வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி .(பாகம் 1)

1.1.1941 புதன் கிழமை...
அன்று .....மதிய வேளை லுகர்  தொழுகைக்கு இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது......
மேலப்பாளையம் ஊரிலிருந்து தெற்கே .....திருநெல்வேலி-திருவாங்கூர் (திருவனந்தபுரம்) சாலையின் மேல்புறம் .....ஜோதிபுரம்.என்கிற சிறிய குடியிருப்பு.... இப்போதைய டக்கரம்மாள்புரத்திற்கு, தென்புறம்...ரோட்டை ஒட்டி .உள்ள புலவர் செய்யது அகமது தரகனார்.பங்களா.....

கண்ணுக்கெட்டிய தூரம் வரை....நான்கு திசைகளிலும்  பனை மற்றும் புளிய மரங்கள்.....பக்கத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் சிறிய அளவிலான குளங்கள்.... மட்டுமே..

பெயர் தெரியாத மரங்கள் .....அங்கே  தாராளமாக குட்டிகளோடு நரிகள் நடமாடுகின்ற புதர்கள்.....பொழுது சாய்ந்து விட்டால் அவை எழுப்பும் ஊளைகள்...கேட்பவர்களுக்கு ஒரு மாதிரி பீதியினைக் கொடுக்கும்....
அதற்கு மத்தியில் முதலாளி குடியிருப்பு...

அங்கே மூக்கை துளைத்து வெளியே வருகிற..... பால் மாடுகளின் கொட்டகை வாசம்....

அதற்குப்பக்கத்தில் ......நெடு நெடுவென உயர்ந்த ‘ஒட்டாக் காளை மாடுகள்’...அவைகளை வண்டியில் பூட்டினால் ...அதன் நோக்கால் மாடுகளின் கழுத்துகளில் தாங்கி இருக்க.....வில் வண்டியோ  பின் பக்க வாக்கில் சாய்ந்து இருக்கும்...அந்த வகைக் காளைகள் ஜோடிகளாகக் கட்டப்பட்டு இருந்தன.

இருநூற்றுக்கும் அதிகமான வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ....மேய்ந்து வந்து  அந்த வீட்டை ஒட்டி ,அங்கே இருந்த உயரமான பெரிய வேப்ப மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்த பகல் பொழுது....

சர்ர்.....என்று பெரிய .....பெரிய கார்களில் மேலப்பாளையம் முதலாளிகள் ஒவ்வொருவராக அந்த புலவர் வீட்டு பங்களாவில் வந்து இறங்கிய வண்ணம் இருந்தார்கள்...


சில முதலாளிகள் குதிரை வண்டிகளில் வந்து இறங்கினார்கள்....

அதே சாலையில் கொஞ்சம் வடக்கே இருந்த தோட்டத்திலிருந்து ஜமால் செய்யது முகம்மது ஆலிம் அவர்கள் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் வந்து முதலாவதாக வந்து இறங்க.....மற்றவர்களும் வந்து இறங்கத்தொடங்கி இருந்தார்கள்...

அவர்கள் அனைவரும் ..... அந்த பங்களாவின் முகப்பில் ஒரே வட்டமாக தரையில் ஜமுக்காளத்தில் அமர்ந்து...பல கதைகளை  சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ......

வயதால் கொஞ்சம் பெரியவர்கள்.... சுவற்றில் சாய்ந்து கொள்ள  வசதியாய்....பலகைகளும் ,தலையணைகளும் அங்கே நிறையவே இருந்தன...

யாருக்கும் தெரியாமல் சுருட்டு பிடிக்க ....அல்லது  புகைக்க..... கொஞ்சம் தள்ளி.... சில முதலாளிகள் நின்று கொண்டார்கள்..அவர்கள் இருக்கும் இடத்தை ....மூக்கைத்துளைத்து வந்த சுருட்டு வாடையே காட்டித்தந்தது....அவர்கள் ஆடைகளில் பூசியிருந்த அத்தர்,  ஜவ்வாது வாசனையை விட ....கொஞ்ச நேரத்திற்கு முன்னர் புகைத்த ....சுருட்டு வாடையே முன்னே வந்தது.....அவர்கள் கொண்டு வந்த..... திருக்கு செம்பிலிருந்து தண்ணீரை மொண்டு வாய் கொப்பளித்துக் கொண்டார்கள்...


தூரத்தில் ஒரு ஆஸ்டின் காரில் ‘கான்பகதூர்.’...டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் வந்து கொண்டு இருப்பது பங்களாவில் முன்னமே காத்து இருந்தவர்களுக்குத் தெரிந்தது....

அதே காரைத்  தொடர்ந்து.....ஒரு பெரிய கெடிலாக் காரில்.....நேரு கோட் அணிந்து ....பாக்கட் வாட்ச் அந்த சட்டைப்பையில் இருப்பதைக் காட்டும் ....வண்ணம் தங்க சங்கிலி இணைக்கப்பட்ட கோலத்தில் துருக்கித்தொப்பி அழகில்   பருத்தி சாகுல் ஹமீது-ஹனீபா சகோதரர்கள் வந்து இறங்கினார்கள்..

அந்தக் காரை ஓட்டுவதற்கு என்றே....இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட அந்த சிவந்த நிறமுடைய ....மௌன்ட் பேட்டன் பிரபு போலத் தோற்றம் கொண்ட ......காரோட்டி .....முதலில் காரை நிறுத்தி விட்டு, இறங்கி ....சடாரென பின் பக்க வாசல் அருகே வந்து .....குனிந்து இடப் பக்கக் கதவைத் திறந்து விட்டான்...


அவர்கள் அந்த பங்களாவில் உள்ளே இருந்த  அதே நேரத்தில்....காடுவெட்டி கிராமத்திலிருந்து திருவாங்கூர் சாலையில் பயணித்து, .....எல்.கே.எஸ்.முகம்மது மீரா முகைதீன் தரகனாரும் வந்து அந்த பங்களாவில் வந்து இறங்கிவிட்டார்....

தாம் வந்த கார் டிரைவரை..... காரோடு அனுப்பி....சமாயினா யூசுப் லெப்பை....மூளி.கலந்தர் லெப்பை...மோத்தை மதார்...வ.சே.ஷேக் மன்சூர் முதலான தோழர்களை.... ஊரில் போய் அழைத்து வரச்செய்து விட்டு உள்ளே நுழைந்தார்...

கலகலப்பான ..அந்த ...வருடத்தின் முதல் நாள் .....அந்த மதிய வேளை.... நண்பகலைத் தொட்டது........லுகர் தொழுகை நடந்தது...ஜமால் செய்யது முகம்மது ஆலிம்...தொழுகையை முடித்தார்கள்.....

ஒவ்வொரு முக்கிய நாட்களின் போதும் நண்பர்கள் முறை வைத்து ஒவ்வொருக்கொருவர் விருந்து கொடுத்துக் கொள்வார்கள்....அன்றைய விருந்து புலவர் செய்யது அகமது ஏற்பாடு செய்து இருந்தார்....

வித விதமான அசைவ வகைகள்.....அரிசி வகை பிரியாணிகள் ....வருத்தவை....பொறித்தவை....தேங்காய்  மற்றும் எண்ணெய் சேர்த்தவை....சேர்க்காதவை... ஆக்கியவை என்று பல வகைகளில் பரப்பி வைத்து ....விருந்தாளிகளை உண்ண அழைக்கிற நேரம்...

"முதலாளி....முதலாளி."......என்று ஒரு குரல்....

“ யாருப்பா....பழனிய்யாபிள்ளையா?....எல்.கே.எஸ்.வீட்டு கணக்குப் பிள்ளை .... என்னய்யா அவசரம்.....இப்போ சோறு வைக்கிற நேரத்தில வந்து இருக்கே?.”....என்று வேகவேகமாக வந்து சைக்கிளில் இறங்கியவரை நோக்கி .....சமாயினா யூசுப லெப்பை விசாரித்தார்;.

“ஆமாம்....முதலாளியை அவசரமா பார்க்கணும்..”....இளம் வயதினரான பழனியா பிள்ளை முகத்தில் பதட்டம் தெரிந்தது....

மேலப்பாளையம் சமாயினா காதர் மீத்தீன் தெரு சமாயினா  யூசுப் லெப்பை வயதில் கொஞ்சம் மூத்தவர்...பிரபல வணிகரும் கூட.....யாரிடத்தும் முகத்திற்கு நேரே எதையும் சொல்லிவிடும் தகுதி பெற்று இருந்தார்...ஊர் ஜமாஅத் பஞ்சாயத்துக்களில் .பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்புக்கள் சொன்னவர்.

அத்தோடு.... தமிழில் செய்யுட் பாக்கள் எழுதும் அளவிற்கு பாண்டித்தியம் கொண்டு இருந்தார்..அரங்கேற்றம் செய்யாமல் நீண்ட நாட்களாக இருந்த ரகுமான் முனாஜாத்து அவர் எழுதியது தான்..

பழனியா பிள்ளையை திண்ணையில் உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று....“எல்.கே.எஸ்.முகம்மது முதலாளி.....உங்களைப் பார்க்க உங்க கணாபிள்ளை....வந்திருக்காம்.....என்னவோ பதட்டமா இருக்காம்...என்னான்னு பாருங்கோ”....என்று எல்.கே.எஸ்.தரகனாரை அழைத்தார்...

கணக்குப் பிள்ளையைப் பார்த்த மாத்திரத்திலேயே ....எதோ ஒரு பெரிய பிரச்சினையா தான் இங்க வந்து இருக்காம் .....என்று நினைத்துக் கொண்டே எல்.கே.எஸ்.தரகனார்,..... பழனியாபிள்ளை பக்கம் வந்தார்...

“என்னய்யா...விஷியம்?..”

“முதலாளி...கல்கத்தா வக்கீல் எக்ஸ்பிரஸ் தந்தி கொடுத்திருக்கார்...”என்றார் பதட்டத்தோடு.

சாதாரணமான காலங்களிலேயே தந்தி என்று வந்தாலே....அது துக்கச்செய்தியைக் கொண்டதாவே இருக்கும் என்பதில் ......முதலாளிமார்களும் நம்பிக்கை கொண்டு இருந்தார்கள்.... 

தந்தியைக் கைகளில் வாங்கிப் பார்த்தபோது .....பத்துப் பதினைந்து வரிகளோடு நீண்ட விபரங்களைச்சொல்லுவது போல இருந்தது....ஓரளவுக்கு படித்த பழனியாபிள்ளைக்கும்...”ஒன்னும் புரியவில்லை...”

பர்மாவில் ஒரு இங்க்லீஷ் கம்பெனிக்கும் எல்.கே,.எஸ்.தரகனார்கள் நடத்தி வந்த வியாபார நிறுவனத்திற்கும்,  வியாபாரத்தின் டிரேடு மார்க் சம்பந்தமாக கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருந்தது...

எல்.கே.எஸ்.கம்பெனி டிரேடு மார்க் ...அதாவது விமான சின்னம்...தங்கள் கம்பெனிக்கு உரியது என்றும்... அதை அவர்கள் பயன் படுத்தியதால் தங்களுக்கு , லட்சக் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தி விட்டார்கள் ..ஆகவே சுமார் இவர்கள் மூன்று ஆண்டுகள் வருமான கணக்கு காட்டிய தொகைகளை நஷ்ட ஈடாகத்தரவேண்டும்.... என்பது....அந்த இங்கிலாந்து கம்பெனி தொடர்ந்த வழக்காகும்... 

கிறிஸ்துமஸ் விடுமுறை நாளுக்கு முன்னர் வெளியான ....அந்த வழக்கின் கல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தான் அந்த நாளில் சுருக்கமாக கல்கத்தா வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து எக்ஸ்பிரஸ் தந்தி மூலம்,ஊரில்  இருந்த முதலாளிக்கு  தெரிவித்து இருந்தார்கள்....

அங்கே கூடி இருந்த.....மேலப்பாளையத்தின் செல்வச்சீமான்கள் யாருக்கும் தந்தியில் கூறியிருந்த .... தீர்ப்பு விபரத்தை  வாசித்துப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை...எல்.கே.எஸ்.மீரான் தரகனாருக்கு ஏற்பட்ட பதட்டம் ....எல்லோருக்கும் வந்துவிட்டது...."வழக்கில் ஆங்கிலக் கம்பெனி வெற்றி பெற்று விட்டால்...சுமார் மூன்று லட்சங்கள் வரை நஷ்ட்ட ஈடு தரவேண்டுமே....கொடுக்கவேண்டுமே...என்ன செய்வது?."...என்று ஒரு இடத்தில் அமர்ந்து படபடத்துக் கொண்டு இருந்தார்...

"நீங்கள் எல்லோரும் சென்று.....சாப்பிடுங்கள்..ஆக்கி வைத்த சோறு வீணா காத்திருக்கிறது".... என்று எல்.கே.எஸ்.தரகனார் சொல்லிப் பார்த்தார்...உடன் இருந்த நண்பர்கள் யாரும் விலகிச்செல்லவில்லை...சுற்றிலும் சோகமயமாய் இருந்தது....

“நம்ம....மருமகப் பிள்ளைகளை உடனே கூப்பிட்டு வாங்களேன்”.....என்றார் எல்.கே.எஸ்.தரகனார்.

“ஆமா....அவங்க தான் இந்த தந்தியைப் பார்த்து ...விளக்கம் சொல்ல முடியும்”எல்லோரும் ஏகோபித்து சொன்னார்கள்..."கூப்பிடுங்க அவங்களை"
.
யார் அந்த மருமகப்பிள்ளைகள்?

பர்மாவில் படித்து..... ஆங்கிலப் புலமை மிகக் கொண்டு வழக்கறிஞரான.... மேலப்பாளையத்தின் முதல் பட்டதாரி கே.எம்.எஸ்.ஹமீது சாகிப்.....


இரண்டாவது மருமகப்பிள்ளை ...எல்.கே.எம். அப்துர் ரகுமான்.ஆவார்.
திருநெல்வேலி.ம.தி.தா.இந்துக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் படித்து, அதே கல்லூரியில் தமிழ்ப் புலமை மிகக்கொண்டு, அந்த வருடத்தில் பி.ஏ.பட்டம் படித்து முடித்து இருந்தார்... 

பின்னர் அதே ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து பின்னர் வழக்கறிஞரான முதல் சுதேசி பட்டதாரி....
எல்.கே.எஸ்.தரகனாருக்கு வக்கீல் ஹமீது சாகிப் சகோதரி மகன் முறையாவார்....வக்கீல் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் சாகிப் அவர்களோ மகளைக் கட்டிய மருமகன் ஆவார். ஆகவே தான் அவர்கள் இருவரையும் நண்பர்கள் உள்ளிட்ட எல்லோரும் "மருமகப் பிள்ளைகள்" என்றே அழைத்தார்கள்.    தம் மருமக்களாக எண்ணி மரியாதை தந்தார்கள்....

"மருமக்கள் எங்கே?" என்றே எல்லோரும் கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களில் மூத்தவர் பாபநாசம் மில்லுக்கும்,இளையவர் தூத்துக்குடி மில்லுக்கும் புத்தாண்டு விருந்திற்குப் போயுள்ளார்கள் என்ற தகவல் கிடைத்தது..."உடனே அவர்களை அழைத்து வாருங்கள்" என்றார்கள்...
கிழக்கு .....மேற்கு திசைகளில் அவர்களைக் கையோடு  அழைத்து வர கார்கள் புறப்பட்டன.

அன்றைய காலத்தில்  மேலப்பாளையம் நகரில் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு மிகப் பெருமளவில் பருத்தி நூல் வாங்கும் .....தரகனார்களின் குடும்பத்தில் இருந்து.... பிரதிநிதிகளை நூல் உற்பத்தி ஆலைகளுக்கு  அழைத்து ...புத்தாண்டு அன்று பரிசுகள் தந்து ....விருந்தளித்து பாராட்டுவது என்பது ஆங்கிலக் கம்பெனி ஆலையாக இருந்த .....”ஹார்வி மில்”...(இன்றைய மதுரா கோட்ஸ்) நிர்வாகம் கொள்கையாகக் கொண்டு இருந்தது...

மதியம் மூன்று  மணியாகிவிட்டது....நண்பர்கள் யாரும் உணவுண்ணவில்லை.....கவலைகள்  கொண்டு அமர்ந்து இருந்தார்கள்... எல்.கே.எஸ்.என்ன ஆவாரோ?...என்கிற கவலை அங்கே எல்லோருக்கும் இருந்தது...

தூரத்தில்  கார் ஹாரன் சப்தம் கேட்டது....அந்தக் காரில் சிவந்த முகமும் அழகும்,வனப்பும்,விரிந்த மார்பும்,உடற் பயிற்சியினால் கட்டுடலும் பெற்ற வழக்கறிஞர் ஹமீது சாகிப் வேகமாக வந்து இறங்கினார்..

ஏற்கனவே அழைக்கச்சென்றவர்கள் தந்தி வந்த விபரங்கள் யாவையும் அவர்களிடம் தெரிவித்து இருந்தார்கள்...
வந்த வேகத்தில்...சுற்றிலும் நண்பர்கள் புடைசூழ  சோகமாக அமர்ந்து இருந்த எல்.கே.எஸ்.மீர முகைதீன் தரகனார்...படபடப்போடு தந்தியை வக்கீல் ஹமீதுசாகிப் கைகளில் கொடுத்தார்....

வேகவேகமாக.......ஹமீது சாகிப் தந்தியை தனக்குள் படிக்கத்துவங்கினார்..
படித்து முடித்துவிட்டு அங்கே இருந்த நண்பர்கள் அனைவர் முகங்களையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்...

:”மாமா....இந்த தந்தியில் உள்ள தீர்ப்பு பற்றி...விளக்கம்  சொன்னால்...எனக்கு எவ்வளவு பீஸ் தருவீங்க?...”என்று கேட்டார்..

“நீங்க என்ன கேட்டாலும் தருவோம்” என்றார் எல்.கே.எஸ்.தரகனார்.
“சொல்லுங்க...சீக்கிரம் சொல்லுங்க...”என்றார்கள் சுற்றி இருந்த முதலாளிகள்...

“நீங்க ஜெயிச்சிட்டீங்க.....மாமா...டிரேடு மார்க் கேசில நீங்க ஜெயிச்சீட்டீங்க மாமா...”என்றார் வக்கீல் ஹமீது சாகிப்.
இந்த விளக்கத்தைக் கேட்ட மீரா முகைதீன் தரகானர் ...வக்கீல் சாகிப்பை கட்டிப் பிடித்துத் தழுவிக் கொண்டார்....

அந்த நேரம் இளைய மருமகன் எல்.கே.எம்.அப்துர் ரகுமானும் வந்து சேர்ந்துவிட்டார்...வக்கீல் ஹமீது சாகிப் நடந்த விபரங்கள் யாவையும் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் சாகிப் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்..

“தந்தியை வாசிக்கத் தெரியாமல் ......நமக்கு சாதகமா வந்த .......இந்த தீர்ப்பு தெரியாமலா....ஆக்கிவச்ச....சாப்பாட்டை தின்னாமல் இவ்வளவு நேரம் பசியோடு தவிச்சுக்கிட்டு இருந்தோம்? “

“கோடிக்கணக்கில் சொத்து இருக்கே....தந்தியை வாசித்து,ஆங்கிலத்தை  புரிந்து கொள்ளத் தெரியல்லியே.... “என்று முதலாளிகள் சொல்லிவிட்டு சாப்பிடத்துவங்கினார்கள்..

உண்டு முடித்து...மாலை நேர  அசர் தொழுகை நடந்து முடிந்தது..

வக்கீல் ஹமீது சாகிப் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் சாகிப்பை தம் கைகளோடு பற்றிப் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் போய் எதோ ஆலோசித்துவிட்டு....தீர்க்கமான முடிவு ஒன்றோடு .....அந்த பங்களாவின் பக்கம் வந்தார்.

 “எல்லோரும் இங்கே வாங்க”....என்று...முன்னதாக அவர்கள் இருந்த அந்த  முன் பக்கத்திற்கு அழைத்தார்..

எல்லோரும் மகிழ்ச்சி பெருக்கோடு வந்து அமர்ந்தார்கள்..

“எனக்கு பீஸ் தரனுமே....எவ்வளோ தரப்போகிறீர்கள்?” வழக்கறிஞர் ஹமீது சாகிப் கேட்டார்......எல்.கே.எம்.சிரித்துக் கொண்டார்.

“என்ன வேண்டுமானாலும் கேளுங்க... தரோம்...வீடுவாசல்கள்  வேண்டுமா.?..நஞ்சை புஞ்சைகள் வேண்டுமா? எது வேண்டும்?சொல்லுங்க.....” என்று கேட்டார்கள்..

“ஆமா.....எனக்கு நிலங்கள் வேண்டும் .அதுவும் டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் மற்றும் எல்.கே.எஸ்.முகம்மது மாமா....இருவரும் சேர்ந்து நிலங்கள் தரவேண்டும்...”என்றார்.
‘மருமகப்பிள்ளை ...நிலத்த வாங்கி என்ன பண்ணப் போறீங்க?
“ஆமாம்...எனக்கு ஒரு பேராசை உள்ளது..”
“பேராசையா?”......
“ஆமாம்.”

“கோடி....கோடியா...வசதி வாய்ப்பில் இருக்கிற உங்களுக்கு உலகக் கல்வி... ஆங்கிலக் கல்வி தெரியல்லியே.....அந்த நிலைமை நம்ம சந்ததிக்கும் இருக்க வேண்டுமா?....”

“இல்லை இல்லை....நாங்க தவியாத் தவிச்சுப் போய்ட்டோம்....என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க....”

“அந்த நிலைமையை மாற்ற ....ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கணும்......அதுல இங்க்லீஷ்....தமிழ்...அரபி....உருது ...ஹிந்துஸ்தானி லாம் சொல்லிக் கொடுக்கணும்...”
“பள்ளிக் கூடத்து பேர் என்ன?”
“ The Muslim Higher Grade School”
அப்படீன்னா? முஸ்லிம் உயர்தர பாடசாலைன்னு அர்த்தம்.....
(தொடரும்)

வியாழன், 25 பிப்ரவரி, 2016

மெய்ப்பொருள் காண்பது அறிவு.....

பறை சாற்றினாரா?............உண்மை நிலை என்ன?

முன்பெல்லாம்  ஒரு பள்ளிக்கூடம் , கல்லூரி போன்றவைகளின் வளர்ச்சிக்கு அல்லது கட்டிட வேலைகளுக்கு சொந்த நிதி வாய்ப்புக்கள் மூலமாகவே செலவுகள் செய்ய வேண்டிய நிலைமை இருந்து வந்தது.....

இந்தக்காலத்தில் அவ்வாறு சொந்த நிதி பலமோ,நன்கொடைகள் வசூலித்து ஆகவேண்டிய அவசியமோ இல்லை...

மத்திய மாநில அரசுகளே......கல்வி நிலையங்களுக்கு இவ்வாறான நிதி வசதிகளை தொகுதி மேம்பாட்டு நிதி என்கிற பெயரால் வழங்குகிறது.....

நாடாளு மன்ற சட்ட மன்ற உறுப்பினர்களை அணுகி விண்ணப்பித்தால் நிதி பெறலாம்....

மேலப்பாளையம் முஸ்லிம் கல்விக் கமிட்டியின் கோரிக்கையை ஏற்று ...பள்ளிக் கூட கட்டிட வளர்ச்சிக்கு ,தொடர்ந்து நிதியுதவி கிடைத்தது.கிடைத்தும் வருகிறது.

எங்கள் சார்பாக..பள்ளித் தாளாளர் முன்னாள் சேர்மன் எம்.ஏ.எஸ்.அபூபக்கர் சாகிப் தான் நிதி கேட்பார்கள் ...
அதனடிப்படையிலேயே
அ.இ.அ.தி.மு.க.எம்.பி...முத்துக்கருப்பன் எம்.பி.அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி, மேம்பாட்டு நிதி கொடுத்தார்கள்..அதைக்கொண்டு பள்ளிக்காக கட்டிடங்கள் கட்டப்பட்டன....

அவரைப்போல தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் .....

நாடாளுமன்ற உறுப்பினர்கள்
காங்கிரஸ் எம்.பி.பீட்டர் அல்போன்ஸ்....
காங்கிரஸ்எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன்.....
காங்கிரஸ்எம்.பி.. ராமசுப்பு.....

முஸ்லிம்லீக்கின் எம்.எல்.ஏ.கோதர் முகைதீன்....
தி.மு.க.வின் எம்.எல்.ஏ.முகைதீன் கான்,
ஆங்கிலேய இந்திய சட்டமன்ற எம்.எல்.ஏ.பிரதிநிதி நிக்லி....
முதலானோர் தத்தமது பதவிக்காலங்களில் நிதி தந்துள்ளார்கள்...

கடந்த வாரம் அ.இ.அ.தி.மு.க எம.பி.
விஜயா சத்தியானந்த் அவர்களும் நிதி வழங்கியுள்ளார்கள்....

மாண்புமிகு நாடாளு மன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதி மேம்பாட்டு நிதிகளைத்  தருவது ......பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்றுத்தான்....பள்ளிக்காக்.தாளாளர் முன்னாள் சேர்மன் எம்.ஏ.எஸ்.அபூபக்கர் சாகிப் அவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் தருகிறார்கள்...

வேறு தனிநபர்கள்....இன்னார் கேட்டுத்தான்.... நிதி வழங்கினேன் என்று யாரும் இதுவரை சொல்லவில்லை....என்பதை பதிவுகளில் இருந்து அறிய முடியலாம்....

"மகுடம்....களங்கம்.....மரண அடி "....விளக்கம் தருவார்களா?..
வரட்டும் .....தரட்டும் .....தந்தால்   தொடர் விளக்கங்கள் தொடர்ந்து வெளி வரும்....


அண்மைக்காலமாக எனக்குத்தெரிந்த....
என்னிடம் உள்ள தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்த .....அல்லது ஆதாரங்கள் நிறைய உள்ள பல்வேறு தகவல்களை எழுத்து வடிவில் கொண்டு வந்தாக வேண்டும் என்கிற ஒரு வகை உந்துதல் இருந்து கொண்டே இருக்கிறது...
என்னால் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக்கிட வேண்டும் என்கிற முனைப்பும் மனதில் உண்டு..
நம்மைச்சுற்றி ......பொய்யே மூலதனமாக்கி பேசுவதில் கை தேர்ந்தவர்கள் செய்கிற பரப்புரைகள் பற்றி கேள்விப்படும்போது .....அல்லது சொல்லப்படும் போது மனது என்னவெல்லாமோ ஆகிறது....அவற்றிற்கெல்லாம் .உடனே பதில் எழுதுவது என்பது கோபத்தின் வெளிப்பாடு..... ஆகி விடக்கூடாது என்பதனால் பல ஆண்டுகளாக அவைகளைத் தவிர்த்தே வந்துள்ளேன்....பொறுமை காத்துள்ளேன்...
பெரிய மனிதர்கள் புடைசூழ ....உள்ள பல சபைகளில், நாகூசாமல் பொய் பேசுபவர்களைப் பார்த்து அறுவருப்படைந்துள்ளேன்....
அவர்களுக்கு அதனால் என்ன பலன்கள் கிடைத்துவிடப் போகிறது....?தட்டிக் கேட்க மாட்டார்களா?...என்று ஏங்கியுள்ளேன்.
சிலரை சிரிக்க வைக்க...... பலரை இழிவு செய்யும் கொடுமையை ....இன்னும் பல இடங்களில் ......உடன் இருந்து .....பார்த்து அங்கரித்தே வருகிறோம்....இதெல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டுபவர்கள் இருக்கிறார்களா?....என்று தேடுகின்றேன்.....
காலத்தின் கொடுமை...... அத்தகைய மனிதர்களின் பொய்யுரைகள்....”இருட்டுப்பக்கங்கள்” என்னிடம் பதிவுகளாக தானே வந்து கிடைத்ததுதான்.....அதனை ஒளி,ஒலி.....வடிவில் வெளியிட்டால் அவர்களால்....வெளியில் தலை காட்டமுடியாது....அது பலரையும் பாதிக்கும் என்பது .......எல்லோர்க்கும் புரிந்ததுதான்.
இன்றைய தலைமுறை......என்ன சொன்னாலும் நம்புகிற காலங்கள் மலையேறிப் போய் விட்டது...கேள்விகள் ஆயிரம் என்று அல்லாமல்...... அதையும் தாண்டி கேட்கிறார்கள்..அதுதான் கால சூழ்நிலை...
சரி.....இதற்கு மேலும் இழுத்துக் கொண்டுபோனால்....”என்னாச்சு?....இந்த ஆளுக்கு?”...என்கிற பகுதிக்குப் போய் விடுவார்கள்..
“மெய்ப்பொருள் காண்பதறிவு..” என்கிற பயணத்திற்கு,வரலாற்றுத்தேடலுக்கு வருகிறேன்....விரும்புவோர் என்னோடு....பயணிக்க வாருங்கள்...அல்லாதோர் விட்டுவிடுங்கள்.....
இறைவன் நன்கு அறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான் என்பதில் .......நம்பிக்கை கொண்டு எழுதவிரும்புகிறேன்..........
கடந்த சில வருடங்களாக “கல்யாணப்பரிசு தங்கவேல் ஸ்டைலில்”...... வால்போஸ்ட்டர்கள் மூலம் மேலப்பாளையத்தில் தம் இருப்பைக்காட்டிக் கொள்வதில் சிலருக்கு என்னவோ ஒரு மோகம் ஆட்டுவித்துக் கொண்டே இருக்கிறது.......யாரும் இத்தகைய கேவலத்தைக் கண்டிப்பாதாயில்லை....அதை வாசித்துவிட்டு.....சிரித்து......தலையில் அடித்துவிட்டு..... கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறார்கள்...

பொதுவாக எல்லா ஊர்களிலும் கழுதைகள்....இன்றைய நாட்களில் சுவரொட்டிகளை தின்ன வருவதில்லை....மாடுகளுக்கு உணவாகிறது....பல இற்றுப்போன சுவர்களை அத்தகைய சுவரொட்டிகள் கீழே விழாமல் பாதுகாக்கின்றன......

ஆனால் அத்தகைய சுயவிளம்பரங்கள் தம்மை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தி நிற்க வைக்க வேண்டும் என்கிற வெறியோடு இருந்தால்?....... ...பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்கிற நிலைமை வரத்தான் செய்யும்..
அதில் முதலாவது சொல்லப்போகிற பொருள்......
கடந்த சில நாட்களாக என்னுடைய முகநூலில்....உள் வட்டத்தில் வந்து நண்பர்கள் கேட்பது.... மேலப்பாளையத்தில் ஒட்டப்பட்ட ஒரு வால் போஸ்ட்டர் தொடர்பானதாகும்....
அதுபற்றி நள்ளிரவில் கூட தொலைபேசி மூலம் தாயகத்தில் இருந்தும்,.....பல்வேறு நாடுகளில் இருந்தும் தகவல்கள் கேட்கிறார்கள்...
எல்லோருக்கும் சொல்லப்போகும் பதில் தான்....இது....
மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி என்பது 1941 ஆம் ஆண்டுஜூன் மாதம் 1 ஆம் தேதி முஸ்லிம் கல்விக்கமிட்டியால் துவக்கம் செய்யப்பட்டதாகும்....
முதலில் அதன் பெயர் முஸ்லிம் உயர்தர ஆரம்பப் பாடசாலை என்பதாகும்...
அந்தப்பள்ளியின் கல்விக்குழுவில் “கான் பகதூர்”,டி.எஸ்.எம்.ஒ. உதுமான் சாகிப், எல்.கே.எஸ்.முகம்மது மீரா முகைதீன் தரகனார், அப்துல்லா லெப்பை, பருத்தி சாகுல் ஹமீது தரகனார் ,பருத்தி ஹனீபா தரகனார்,சமாயினா யூசுப் லெப்பை,ஜமால் செய்யது முகம்மது ஆலிம்,மூழி கலந்தர் லெப்பை, கோணத்து அபூபக்கர், மோத்தை அப்துல்லா,புலவர் செய்யது அகமது , லேஸ் ஹவுஸ் புகாரி சாகிப்,வி.எஸ்.ஷேக் மன்சூர் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தார்கள்....
அவர்கள் தான் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உருவாக ஒன்று சேர்ந்து பணியாற்றினார்கள்.....
பள்ளியின் முதல் தாளாளராக மேலப்பாளையம் மைலக்காதர் தெரு வழக்கறிஞர் கே.எம்.எஸ்.ஹமீது சாகிப் அவர்களைத்தேர்ந்தெடுத்து....அவர்களுக்கு முழுமையான உரிமைகள் கொடுத்து பள்ளியை உருவாக்கினார்கள்...
இன்றுள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி,மற்றும் கோல்டன் ஜூப்ளி பள்ளியின் நிலங்கள், வள்ளல்கள் டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப்,எல்.கே.எஸ்.மீரா முகைதீன் தரகனார் ஆகிய இருவருக்கும் சொந்தமாயிருந்தது...
பள்ளி விளையாட்டுத்திடலின் பாதி இடம்....அதாவது வடபகுதி.....வாரிசுகள் இல்லாமல் இறந்து போன மேலப்பாளையம் நரவன் வகையறா குடும்பத்திற்கு சொந்தமான இடமாகும்...அன்றைய ஆங்கில அரசால் அந்நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு...... பள்ளிக் கமிட்டிக்கு விலைக்கு வழங்கப்பட்ட நிலங்களாகும்.
அதே நிலத்திற்கு தென்புறமுள்ள இன்னொரு பாதியிடம் டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் அவர்களுக்குச்சொந்தமாக இருந்ததாகும்....
இன்றைய மேலப்பாளையம் குறிச்சியில் ஆசாத் ரோட்டின் முதல் இடம் ...ஆறு தச்சு முழம் அகலம 84 அடி நீள இடம் லேஸ் ஹவுஸ் புகாரி ஹாஜியார் தந்ததாகும்.
பள்ளிக் கமிட்டி உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் பர்மா,கொழும்பு நாடுகளில் இருந்ததனால் .....அவர்களின் பரிபூரண அன்பை......நம்பிக்கையைப் பெற்ற வள்ளல் டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் அவர்களிடமே பள்ளிக் கூடத்தைக் கட்டி எழுப்புகிற பொறுப்புக்களையும் பணிகளையும் கொடுத்தார்கள்...
“பள்ளிக்கூடம் கட்டுங்கள்.....பணத்திற்கு நாங்கள் பொறுப்பு....”...என்று வாக்குக் கொடுத்த நண்பர்களின் பணம் எதனையும் எதிர் பார்க்காமல் தமது சொந்தப் பணத்தைக் கொண்டு, வள்ளல் டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் அவர்கள் பள்ளியின் இன்றைய தென் பகுதிக் கட்டிடத்தின் முதல் ஆறு வகுப்பறைகளை.....ஒட்டுக் கட்டிடமாக ...மிக உயரமாகக் கட்டினார்கள்..
வள்ளல் அவர்களின் பணிகளுக்கு பக்க பலமாக பள்ளியின் முதல் தாளாளர் வழக்கறிஞர் கோணத்து ஹமீது சாகிப் அவர்கள் தெருத்தெருவாகச் சென்று வீடு வீடாக ஏறி இறங்கி.....தம்பிடி....அணாக்கள்...துட்டு.....ரூபாய்... என்று, வசூலில் கிடைத்தது எல்லாம் வாங்கி....பள்ளிக் கட்டிடங்கள் எழும்ப உழைத்தார்கள்....உழைத்தார்கள் உழைத்துக் கொண்டே இருந்தார்கள்...
நெசவுத்தொழிலில் இருந்த மக்கள் பாவுக்கு, இத்தனை அணா என்று மகமை வைத்து பள்ளிக்கூடத்தை வளர்த்தார்கள்...
பர்மா....கொளும்பு வணிகத்தில் இருந்த  தரகனார்கள் தம்மால் முடிந்த நிதிகளைத் தந்தார்கள்...

பள்ளி உருவாகிட காரண மானது ஒரு தந்தி தான்....அதனை அடுத்த பதிவாகத் தொடர்வோம்...

(தொடரும்)