வியாழன், 22 அக்டோபர், 2015

ரயில் பயணங்களில்....


ரயில்....
அந்த வண்டிகள் நிற்கும் நிலையம்...
அவை சின்ன வயது முதலே என்னவோ ஒரு ஈர்ப்பை, எல்லோர் மனதிலும் ஏற்படுத்தித்தான்  வைத்துள்ளது.

நாங்க உயர்நிலை மேல்நிலை வகுப்புகள் படிக்கிற காலங்களில் ....உசுரோடு .....காற்றில் ஆடி அசைந்து....நெடிது  உயர்ந்த.... பெரிய மரங்கள் நிறைந்து,தென்றலோடு தாலாட்ட,..... பச்சைப்பசுமை வயல்கள் சூழ....அப்போது இருந்த மேலப்பாளையம் குறிச்சி ரெயில் நிலையம், அழிஞ்சே போச்சு.....தூக்கிட்டாங்க.

சின்னச்சின்ன வீடுகளில் அங்கேயே குடியிருந்த , அந்த ஸ்டேசன் மாஸ்ட்டர் ஐயருக்கு பத்து பிள்ளைகள்.அவர்களில் கிருஷ்ணன் எங்க கூட முஸ்லிம் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படிச்சான்.....

அதனால் பரிட்சைக் காலங்களில் அங்கே கிடந்த சிமென்ட் சிலாப்பு பெஞ்சுகளில் நானும் நண்பர்களும் ஒன்னா...இருந்தே படிக்க முடிந்தது.

சின்னஞ்சிறிய அழகிய நிலையமாக குறிச்சி ரெயில் நிலையம் இருந்தது....நண்பர்கள் அபூபக்கர் மவ்லானவும்,சின்னாமது மசூதும்  அங்கே படிச்சதவிட அங்கே பாடியதும் ,"பாடம்" படித்ததும் தான் அதிகம்.

மேலப்பாளையம் ரயில் நிலையம் உருவானபோது அங்கேயும் நானும்....இப்போ....மாவட்ட துணை ஆட்சியர் தகுதியில் உள்ள அபுல்காசிம் மாப்பிள்ளையும் நிறைய...."வாசித்துள்ளோம்".
அந்தக்காலத்தில் புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் நீராவி என்ஜின்கள் இழுக்க ஒரு.... பத்து பெட்டிகள் கொண்ட தொடர் நெல்லையில் இருந்து சென்னை வரை போகும்.
முதல் நாள் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.00 மணியளவில் சென்னை போய்ச் சேரும்.
கோடை வந்தால் சென்னை செல்வது என்பது.....அமெரிக்கா போவதற்கு நிகரான ..ஒரு வித பரபரப்பை தந்தவை .
பெரும்பாலும் திருநெல்வேலியில் இருந்து கிழக்கே காயல் பட்டணம் ,திருச்செந்தூர் போகவும். மேற்கே தென்காசி ,ரவணசமுத்திரம்,அம்பாசமுத்திரம் போகவும் அந்தக்காலத்தில் மூணு மணி நேரம் பயணப்பட்டு....சிரமப்பட்டு....கஷ்ட்டப்பட்டு.... "கரிவண்டியில்" தான் போவார்கள்.
ரயில் என்ஜினில் இருந்து கிளம்பும் நீராவி மற்றும் நிலக்கரி தந்த புகை வாசம் ஒருவிதமா இருக்கும்....
மதியம் மதியம் 1.00 மணிக்கு புறப்படும் வண்டிக்கு காலை11.00 மணிக்கே மேலப்பாளையத்தில் இருந்து மாட்டுவண்டியில் புறப்பட்டு விடுவார்கள்..
முதலாவது அல்லது இரண்டாவது நடைமேடையில் நிப்பாட்டி வச்சு இருக்கிற வண்டியில் ஏதாவது ஒரு பெட்டியில் உட்கார்ந்து கொள்வோம்.
வீட்டில் இருந்து எங்க அப்பாம்மா ....கட்டிக் கொண்டு வந்த கூட்டாஞ் சோத்தை.....அவ கையால் எங்களுக்கெல்லாம் ஊட்டி விடுவாள்.....அந்த ருசியை இதுவரை வேற எந்த சாப்பாட்டிலும் கண்டதில்லை...
பெரும்பாலும் ஜன்னல்களுக்கு கம்பிகள் இருக்காது...
ரயில் போகும் திசையில் இருந்து காற்றில் பலநேரங்கள் கரித் துகள்கள் பறந்து கண்களில் விழுந்து உறுத்திக் கொண்டே இருக்கும்..
சென்னைக்கு வருடத்தில் நாலைந்து முறை போகும் எங்க மாமா ...."ஹோல்ட் ஆல்"....என்கிற சுருட்டும் மெத்தையில் தலையணை,போர்வை, சிலவேளைகளில் போர்வை உள்ளிட்டவைகளை கொண்டுசெல்வார்கள்....அதுதோல் வார்பெல்ட்டால் அது கட்டப்பட்டிருக்கும்.அது ராணுவப் பச்சை....நிறத்தில் இருக்கும். 
பெறகு....இப்போ கிடைக்கிற மாதிரி குடி தண்ணீர் பாட்டில்கள் அப்போவெல்லாம் விலைக்கு கிடைத்ததில்லை....திருகுச்செம்பில் காணும்  வரை தண்ணீர் கொண்டு செல்வார்கள்.தீர்ந்துவிட்டால் ஏதாவது ஸ்டேசனில் தண்ணீர் பிடித்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு ஊர் தண்ணீரும் வெவ்வேறு ருசியில் இருக்கும்.சில ஊர் தண்ணீரை குடிக்கவே இயலாது.அவ்வளவு துவர்ப்பாக இருக்கும்.வெளியூர் போனால் அந்த ஊர் தண்ணீர் சுவை மாறுபாடு படுத்திஎடுத்துவிடும்.

இப்போது குளிர் பெட்டிகளில் பயணங்கள் பல நேரங்களில் வெறுமை தான்.

இப்போதுள்ள இளைஞர்கள் முதுகில் மாட்டும் பையும்.....அதில் ஒரு ஜீன்ஸ் மற்றும் இரண்டு டி சர்ட்டுகளோடு நாலு நாள் பயணத்தை வைத்துக் கொள்ளுகிறார்கள்....அந்த ஜீன்சை எப்போது தான் துவைப்பார்களோ.....யார் அறிவார்?.....தெரியவில்லை.
முன்பெல்லாம் ரயில் கிளம்பியதும் பக்கத்தில் இருப்பவர்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகம் ஆகிக் கொள்வார்கள்...பலகதைகள் பேசிக்கொள்வார்கள்...

இப்போது செல்போனில் ஹியர் போன்களை மாட்டிக்கொண்டு இளம் வயசுக் காரர்கள் தொடங்கி கிழடு கட்டைகள் வரை .....ஒரு வித மான... "முழி"...முழித்துக் கொண்டு வருகிறார்கள்.....சிலர் இடையிடையே உடம்பையும் நெளித்துக் கொள்வார்கள்..அவங்க பாட்டுக் கேட்கிற ..."லட்சணம் "அப்படி.யாரும் யார்கூடவும் பேசுவதில்லை...
லேப்டாப்,டேப்லட் வைத்துக் கொண்டு சினிமா படங்களை இளைஞர்கள் மட்டுமல்லாமல் கிழடுகள் வரை .....என்னத்தையோ பார்த்து ரசிக்கிறார்கள்..இடையில் தீவிரப்பார்வையும் சிரிப்பும் வேற.
குளிசாதன வசதிப் பெட்டியில் .....உடன் வரும் பயணிகள் பூசுகிற நீலகிரித்தைல அல்லது கோடாரித் தைல நெடி....தாங்கமுடியாதது...

இரவு நேர பயணங்களில் வெளிச்சத்தங்கள் உள்ளே ரொம்ப கேக்காத மாதிரி  இருக்கு....ஆனா...சில பெரும் ஆசாமிகள் சில பயணங்களில் எழுப்புகிற குறட்டைச்சத்தங்கள்  ....தூக்கமில்லாமல் செய்துள்ளன.
எப்போதோ தயார் செய்த வடை,போளி,சமோசாக்கள்,....தின்பவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்புகிற பணிகளை கச்சிதமாக செய்து வருகின்றன...
ரயிலில் பயணிக்கும் டிக்கட் பரிசோதனை செய்பவர்களும் , காவலர்களும் டீ முதற்கொண்டு காசு கொடுத்து அவர்களிடம் வாங்கி சாப்பிட்டதை நான் பார்த்ததே இல்லை.
நேற்று திருநெல்வேலி ரயில் நிலையம் சென்று வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வரப் போய் இருந்தேன்.....அப்போது பழமை மாறாத பாட்டிகள் இருவர்.....யாரையோ எதிர்பார்த்து வாசலில் காத்து நின்றார்கள்....
அப்போது நினைவில் வந்தவை இவை.




வெள்ளி, 2 அக்டோபர், 2015

.பாளையங் கால்வாயை பாதுகாப்போம் ......



நாங்கள் சின்ன பிள்ளைங்களா இருந்த போது  ..... எங்க ஊர் அமைப்பு வேற...
இன்னைக்கி நாங்க பாக்குற ஊர் வேற...

பொழுந்த பிறகு ....விளக்கு வச்ச பெறகு ....வீட்டை விட்டு பிள்ளைகள் யாரும் வெளியே போக பெத்தவங்க விடமாட்டாங்க...
அவங்க கண்காணிப்பிலே வச்சுக்கிடுவாங்க.....

பெரும்பாலும் குண்டு பல்புகள் தான் தெரு விளக்காகி வெளிச்சம் தரும்.அதுவும் நாப்பது வாட்சுக்கு மேல இருக்காது.
ராத்திரியானா....ஒருவிதமான ஈசல் சத்தமும்....கொஞ்சம் பெரிய வீடுகளின் மேல.... ஒசக்க ஆந்தைகள் சத்தமும் சிலவேளைகளில் கேக்கும்.

எப்பவாவது வெருகுகள் வந்து கோழிய புடிச்சிட்டு போனதா சொல்வாங்க.
ஜூன்,ஜூலை மாதத் தென்றல் காற்றை அனுபவிப்பது அந்தக்காலத்தில் மிகப்பெரும் கொடுப்பினையாகும்.

இன்னைக்கு வீடுகளின் முன் பக்கத்தில் திண்ணைகளே இல்லாமல் வீடு கட்டுவது ,ஒரு நாகரிகமாகிவிட்டது...
ஆனால் கடையநல்லூர் மக்கள் அந்த திண்ணை வச்சு கட்டுகிற கலாச்சாரத்தை இன்னும் விடவேஇல்லை.
எங்கூர்ல அந்த திண்ணைகளில் ‘ஒன்னுபோல’ இரண்டுபேர்கள் படுக்கிற.... தூங்குகிற வசதிகள் இருக்கும்.

ராத்திரி ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும்.
அப்போது திண்ணைகளில் உட்கார்ந்து.... முகம் காண முடியாத கொஞ்சம் மெல்லிய இருட்டில்...ஆண்மக்கள் தனியாவும் ,பெண்மக்கள் தனியாவும் உட்கார்ந்து ஒரு ஒரு மணி நேரத்த போக்குவார்கள்...அதுக்குப் பெறகு சிலதுகள் வீட்டுக்குள்ளே போய் தூக்கம் போடுவார்கள்.சிலர் அப்படியே திண்ணையில் பாயை போட்டு தூங்கிவிடுவார்கள்..

ஒரே ஒரு தட்டு உள்ள வீடுகளில் உள்ள ஆண்கள்.... தானும் ,அவங்க வீட்டம்மாவும்,ஒரு மறைப்பு....அல்லது படுதா கட்டி.... ,”பிள்ளை அல்லது மகன் மருமகளுக்கு  வசதியா”...பின்னிரவு  அல்லது அதிகாலை வரை திண்ணைகளிலேயே.. தூக்கம் போடுவார்கள்.அங்கேயே குடும்பம் நடத்தும் சில “வல்லாத்த”:...பேர்களும் உண்டு.
யாரும் அடுத்த வீடுகளில் போய் தலையிட மாட்டார்கள்..

 யார்வீட்டு மாப்பிளையாவது...நடுநிசி தாண்டி...மனைவி வீட்டில் இருந்து வேக வேகமாக சைக்கிளை அழுத்திக் கொண்டு போவதுண்டு...அந்த சைக்கிள் போன திசையின் பின்னே.....முபாரக் ஸ்டோர் அல்லது குட்டிமீனா ஆலிம் ஷா அத்தர் வாசனை காற்றில் வீசுவதுண்டு..
அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் காதுகளின் மேல் மடிப்பு இடுக்குகளில் புளியங்கொட்டை அளவில் உருண்ட அமைப்பில்,பஞ்சு எடுத்து அத்தர் அல்லது சென்டில் நனைத்து செருகி வைத்திருப்பார்கள்.

பொண்ணு வீட்டு தெருக்களில் செல்லும் போதோ...அல்லது வேறு யாராவது
பக்கத்தில் வந்தாலோ....சொய்யில....காதில உள்ள பஞ்சை...ஒரு விரலால்  லேசாக ஒரு சிறிய அழுத்தம் கொடுத்து அதில் தட்டுப்படுகிற அத்தரின் ஈரப்பதத்தை “அங்க இங்க” தேய்த்துக் கொள்வார்கள்.

மேலதிகமாக காற்று வாங்கனும்ன்னு நினைக்கிற கிளடு கட்டைகள் ....அவங்க வீட்டின் வாசல் ஓரம், நார் அல்லது கயிர் பின்னல் கட்டில்களைப் போட்டு அதுக்கு மேல சின்னதா முதுக அழுத்தாம இருக்க, ஜமுக்காளம் விரித்து,தலைக்கு தலையணை வைத்துத்  தூங்குவார்கள்.
நிம்மதியான காலம் அது...

எப்பவாவது திருட்டுப்பய ....சேட்டைகளும் நடக்கும்...அப்படியாபட்டவங்க ....கையில ஆம்ப்ட்டான்னா தொலைஞ்சான்.......கொன்னு எடுத்துருவாங்க.அதுக்கு தோதுவா...பாவாத்துற அலாம்புக் கம்புகள் ஐந்து வீடுகளில் ஒன்றிலாவது இருக்கும்.

எல்லாத்துக்கும் மேலா....தண்ணிச்செலவே அந்தக்காலத்தில அதிகம் இருக்காது.
குடிக்க மட்டும்தான் பெரியாத்துத் தண்ணி.(தாமிரபரணி)...அல்லது முனிசிபாலிட்டி தண்ணி....மத்ததுக்கெல்லாம் நம்மாத்துத் தண்ணிதான்.

பொதுவா நம்மாறுன்னு மேலப்பாளையம் ஊரைச்சுத்தி ஓடுகிற பாளையங்கால்வாயைத் தான் சொல்லுவார்கள்.
காலை விடிகிற நேரத்துக்கு முன்னே ‘புதுப்பொண்ணுகளும்,’இளம் வயது ஆண் பெண் மக்களும் வாய்க்காலில் போய் குளித்து முடித்துவிடுவார்கள்.

அதுக்கப்புறம் எட்டுமணிக்கு மேலே இளந்தாரிகளின் ஆளுகையில் நம்மாறு வந்து விடும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி படித்துறைகள் உண்டு.

காலை எட்டு மணிக்கு குளிக்க ஆத்துல இறங்கி மதியம் ரண்டு மணிவரை அழிச்சாட்டியம் செய்யும் சேட்டைக் கார பையன்கள் ஒவ்வொரு தெருவிலும் இருப்பார்கள்..

வாய்க்காலின் இக்கரைக்கும் அக்கறைக்கும் போட்டி போட்டு நீச்சலடிப்பார்கள்...சில குசும்பர்கள்,படிக்கட்டின் பக்கத்தில் கூட்டமா நின்று குளிக்கும் ஆண்களை அதிலும் கொஞ்சம் வயசு கூடியவர்களை உள் நீச்சல் போட்டு நீந்தி வந்து “பிச்சி” விடுவதுவதும் உண்டு.

எங்காவது தெருவில் “மையத்து” விழுந்துவிட்டால், இளவட்டங்கள் வாய்க்காலில் இருந்துதான் நாலு நாலு குடமாக தண்ணி எடுத்து கொண்டுபோய் தொட்டியில் நிரப்பிக் குளிப்பாட்ட ஏற்பாடு செய்வார்கள்..

மிக நீண்ட தூரமாய் இருந்தாலும் ஊர்க்காரர்கள் தான் தண்ணி மொண்டு கொண்டு போவார்கள்..இன்னைக்கு ஆழ்குழாய் உதவியால் யார்வீட்டின் மையத்துக்கும் வாய்க்கால் தண்ணி கொண்டுபோவதில்லை.

 தண்ணீர் வசதி இல்லாத வீடுகளில்... தெருவில் உள்ள பொது நல்லிகளில் தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்லுகிறார்கள் 

நல்ல தண்ணி வராத காலங்களில் வாய்க்கால் தண்ணியைக் கொண்டு சோறாக்கி ,குடித்து தாகம் தணித்தவர்களும் நிறைய இருந்தார்கள்.
இன்னைக்கு....படித்துறைகள் எதிலும் ஆட்கள் யாரும் வருவதில்லை...மனுஷங்க மாறியதுபோல....பாளையங்காலும் மாறிவிட்டது..

எங்க ஊருக்கு தண்ணி வருவதற்கு  முன்னாடியே கருங்குளத்தில் துவங்கும் சாக்கடை கலக்கல் காட்டுத்தெரு தாண்டி..... பெருகி ஓடும கூவமாக மாறிவிட்டது...
கைகால்கள் கூட அலம்ப முடியாது.மீறினால் சொறி சிரங்குதான்.
பாளையங்கால்வாயை இப்படி கொடுமைக்கு உள்ளாக்கியது யார் குத்தம்?....
பொறுப்பற்ற உள்ளாட்சி நிர்வாகமும், கண்டுகொள்ளாத மாநகராட்சியும்,தான்.
அத்தோடு இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.பூமியை இறைவன் படைத்த நாள் முதல் பாதுகாத்து அதனுள்ளே இருக்கும் ஆழ்குடிநீரை வகைதொகை இல்லாமல் பம்ப் செட்டுகள் மூலம் எடுத்து சீரழிக்கின்றோம். 

பாதி தெருக்களில் நிலத்தடி நீர் வறண்டு விட்டது.மிச்சம் மீதியுள்ள தெருக்களில் முன்நூறு அடிக்கு கீழே போய்விட்டது.

 பின் சந்ததிகளுக்கு நிலத்தடி நீரை இருப்புவைக்காமல் சுரண்டிக் கொண்டு இருக்கிறோம்....

எங்கள் தலைமுறைக்குப் பின்னர் வாய்க்காலை யாரும் பயன் படுத்தததால் நீச்சல் என்றால் என்னவென்று தெரியாத இளைஞர்கள் எங்கள் ஊரில் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள்.
வசதி வாய்ப்புக்கள் உள்ள சிலர் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் சென்று நீச்சல் குளத்தில் நீந்த பயிற்சி  எடுக்கிறார்கள்...

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சொன்னது போல நீருக்காகவே யுத்தங்கள் வரலாம்.
நேற்று நானும் ,மருமகன் அப்துல் ஜப்பாரும் எங்கள் வீட்டின்  பக்கம் வாய்க்கால் கரையில் நின்ற காரில் ஏறி   வெளியூர் புறப்படுமுன்னர் அங்கே பார்த்தேன்.....நாங்கள் எல்லாம் நீச்சல் பழகிய....அதிக நேரம் குளித்ததால் என் வாப்பும்மாவிடம் உதைவாங்கக் காரணமாயிருந்த பாளையங்கால்வாயின் கரையைத்தொட்டு நிறைய நீர் சாக்கடை நீர் தேங்கி திணறிக் கொண்டிருந்தது.

தண்ணீர் நிறைந்து செல்லுகிற காலங்களில் கூட குளிப்பதற்கு  இளவட்டங்கள்,சிறுவர்கள்,தாய்மார்கள் என்று யாரும் இல்லை..என் மனது என் இளமைக் காலத்தை நினைந்தது ஏங்கியது..

நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து டவுசரை கழட்டி வைத்துக் குளித்தக் காலங்களும்,.......லுங்கி கட்டும் வயதில் வெட்கப்பட்டு மறைத்துக் குளித்த வசந்தகாலப் பொழுதுகளும்.கண்முன் வந்து போனது.
வாப்பாமார்களின் லுங்கியை உடுத்திக் கொண்டு ஆற்றில் குளிக்கும் போது.... இருபுறமும் வேஷ்ட்டிக்குள்ளே காற்றை செலுத்தி கொஞ்சம் பலூன் போல ஆக்கி வாத்துகள் போல கொஞ்ச தூரம் நீந்திச்சென்றதும் நினைவில் வந்து நிறைத்தது.

ஆனால்.....பாளயங்கால்வாயில் குளிக்கத்தான் ஆட்கள் இல்லை.......மனது கனத்தது .......மாடுகளும்,எருமைகளும்..... சுகமாக நீந்திக் கொண்டு இருந்தன.
பாளையங்கால்வாய் கரையை ஒட்டி குழாய்கள் அமைத்து அந்த குழாய்களில் கழிவு நீர் சாக்கடைகள் கழிப்பறை கழிவுகள் சேருகிற அமைப்பில் உண்டு செய்தால் பாளையங்கால் வாயை காப்பாற்ற இயலும்.

பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறட்டும்.... என்று காத்துக் கொண்டிருந்தால்.... மேலப்பாளையத்தில் உள்ள நிலத்தடி நீர் அனைத்தும் சாக்கடை நீராகவே மாறிப் போய்விடும் அபாயக் கொடுமை உள்ளது .

கன்னிமார் குளத்தில் தேங்கி இருக்கின்ற தண்ணீர் அனைத்தும் ஹாமிம்புரம் பகுதிகளின் கழிவு நீர் சாக்கடைகளின் சேமிப்பாகும் .

அங்கு சேருகிற கழிவு நீரையும்  தனியாக வெளியேற்றி தனி குழாய்கள் மூலமாக பாதாள சாக்கடைக்கு சேமிப்புக்கு செல்ல வேண்டும்.
இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றோம்.

தொடர்ந்து பேசுவோம் ...