ஞாயிறு, 22 மார்ச், 2015

எந்த ஊரு?....


மேலப்பாளையமா?......

நிறைய பயணங்களில்...குறிப்பா ரயில் பயணங்களில்....பக்கத்தில் இருப்பவர்களிடம்  நல்லா பேசிக்கொண்டே வருகிற போது.....”ஆமா...அண்ணாச்சிக்கு எந்தூரூ?.”..என்று சிலர் கேப்பார்கள்.
“நம்மூரு திருனவேலி  மேலப்பாளையம்ங்க”.....  இந்தப்பேரைக் கேட்டதும்...திடுதிப்புன்னு பேச்சை நிறுத்திக்கொண்டு..... வேற பராக்கு பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்...

...."நல்லா பேசிக்கொண்டு வந்தவர்கள்...படார்ன்னு நம்ம திசையை விட்டு  வேற திக்கப் பார்க்கிறாங்களே...என்னாச்சு ?."....

மனசு என்னவோ போல ஆகிவிடும்.. ....எதற்கு இந்த வெறுப்போ?....யாரும், யாருக்கும் பகைமை இல்லையே ?...எதுக்கு இப்படி வெறுக்கிறார்கள் ? என்று கொஞ்ச காலம் முன்பு  வரை  பதில் தெரியாமல் அல்லது இல்லாமல் தவித்து வந்துள்ளேன்...

 ......திருனவேலி மண்ணின்  பாசத்தை, அதன் ஒரு பகுதியாய் இருக்கிற தாமிரபரணி நதிக்கரையின் கீழக் கரையில் அமைந்துள்ளஎங்க ஊர்  மக்களிடம் நிறையவே பார்க்கலாம்...

அப்புறமா.....நான் சொல்ல வந்ததுக்கு வாரேன்...
அந்தப்பயணங்களில் சில ஒன்னுந்தெரியாத அப்பாவிகள் என்னிடம் கேப்பார்கள்...”நீங்க கோச்சுக்கப்ப்டாது.....'மத்த ஆளுங்க' யாருமே உங்க ஊர்ல லாந்த முடியாதாமே ?....அப்பிடியா?...

"யாருங்க அப்படிச்சொல்லி வச்சது?....கேளுங்க நடக்கிறத".ன்னு ...சொல்லிவைப்போம்..

எங்க ஊர்ல.....காலைல முழிச்ச கண்ணுக்கு ....” பாலு...பாலு”...ன்னு கூவிக் கூவி, மணி அடிச்சி...... ஆயிரக்கணக்கான லிட்டர் பால் யாவாரம் செய்வது எங்க ஊர் மற்றும் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த தேவர் மற்றும் யாதவர்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தாம்....

அப்புறம்.......” அது உனக்கு...இது எனக்கு”...ன்னு  தெருக்க்களைப் பிரிச்சி.......இட்லி...வட தோசை....விக்கிறது...பிள்ளைமார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்....

கறிக்கடை நடத்துறதுல  பாதிப்பேர் கோனாக்கமார்கள்தான்...அதுல பலபேர்கள் பரம்பரை பரம்பரையா ஆட்டுக்கறி யாபாரம்தான் செஞ்சி வாராங்க....சில குடும்பத்துக்க்காரர்கள் குறிப்பிட்ட கோனார்கள் கடையில் தான் தலைமுறை அளவில் இறைச்சி வாங்கி வருகிறார்கள்....


மீன் மார்க்கெட்டே ....படையாச்சிமார்கள், ஆளுகையில் தான்  இருந்துவருகிறது....

காய்ந்துபோன மீன், கருவாடுகள் வியாபாரம் செய்து வருவது.....பரதகுல மக்கள்தான்...


ஆசாரிமார்களைபற்றி  சொல்லவே வேண்டாம்...

எங்கஊரில் அவர்களைத் தங்கஆசாரி...தட்டாசாரி....கொல்லாசாரி...மரவேலைகள் செய்யும் ஆசாரிமார்கள்..... என்றே  தனித்தனியே அழைப்பார்கள்...

விவசாயப்பொருட்களை கடைகளுக்குக் கொண்டுவந்தும்,சாலைகளில் பரப்பியும்,ஆடு மாடுகளுக்கு கீரை,வைக்கோல் யாபாரம் செய்வர்களும், தலித் மக்கள் தாம்...
நான் சின்னப் பிள்ளையாய் இருக்கிற காலந்தொட்டு, கைவைண்டியிலும் இப்போ மாட்டு வண்டியிலும் வந்து உப்பு வியாபாரம் செய்வது...செட்டியார்கள் தாம்.

இன்றும் வெற்றிலை வியாபாரத்தை ஒட்டுமொத்தமாக செய்வது மூப்பனார்கள்....ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு   கல்யாண வீடுகளுக்கு வெற்றிலை பாக்குகள்.... அவர்கள் தான் அனுப்புவார்கள்......

எங்கள் ஊரில், சைவ ஹோட்டல் நடத்தி, பிறர் சம்பாத்தியம் செய்ய முடியாது...காரணம் கிராம்சு வீட்டு தெருப் பக்கம் இருந்த பால்பிள்ளையின் மகன்களான கதிரேசன்,கருப்பசாமி,ஆறுமுகம் சகோதரர்களின் கடைகளில் தான் காலை மாலை வேளைகளின் இட்லி,தோசை,கார வடைகள் விற்பனை ஆயிரக்கணக்கில் நடக்கிறது...

அவர்கள் கடைகளில் வாங்கி உண்டுப் பழகியவர்கள் வேறு எங்கும் வாங்கி உண்ண  மாட்டார்கள். 

சின்னஞ்சிறிய அந்தக் கடைகளில் காத்து நின்றே இட்லி தோசை வாங்கி வரமுடியும்..இன்றைக்கு மூன்று தலைமுறைகள் தாண்டி அவர்களின் வியாபாரம் நடந்து வருகிறது...அவர்களின் 99.9 சதவீத வாடிக்கையாளர்கள் மேலப்பாளையம் ஊர்க்காரர்கள்.

இப்போது புதுசா....வெள்ளாளப் பெருங்குடியின் தாய்மார்கள் இரவு நேரங்களிலும் காலைப் பொழுதுகளிலும் கடினமான சுமையுடன் கூடிய பாத்திரங்களில் தோசை மற்றும் இட்லி மாவு யாபாரமும் செய்து வருகிறார்கள்...இன்னும் சிலர் இடியாப்ப யாபாரம் செய்கிறார்கள்...

காய்கறிகடைகள் நடத்தி வருவது....நாடார் சமுதாயப் பெருமக்கள் தான்...அதுபோல தேங்காய் வணிகத்தின் பெரும் பகுதியும் அவர்களிடம் தான் உள்ளது...

தெருவுக்கு தெரு வாடிக்கைக் காரர்களைக் கொண்ட சலவைத்தொழில் செய்யும் வன்னார்கள்...இப்போ தேய்ப்பு தொழில் மூலமாக தினமும் கணிசமாக  வருவாய்  ஈட்டுகிறார்கள்...

தேவர்கள்.கோனார்களை,....நாயுடு,நாயக்கர்களை,ரெட்டியார்களை  ....மாமா என்றும்,
ஆசாரிகளை சின்னையா....என்றும்....
பரதர் குலத்தவர்களை சாச்சா என்றும்....
தலித்துகளை பேரப்பிள்ளைகள் என்றும்....
பிள்ளைமார்கள், நாடார்கள், செட்டியார்களை அண்ணாச்சிகள் என்றும் அழகாக பாசமுடன் அழைத்து பெருமைப்படுவது எங்கள் ஊர் மக்கள்தான்...அந்த மக்களும் இவ்வாறே எங்களை அழைத்துப் பதில் மரியாதை செய்கிறார்கள்...

திருமண வீடுகளுக்கு அந்த அன்புச்சொந்தங்கள் குடும்பத்தோடு வருகை தந்து, கூடி அமர்ந்து உணவுண்டுச் செல்வதைப்பார்க்க....ஆயிரம் கண்கள்  வேண்டும்...
ஊருக்கு கிழக்கே...குறிச்சிக்குச் சென்று   மட்பாண்டங்களை,மண் அடுப்புகளை அதிகமாக வாங்கி அந்தத் தொழிலில் ஈடு பட்டுள்ள வேளார்களை கை தூக்கிவிடும் பெருமக்கள் இந்த ஊரில் நிறைய உண்டு...

எங்கள் ஊரின் வயதில் பெரியவர்கள்.. பிராமணப் பெரியவர்களை,.....கோவில்களில் பூசை புனஸ்காரங்கள் செய்பவர்களை,.....கம்பர்களை   ...பொதுவாக சாமி என்றே அழைப்பார்கள்...

வீடுகள், கட்டிடங்கள்  உருவாக....பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த கொத்தனார்கள்....சித்தாட்கள்...உழைப்புகள் தருகிறார்கள்.........அதன் மூலமாக மாதாமாதம் கோடிக்கணக்கில் சம்பளப்பணமாக  அவர்களுக்கு கைமாறுகிறது...

அந்தப்பணம் வெட்ட வெளிகளில்,வெய்யிலிலும் , புழுக்கத்திலும்....நெற்றி வியர்வை நிலத்தில் வடிய உழைத்து வந்த பணமாகும்......,வெளி நாடுகளில், அரபு நாடுகளில்...... நேரங்காலம் பாராமல்.... பாடுபட்டு,ஊர், உறவை, தாய்,தந்தை  ,மனைவி மக்களை, உற்றார்,உறவினரைப் பிரிந்து வாழும் எங்கள்  இளைஞர்கள், இளமையைத் தொலைத்த  பெரியவர்கள் மாதாமாதம் அனுப்புகிற ரியால்கள், திர்ஹம்கள், தினார்கள்,யூரோக்கள், வெள்ளிகள் மற்றும் டாலர்களால் அமைந்துள்ளது...அது எங்கள் தாய் நிலத்தை வாழ வைக்கிறது,,,

திருமண வீடுகளுக்கு ஒருகாலத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள்  தூக்கி வெளிச்சம் ஊட்டிய....குறவர் சமுதாயத்தினர்...அவர்கள் விற்பனை  செய்கிற பாசிமணி ஊசி மணிகள்....பெருக்கு வாரியல்கள்...பெயர் கொண்டவை..

அரைக்கீரை.....அகத்திக்கீரை......பொன்னாங்கன்னிகீரைகள் விற்பனை....
நாட்டுக்கோழிகளின் விற்பனை....
தயிர்,மோர்,.....நார்ப்பெட்டிகள்....விற்பனை......
பதநீர்,....நொங்கு,இளநீர்,.......
கோழி முட்டை...வாத்து முட்டை....சின்னஞ்சிறு வண்ணக் குஞ்சுகள்....
பலா,வாழை,மாம்பழம்,ஆரஞ்சு,ஆப்பிள்,கொய்யா,,திராட்சை,....என்று பலவகைப் பழ வகைகள்....
வடநாட்டுக் கம்பளிகள்,போர்வைகள், ....
ஐஸ் கிரீம்,பஞ்சு மிட்டாய்,சவ்வு மிட்டாய்.......
முறுக்கு, தட்டைப்பயிறு.,கருப்பட்டி,கரும்பு....
பினாயில்.....ப்ளீச்சிங் பவ்டர் ...
என்று  ஒவ்வொரு  வகை  வியாபாரங்களும்  சகோதர சமூக மக்களே ஊருக்குள் வந்து பாச வார்த்தைகள் முதலீடாய் கொண்டு விற்பனை செய்துவருகிறார்கள்...

வகைதொகையற்ற  வார்த்தைகள்...... வாணிபப் பேரங்களில் ஒருபோதும் வெளிப்பட்டதில்லை....அது எங்கள் ஊருக்குக்  கிடைத்த பெருமை....\

இது போக ராட்டினம் சுற்றுகிற கிராமத்து ஆட்கள்....வந்து குழந்தைகளை அதில் ஏற்றிச்சுற்றி மகிழ்ச்சியும் குதூகலத்தையும் ஏற்படுத்துகிறார்கள்...

பெருநாளுக்கு முன்னர் கூடும் சந்தைகளில் ஐந்தாயிரம்,பத்தாயிரம்  வரை கூடுதல் விலைக்கு ஆடுமாடுகளை விற்கும் பல்வேறு கிராமத்து ஆண் பெண் மக்கள்...
என்று அனைத்து சமூக மக்களும் 'ஒருவர் இன்றி - ஒருவர் இல்லை; என்று வாழ்கிறோம்....
பல்வேறு  ஊர்களில் இருந்து மேலப்பாளையம் ஊருக்கு வந்து பல்வேறு "நிலைகளை"ச்சொல்லி வீடு வீடாக உதவிகள் பலவும் பெற்றுச்செல்லுகிறார்கள் பலர்......இதெல்லாம் காலனிகளில் நடக்காதது...

"எதுக்கப்பா இல்லாததும் பொல்லாததும் சொல்லி எங்களை எங்கள் ஊரை  வேற்றுமைப்படுத்தி பார்க்கிறீர்கள்?"..... என்றே என்னுடைய நண்பர்கள் பலருக்கும் சொல்வேன்...அதுவே ரயில் பயணங்களிலும் நடக்கிறது...