ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

" நல்லா இருப்ப......நிப்பாட்டு ".

 அப்போவெல்லாம்..... ரயில் பயணங்கள்ன்னா ....கனவுகள் மாதிரி இருக்கும்.

பக்கத்திலே உள்ள ஊர்களுக்கு போறதா இருந்தாலும்...

மணிக்கணக்கில் பயணங்கள் நீண்டு நெடுப்பமா இருக்கும்....

நினைவு தெரிந்து என்னுடைய தந்தையை பெற்றெடுத்த வாப்பும்மா மற்றும் அவளை ஒத்த வயதுக்காரங்களோடு சிறுவயதில் பொட்டல்புதூர் போக...

ரவண சமுத்திரம் ரயில் நிலையம் போய் இறங்கி உள்ளேன்.

திருநவேலி வீராவரம் ஸ்டேஷனில் இருந்து 45 கி.மீ.தூரத்திற்கு.... அந்தக் காலத்தில் குறைந்தது 3 மணி நேரமாவது ரயில் போகும்.

மதியம் 12 மணி சுமாருக்கு புறப்படும் அந்த ரயில் வண்டி மூனு அல்லது மூனரை மணி வாக்கில் அங்கே போய்ச் சேரும்.

அந்த வண்டி போய்க்கிட்டே இருக்கும் போது....வீட்டுல இருந்து கொண்டு போன...சாப்பாட்டை ஊட்டி விடுவாள்...

சேர்மாதேவி கத்திப் பாலம் அம்பாசமுத்திரம் போளி... இது எல்லாம் கண்டது... அப்போதுதான்.

அந்த வண்டியை ....கரி என்ஜின் பெரும் சப்தமிட்டுக்கொண்டு... புகையை கிளப்பிக் கொண்டு இழுத்துச் செல்லும்.... ஒரு அஞ்சு ஆறு பெட்டிகள் இருப்பது அந்த காலத்தில் பெரிய விஷயம்.

அந்த ரயில் பெட்டியின் உள்ளே புகை வாடையும்....நீராவி வாடையும்....

கலந்த ஒரு கலவையான வாசனை மூக்கில் ஏறிக் கொண்டிருக்கும் .

போகிற போக்கில் நீராவி எஞ்சினின் நீராவியை உண்டாக்கும் நிலக்கரி எரியும் போது ....குப்குப்ன்னு புகை பெருகி வந்து ....ஜன்னல் ஓரம் இருக்கக்கூடியவர்களின் கண்களில் கரித்தூசி வந்து விழும் .

ஜன்னலோரம் இருந்து பராக்கு பார்த்துக் கொண்டிருப்பவர்கள் புகை வந்து கொண்டிருக்கும் போது முகத்தை வேற தெசையில் திருப்பிக் கொள்வார்கள். 

அது ஒரு இளம் பிராயக் காலம்.

அதுக்குப் பொறவு.... பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது மாசிலாமணி சார்வாள் தலைமையில் குற்றாலத்திற்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி இரயில் நிலையம் வரை புகை வண்டியில் சென்று, குற்றாலம் வரை அந்தா இந்தான்னு...

சொல்லி நடத்தியே....

கூப்பிட்டு போன கதை எல்லாம் உண்டு.

அதுக்குப் பொறவு 1981 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்த போது ஜனவரி மாதம் 5 6 தேதின்னு நெனைக்கேன்.... அப்பொழுது எம்ஜிஆர் இரண்டாவது முறையாக ஆட்சியில் ஏறி இருந்தார். நான் பள்ளி மாணவனாக இருந்த காலகட்டத்தில் எங்களை எல்லாம் ஆசிரியர் கோமதிநாயகம் தலைமையில் அன்றைக்கு பணியில் இருந்த அகமது மீரான் , ஹபீப் சார்வாள்கள் பொறுப்பில் கூப்பிட்டுப் போனாங்க....

. மதுரையிலிருந்து புதூர் அருகில் உள்ள அல் அமீன் உயர்நிலைப் பள்ளியில் எங்களை எல்லாம் தங்க வச்சாங்க.....

அப்வவும் கரி வண்டி.... புகையை எழுப்பிக் கொண்டு சென்ற நீராவி எஞ்சின்தான்.

160 கி.மீ.தூர மதுரைக்கு போய்ச் சேருவதற்கு 6 மணி நேரத்திற்கு மேலாக ஆகும். நாங்கள் போன வண்டியோ... இரவில் 11 மணிக்கு புறப்பட்டு விடியக்காலை அஞ்சரை மணி வாக்குல மதுரைல கொண்டு போய் விட்டான்.

அப்படி என்றால் எவ்வளவு நேரம் அந்த கரி வண்டி எடுத்து இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

எனது மாமா மேலப்பாளையம் முன்னாள் சேர்மன், வழக்கறிஞர் எல் கே எம் அப்துல் ரஹ்மான் அவர்கள், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக 35 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்தவர்கள்.

ஒரு காலகட்டத்தில் கல்லூரியின் பொறுப்பு செயலாளராகவும் இருந்தவர்கள்.

மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் 30 ஆண்டு கால தாளாளராக பணி செய்தவர்கள்.

அவர்களுக்கு மிக நெருக்கமாக காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் ஷாம் சிகாபுதீன் ஹாஜி யார் என்று ஒரு பெருந்தகை அதுவும் இலங்கையில் வணிகம் தொழில் செய்து வந்த பெருந்தனக்காரர் இருந்தார்.

அவர்களை அடிக்கடி சந்தித்து வரக்கூடிய வாய்ப்பு என் மாமா அவர்கள் மூலம் ஏற்பட்டது.

மேலப்பாளையத்தில் இருந்து கடிதம்.... காயல்பட்டினத்தில் இருந்து திரும்பவும் கடிதம் என்று தகவல் தொடர்பு பரிமாற்ற பணியில் என்னை அனுப்பி வைப்பார்கள்.

காயல்பட்டினம் செல்வதற்கு பஸ்ஸை விட.... திருச்செந்தூர் ரயில் வண்டியைத் தான் அதிகம் விரும்புவேன்.

இன்னும் ஆசை அதிகம் கொண்டு.... மேலப்பாளையம் குரிச்சியில் அந்த காலத்தில் ரயில் நிலையம் ஒன்று இயங்கி வந்தது.

அங்கே என்னுடைய பள்ளித் தோழன் கிருஷ்ண னின் தந்தை தான் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். 

ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய காலகட்டங்களில் கிருஷ்ணன் என்னோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் தேர்வு நடக்கின்ற காலங்களில் அந்த ரயில் நிலையத்தில் இருந்து கொண்டு படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம் 

அது 12-ஆம் வகுப்பு வரை தொடர்ந்தது .

ஆகவே மேலப்பாளையம் குறிச்சி ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து காயல்பட்டினத்திற்கு அல்லது திருச்செந்தூருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு அந்த ரயிலில் ஆவலோடு ஏறி அமர்ந்து காயல்பட்டினம் செல்வேன்.

அது ஒரு காலம்.

1981 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தான் திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் என்று ரயில் பாதை அமைந்தது.

முதன்முதலாக நாகர்கோவிலில் இருந்து பெருத்த உருவத்தினுடைய நீராவி எஞ்சின் இரண்டு மூன்று பெட்டிகளோடு திருநெல்வேலி ஜங்ஷனை நோக்கி வந்தது.

கொக்கிறகுளம் ரயில் பாலத்தைத் தாண்டிச் செல்ல முடியாமல்.... இந்தக் கரையிலேயே நின்று விட்டது.

காரணம் ...தண்டவாளப் பணிகள் முடியாமல் இருந்த காலம் அது.

அந்த ரயில் பாதை அமைந்ததற்கு பின்னால் நாகர்கோவில் திருவனந்தபுரம் செல்வதற்கும்.... அதையும் தாண்டி கொல்லம், எர்ணாகுளம், கொச்சின் செல்வதற்கும் போய் வந்துள்ளேன்.

இன்னும் பொறுப்புக்கள் பல வந்ததற்குப் பின்னர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலமாக.... சாவக்காடு பகுதிகள் தாண்டி மலப்புறம், பொன்னானி மஞ்சேரி செல்வதற்கும்... கண்ணனூர் வரை போய் வருவதற்கு அந்த பாதையை பயன்படுத்தி இருக்கிறேன்.

சென்னைக்கு வந்து செல்வது என்பது என்னுடைய மாணவப் பருவத்திலேயே துவக்கம் ஆகி விட்டது .

அதுவும் ரயில் ...பஸ் பயணங்கள் என்பவை என்னோடு பின்னிப்பிணைந்தவை.

ஒரு காலத்தில் திருநவேலியில் இருந்து ரயிலில் மாலை நாலு மணிக்கு புறப்பட்டால் மறுநாள் காலை 8:30 அல்லது 9 மணி அளவில் தான் சென்னை எக்மூர் போய் இறங்க முடியும். 

630 கி.மீ....16 மணி நேரங்கள் ரயில்ல போகணும். அப்படி இருந்த காலங்கள் அகல ரயில் பாதை வந்தபோது 14 மணி நேரம் 12 மணி நேரம் என்று குறைஞ்சி... தற்போது பத்தரை மணி நேரத்தில் சென்னை எழும்பூர் போய் சேர முடிகிறது 

1992 93 காலகட்டங்களில் திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வதற்கு உள்ள விருது நகர் வரை மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் மீட்டர்கேஜ் மூலமாக சென்னை செல்வதற்கு திருநெல்வேலி- பேட்டை- தென்காசி என்று போய் சிவகாசி- ராஜபாளையம் என்று தொடர்ந்து விருதுநகரை தொட்டு அந்தப் பாதையில் சென்னை போய் சேர்ந்த நாட்கள் உள்ளன.

ஒரு காலகட்டத்தில் சென்னை செண்ட்ரலில் இருந்து பயணப்பட்டு ஜோலார்பேட்டை அரக்கோணம் ஜோலார்பேட்டை வழியாக எங்கெல்லாமோ சுற்றிக்கொண்டு  திண்டுக்கல் மதுரை வந்து திருநெல்வேலி வரவேண்டிய சூழ்நிலையிலும் இருந்தது.

தற்போது மின் மயமாக்கப்பட்ட பாதையின் மூலமாக மிக வேகமாக ரயில் மூலம் சென்னைக்கு செல்ல முடிகின்றது.

இவையெல்லாம் எதற்காக இங்கே சொல்றேன்னா....ரயில் பயணங்களில் ஒரு காலத்தில் பக்கத்தில் இருப்பவர்களோடு பேசிக் கொண்டிருக்க முடியும். பேச வாய்ப்பு இல்லாத சூழ்நிலைகளில் கைகளில் கொண்டு செல்லும் புத்தகங்கள் நமக்கு பயணங்களில் அதுவும் குறிப்பாக ரயில் பயணங்களில் மிகச்சிறந்த வாசிப்பு அனுபவங்களை கொடுக்கும்.

சில சில வேளைகளில் பக்கத்தில் இருக்கின்ற பேர்வழிகள் பேசுகின்ற தொல்லைகள் தாங்க முடியாமல் கூட புத்தகங்களில் கவனம் செலுத்தி வாசிக்க முடியும்.

அதே நேரத்தில் பல்வேறு பயணங்களில் பக்கத்தில் இருக்கின்ற அதிகாரிகள் அலுவலர்கள் மூலமாக பல்வேறு தகவல்களும் ரயில் பயணத்தில் பெற முடியும் .

ரயில் சினேகம் என்பது 12 மணி நேரத்திற்குரியது மட்டுமல்லாமல்.... சில நட்புகள் நீண்ட நெடிய நாட்கள் வருடங்கள் தொடர்ந்தே வந்திருக்கின்றன .

இப்பவெல்லாம் கிழடுகள் முதல்...

குமரிகள்... சிறுசுகள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு செல் போன்ல பாட்டுகள் கேட்டுகிட்டு ..

முகத்தை ஒரு தினுசா வச்சிக்கிட்டு வருகிற லட்சணத்தைப் பார்த்தாலே சிரிப்புகள் வந்து கொண்டிருக்கும்.

கதைக்கு வருவோம்...... நேற்றைய தினம் திருநெல்வேலியில் இருந்து கல்விப் பணிகள் தொடர்பாக சென்னைக்கு பயணப்பட்டேன்.

வரும்போது இருக்கட்டுமேன்னு.... அடிக்கடி நான் வாசித்து மகிழும்... என்னுடைய அருமை சகோதரர் நெல்லை சுகா அவர்களின் புத்தகமாகிய ...தாயார் சன்னதியையும் அன்பு அண்ணன் நாரும்பூ நாதனின் வேணுவன மனிதர்கள், அண்ணன் தீன் அவர்களின்சந்தனத் தம்மை, கலாப்ரியா அவர்களின் பேரருவி புத்தகங்களையும் எடுத்து வந்தேன்.

என்னை விட ஓரிரு வயதுகள் இளையவரான சுகா அவர்கள் திருநவேலி ஊரைச் சேர்ந்தவர்.


அவர் குடும்பத்தோடு.... தலைமுறைகளான தொடர்பை கொண்டவன்.


அவருடைய தந்தை தமிழ்க் கடல் ஐயா  நெல்லை கண்ணன் அவர்களை... நாங்கள் எல்லாம் வாப்பா முறை வைத்து அழைப்போம்.... அவரும் எத்தனையோ இடங்களில் என்னை மகனே என்று தான் அழைப்பார்.

என்னுடைய பிள்ளைகள் திருமணத்திற்கு முன்னதாகவே வருகை தந்து... ஒரு பாட்டன் அந்தஸ்திலிருந்து குழந்தைகளை எவ்வளவு தூரம் வாழ்த்தி மகிழ்விக்க முடியுமோ அவரெல்லாம் செய்தார்.

அதுபோல எங்களுடைய வீட்டில் எத்தனையோ முறை அவர்கள் உணவருந்தி சென்றதெல்லாம் மிகப்பெரிய கொடுப்பினை எங்களுக்கு.

அன்புத் தம்பி சுகா அவர்கள் தன்னுடைய சிந்தனையாலும், உழைப்பாலும், எழுத்தாலும், தமிழ்த் திரையுலகத்தின் தகுதியான ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.

இயக்குனர் பாலு மகேந்திராவின் அறிமுகம் பெற்று ...அவர்களுடனே பல்வேறு திரைப்படங்களில் உதவியாளராகப் பணியாற்றினார். அதற்குப் பின்னர் ஓரிரு படங்கள் இயக்கி ...முழு நேரமும் கதை வசனகர்த்தாவாக தன்னுடைய பணியை சென்னையில் நெல்லையில் தொடர்கிறார் .

அவருடைய கதை வசனத்தில் வெளிவந்த நடிகர் கமலஹாசன் அவர்கள் நடித்த பாபநாசம், தனுஷ் நடித்த அசுரன் முதலானவை அவருடைய எழுத்தின் எழுச்சியை வசனங்களில் காட்டித் தந்தன.

திருநெல்வேலி பாஷையில் அவர் எழுதுகின்ற அந்த எழுத்துக்கள் சினிமாவில் மட்டுமல்லாது பார்ப்பவர் கேட்பவர்கள் மனசில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.

அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதி வந்த மூங்கில் மூச்சு என்கின்ற கட்டுரைத் தொகுப்பு உலகளாவிய அளவில் பெருமை சேர்த்தது.

அதனைப் போலவே தாயார் சன்னதி என்கின்ற திருநெல்வேலி பதிவுகள் அற்புதமானவை .

வாசித்து ....வாசித்து மகிழத்தக்கவை.

அதனை நேற்றைய தினம் ரயிலில் வரும்போது வாசித்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் புத்தகத்தில் ஜெயன்ட் வீல் என்கின்ற ஒரு பதிவு உள்ளது.

திருநவேலி பகுதியில் உள்ள குடும்பங்கள் பலவற்றில்...

சினிமா.... பொருட்காட்சி... சர்க்கஸ் ....பார்க்க சின்ன ஊரார் போகனும்ன்னா....குடும்பத்தில் உள்ளவர்கள் போக அக்கம் பக்கத்தில் உள்ள பெரிய மனுஷாட்களிடம் ஒப்படைத்து பத்திரமாக கூப்பிட்டு போய்ட்டு வாங்கன்னு.... அனுப்பி வைப்பார்கள்.

என்னையும் அவ்வாறு பலமுறை பொருட்காட்சி, சர்க்கஸ் ,சினிமா.... குறிப்பா எம்ஜிஆர் சிவாஜி சினிமா பார்க்க அனுப்பிச்சு வச்சு இருக்காங்க.

அத மாதிரி ....சுகாவை இளம் வயதில் பொருட்காட்சிக்கு அழச்சிக் கிட்டுபோன பெரியப்பா பற்றி

ஜெயண்ட் வீல் ராட்டிணம்....ங்கிர பதிவை வாசிச்சுக் கிட்டிருந்தேன்.

அதிலே சுந்தரம் பிள்ளை பெரியப்பா என்கின்ற ஒரு கமிஷன் கடை பெரியவர்...

சிவப்பழம் டி எஸ் பாலையா மாதிரி முழிப்பு உள்ளவர் ... பனியன் மாதிரி மூன்று பித்தான்கள் மட்டும் உள்ள கழுத்தில் வழியாக போடும் ச ... அந்தச் சட்டையை அணிந்து திருநெல்வேலி பொருட்காட்சிக்கு அழைத்து செல்கிறார்.

பொருட்காட்சியில் இருக்கின்ற அந்த பெரிய ராட்டினத்தில் ஏறுவதற்கு கொஞ்சம் பெரியவனாக இருந்த சுகா ஆசைப்பட்டதை எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு.... அதில் ஏறி விட்டார்.

மனதளவில் மிகப் பயந்த குணமுடைய சுந்தரம் பிள்ளை பெரியப்பா அந்தராட்டில் ஏறி உட்காரும்போது... ஆண்டவனை துணைக்கு அழ ச்சிகிட்டு... அவருடைய வழக்கப்படி சிவாய நம என்று சொல்லி... கண்களை இறுக்கமாக மூடி ராட்டினம் சுற்றுவத எதிர்கொண்டு இருந்திருக்கிறார்....

ஒரே ஒரு சுற்று தான் போயிருக்கும்...

அந்தப் பெரியப்பா.... ஏ நிறுத்து சின்னப் பையன் பயப்படுதான் னு. பக்கத்தில் இருந்த சுட்டியான சுகாவ பார்த்துக்கிட்டே சொல்லி இருக்கார்.

பெரியப்பா எனக்கு ஒன்னும் பயமில்லை ...ஜாலியாத் தான் இருக்கு ...என்று சொல்லவும் அவர் பார்த்த பார்வை வேறுவிதம் .

இன்னும் கொஞ்சம் வேகம் பிடிச்சதும்.... ஏய் நிறுத்த போறியா இல்லியா? ..ன்னு ஒரு சவுண்டு கொடுக்க... அது ராட்டுக்காரன் காதில் விழவே இல்லை.

இன்னும் வேகம் கூடியதும் ....ஏ ஐயா ....நல்லா இருப்ப.... கூட கொஞ்சம் துட்டு தரேன்... இறக்கி விடுறான்னு சொல்லி.... அழுகை...பீதி....வியர்வை வடிய அவர் போட்டக் கூச்சல் கீழே நின்ற ....மோட்டார் மூலமாக ராட்டு ஓட்டுநவன் காதில் விழவே இல்லை.

அவருக்கு பயத்தில் வேர்த்து விறுவிறுத்து ...இறங்கிப் போய் இருந்த விதத்தை ....அன்பு இளவல் சுகா அவர்கள் தன்னுடைய தாயார் சன்னதி புத்தகத்தில் உள்ள கட்டுரை பதிவு ஒன்றில் ....சிரிக்க சிரிக்க எழுதி இருந்ததை பார்த்து படித்து வாசித்துக் கொண்டிருக்கும் போது.... திருநெல்வேலி பொருட்காட்சிக்கு நான் நேரில் சென்றது.... பார்த்தது போல் உணர்ந்தேன் ....

என்னை அறியாமல் நீண்ட நெடிய நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.

என் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மனிதர் அவரைப் பார்த்தால் பிராமண குடும்பத்தில் உள்ளவர் போல் தெரிந்தது.

அவரும் அவருக்கு எதிரே அவருடைய மனைவியும்  என்னைப் பார்த்துக்கொண்டு ....தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள்.

நான் சிரிச்ச சிரிப்பை பார்த்துவிட்டு.... அடக்க முடியாமல் இருந்த என்னுடைய நிலையை பார்த்துவிட்டு.... அவர்கள் இருவரும் என்னை பார்த்து முறைச்ச முறைப்பு இருக்கே...


புத்தகத்தை மூடி வச்சுக்கிட்டு அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தேன்.

.. சுகா என் கண் முன்னே கதை சொல்லிக் கொண்டிருந்தார் .

சுந்தரம் பெரியப்பா முழுசா.... பே முழி... முழிச்சது என் கண் முன்னே வந்து போய்க் கொண்டிருந்தது.

பக்கத்தில் இருந்தவர் தலையில் அடிச்சிக்கிட்டு...மூஞ்சியை வேற பக்கமா திருப்பிக்கிட்டார்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

10 ஆம் நம்பர் 22 ஆம் நம்பர் பஸ்


 அப்போவெல்லாம் திருநெல்வேலி டவுணுக்கு எங்க ஊர் மேலப்பாளையத்திலிருந்து  போக....22  ஆம் நம்பர் பஸ்ஸில் ஏற வேண்டும்.

 அந்த பஸ் வி.எஸ்.டி பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு.... அப்படியே அபுல் கலாம் ஆசாத் வீதி, அண்ணா வீதி, கொடிமரம்,  வாய்க்கால் பாலம், என்று  போய்..... நத்தம் ,கருப்பந்துறை, குறுக்குத்துறை, வாகையடி முக்கு, மேலரதவீதி என்று தளவாய்  அரண்மனை வாசல் முன்பாக நிற்கும்.

கருப்பன் துறை ஏற்றத்தில் இருந்து ,குறுக்குத்துறை திருப்பம் வரை, ரோடு மிகக் குறுகலாகவும்....  கிழக்குப் பகுதி  பள்ளமாகவும், மேலப் பகுதி வயக்காடாகவும் இருக்கும்.

பஸ் முழுக்க ஆள் நெருக்கடி அதிகமாகி...ஒரு பக்கமா சாஞ்ச படி திக்கித் திணறி....போகும்.

சாலையின் விளிம்பை தொட்டுக்கொண்டு பஸ் செல்வதை , உள்ளிருந்து பார்ப்பதற்கு கொஞ்சம் பீதியாகவே இருக்கும்.

 அதற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு, இன்றைய வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி,வாகையடி முக்கு, குறுக்குத்துறை தொட்டு.... பழையபடி மேலப்பாளையம் ஊருக்குள் அண்ணா வீதியில் நுழைந்து... இடது புறம் திரும்பி பஸ்டாண்ட் மருத்துவமனை வாசலில் நின்று, குறிச்சி   இப்போதைய ரவுண்டானா ,விஎஸ்டி பள்ளிவாசல்..... என்று போய்க்கொண்டிருக்கும்.

 அந்தக் காலத்தில் தாஜ்மஹால் டிரான்ஸ்போர்ட் என்று பெயரை வைத்து அந்த பஸ் ஓடிக்கொண்டிருந்தது...

 அந்த பஸ் ஒரு டிரைவர் பாட்டையா ஓட்டிக்கொண்டு இருப்பார்.

 அதற்குப் பிறகு பேரின்பவிலாஸ் பஸ் ஓடத்துவங்கியது.  பின்னர் MPR ட்ரான்ஸ்போர்ட் , அரசு  பஸ்... அதுவும் கட்டபொம்மன் போக்குவரத்து கழகத்தில் இருந்து ஒரேநேரத்தில் பஜார் அண்ணா வீதியில் எதிரும் புதிருமாக 2 பஸ்கள் நுழைந்து செல்லக்கூடிய காலம் ஒன்று இருந்தது.

 இன்றைக்கு 2 கார்கள் சிக்கி முக்கிக் கொண்டு செல்வதை உணர்கின்றோம்.

மேலப்பாளையத்தில் மேற்கு புறத்தில் உள்ள எங்கள் தெருவில் இருந்து  கொடி மரம், அண்ணா வீதி, காயிதே மில்லத் பள்ளிக்கூடம் ரோடு.... உள்ளே நுழைந்து, எதிரே இன்னொரு வேன் அல்லது சிறிய வகை லாரி வந்து விட்டால் அந்த சாலையில் இருந்து வெளியேறுவதற்கு போக்குவரத்தின நெருக்கடியினால் பத்து நிமிடங்கள் ஆகின்றன.

அதற்காகவே வாய்க்கால் பாலம் சென்று கால்வாய் கரை உள்ள சாலையின் வழியாக குறிச்சி வந்து முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி... ஜங்சன், பாளையங்கோட்டை அல்லது அம்பை ரோடு செல்வதற்கு முடிகிறது. 

இந்தச் சாலை விரிவு படுத்தப் பட்டு வருவது.... மேலப்பாளையத்தில் மேற்கு பகுதியில் உள்ள மக்களுக்கு, இன்னும் நத்தம் பகுதியில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பாளையங்கோட்டை போய் வருபவர்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக உள்ளது

 இதற்கெல்லாம் காரணம் அண்ணா வீதி பழைய வீதியாக இருப்பதே.....

அதே நேரம் முன்னர் நடந்தோ....

 சைக்கிளிலோ வந்துதான்  மீன், இறைச்சி, காய்கறிகள் ,பல சரக்குகள் வாங்கி செல்வார்கள்.

 இன்றைய காலம் அனைத்து வீடுகளிலும் ஒன்று இரண்டு பைக்குகள் உள்ளன.

 அந்த பைக்கு களில் வரக்கூடியவர்கள்.... எங்கெல்லாம் செல்கிறார்களோ.... அந்தக் கடை வாசல்....சாலை, அவர்களுக்கு பார்க்கிங் ஆக மாறிவிடுகிறது.

அதுவே அனைத்து போக்குவரத்துகளுக்கும் இடையூராய் மாறிப்போகிறது...

அரசு பஸ் ஊருக்குள் வந்து செல்வது ஒரு நாளைக்கு  பகலில் 12 முறையும்  இரவில் 5 முறையும் வந்து செல்ல வேண்டும் என்பது குறைந்த பட்ச விதியாகும்....

 ஊரில் நெருக்கடியான போக்குவரத்து உள்ளதால்  அரசு பஸ்சை ஓட்டக்கூடிய டிரைவர்கள் எவரும் மேலப்பாளையம் ரூட்டில் வந்து ஓட்ட விரும்புவது இல்லை.

 அண்ணா வீதியில் உள்ள ஹோட்டல்களுக்கு முன்பாக மாலை 7 மணிக்கு பிறகு மிகுந்த சிரமப்பட்டே செல்ல முடிகிறது.

 காரணம் அங்கும் நிறுத்தப்பட்டு உள்ள பைக்குகள் தாம். யாரையும் எதுவும் கேட்க முடிவதில்லை.

 மேலப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பாக 10 ஆம் நம்பர் பஸ் திருநெல்வேலி ஜங்ஷனுக்கு கொக்கிரகுளம் வழியாகச் செல்லும். 

ஒவ்வொரு மணி நேரமும் சொல்லி வைத்தாற் போல் சரியாக வந்து செல்லும் டிவிஎஸ் பஸ் சர்வீஸ் இருந்தது.

 அப்புறம்....  IR, SGKR, GMT கம்பெனி பஸ்கள்.... பாளையங்கோட்டை வழியாகச் சென்று.... திரும்பி... மீண்டும் அதே வழியில் வரும்.

 ஐ ஆர் பஸ் ஓட்டக்கூடிய டிரைவர்கள் பெரும்பாலும் மிக வேகமாக ஓட்டிக்கொண்டு வருவார்கள்.

 ஒரு காலத்தில் மேலப்பாளையத்தில் இருந்து 18 ஆம் நம்பர் பஸ் என்று ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு பஸ் சர்வீஸ் இருந்தது.

 அந்த  பஸ் ஏறி ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு சென்று வந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

 இன்றைக்கு 18 ஆம்  நம்பரையும் காணோம்.

 10 /30 என்று ஒரு பஸ் இருந்தது.

 அந்த பஸ் மேலப்பாளையத்திலிருந்து கோபாலசமுத்திரம் வரை சென்று வரும்.

 நான் விவசாயம் செய்து வருகின்ற காடுவெட்டி கிராமத்திற்கு பஸ் வேண்டும் என்று கேட்டு 14 என்கிற ஒரு பஸ் சர்வீஸ் மேலப்பாளையத்தில் இருந்து சிங்கிகுளம் காடுவெட்டி...

வெங்கட்ரங்காபுரம் வரை சென்று வந்தது.இப்போது 14 A என்று போய் வருகிறது...

 படத்தில் உள்ள பஸ் போன்றே தான் ....தாஜ் மஹால் டிரான்ஸ்போர்ட் பஸ் மேலப்பாளையத்தை சுற்றி வரும்.

 அந்த நினைவுகள் எல்லாம் மனதில் வந்தன.