்பிட்டுட்டு ஒரு எட்டரை மணி அளவில் வேறு வேலை பார்க்கப் போய் விடுவார். அது என்ன வேறு வேலை? தூங்கும் வேலை தான்."காலையில்வெள்ளன முழிக்ககனும் பாரு.அதுக்குத் தாம்லே தூங்கப் போறேன்'
அவரின் முதல் வேலை தொழுகையில் தான் துவங்கும்..
அதி காலை இருட்டில்.தனியா எப்படி பள்ளி வாசலுக்குப் போவது?. சுற்றிலும் இருட்டு.அதுல நாய்கள் வேறு அங்கும்,இங்கும் அலையிது.யாராவது வாராங்களான்னு பாப்பம்ன்னு விளக்கை போட்டுவிட்டு, வீட்டு வாசலில் காத்திருப்பார்.
ஸுபுஹ் தொழுகை ஜமாத்துக்கு போகும் யாராவது ஒருவரோடு எப்படியும் சேர்ந்துக்கொள்ளுவார். காக்கா...சாச்சா.....மாமான்னு... யாரையாவது கூப்பிட்டு அவங்களோடு போனால். சீ,...இவன் பயந்தாங் கொள்ளின்னு அவங்க நினைச்சுடக் கூடாதுன்னு முன் ஜாக்கிரதையாக ஒரு அம்பது அடி பின்னால் தான் நடப்பார். அவரைப்பார்த்து "பயந்தீன்னு" யாரும் சொல்லிடக் கூடாதேங்க்றது தான் அவரது உச்ச கட்ட ஆசையாக இருந்தது.
தினசரி என்ன வேலை எப்படி போனாலும் அப்பாம்மாவுக்கு வெற்றிலை,பாக்கு,அங்குவிலாஸ் புகையிலை வாங்கிவருவது அவரது முக்கிய கடமைகளில் ஒன்றாகவே வைத்திருந்தார். “லெப்பாரு, கைல என்ன வச்சிருக்கே?”ன்னு யார்  கேட்டாலும் மூச் விட மாட்டார்.அதை காட்டாமல் .அப்படி ஒரு பந்தோபஸ்தாக வாங்கி வருவார். நாங்க அவர் கிட்ட “ஏன் மாமா. அவங்க என்ன உங்க கையிலே உள்ளதை பிடுங்கவா போறாங்க? ஏன் காட்ட மாட்ட்றீங்க?”
“உனக்கென்ன தெரியும்ல? .நல்ல வெத்திலையா இருந்தால் அத எங்கிட்ட இருந்து வாங்கிட்டு அப்பாம்மாவுக்கு நீ வேற வெத்தில வாங்கிக் கொடும்பாங்க அது எனக்கு வேணுமா?நான் நாலு கடைக்குப் போய் உம்மாவுக்கு நல்ல வெத்திலை வாங்கித் தந்தா அது ரொம்ப சந்தோசமா சாப்பிடும்” என்பார்.
,வெற்றிலை பாக்கு இரண்டையும் ஒரு சின்ன உரலில் போட்டு இடிச்சுத் தான் வாப்பும்மா  மெல்லுவாள். “லெப்பாரு, நீ எந்தக் கடையிலே இந்த வெத்திலை பாக்க வாங்கினே? ரொம்ப நல்ல வெத்திலை... என்னா ருசி”ன்னு அப்பாம்மா சொல்லுவதை கேட்டால் தான் அவர் முகத்தில் திருப்தி ஏற்படும்.அப்பிடி ஒரு பிரகாசம் வரும். அந்த வார்த்தை இன்னும் வரல்லியேன்னு காத்திருப்பார். கண்டிப்பா அப்பாம்மா சொல்லிருவாள்.
எதோ ஒரு நினைப்பிலே அதச் சொல்ல மறந்திட்டா அந்த ராவு அவர் தூங்கவே மாட்டார். மறுநாள் வெத்திலை கடை காரனிடம் "நீ தந்தது நல்ல வெற்றிலை தானா?"ன்னு நியாயம் கேட்ட பிறகு தான் அவருக்கு மற்றதெல்லாம்.
வெத்திலை இடிக்கும்போது பக்கத்தில் அவர் இருந்தால் “அப்பாம்மா எனக்கும் வெத்துலை தாயே”ண்ணு சொல்லி அந்த சீதேவியிடம் ஒரு வாய் வெற்றிலை வாங்கி தின்னுட்டு தான் மற்ற வேலை பார்ப்பார்.
மத்த யார் கேட்டாலும் வெற்றிலை பாக்கு கொடுக்கும் போது, “ரொம்ப திங்காதிய போதும்” என்பாள். லெப்பார் மாமா கேட்டால் தாராளமாக கொடுப்பாள். காரணம், ஆத்தூர் அசல் வெற்றிலை பாக்கும், சுவையான அங்கு விலாஸ் போயிலையும் தட்டுப்பாடான காலத்திலும் எங்கயாவது ஓடி யாடி மாமா வாங்கிவந்து விடுவாரே.அந்த நன்றிக்காகத் தான் என்பாள்.
தினசரி வீட்டுக்குத் தேவையான உணவுச் சாமான்களை லெப்பார் மாமா தான் கடைகளுக்குப் போய் கை கடுக்க வாங்கி, சுமந்து கொண்டு வருவார்.
உலகச் சுற்றுப் பயணம் போனாலும் நடந்தே தான் செல்லுவது என்கிற வைராக்கிய  லட்சியத்தை மனம், மெய் ,மொழிகளால் கடை பிடித்தவர் அவர்.
 “சைக்கிளில் சீக்கிரம் போயிட்டு வா”ன்னு என் வாப்பா மாதிரி ஆட்கள் சொன்னால்,அவர் அவ்வளவு தான்.
 “என்ன செய்ய? இவர்கிட்ட இப்பிடி இன்னைக்கி மாட்டிக்கிட்டேனே.நடந்து போவது எவ்வளவு வசதியாயிருக்கும். அப்பிடி அவர் சொல்லை கேட்கல்லைன்னு தெரிஞ்சால் கோச்சுக்குவறே”ன்னு நினைச்சுகிட்டே எங்க அப்பாம்மாகிட்டே யோசனை கேட்பார்.
முதலாவது அவருக்கு சைக்கிள் பெடல் மீது காலை வச்சு ஏறத் தெரியாது.யார் வீட்டு படிக்கட்டுலயாவது போய்,ஏறி நின்று லாவகமா சீட் மேல் ஏறி உட்கார்ந்துக் கொள்ளுவார்.ஒரு நூறு அடி தூரத்துக்கு, யாரும் இல்லையே என்று தெரிந்து தான் சைக்கிள் பெடலை மிதிப்பார்.
பெரிய சைக்கிளை நினச்சும் பார்க்க மாட்டார்.எங்க வாப்பாவோ,சின்னாப்பவோ.சின்ன வயசில் ஒட்டிய 18 இஞ்ச் ஹெர்குலிஸ் சைக்கிள் தான் எப்பவாவது தொட்டுப் பார்ப்பார்.
.”பெரியவர் என்னை கடைக்கு சைக்கிள்ள போச்சொல்லிட்டார். எனக்கு சைக்கிள் ஓட்ட ஒரு மாதிரியா இருக்கு...கை கால்லாம் நடுங்குது....இப்பவெல்லாம் சைக்கிள் அங்குமிங்கும் லம்புது. ரோட்டுல போற, வாரவர்கள் எம்மேல் முட்ட வர்ற மாதிரி இருக்கு.....அதுக்குத்தான் இந்த சைக்கிள் சனியனை தொட எனக்கு பயமா இருக்கும்மா”ன்னுவார்.சில வேளை அழுவது போல் ஆகி விடுவார்.பாக்கிறவர்களுக்கு, குறிப்பா சின்ன வயசுக்காரங்களுக்கு பாவமா இருக்கும்...."அச்ச்ச்சோ:ன்னு யாராவது சொல்ல மாட்டார்களான்னு இங்கும் அங்கும் பார்த்துக் கொள்ளுவார். 
"பெரியவன், சொன்னால் சொன்னது தான். உனக்கு சைக்கிளில் ஏற பயமா இருந்தால் சைக்கிளை தள்ளிக்கிட்டே போயி மார்க்கட்டுல சாமானெல்லாம் வாங்கி.... அதுல கொழுவி வச்சிக் கொண்டு வந்திடேன். 
"அவன் சொன்னபடி.நீ சைக்கிள்ள போன மாதிரியும்இருக்கும், உன் ஆசைப்படி நடந்து வந்த மாதிரியும் இருக்கும்லப்பா'ன்னு அவ ஒரு தீர்ப்பு சொல்லுவாள். 
ரொம்ப நேர யோசனைக்குப் பிறகு லெப்பார் மாமா எவ்வளவு மெதுவா சைக்கிளை தள்ளிக்கொண்டு போக முடியுமோ... அம்புட்டு வேகத்துல பஜார் போவார். எப்படியும் ஒரு அம்பது இடங்களிலாவது நின்னு.நின்னு பிறகு தான் வீடு வந்து சேருவார்.ஒருக் காலமும் மீன்மார்கட்டுக்கோ கிடா அறுக்கும் இடத்துக்கோ கூட்டிப் போக மாட்டார்.கேட்டால், "மீனையும்.அதையும்.இதையும் அறுப்பத பார்த்தா... இவனுவ கறி,மீன் திங்க மாட்டாணுவ பாரு அதுக்கு தாம்"பார்.
அவர் சாமான் வாங்க நடந்து போனா, பதினைந்து நிமிஷம். .சைக்கிள்ல போனா ஒரு மணி நேரம் ஆகும்.

எங்கள கூட்டிட்டு போய் பள்ளிக் கூடத்துல விடுவார். ,எப்பவாவது லீவு எடுத்தால் வாத்தியார்கிட்ட பவ்வியமா சொல்லி அடிகிடி விழாம பாதுகாக்கும் பணியையும் அவர் செய்வார். வாத்தியார் அடிக்கலைன்னு தெரிஞ்ச பொறவு தான் அங்கிருந்து போவார்.பொழுகிற வேளையில் பள்ளி முடிந்து நான் வீட்டுக்கு வந்ததும் ."எலே அப்பா,அந்த சார்வாள் உன்ன அடிக்கல்லியே?"
"இல்ல மாமா."
கொஞ்ச தூரம் போவார்..திரும்ப வருவார்.'எலே,முட்டு, கிட்டு போடச் சொல்லலியே?"
"இல்ல, .இல்ல."
என் முகத்தை உற்று நோக்கி "இந்தப் பயல்,பொய் சொல்லலியே" ன்னு பார்த்துட்டு தான் போவார்.அம்புட்டு பாசம்.அவருக்கு. 


அந்தக் காலத்தில் வருஷத்தில் இரண்டு படம் அதாவது சினிமா பார்த்து வருவது எங்க வயசுக் காரர்களுக்கு மிக மிகக் கஷ்ட்டமான விஷயமாகும்.
சினிமா கொட்டகைக்குப் போய் படம் பார்க்க எங்கள் வீட்டில் விடவே மாட்டார்கள்.சம்மதிக்கவும் மாட்டார்கள்.
ஏதாவது பெருநாள் கந்தூரி வந்தால் ஒரு மாதம் முன்பாகவே வீட்டில் அப்பாம்மாவை நச்சரித்துக் கொண்டே இருப்போம். 
பெருநாளைக்கு நம்ம ஊர் கண்ணகி டாக்கீஸில் எங்க வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர்.படம் போடுரானாம்...,விடுவியா?
 “சரி பாப்போம்”ன்னு ஒரு தேர்தல் கால வாக்குறுதியை தருவாள்...முதல் பெருநாள் அன்னைக்கி படம் பார்க்க அனுமதி கிடைக்காது.ரண்டாவது அல்லது மூணாவது நாள் தான் கிடைக்கும்.
திருநெல்வேலி டவுணில் பத்து வருஷத்திற்கு முன்னர் ஓடி ஒழிந்த எம்.ஜி.ஆர்.,சிவாஜி.படங்கள் தான் மேலப்பாளையம் கண்ணகி டாக்கீசுக்கு வரும்.படம் ஒரே ஒரு புரஜெக்டரில் போடுவார்கள்.அதனால்.மூன்று இடை வேளைகள் வரும். தப்பித் தவறி மின்சாரம் போய்விட்டால் வீட்டுக்குத் திரும்ப வேண்டியது தான்.இப்படிதான், நாங்கள் வருஷத்தில் ஒன்று அல்லது ரன்ன்டு சினிமா பார்க்க முடியும்.
ஒரு நாளில் எங்க அப்பாம்மாவை ரொம்ப நச்சரித்து நானும் எனது வயது வுடையவர்களும் சினிமா பார்க்க வீட்டில் அனுமதி பெற்றோம். 
சரி பிள்ளைகளுக்கு துணையா யாரை அனுப்புவது?ன்னு யோசித்துவிட்டு லெப்பார் மாமாவுடன் எங்களை சினிமாவுக்கு அனுப்புவது என்று முடிவானது.
முதல் காட்சிக்குப் போக,மாலை நாலு மணிக்கெல்லாம் லெப்பார் மாமாவை தயார் செய்தோம்.முன்னேற்பாடாக அப்பாம்மா எங்களுக்குத தியேட்டரில் பசியெடுத்தால் சாப்பிட பிஸ்கோத்துக்கள்.காளி மார்க் கலர் பானங்கள்.முறுக்கு,கடலை,மிட்டாய்,ஒரு தர்மாஸ் பிளாஸ்க்கில் கருப்பட்டி சாயா என்று சகல தின் பண்டங்களையும் ஒரு கூடையில் போட்டு லெப்பார் மாமாவுடன் அனுப்பிவைத்தார்கள்.
படம் பார்க்கப் போகும் போதே லெப்பார் மாமாவிடம் கண்ணகி டாக்கீஸில் என்ன படம் மாமா ஓடுதுன்னு கேட்டோம். "என்னவோ சிவாஜி படம் தானாம்லே...கலர் படம்ன்னு மட்டும் யாரும் நினைச்சுகிடாதீங்க...கருப்பு வெள்ளைப்படம் தானாம்.....என்ன செய்ய சின்னாமது அப்துல் காதருக்கு இது தெரிய வேண்டாமா? கலர் படம் போடனுன்னு. இவர் தானே மேனேஜரா இருக்காரு.ஊர்ல கந்தூரி பெருநாள் வந்தா நல்ல படம் ஓட ஏற்பாடு பண்ண வேணாமா?. இப்படி எங்களுக்கு அந்த நாளிலே தெரியாத சின்னாமது அப்துல் காதரைப் பற்றி லெப்பார் மாமா சொல்லிக் கொண்டே எங்களை சினிமாக் கொட்டகைக்குள் அழைத்துச் சென்றார்.
பெஞ்ச்டிக்கெட் எடுத்து,மத்தியில் லெப்பார் மாமா இருக்க நாங்கள் அவருக்கு இரு பக்கமும் அமர்ந்து கொண்டோம். எப்போதும் லெப்பார் மாமா மேலப்பாளையம் ஊருக்குள் மேல் துண்டு மட்டுமே அணிந்து வருவார், கழுத்து வரை பனியன் போட்டிருப்பார். அன்றும் அவ்வாறே வந்திருந்தார்.
டைட்டில் ஓடத்துவங்கியது. படத்தின் பெயர் "லெட்சுமி கல்யாணம்".
சிவாஜி கணேசன் கதாநாயகன்.. சிவாஜி பெயர் போடும்போது தியேட்டரில் ஒரே விசில் சப்தம். "எதுக்கு மாமா விசில் அடிக்கிறாங்க?" படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே லெப்பார் மாமாவிடம் கேட்டேன்.
 “நீ ஏன்டா இதையெல்லாம் கேக்கிறே? அதெல்லாம் ஒரு கிருக்குடா. எம்.ஜி.ஆர்.படம் பாக்க வந்தா விசில் சத்தம் 'சொய்ய' கிளிச்சிரும். பேசாமே படத்தை பாருப்பா”ன்னு சொல்லிட்டு படம் பாக்க ஆரம்பிச்சார்..
படத்தில் நடிச்சவர்கள் பெயராகப் போடும்போது நம்பியார் பெயரைப் பார்த்ததும் :இந்தக் கொள்ளைலோவான், இந்தப் படத்திலும் வருவானோ.?வெளங்கவிட மாட்டானே” என்று நம்பியார் பெயரைப் பார்த்ததும் எங்களிடம் நம்பியாரைப் பற்றிச் சொல்லி வெறுப்பேத்தினார். அதில் ஒரு ஆத்திரம் தெரிந்தது.
படம் ஆரம்பம் ஆனதில் இருந்து சோக காட்சிகள் தான் வர ஆரம்பித்தது. பக்கத்தில் யாரோ அழுது. விசும்புவது போல் காதில் லேசாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தால்...வேற யாரும் அழவில்லை....லெப்பார் மாமா தான் அந்த மாதிரி முக பாவனையில் இருந்தார்.
தம் தோளில் போட்டிருந்த துண்டினால் வாயைப் பொத்திக்கொண்டு லெப்பார் மாமா ....அவர் 
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதைத் திரைப் படத்தின் வெளிச்சத்தில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. 
எனக்கும், என்னோடு வந்தவர்களுக்கும் அவரை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை.சோகம் அப்பிக் கொண்டது.
வேதனையின் உச்சத்தில் இடைவேளை வந்தது. லெப்பார் மாமா யாருடனும்.எதுவும்  பேசவில்லை.அவர் முகம் சோகத்தில் கலங்கிப் போய்இருந்தது.அடுத்து என்ன நடக்குமோ? என்ற பயம் கலந்த சோகம் தான் அவரிடம் காணப்பட்டது.
படம் மீண்டும் போட்டார்கள், அவரின் அழுகை இன்னும் கொஞ்சம் சப்தமாக இருந்தது.பக்கத்தில் இருந்த எங்களுக்கும் அழுகை வந்து கொண்டே இருந்தது.அனைவர் கண்களிலும் கண்ணீர் தான். கடைசிக் கட்டத்தில் தான் சோகம் முடிந்தது வணக்கம் போடும் வரை வரை ஒப்பாரி மயம் தான்.
படம் முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டோம்.”வாங்கலே போலாம்” என்ற வார்த்தைகளைத் தவிர லெப்பார் மாமா வேறு எதுவும் பேசவில்லை.
எங்க வீட்டு வாசலில், சினிமாவுக்கு போன பிள்ளைகளைக் காணவில்லையே என்று எங்கள் அப்பம்மா எங்களை எதிர் பார்த்துக் காத்திருந்தாள்


“என்னலே அப்பா படம் பார்த்தியழா?”
“நல்லா இருந்துச்சா?”ன்னு அப்பாம்மா கேட்டாள்.எங்க கிட்டே பதிலே வரலை.
வீடு வந்த பின்னும் அந்த சோகம் எங்களை விட்டுப் போக வில்லை.
“என்னலே, நான் கேட்கேன் ஒத்தணும்ஒன்னும் சொல்லாமே, மண்ணு மாறி நிக்கானுவோ "என்னலே நடந்துச்சு?.....அப்பா நீ சொல்லே.”ன்னு எங்கிட்ட கேட்டா.
“உங்க யாரையும் லெப்பார் திட்டவாலே செய்தான்?”
"இல்லம்மா"....
“நான் பண்டம், பலகாரம் கொடுத்து விட்டேனே அதெல்லாம் தந்தானாலே?”
 “என்னலே ஒருத்தனும் ஒன்னும் சொல்ல மாட்டுக்கானுவோ ”ன்னு அப்பாம்மா கேட்டாள்.
ஆகா அப்பாம்ம்மா இடைவேளைல சாப்பிடத் தந்த பண்டத்தை சினிமா சோகத்துல யாருக்கும் கொடுக்கல்லியேன்னு லெப் பார் மாமாவுக்கு அப்பம் தான் நினைப்புக்கு வந்தது. “கொடுக்கலை” என்று ஒரே வார்த்தையில் அவர் பதில் சொன்னார்
."எதுக்குல கொடுக்காம புள்ளைகள பட்டினி போட்டே?"
யாரும் எதுவும் பேசவில்லை.
அப்பாம்மா படம் பார்க்கப் போன எங்களையும் கூட்டிப்போன லெப்பார் மாமாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். 
லெப்பார் மாமா சோகமே வடிவாக இருந்தார். நான்தான் பேச ஆரம்பித்தேன்
.”எம்மா இனிமேல் இவர் கூட நீ சினிமாக்கு, எங்களை அனுப்பதேம்மா”ன்னு நான் சொல்லி முடிக்கும் முன்னே “
“வானனத்துருவான் உங்கள அடிச்சசானாலே?” என்று என்னிடம் கேட்டார். “இல்லம்ம்மா”.
“ஒங்க பண்டத்தைஎல்லாம் இவன் தின்னுட்டானாலே”?
“இல்லம்மா”
“அப்பம் என்ன தான் பன்னுனான்?”.......
“எம்மா, படம் போடும் போதே இவர் அழ ஆரம்பிச்சார்ம்மா.”
“எதுக்குல?”
“அதுல நம்பியார் வந்தான்ல.... அதுல இருந்து”..........
“அவன் வந்தா இவனுக்கென்னலே......?”
"படத்துல உள்ளவங்கள் அழுதானுவோல்லியா,அதப பார்த்து, இவர் அழுதார்மா"
“அவர் அழுவுநதைப் பார்த்ததும், எங்க எல்லாருக்கும் அழுகை வந்திருச்சும்மா.எல்லாரும் அழு திட்டோம்”
.அவ்வளவு தான். அப்பாம்மாவுக்கு வந்ததே கோபம்..
லெப்பார் மாமா முதுகில் ரண்டு கையாலும், ஒரு போடு போட்டாள்.
 “நல்ல நாளும் பொழுதுமா இப்பிடி பிள்ளைகளோட சினிமாக் கொட்டாயிலே போய் அழுதுட்டு வந்திருக்கியே நீ ஒரு மனுசனாலே ?”ன்னு அவரிடம் கேட்டாள்.....
லெப்பார் மாமா அசஞ்சிக் கொடுக்கல..
கொஞ்ச நேரம் கழித்து “எலே... லெப்பாரு சாப்பிடவரல்லியாலே? வாலே”ன்னு அப்பாம்மா கூப்பிட, சிரித்த முகத்தோடு அவர் போனார்,
இப்போ எங்க அப்பாம்மாவும் இல்லை.லெப்பார் மாமாவும் இல்லை. இருவரும் மறைந்துவிட்டார்கள்.....
எனக்கு ஒரு நம்பிக்கை.. சொர்க்கத்தில் என் அப்பாம்மா இருப்பாள்.கூடவே லெப்பார் மாமாவும் இருப்பார்.


செவ்வாய், 17 ஏப்ரல், 2012

நண்பர்களே வாருங்கள்

நண்பர்களே வாருங்கள்.சாந்தியும்.சமாதானமும்.நமக்குள் நல்லிணக்கமும் இறைவன் உண்டாக்குவானாகவும்.
நம் நட்பில் இன்னும் நெருக்கமாவோம்.
ஒவ்வொருக்கொருவர்,அன்பு பாராட்டுவோம்.
நட்பைப் போற்றுவோம்.
நம் ஊரை மேம்படுத்துவோம்.
நமக்குத் தெரிந்த வரலாறுகளைப் பதிவாக்குவோம்.
இந்தப் பகுதியில் நான் எழுதும் கட்டுரைகளைப் புத்தக வடிவமாக்கும்ஆசையும் உள்ளது.
சாதாரணமாக" பாமினி", "சாருகேசி" எழுத்துருக்களில் உள்ளதை மீண்டும் பான்ட் மாற்றம் செய்யவேண்டியதுள்ளது.
நம் ஊர் நண்பர்கள் வாசிப்பதிலும்,விமர்சிப்பதிலும் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதை வலைப் பதிவுகள் பலவற்றின் மூலமாக அறிந்து அவர்களிடமிருந்து கற்கும் மாணவனாக நான் இருக்கிறேன் என்பதை மிக்க மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

lksmeeran mohideen: வாப்பு ஊட்டுக்கு போறது... மாமூட்டுக்கு போறது...

lksmeeran mohideen: வாப்பு ஊட்டுக்கு போறது... மாமூட்டுக்கு போறது...: என் தாயார் மேலப்பாளையம் காஜா நாயகம் தெருவை சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பத்தின் பெயர் சாந்து என்பதாகும். நான் படிக்கும் காலத்தில் என் தல...

மேலப்பாளையம் மணியாச்சி காஜா சிலம்பு வித்வான்...




1935 ஆம் ஆண்டு பிறந்த மணியாச்சி காஜா என்றால் மேலப்பாளையத்தில் தெரியாதவர்கள் மிகக்குறைவு தான். 

போட்டா போட்டி, காட்டா குஸ்தி ஒரு காலத்தில் மேலப்பாளையத்தில் ரொம்ப பிரபலம். யாராவது ஒரு பயில்வானை ஒப்பந்தம் செய்துகொண்டு அவருக்கு வேளா வேளை கேக்கிற சோறு போட்டு ,வாய்க்கு ருசியாய் எதுவெல்லாம் கேக்கிறரோ அதுவும்  மற்றும் பசியாற மூக்கு முட்ட கொடுத்து, குஸ்திக்கு முன்பு அவரை தயார் செய்வார்கள். 

பயில்வான் வெற்றி பெற்றால் கூட்டி வந்தவர்களுக்கு அப்பிடி ஒரு மரியாதையை கிடைக்கும். 

அப்படி பயில்வாங்களை தயார் செய்கிறவர்களில் முக்கியமானவர் அவர். காமா பயில்வான். ஆசாத் பயில்வான் போன்றவர்களைமேலப்பாளையத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். 

இப்படிதான் சேப்பிளை காஜா தமது ஆரம்பக் காலத்தில் ஊருக்கு அறிமுகம் ஆனார். 

               போட்டி போட்டுக்கொண்டு தறியில் அதாவது காக்குழியில் இறங்கி ஒரு நாளைக்கி ரெண்டு சாம்பு நெய்து சாதனை உண்டாக்கியவரும் இவர் தான்.
           இளம் பிராயத்தில்  நெஞ்சின் கூட்டின் மேல் ஒரு உரலை தூக்கி வைத்து அதற்கு மேல் ஒருவரை அமரச் செய்து மார்பின் வலிமையை ஊர் அறியச் செய்தவர் இவர். இவரோடு சேர்ந்த சில நண்பர்களும்,இந்த கலையில் வல்லவர்களாக இருந்தார்கள். ,

       இப்போ யாரவது நம் ஊரில் இப்படி ஒரு முயற்சி செய்து பாப்பமேன்னு துணிந்தால் ஆஸ்பத்ரி போய் சேர்ந்து, போக  வேண்டிய இடத்துக்கு போகவேண்டியது தான்.. நெஞ்சில் ஒரு எலும்பு கூட மிஞ்சாது. நொறுங்கிப் போய்விடும். நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்.

தீரன் திப்பு வின் திண்டுக்கல் படை பிரிவில் சிலம்பம் தெரிந்த வீரர்கள் படை மிக வலிமை கொண்டதாக இருந்ததாம்.பின்னாட்களில் அவர்களில் ஒரு பிரிவினர் கான் சாஹிப் யூசுப் கானின் படை வீரர்களுக்கு அதை சொல்லிக்கொடுத்தரர்களாம். அவர்கள் “ஓதுவார் வகையறா” என்று அழைக்கப்பட்டார்கள். அந்த அணியில் பிரபலமாக அறியப்பட்டவர் வஸ்தாது லட்சுமண பாண்டியர் என்பவராவார்.

சிலம்பம் மட்டுமல்லாது வாள் வீச்சு ,சிலாத்துவரிசை,மலாய்,மான் கொம்பு,வேல்வீச்சு ,குதிரைஏற்றம் ,காளை அடக்குவது போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் பலவற்றை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

அவர் அந்த கலைகள் பலவற்றையும் ரகசியக் கலைகளையும்,  தமது பிரதான சிஷ்யர் மேலப்பாளையம் சேப்பிள்ளை சேக்மதார் வாத்தியார் முதற்கொண்டு பலருக்கு கற்றுக்கொடுத்தார்.

அவற்றில் ஒன்று, நூறு பேருக்கு மத்தியில் மாட்டிக்கொண்டாலும்  அவர்களிடமிருந்து தப்புவது எப்படி என்ற முக்கியமான ஒரு கலையாகும்.
இந்த அரிதான கலையை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த மாட்டோம் என்ற சத்தியம் செய்யும் மாணவர்களுக்கும், வருஷக் கணக்கில் அவருக்கு குருகுல முறையில் பணிவிடை செய்யும் ஒழுக்கமான மாணவர்களுக்கும் மட்டுமே அவர் போதிப்பாராம்.


ஒருவன் மது அருந்துவான் என்று தெரிந்தால் அவனைத் தம் பக்கமே வர விட மாட்டாராம். அவ்வளவு நேர்மையும் வீரமும் கொண்டவராக வஸ்தாது லட்சுமண பாண்டியர் இருந்தாராம். அத்துடன் இஸ்லாமிய சூபிகள் பலரையும் நேசித்தவராகவும் வாழ்ந்தார்.

தமது பிரதான சிஷ்யர் மேலப்பாளையம் சேப்பிள்ளை சேக்மதார் வாத்தியார் அவர்களின் தம்பி என்று மணியாச்சி காஜா லெட்சுமண பாண்டியர் முன் அறிமுக மானார்.

தமது மாணவர்களில் மதார் வாத்தியாரை, வஸ்தாது லட்சுமண பாண்டியர், நாட்டு வைத்தியராகவும் .பாரம்பரிய சித்த,யூனானி எலும்பு முறிவு கட்டு முறைகளையும் தெரிந்தவராகவும் ஆக்கினார்.

வாட்ட சாட்டமான ஆளாக இருந்த காஜாவை வித்தைகள் பல தெரிந்தவனாக ஆக்கினார். வெள்ளந்தி மனமும் கள்ளமில்லாத குணமும் அவரை சிலம்பக் கலையில் மிக்க ஈடுபாடு கொண்டவராக ஆக்கியது.
சிலம்பத்தில் ஸலா வரிசை மிகப் பிரதான மானது. அதில் லட்சுமண பாண்டியர் வரிசை தனியாகத் தெரியும். 

சிலம்பு வித்தை கற்றுக்கொள்ள குருவுக்கு காசு பணம் ஏதும் பெரிதாக கொடுக்கப்படுவதில்லை.
முதலில் குருவுக்கு தேங்காய் உடைத்து சிலம்பு வீச துவக்கம் செய்வார்கள்.அதுக்கு தேங்காய் தட்டுவதுன்னு பேர்.

தேறிய மாணவர்கள் குருவுக்கு விழாக் காலங்களில் வேஷ்டி, சட்டை, மேல் துண்டு கொடுத்து அழகு பார்ப்பதுண்டு. தலையில் பன்னீர் ஊற்றி கழுத்தில் மாலை அணிவிப்பது   உச்ச கட்ட மரியாதையாகும்.

சிலம்பு வித்தையில் “வா. வந்து மோதிப்பார். என்னை வென்றால் காலில் வீரச் சங்கிலி கட்டுகிறேன்” என்று சவால் விட்டு வெற்றி பெற்றவர்கள் இருந்தார்கள். மணியாச்சி காஜாவிடம் வீரச் சங்கிலி ரண்டு மூணு உண்டு,
அந்தக் காலத்தில் சிலம்பு விளையாட்டுக்கு போகும் போது பெத்தும்மாமார்கள் தங்கள் கழுத்துக்களில் இருக்கும் தங்க அட்டியலை சிலம்பு வீரர்களுக்கு அணிவித்து அனுப்புவது உண்டு. சிலர் கழுத்தில் கருப்பு பட்டை கட்டுவார்கள்.அதிலே தங்க மணிகள் தொங்கும்.

சர்க்கஸ் வீரர்கள் அணியும் ஆடைகளை சிலம்பு வீரர்களும் அணிந்து வருவார்கள், காலை கவ்வி பிடித்திருக்கும் பனியன் துணி டைட் பேண்டுகள் போட்டு அதன் மேலே இடுப்பு புஷ்டங்களைச் சுற்றி ஜட்டி போன்ற ஒரு உள்ஆடையை வெளி ஆடையாக அணிந்திருப்பார்கள். அதில் சிலர் ஜரிகை வேலைப்பாடுகள் செய்திருப்பார்கள்,

ஆரம்பத்தில் குருவி சின்னத்தில் நின்று நகர மன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்ற அவர் 1986 ல் நகர் மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் சார்பில் நின்று வெற்றி பெற்றார்.
   மணியாச்சி காஜாவின் மேலப்பாளையம் பாணி பேச்சு மேலப்பாளையம் மேடைகளில் மிகப் பிரபலம். ஒரு முறை மூன்று மணி நேரம் மேடையில் பேசி பிரமிக்க வைத்தார்.
மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்களான சிராஜுல்மில்லத் அப்துல் சமது, ஷம்சீரே மில்லத் அப்துல் லத்தீப் முதலான தலைவர்களுடன் அன்பை பெற்ற இவர் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களால் மேலப்பாளையம் மாநாட்டில் பாராட்டப் பட்டவர்.

மணியாச்சி காஜாவின் காலத்திலேயே அவருடைய கம்பெனி போல ஆர்.எம்.ஏ.அப்துல் சமத்.,  சித்தர் நாகூர், வளையல் பக்கீர்.,பச்சன்னா கிண்டி இப்றாஹீம், மேத்தமார்பாளையம் மஸ்தான் சிலம்ப கம்பெனிகளும் அந்தந்த பகுதிகளில் மிகப் பிரபலமானவை. 

அவர்கள் ஒவொருவரைப் பற்றியும் பின் வரும் காலங்களில் பார்க்கலாம்.
இக்கலையை பாதுகாக்க  ஏதாவது ஒரு நாளில் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

இல்லை என்றால் மேலப்பாளையத்தில் இந்த மாதிரி ஒரு “வள்ளாட்டு இருந்திச்சுன்னு” கட்டுரையில் படிக்கும் நிலைக்கு எதிர் காலம் இருக்கும்.