ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஐக்கிய அரபு அமீரகம்..
துபாய் ETA அஸ்கான் தலைமையகம் .

தமிழர்கள் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் பணியிடங்கள் தந்து இறைவன் வாழ்வளித்த நிறுவனம்.

அதற்கு அடிப்படையாக இருந்தவர்கள் கீழக்கரை வள்ளல் பி.எஸ்.அப்துல் ரகுமான். அவர் தம் இளவல் செய்யது எம்.ஸலாஹுத்தீன் முதலான பெருமக்கள் என்றால் மிகையில்லை.மாபெரும் உழைப்பாலும் எண்ணிலடங்கா தியாகத்தாலும் உருவான ஒரு நிறுவனம்.அதற்கு அந்த இரு பெரும் குடும்ப வாரிசுகளும் துணை நின்றார்கள்.

பெரியவர் அப்துல் ரகுமான் அல்-குரைர் என்கிற அமீரகப் பெரு மகன் அவர்களின் வெற்றிக்கு பக்க பலமாக விளங்கினார்.

எத்தனை பேரை பணி நியமனத்திற்கு சிபாரிசு செய்து அனுப்பினாலும் கொஞ்சம் கூட மருதலிக்காமல் , அத்தனை பேர்களுக்கும் வேலைவாய்ப்புக்கள்  வழங்கி ,படித்த பட்டதாரிகள் மற்றும் பணியாட்களின் குடும்பங்களின் இன்னல்கள்  நீக்கியவர்கள்.
அதனால் தமிழகதின்  பொறியியல் கலை, அறிவியல் பட்டதாரிகள் பல்லாயிரம் பேர்கள்  வளம் பெற்றார்கள்.

ETA என்றால் E எல்லாம் T தமிழ் A ஆட்கள் என்று பிறர் சொல்லிக் காட்டுவார்கள்.

ஒருகாலத்தில் வீடு வாசல், மனை, தோட்டம், தாய், தங்கை, தமக்கை நகைகள் இவற்றை அடகு வைத்தோ விற்றோ , வட்டிக்கு கடன் பெற்றோ தான் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பெற முடிந்தது...அதில் ஏமாந்து நொந்து மாண்டு போனவர்கள் பட்டியல் எண்ணிலடங் காதது..

என்ஜினியரிங் படித்து விட்டு பாலைவன கொடும வெய்யிலில் ஒட்டகம் மேய்க்க அனுப்பப்பட்டு ஏமாந்து இன்னல் பட்ட இளைஞர் கூட்டங்கள் ஊருக்கு ஊர் இருந்தார்கள்.

ஆனால் ETA என்கிற கம்பெனியின் வேலைவாய்ப்புகள் , அழைப்புக்கள்  வந்த பிறகு தான் உரிய வேலைவாய்ப்புக்கள் படித்த பட்டதாரிகளுக்கு கிடைத்தது...வருடத்திற்கு ஒருமாத விடுமுறையாவது கிடைத்தது. அதற்கு முந்தியெல்லாம் 2  அல்லது 3 வருடங்களுக்கு பின்னரே தாயகம் வர முடிந்தது.

பிற நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கள் பெற்றவர்களின்  எண்ணிக்கை இந்த நிறுவனத்தோடு ஒப்பிட்டு பார்க்கவே இயலாதது.

இவர்களால் பலன் பெற்றவர்கள் தமிழகத்தில் குறிப்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ,கடையநல்லூர், தென்காசி ,மற்றும்       கீழக்கரை ,காயல் பட்டினம் ,அதிராம் பட்டினம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊர்கள, சேலம் சென்னை திருச்சி ஊரைச்சேர்ந்தவர்கள் என்று தாராளமாக சொல்லலாம்.

அவ்வாறு வேலை வாய்ப்புகள் கிடைத்த இளைஞர்கள் , தமது வருவாயைக் கொண்டு தாயகத்தில் தம் இல்லத்தை தூக்கி நிறுத்தினார்கள்.தமோடு பிறந்த பெண் மக்களை வாழ வைக்க திருமணம் செய்து கொடுத்தார்கள்.

வேலை வாய்ப்புக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் கல்வி நிறுவனங்களுக்கு,அறக்காரியங்களுக்கு, ஆதரவற்ற அனாதைப்பிள்ளைகளை பாது காத்து வளர்க்கும் அன்பு இல்லங்களுக்கு ,பள்ளிவாசல்களுக்கு,சமயநல்லிணக்கம் பேணும் சகோதர சமுதாய பள்ளிக்கூடங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள் . வாரி வாரி வழங்கினார்கள்.

நான்  தற்போது தலைவராயிருக்கிற மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்கு  அவர்கள் தான பண உதவிகள்....நினைத்துப்பார்க்க இயலாதது.

கலீபா அபூபக்கர் சித்தீக் வகுப்பறைக்  கட்டிடம்,யூசுப் சுலைகா புகாரி ஆலிம் கட்டிடம் ,கம்ப்யூட்டர் சாதனங்கள்,, பள்ளியை பாது காத்திட காம்பவுண்ட் சுவர்,பள்ளிக் குழந்தைகள் செல்ல மினி பேருந்து, இன்னும் பள்ளி வளர்ச்சிக்கு கேட்டபோதெல்லாம் நிதி தந்தார்கள்.

1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வள்ளல் பி.எஸ்.அப்துல் ரகுமான்  அவர்களை சந்திக்கும் போதெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வார்கள் எங்கள் கல்வித்தந்தை சேர்மன் MAS அபூபக்கர் சாகிப்..

" என்ன மீரான்.... சேர்மனைக் கூட்டிக்கிட்டு ....என்ன சொல்ல வந்து இருக்கீங்க.?".என்று துவக்கம் செய்வார்கள்.

என் மீது அவர்கள் கொண்ட பிரியம் சொல்லில் அடங்காதது.
என் மூலமாக அவர்கள் செய்த பணிக்கு அவர்களின் செயலாளர் வழக்கறிஞர் ஜலால் பெரிதும் உதவிகள் செய்துள்ளார்.

என் மீது கொண்ட அன்பால் மேலப்பாளையம் தக்வா ஜமாஅத் பள்ளி எதிரில் உள்ள அம்பிகா புறம் ஆதி திராவிடர் பள்ளிக்கு ஆறு வகுப்பறைகள் கட்ட என் மூலம் நிதி உதவி செய்ய்தார்கள்.

திருநெல்வேலி   முஸ்லிம் அனாதைநிலையம் ,காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் தொழிற் பயிற்சிக்கூடம்,  வல்லநாடு தொழிற் பயிற்சிக்கூடம், சதக்கத்துல்லா அப்பாக் கல்லூரி, எட்டையபுரம் அல் முபீன் உமறுப்புலவர் அன்பு இல்லம், சக்கரைக்கோட்டை அன்பு இல்லம், நாகூர் கிரசென்ட் பள்ளி, குற்றாலம் இஸ்லாமிக் சென்டர் புதிய பள்ளிவாசல் உருவாக்கம் , கொடைக்கானல் பள்ளிவாசல், சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பள்ளிவாசல் , திருநெல்வேலி ஆலங்குளம் பள்ளிவாசல் என்று பட்டியல் நீண்டு செல்லும்.

நாட்டின் தலைநகரில் புது டெல்லியில்  இஸ்லாமிக் சென்டர் உருவாக்க இரண்டு கோடிகளுக்கும் மேலாக நிதியளித்துள்ளார்கள்.அவரது இளவல் செய்யது சலாஹுத்தீன் அவர்களும் அவ்வாறே நிதி வழங்கியுள்ளார்கள்.

இன்னும்  பலப்பல உதவிகள்....இயக்கங்கள், நாளிதழ், மாத இதழ்கள்,இலக்கியம் என்று உள்ளது.

அவற்றைப்பற்றி எல்லாம் நான் தனிப் புத்தகமாக எழுத வேண்டும்.

நாட்டில் அறக்காரியங்கள் பல செய்ய கீழக்கரை KVMஅப்துல் கரீம் காக்கா ,PSM.அப்துல் காதர் காக்கா உடன்  இருந்து ஒத்துழைத்தார்கள்.

அந்தப்பெருமகன் உலாவிய இடத்திற்குச்சென்று இரண்டு சந்திப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டேன்.

ஒன்று அங்கே இருக்கிற அருமையான களப்பணியாளர்கள், நிர்வாகிகளின் சந்திப்பு,மற்றொன்று Iman Culturals IMAN கல்ச்சுரல் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்திப்பு....
அவற்றை ஒவ்வொன்றாக பதிவிடனும்...

வள்ளல் அப்துல் ரகுமான் அவர்கள் கொண்ட அன்பினைப்போலவே அவர்களின் இளவல்கள் MDவாப்பா செய்யது M. சலாஹுத்தீன் அவர்கள், சின்னவர் சீனாதானா செய்யது அப்துல் காதர் வாப்பா அவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் எனக்குத் தருகிறார்கள்..
அவர்களின் செயலாளர்களும் அவ்வாறே.

நோன்பு காலத்தில் துபாய் வெய்யில் கொளுத்தி எடுக்குது.
ஆனாலும் அங்கே இருக்கிற அன்பு உள்ளங்களால் மனதும் உள்ளமும் உடலும் குளிர்சசியாகவே உள்ளது

(தொடர்வோம்)

சனி, 4 நவம்பர், 2017

மழை தான் பெய்யட்டுமே.

எங்க சின்ன வயசுல மழைக்காலங்கள் அவ்வளவு அழகா இருக்கும்..

எங்க ஊர் திருநெல்வேலிச்சீமை  மேலப்பாளையம் கிராமியம் கலந்த நகர் ஜாடை .அவ்வளவு தான்.

இப்பவுள்ள தார் கான்க்ரீட் ரோடெல்லாம் அப்ப எந்த தெருவிலும் இல்லை.
செம்மண் சாலைகள் தாம்.
நெசவுத்தொழில் செறப்பா இருந்தகாலம் அது.

காலை வேளைகளில், போடப்படும் பாவுகள் மீது நூலின் விரைப்புக்காக கஞ்சி வாளிப்பு இருக்கும்.பாதி கஞ்சி தரையில் தான் கொட்டியிருக்கும்...அதுவே தெருக்களை சுத்தமா பூசி மொழிகின மாதிரி வச்சி இருக்கும்.

நூல் பாவின் நிறத்தோடு....சில நேரம் கஞ்சி வடிஞ்சி தெரு முழுக்க பச்சையோ, செவப்போ, நீலமோ தரையில் தெரியும் .

நல்லா மழை பெய்யிற காலத்தில அப்படியே அம்புட்டு கஞ்சி தரையும், அடிச்சிட்டு போயிடும்.

அநேகமா மழைக்காலத்தில் நெசவுத்தொழில் கொஞ்சம் ஓய்வெடுக்கும்....ஏன்.....பாவு லெகுவா இருக்காது...ஊடு பண்ணு ல சிக்கிக்கும்.அதனால மழை விட்டு கொஞ்சம் கூதாப்பு குறைஞ்ச பெறகு தான் தறில இறங்குவாக.

இடுப்பு வரை ஒரு பள்ளம் தோண்டி நின்று கொண்டு கால்கள் உள்ளே இருப்பது காக்குழி தறியாகும்.

காலை வெளிச்சம் வந்து பொழுகிற சூரியன் வெளிச்சத்தை கொறைக்கிற வரை இடுப்பை தறி குழி திண்ணையில் சாய்த்துக் கொண்டு கால்கள் இரண்டையும் மாறி மாறி மிதித்துக்கொண்டு, ஒரு கையால் நூல் ஓடத்தை அடித்துக்கொண்டு, இன்னொரு கையால் நூல் பண்ணை பலமாக  இறுக்கி அழுத்திக் கொண்டு வேஷ்ட்டியை,  சேலையை எங்கள் நெசவாளப்பெருமக்கள் உருவாக்குவார்கள்.

அவர்கள்  வருஷத்தில் ஒரு 10 நாட்கள் தொழில் முடக்கம் செய்வதே ரொம்ப அபூர்வம்.

ஆனால் எனக்கு தெரிந்து.....மழைக்காலங்கள் வந்தால் வீட்டுக்குள்ளே  தறிக்குழிகளில் அது முங்குகிற அளவில் தண்ணீர்  ஊறி கால்களை உள்ளே வைக்க முடியாத அளவுக்கு நிரம்பி நிற்கும்....அது வடிய 10 நாள் 20 நாள்ன்னு.....ஆகும் .

அப்பசி அட மழை காலம் வந்தால்....பல வயசான தலைக்கட்டுகள் " கதை முடிஞ்சு போய்டும்".

அது குளிர் காலமாக கூட இருக்கும்.ரொம்ப வேதனைப்பட்டு ஆட்கள்  இறந்து போனது குறைச்சல் தாம்....

ஊனு,  தண்ணி கொறைஞ்சி அவங்க காலம்.... ஆடி  அடங்கி....  முடிவுக்கு வரும்.

ஆறு வாய்க்கால் முங்கி தண்ணி ஓடும்...

பெரியாறு தாமிரபரணி வெள்ளத்தைப் பார்க்க கூட்டம் கூட்டமாக ஆணும் பெண்ணும் போய் வருவாக.
இப்போ  வெள்ளம்  வருவதே கனவாய்ப் போச்சு....

வாழ்கிற இந்த தலைமுறை  மழைக்காலம் வந்தால்  வெறுக்கிறார்கள்....

பிள்ளைகள் மட்டுமே  பள்ளிக்கூடங்களுக்கு லீவு என்று அடிக்கடி வந்தால் சந்தோஷம் கொள்கிறார்கள்.

மழைக்காலங்கள் வந்தால் பைக்கில் போகமுடியாது........
தேங்குகிற போக்குவரத்து நெரிசல் .....சட்டை பேண்ட் நனைவதால்  மழை மீது ஒரு வெறுப்பை  கொண்டுள்ளார்கள்....அவங்க நினைக்கிற இடத்துக்கு ஒடனே போகமுடியல்லைங்கிரத தவிர வேற ஒன்னுமில்லை.

ஆகவே அடைமழை, கடும் மழை,   பேய்மழை என்று எழுதுகிறார்கள்.

மழை இல்லைன்னா.....குடிக்க, குளிக்க, சமைக்க ,விளைய வைக்க , தண்ணிக்கு எங்க போக?....ஆடு ,மாடு ,பறவைகள், மத்த வாயில்லா ஜந்துக்கள் எங்கே போக?

மழை என்ன ....புதுசா இப்ப மட்டுமா பேயுது.?பூமி உண்டான காலம் தொடங்கி  எம்புட்டோ  வருஷமா பெய்யுது.

மழை தண்ணி வாற போற கால்வாயை  மரிச்சு வழிய  செறத்தா.....என்ன ஆவும்?.பொறவு தேங்குது... தெவுங்குதுன்னு கூப்பாடு போட்டா என்ன ஆவும்?

வருஷம் 365 நாளில் ஒரு 20 நாள் மழை யை கூட தாங்கி மகிழ்ச்சி அடைய விவசாயிகளை தவிர யாரும் தயாரா இல்லை.அதுவும் காலம்  மாறி பொழிந்தால் அவனுக்கும்  பிடிக்கப்போவதில்லை.

மழையை  ரசிப்போம்.வரவேற்போம்.அதனால் தான் நாமும் மரம் செடி கொடிகளும் ஆடுமாடுகளும்....பறவைகளும் ஊரும் வாழ முடியும்.