ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஐக்கிய அரபு அமீரகம்..
துபாய் ETA அஸ்கான் தலைமையகம் .

தமிழர்கள் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் பணியிடங்கள் தந்து இறைவன் வாழ்வளித்த நிறுவனம்.

அதற்கு அடிப்படையாக இருந்தவர்கள் கீழக்கரை வள்ளல் பி.எஸ்.அப்துல் ரகுமான். அவர் தம் இளவல் செய்யது எம்.ஸலாஹுத்தீன் முதலான பெருமக்கள் என்றால் மிகையில்லை.மாபெரும் உழைப்பாலும் எண்ணிலடங்கா தியாகத்தாலும் உருவான ஒரு நிறுவனம்.அதற்கு அந்த இரு பெரும் குடும்ப வாரிசுகளும் துணை நின்றார்கள்.

பெரியவர் அப்துல் ரகுமான் அல்-குரைர் என்கிற அமீரகப் பெரு மகன் அவர்களின் வெற்றிக்கு பக்க பலமாக விளங்கினார்.

எத்தனை பேரை பணி நியமனத்திற்கு சிபாரிசு செய்து அனுப்பினாலும் கொஞ்சம் கூட மருதலிக்காமல் , அத்தனை பேர்களுக்கும் வேலைவாய்ப்புக்கள்  வழங்கி ,படித்த பட்டதாரிகள் மற்றும் பணியாட்களின் குடும்பங்களின் இன்னல்கள்  நீக்கியவர்கள்.
அதனால் தமிழகதின்  பொறியியல் கலை, அறிவியல் பட்டதாரிகள் பல்லாயிரம் பேர்கள்  வளம் பெற்றார்கள்.

ETA என்றால் E எல்லாம் T தமிழ் A ஆட்கள் என்று பிறர் சொல்லிக் காட்டுவார்கள்.

ஒருகாலத்தில் வீடு வாசல், மனை, தோட்டம், தாய், தங்கை, தமக்கை நகைகள் இவற்றை அடகு வைத்தோ விற்றோ , வட்டிக்கு கடன் பெற்றோ தான் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பெற முடிந்தது...அதில் ஏமாந்து நொந்து மாண்டு போனவர்கள் பட்டியல் எண்ணிலடங் காதது..

என்ஜினியரிங் படித்து விட்டு பாலைவன கொடும வெய்யிலில் ஒட்டகம் மேய்க்க அனுப்பப்பட்டு ஏமாந்து இன்னல் பட்ட இளைஞர் கூட்டங்கள் ஊருக்கு ஊர் இருந்தார்கள்.

ஆனால் ETA என்கிற கம்பெனியின் வேலைவாய்ப்புகள் , அழைப்புக்கள்  வந்த பிறகு தான் உரிய வேலைவாய்ப்புக்கள் படித்த பட்டதாரிகளுக்கு கிடைத்தது...வருடத்திற்கு ஒருமாத விடுமுறையாவது கிடைத்தது. அதற்கு முந்தியெல்லாம் 2  அல்லது 3 வருடங்களுக்கு பின்னரே தாயகம் வர முடிந்தது.

பிற நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கள் பெற்றவர்களின்  எண்ணிக்கை இந்த நிறுவனத்தோடு ஒப்பிட்டு பார்க்கவே இயலாதது.

இவர்களால் பலன் பெற்றவர்கள் தமிழகத்தில் குறிப்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ,கடையநல்லூர், தென்காசி ,மற்றும்       கீழக்கரை ,காயல் பட்டினம் ,அதிராம் பட்டினம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊர்கள, சேலம் சென்னை திருச்சி ஊரைச்சேர்ந்தவர்கள் என்று தாராளமாக சொல்லலாம்.

அவ்வாறு வேலை வாய்ப்புகள் கிடைத்த இளைஞர்கள் , தமது வருவாயைக் கொண்டு தாயகத்தில் தம் இல்லத்தை தூக்கி நிறுத்தினார்கள்.தமோடு பிறந்த பெண் மக்களை வாழ வைக்க திருமணம் செய்து கொடுத்தார்கள்.

வேலை வாய்ப்புக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் கல்வி நிறுவனங்களுக்கு,அறக்காரியங்களுக்கு, ஆதரவற்ற அனாதைப்பிள்ளைகளை பாது காத்து வளர்க்கும் அன்பு இல்லங்களுக்கு ,பள்ளிவாசல்களுக்கு,சமயநல்லிணக்கம் பேணும் சகோதர சமுதாய பள்ளிக்கூடங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள் . வாரி வாரி வழங்கினார்கள்.

நான்  தற்போது தலைவராயிருக்கிற மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்கு  அவர்கள் தான பண உதவிகள்....நினைத்துப்பார்க்க இயலாதது.

கலீபா அபூபக்கர் சித்தீக் வகுப்பறைக்  கட்டிடம்,யூசுப் சுலைகா புகாரி ஆலிம் கட்டிடம் ,கம்ப்யூட்டர் சாதனங்கள்,, பள்ளியை பாது காத்திட காம்பவுண்ட் சுவர்,பள்ளிக் குழந்தைகள் செல்ல மினி பேருந்து, இன்னும் பள்ளி வளர்ச்சிக்கு கேட்டபோதெல்லாம் நிதி தந்தார்கள்.

1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வள்ளல் பி.எஸ்.அப்துல் ரகுமான்  அவர்களை சந்திக்கும் போதெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வார்கள் எங்கள் கல்வித்தந்தை சேர்மன் MAS அபூபக்கர் சாகிப்..

" என்ன மீரான்.... சேர்மனைக் கூட்டிக்கிட்டு ....என்ன சொல்ல வந்து இருக்கீங்க.?".என்று துவக்கம் செய்வார்கள்.

என் மீது அவர்கள் கொண்ட பிரியம் சொல்லில் அடங்காதது.
என் மூலமாக அவர்கள் செய்த பணிக்கு அவர்களின் செயலாளர் வழக்கறிஞர் ஜலால் பெரிதும் உதவிகள் செய்துள்ளார்.

என் மீது கொண்ட அன்பால் மேலப்பாளையம் தக்வா ஜமாஅத் பள்ளி எதிரில் உள்ள அம்பிகா புறம் ஆதி திராவிடர் பள்ளிக்கு ஆறு வகுப்பறைகள் கட்ட என் மூலம் நிதி உதவி செய்ய்தார்கள்.

திருநெல்வேலி   முஸ்லிம் அனாதைநிலையம் ,காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் தொழிற் பயிற்சிக்கூடம்,  வல்லநாடு தொழிற் பயிற்சிக்கூடம், சதக்கத்துல்லா அப்பாக் கல்லூரி, எட்டையபுரம் அல் முபீன் உமறுப்புலவர் அன்பு இல்லம், சக்கரைக்கோட்டை அன்பு இல்லம், நாகூர் கிரசென்ட் பள்ளி, குற்றாலம் இஸ்லாமிக் சென்டர் புதிய பள்ளிவாசல் உருவாக்கம் , கொடைக்கானல் பள்ளிவாசல், சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பள்ளிவாசல் , திருநெல்வேலி ஆலங்குளம் பள்ளிவாசல் என்று பட்டியல் நீண்டு செல்லும்.

நாட்டின் தலைநகரில் புது டெல்லியில்  இஸ்லாமிக் சென்டர் உருவாக்க இரண்டு கோடிகளுக்கும் மேலாக நிதியளித்துள்ளார்கள்.அவரது இளவல் செய்யது சலாஹுத்தீன் அவர்களும் அவ்வாறே நிதி வழங்கியுள்ளார்கள்.

இன்னும்  பலப்பல உதவிகள்....இயக்கங்கள், நாளிதழ், மாத இதழ்கள்,இலக்கியம் என்று உள்ளது.

அவற்றைப்பற்றி எல்லாம் நான் தனிப் புத்தகமாக எழுத வேண்டும்.

நாட்டில் அறக்காரியங்கள் பல செய்ய கீழக்கரை KVMஅப்துல் கரீம் காக்கா ,PSM.அப்துல் காதர் காக்கா உடன்  இருந்து ஒத்துழைத்தார்கள்.

அந்தப்பெருமகன் உலாவிய இடத்திற்குச்சென்று இரண்டு சந்திப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டேன்.

ஒன்று அங்கே இருக்கிற அருமையான களப்பணியாளர்கள், நிர்வாகிகளின் சந்திப்பு,மற்றொன்று Iman Culturals IMAN கல்ச்சுரல் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்திப்பு....
அவற்றை ஒவ்வொன்றாக பதிவிடனும்...

வள்ளல் அப்துல் ரகுமான் அவர்கள் கொண்ட அன்பினைப்போலவே அவர்களின் இளவல்கள் MDவாப்பா செய்யது M. சலாஹுத்தீன் அவர்கள், சின்னவர் சீனாதானா செய்யது அப்துல் காதர் வாப்பா அவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் எனக்குத் தருகிறார்கள்..
அவர்களின் செயலாளர்களும் அவ்வாறே.

நோன்பு காலத்தில் துபாய் வெய்யில் கொளுத்தி எடுக்குது.
ஆனாலும் அங்கே இருக்கிற அன்பு உள்ளங்களால் மனதும் உள்ளமும் உடலும் குளிர்சசியாகவே உள்ளது

(தொடர்வோம்)

சனி, 4 நவம்பர், 2017

மழை தான் பெய்யட்டுமே.

எங்க சின்ன வயசுல மழைக்காலங்கள் அவ்வளவு அழகா இருக்கும்..

எங்க ஊர் திருநெல்வேலிச்சீமை  மேலப்பாளையம் கிராமியம் கலந்த நகர் ஜாடை .அவ்வளவு தான்.

இப்பவுள்ள தார் கான்க்ரீட் ரோடெல்லாம் அப்ப எந்த தெருவிலும் இல்லை.
செம்மண் சாலைகள் தாம்.
நெசவுத்தொழில் செறப்பா இருந்தகாலம் அது.

காலை வேளைகளில், போடப்படும் பாவுகள் மீது நூலின் விரைப்புக்காக கஞ்சி வாளிப்பு இருக்கும்.பாதி கஞ்சி தரையில் தான் கொட்டியிருக்கும்...அதுவே தெருக்களை சுத்தமா பூசி மொழிகின மாதிரி வச்சி இருக்கும்.

நூல் பாவின் நிறத்தோடு....சில நேரம் கஞ்சி வடிஞ்சி தெரு முழுக்க பச்சையோ, செவப்போ, நீலமோ தரையில் தெரியும் .

நல்லா மழை பெய்யிற காலத்தில அப்படியே அம்புட்டு கஞ்சி தரையும், அடிச்சிட்டு போயிடும்.

அநேகமா மழைக்காலத்தில் நெசவுத்தொழில் கொஞ்சம் ஓய்வெடுக்கும்....ஏன்.....பாவு லெகுவா இருக்காது...ஊடு பண்ணு ல சிக்கிக்கும்.அதனால மழை விட்டு கொஞ்சம் கூதாப்பு குறைஞ்ச பெறகு தான் தறில இறங்குவாக.

இடுப்பு வரை ஒரு பள்ளம் தோண்டி நின்று கொண்டு கால்கள் உள்ளே இருப்பது காக்குழி தறியாகும்.

காலை வெளிச்சம் வந்து பொழுகிற சூரியன் வெளிச்சத்தை கொறைக்கிற வரை இடுப்பை தறி குழி திண்ணையில் சாய்த்துக் கொண்டு கால்கள் இரண்டையும் மாறி மாறி மிதித்துக்கொண்டு, ஒரு கையால் நூல் ஓடத்தை அடித்துக்கொண்டு, இன்னொரு கையால் நூல் பண்ணை பலமாக  இறுக்கி அழுத்திக் கொண்டு வேஷ்ட்டியை,  சேலையை எங்கள் நெசவாளப்பெருமக்கள் உருவாக்குவார்கள்.

அவர்கள்  வருஷத்தில் ஒரு 10 நாட்கள் தொழில் முடக்கம் செய்வதே ரொம்ப அபூர்வம்.

ஆனால் எனக்கு தெரிந்து.....மழைக்காலங்கள் வந்தால் வீட்டுக்குள்ளே  தறிக்குழிகளில் அது முங்குகிற அளவில் தண்ணீர்  ஊறி கால்களை உள்ளே வைக்க முடியாத அளவுக்கு நிரம்பி நிற்கும்....அது வடிய 10 நாள் 20 நாள்ன்னு.....ஆகும் .

அப்பசி அட மழை காலம் வந்தால்....பல வயசான தலைக்கட்டுகள் " கதை முடிஞ்சு போய்டும்".

அது குளிர் காலமாக கூட இருக்கும்.ரொம்ப வேதனைப்பட்டு ஆட்கள்  இறந்து போனது குறைச்சல் தாம்....

ஊனு,  தண்ணி கொறைஞ்சி அவங்க காலம்.... ஆடி  அடங்கி....  முடிவுக்கு வரும்.

ஆறு வாய்க்கால் முங்கி தண்ணி ஓடும்...

பெரியாறு தாமிரபரணி வெள்ளத்தைப் பார்க்க கூட்டம் கூட்டமாக ஆணும் பெண்ணும் போய் வருவாக.
இப்போ  வெள்ளம்  வருவதே கனவாய்ப் போச்சு....

வாழ்கிற இந்த தலைமுறை  மழைக்காலம் வந்தால்  வெறுக்கிறார்கள்....

பிள்ளைகள் மட்டுமே  பள்ளிக்கூடங்களுக்கு லீவு என்று அடிக்கடி வந்தால் சந்தோஷம் கொள்கிறார்கள்.

மழைக்காலங்கள் வந்தால் பைக்கில் போகமுடியாது........
தேங்குகிற போக்குவரத்து நெரிசல் .....சட்டை பேண்ட் நனைவதால்  மழை மீது ஒரு வெறுப்பை  கொண்டுள்ளார்கள்....அவங்க நினைக்கிற இடத்துக்கு ஒடனே போகமுடியல்லைங்கிரத தவிர வேற ஒன்னுமில்லை.

ஆகவே அடைமழை, கடும் மழை,   பேய்மழை என்று எழுதுகிறார்கள்.

மழை இல்லைன்னா.....குடிக்க, குளிக்க, சமைக்க ,விளைய வைக்க , தண்ணிக்கு எங்க போக?....ஆடு ,மாடு ,பறவைகள், மத்த வாயில்லா ஜந்துக்கள் எங்கே போக?

மழை என்ன ....புதுசா இப்ப மட்டுமா பேயுது.?பூமி உண்டான காலம் தொடங்கி  எம்புட்டோ  வருஷமா பெய்யுது.

மழை தண்ணி வாற போற கால்வாயை  மரிச்சு வழிய  செறத்தா.....என்ன ஆவும்?.பொறவு தேங்குது... தெவுங்குதுன்னு கூப்பாடு போட்டா என்ன ஆவும்?

வருஷம் 365 நாளில் ஒரு 20 நாள் மழை யை கூட தாங்கி மகிழ்ச்சி அடைய விவசாயிகளை தவிர யாரும் தயாரா இல்லை.அதுவும் காலம்  மாறி பொழிந்தால் அவனுக்கும்  பிடிக்கப்போவதில்லை.

மழையை  ரசிப்போம்.வரவேற்போம்.அதனால் தான் நாமும் மரம் செடி கொடிகளும் ஆடுமாடுகளும்....பறவைகளும் ஊரும் வாழ முடியும்.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

இப்படி ஆகிட்டாங்களே.....



அன்னைக்கு ராத்திரி கொஞ்சம் தாமதமா...மோட்டார் பைக்கில் ஒரு மணி வாக்கில்  ....வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.அதுவும் கிழக்க இருந்து மேக்க பார்க்க புல்லட்ல வந்து எங்க வீட்டு வாசலில் பைக்க  நிறுத்தி   ஸ்டேண்ட் போடதயாரானேன்..... என்  பைக் லைட் வெளிச்சம் ஒரு ஆயிரம் அடி தூரமாவது ...இருட்டைக் கிளிச்சுக்கிட்டு போகும்.

அப்படி...லைட்ட அங்க நேரா...காட்டிய போது எங்க வீட்டிலிருந்து நூறு அடி தூரத்தில் உள்ள எங்க தெரு....அதான் அய்யர் தெரு பிள்ளையார் கோவில் தெரிந்தது.



எங்க வாப்பா?பெரிய வாப்பா  காலத்தில் எங்க தெரு,பக்கத்து தெரு  வயசாளிகளும்,நடுத்தட்டு ஆசாமிகளும்  ராத்திரி பத்து மணி வரை அதன் வெளியே உள்ள வாய்க்கால் திண்டில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்பார்கள்.
இப்ப உள்ள பாளையங்கால் தண்ணீர் சாக்கடையானதால் அங்கன யாரும் உட்கார முடியல்லை.கொசு பிச்சி எடுத்துடுது.

அத மாதிரி தான் பக்கத்தில் உள்ள கொடி மேடையிலும்.
எங்க இளமைக்காலங்களில் நாளைக்கு பள்ளிக்கூடம் லீவுன்னாலோ ,கோடை லீவுன்னாலோ.....நள்ளிரவு வரை இளவட்ட வயசுக்காலங்களில்....அந்த மேடை மணலில் துண்டை விரித்துப்படுப்போம்.படுத்துக்கொண்டே கதைகள் பேசுவோம்.....ஆம்பிள...கதாபாத்திரங்கள் பொம்பிள கதாநாயகிகள்  கதைகள் பல மாதிரியா எங்க செட்ல பேசப்படும்.... நட்புகள் பொருளாதாரம் பார்த்து பழகாத காலம் அது.இப்போ அந்த மேடையிலும் யாரும் படுப்பதில்லை,.

மைதீன் தைக்கா கொடிமேடை....பிள்ளையார் கோவில் கோபுரம் தாண்டி...என் பார்வை கோவில் பின்னால் அமைந்து இருந்த எங்க பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வாட்டர் டேங் மீது சென்றது.
அங்கே....அதன் மேலே......நாலு அல்லது ஐந்து பேர்கள் நின்று பேசிக்கிட்டு இருப்பது போல தெரிந்தது.எதோ செல் போன் விளக்கு..வெளிச்சங்கள் போல அடிக்கடி அங்கே மாறி மாறி தெரிந்தது.

அங்கே என்ன நடக்குது ?....கொஞ்ச நாளா நம்ம பக்கத்துல உள்ள டேங்ல இருந்து நம்ம பகுதிக்கு குடி தண்ணீர் வருவதில்லையே.....என்று சந்தேகம் கொண்டு....டேங்ல எதுவும் பிரச்சினையோ...என்று பலவாறாக யோசிச்சுகிட்டே இருந்தேன்.

என்னை எங்க வீட்டுக்குள் அனுப்பிவிட்டு கதவைப் பூட்டத்  தயாரா இருந்த கிருஷ்ணசாமி  அண்ணாச்சி....என்னிடம் “அங்க என்னத்த பார்க்கிய?” என்றார்.

“ எப்பா?....டேங் மேல ஒரு அஞ்சாறு பேர் நிக்கிற மாதிரி தெரிது....வா....போய் பார்த்திட்டு வருவோம்”...ன்னு சொன்னேன்.
“அதாரு....அங்க நடமாடுறது? வாங்க போலாம்”என்று அண்ணாச்சியும் கூட வந்திட்டார்.

ஒரு நிமிஷத்தில் எங்க தெரு மேக்க உள்ள டேங் கீழே நானும் அண்ணாச்சியும் வந்து சேர்ந்துட்டோம். ....கீழே நான்கு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

“ கிருஷ்ணசாமி ...வா....மேல போலாம்.” என்று சொல்லிட்டு....வளைஞ்சு வளைஞ்சு ஐம்பது அடி உயரத்தில் இருந்த அதன் மேல்பகுதிக்கு வந்து விட்டேன்.

அங்கே அந்த நட்ட நடு நிசியில்...ஒரு ஐந்தாறு பேர்கள் உட்கார்ந்தும் நின்றும் கொண்டு இருந்தார்கள்....அப்போது என்கையில் இருந்த செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில்  சுத்து முத்தும்  பார்த்தேன்.....ஆளாளுக்கு போதையில் இருந்தார்கள்..இரண்டு மூணு பேர் சாப்பிட்டு இலையை விரிச்சு போட்ட..கோலம தெரிந்தது......

யாருப்பா....நீங்க....இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டேன்..

“சும்மா....இங்கே உட்கார்ந்து சாப்பிட வந்தோம்.”என்றான் ஒருவன்.அங்கே நின்ற எவனுமே...எங்கள் பகுதியை சேர்ந்தவன் இல்லை.

“ என்னடே விளையாடுறிய? ஆமா...இந்த டேங் மாடியில யாரு சாப்பாட்டு கிளப் நடத்துறா? " கிருஷ்ண சாமி அண்ணாச்சி கொஞ்சம் கோபமாக கேட்டார்.

" யார்ரா நீங்க.?...சொல்லுங்க...என்றேன்.....

எங்க வட்டாரத்தில் இருந்து அம்பை ரோட்டுக்கு தூரமா இருக்கிற தெருவை சொன்னார்கள்.

நான் பேண்ட் சர்ட் போட்டு அந்த இருட்டில் நின்று கொண்டு இருந்ததால்..
:"யாரோன்னு" கொஞ்சம் கலவரப்பட்டு ...ஜட்டி மட்டும் போட்டு இருந்த அந்த இளைஞர்கள்....பேண்ட் சட்டைக்கு மாற ஆரம்பித்தார்கள்....

" என்ன...வேல செஞ்சோம்....கைல பாதுகாப்புக்கு ஒரு கம்பு கூட இல்லையே...எவனாவது வேகத்துல நம்மள ஒரு முட்டு முட்டி தள்ளிவிட்டுட்டா என்னசெய்ய.?..வாங்க போலாம்ன்னு" ,என் காதில வந்து  ..அண்ணாச்சி எச்சரிக்கை பண்ண ஆரம்பிச்சார்.

அதுல ஒருத்தன்......“ டே....வாங்க சீக்கிரம்..” .என்று... அந்த வாட்டர் டேங் உள்ளே நுழையிர " மேன் ஹோல" பார்த்து சவுண்ட்...கொடுத்துக்கிட்டு இருந்தான்..

அப்போது அங்கே போய் பார்த்தேன்....அந்த குடி நீர் தொட்டிக்குள் இறங்கி...பாதி டேங் தண்ணியில படிக்கட்டுல நின்று....தேய்த்துக் குளித்துக்கொண்டு இருந்தான்......இன்னொருவன்..அங்கே நீந்திக்கொண்டு இருந்தான்.

“ டேய்....வாடா  வெளியே...என்று சொல்லி பிடித்து இழுத்து வந்தேன்...இப்படி கொடுமை  செய்றீங்களே...இந்த குடி தண்ணியத்தானே...பச்சப்புள்ளைக...முதக்கொண்டு எல்லாரும் குடிக்கோம்...நீ...குளிச்ச அழுக்குத்தண்ணிய நாங்க குடிக்கணுமா?...”.என்று ஆத்திரம் தீர கத்தித் தொலைச்சேன். ஆவேசமா ஆடிவிட்டேன்...

கொஞ்சம் கொஞ்சமா....கூட்டம் கூட ஆரம்பிச்சுது....விட்டா போதும்ன்னு...அந்த பயலுவ.....ஓட்டம பிடிச்காணுக...அதுக்கப்புறம் அவனுங்கள நான் எங்க வட்டாரத்தில்...பார்க்கவே இல்லை.

யாருக்கும் கட்டுப்படாமல் இப்போது எங்கள் ஊரில் இளைஞர்களில் ஒரு பிரிவினர் உருவாகிவிட்டார்களோ என்ற கோபமும் அடிக்கடி வந்துபோகிறது.

ஒரு பைக்கில் மூவர் , நால்வர் தெருக்களில் அதிவேகத்தில் செல்வதும் அங்கே நிண்டு விளையாடிக் கொண்டு  இருக்கிற குழந்தைகளின் உயிருக்கு உலை வைக்கும் வேலைகளிலும் இறங்கிவிட்டார்களோ என்ற எண்ணமும் வந்து நிற்கிறது...இவர்களை யார் கட்டுப்படுத்துவது என்கிற கேள்வியும் பிறக்கிறது. 
மறுநாள்...அரசு அதிகாரிகள்....ஜமாஅத் தலைவர்கள்...உள்ளிட்ட பலருக்கும் அன்று இரவு நடந்த கொடுமையை  சொல்லி...பள்ளிவாசல்களில் பேசச்சொன்னேன்.....

அந்த டேங் மேல போக உள்ள ஏணிப்படிகள் மேலே அன்னியர் யாரும் போக முடியாமல்  அந்தப்  பகுதியை...சுற்றி காம்பவுண்ட்...சுவர் எழுப்பி பாது காக்க வழி ஏற்பாடு செய்து விட்டுத்தான் மறுசோலின்னு முடிச்சேன்.

பண்பாடும் கலாச்சாரமும் கொண்டு மேலோங்கும் அன்பினைக் கொண்ட இந்த ஊரை " எங்கே கொண்டு செல்லுகிறார்கள்?."...என்கிற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது.

சனி, 24 ஜூன், 2017

பெருநாள் நோக்கி ஒரு பயணம் .



    எனக்குத் திருமணமான பொழுதில் வந்த முதல் நோன்புப்பெருநாள்.
அப்போதுநான் சென்னைக்கும் ஊருக்கும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தேன்.
         காரணம் பல்வேறு சிவில் கேஸ்கள் என்னை, என் குடும்பத்தை அலைக்களித்துக்கொண்டு இருந்த கடுமையான வேளை அது.

    ஒருத்தருக்கொருத்தர் கேஸ் நடத்தும் சாதாரண மனிதர்களுக்கே கோர்ட் உத்தியோகம் மோசமானதாக இருக்கும்.ஆனால் நானோ தமிழக அரசை, அதன் நிலச் சட்டத்தை எதிர்த்து என்னுடைய குடும்பத்து உறுப்பினர்களுக்காக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தேன்.

          சென்னை உயர் நீதி மன்றப் படிக்கட்டுகள் ஏறியதோடு, டெல்லி உச்ச நீதி மன்றம் வரையிலும் சென்றேன்.

      காலமும் பணமும் விரையமானது.நாட்டின் அருமையான சட்டங்கள் பல, அரசு அதிகாரிகளின் சோம்பேறித்தனத்தினால், அறியாமையினால் குடிமக்களுக்கு எப்படி எல்லாம் பாதகம் தரமுடியும் என்று, மற்றவர்களிடம் சொல்லிக் காட்ட,  என்னிடம் டாக்ட்டரெட் செய்யும் அளவுக்கு சங்கதிகள் இருக்கின்றன.

      திருமணமாகி பதினைந்தாம் நாளிலேயே கேஸ் நடத்த சென்னை வந்து விட்டேன்.என் தந்தையும் தாயும் .என்னை நம்பி வந்த மனைவியும் பலநேரம் இதனால் வருந்தி இருக்கிறார்கள்.கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.என்ன செய்வது? கேஸ் நடத்தாவிட்டால் இழப்புக்கள்  நிறைய வருமே..கடமை இருக்கிறதே. குடும்பத்து மற்ற பங்காளிகளும் நான் பார்த்துக்கொள்வேன் என்று இருந்து விட்டார்கள்.
     சென்னையில் பல நேரங்களில் பெரிய வக்கீலை பார்க்கவே முடியாது.கேஸ் கட்டும் கையுமாக ,சில வேளைகளில் புத்தகமும் கையுமாகவே இருப்பார்கள்.
         கத்துக்குட்டி ஜூனியர்கள் கைகளில் அப்பாவிக் கட்சிக் காரன் கிடைத்தால் தொலைந்தான்.நாம் ஒன்னு சொல்ல, அவர்கள் நமக்குத்தெரியாததை கோர்ட்டில் சொல்லுவார்கள்.
     நாம் கேட்காமலே வாய்தா வாங்கி இன்னொரு நாளுக்கு வழக்கை இழுத்துக்கொண்டு போவார்கள்.
    "வர்ற வாய்தாவுக்கு நீர் வந்துரும்.வரும்போது மறக்காமே திருனவேலி அல்வா கொண்டாரும்வோய்."
"வாய்தா எப்போ?"
வர்ற மூணாம் நாளைக்குத்தான்."
"சார் நான் ஊருக்குப் போக முடியாதே ?"

"இங்கேயே இரும்மையா" அழகாக பதில் தருவார்கள்.
  வேறு என்ன செய்ய சென்னையிலே இருப்பேன்.
இதற்கு மாற்றமாக சில நல்ல வக்கீல்களும் எனக்குக் கிடைத்தார்கள்.என்னைத் தமது  நண்பனாக,தம்பியாக, மகனாகப் பாவித்த நல்லவர்களும் இருந்தார்கள்.அவர்கள்தான் எனது கண்ணீரைத் துடைத்து கரை ஏறச் செய்தார்கள்.

பீஸ் என்று நான் கொடுத்த மிகச்சிறிய தொகையை மிகப் பெருந்தன்மையோடு  பெற்றுக் கொள்வார்கள்.
       அரிதான குணமுடைய அவர்களுக்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் நெல்லை வழக்கறிஞர் தீன்அவர்கள், அவரதுசீனியர்அப்துல் வஹாப் அவர்கள், சென்னைகொடைஅரசு அவர்கள் ஆகியோரையும் சொல்லலாம்.

           கோர்ட்டுக்குப் போய்இன்னொரு நாளுக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டு "வாய்தா" வந்து விட்டால் எனக்கு வேறு வேலை  இருக்காது.
நேராக வாலஸ் கார்டன் போய்விடுவேன்.
        அங்கே தான் முதல் தெருவில் ,அப்போலோ மருத்துவ மனை பக்கம்,  மணிச்சுடர் நாளேடு மற்றும் முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களின் அலுவலகம்  இருந்தது.
       எனது குடும்ப "வழக்குப் போக்குவரத்தை" தலைவர் நன்கு அறிவார். 

அங்கே நான் சோர்வாகப் போய் அமர்ந்தால் "என்ன புது மாப்பிளை எப்படி இருக்கீங்க?" என்று அன்பு மொழி பேசி கலகலப்பாக்குவார். 

    பக்கத்தில் குளிர்ந்த மோர் இருக்கும் அதைப் பருகிடத் தருவார்.
      கொஞ்சநேரத்தில் தலைவர் வீட்டிலிருந்து மதிய சாப்பாடு வரும் அதைத் தலைவரும், நானும் இன்னும் வேறு யாராவது வந்தால் அவர்களும், பகிர்ந்தே சாப்பிட தலைவர் வற்புறுத்துவார்.எல்லோரும் உண்டுமுடிப்போம்.

    ரமலான் மாதம் வந்தது.அப்போதும் வாரக்கணக்கில் சென்னையில் தங்கவேண்டியதிருந்தது.இருபத்து ஒன்பதாம்  நாள் ஊருக்குப் புறப்பட ஆயத்த மானேன்.
      ரொம்ப சிரமப்பட்டு எக்மூரில் இருந்து புறப்படும் பஸ் ஒன்றில் பயணிக்க மேலப்பாளையம் பள்ளி காசிம் என்கிற குடும்ப நண்பர் பயணச்சீட்டு எடுத்து வைத்திருந்தார்.அந்த பஸ்சை விட்டால் மறுநாள் பஸ் எதிலும் இடமே இல்லை.சரி ஊருக்குப் போய் விடுவோம் என்று முடிவு செய்து விட்டு தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களிடம் பயணம் சொல்லப் போனேன்.

       அப்போது மாலை ஐந்து மணி இருக்கும் .தலைவர் தொழுது கொண்டிருந்தார்.தொழுகை முடிந்து சலாம் வாங்கியதும் நான் நிற்பதைப் பார்த்தார்....கூர்ந்து பார்த்துக்கொண்டே புன்னகைத்தார்கள்...
      "என்னா.தம்பி ?என்ன சேதி "என்று அழகான மெல்லிய குரலில் கேட்டார்கள்.
"வாப்பா நான் ஊருக்குப் போகிறேன்"......பதில் ஏதும் சொல்லாமல் 
அவர்கள் எதோ ஒதிக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்சம் நேரம் காத்திருந்தேன்.மீண்டும் ஊருக்குப் போவதைச் சொன்னேன்.

"நாளைக்குப் போலாம் தம்பி" என்று சொல்லிவிட்டு,தலைவர் .மீண்டும் தொழுகையைத் தொடர்ந்தார்கள்.என்னால் அங்கே நிற்க முடியவில்லை.

  "இங்க வந்தது.... தப்பாப் போச்சே,.....அடடா நம்ம ஊரில் ஒரு நாளைக்கு முன்னதாகவே நோன்பு வச்சாங்களே.அங்கே இன்னைக்கு இருபத்து ஒன்பது முடிஞ்சாச்சே..திடீர்ன்னு நாளைக்கு பெருநாள்ன்னு அறிவிச்சுட்டா என்ன செய்ய?.....நம்மள வாப்பா, உம்மா, மனைவி தேடுவாங்களே.....இங்க வந்து பயணம் சொன்னது தப்பாப் போச்சே"ன்னு மனசுக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன். 
     அங்கே மேனேஜராக இருக்கும் நெல்லை ஏர்வாடி மீராசாஹிப் அவர்களிடம் போனேன்."சாச்சா,தலைவர் எதுக்காக என்னை நாளைக்குப் போ ன்னு சொல்லுறாங்க?உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு?"கேட்டேன்."
   "இன்னைக்கு எதோ இப்தார் பார்ட்டிக்கு போறதா தெரியுது.அதுக்கு உங்களைக் கூட்டிட்டு போறதா இருக்குமோ? என்னவோ?"ன்னு அவர் பட்டும் படாமலும் வழக்கம் போல் சொல்லி  முடித்தார்.
நான் என்ன செய்யன்னு முழிச்சிக்கிட்டு இருந்தேன்.
   "சாச்சா.நாளைக்கு நான் ஊரில் இருக்கணும்.எனக்கு தலை பெருநாள்.என்னை எங்க வீட்டில் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.தலைவர் கேட்டால் பஸ் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருப்ப தால் நான்  கிளம்பிட்டேன்னு    சொல்லி விடுங்கள்" என்று  வந்து விட்டேன்.

   அரக்க பறக்க ரூமை காலி செய்ய்துவிட்டு எக்மோர் ரயில் நிலையம் முன்பாக வந்து சேர்ந்தேன்.அந்த பஸ் எனக்காகவே காத்திருந்த மாதிரி தெரிந்தது.காரணம் நான் வண்டிக்குள் ஏறியதும் மற்ற பயணிகள்லாம் ஒரு பார்வை என்னைப் பார்த்த விதத்தில் நான் ஐந்து நிமிட லேட் என்பதைப் புரிந்து கொண்டேன்.
      பஸ் டிரைவருக்குப் பின்னால் இரணடாவது வரிசையில் சன்னலோரத்தில் என்னுடைய இருக்கை.   அதில் என்னை விட இளையவர் ஒருவர் இருந்தார்.'"அண்ணே எனக்கு வாமிட் வரும்னே .அதனாலே நான் ஜன்னலோரமா உங்க  சீட்ட்ல இருக்கேன்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க"எனறதும் அடுத்து உள்ள சீட்டில் அமர்ந்தேன்.

   என்னை அடுத்து நடை பாதை.அதற்கடுத்துள்ள சீட்டில் நெல்லை வழக்கறிஞர்முருகவேல் அவர்களும்,அவருக்கு அடுத்து ஊத்து மலை இளைய ஜமீன்தார் எஸ்.எம்.பாண்டியன் என்கிற சங்கர மருதப்ப பாண்டியன் அவர்களும்.இருந்தார்கள்.
    ஊத்துமலை ஜமீன் தாருக்கு எங்கள் குடும்பத்தையும், என் வாப்பாவையும்,என்னையும் நல்லா தெரியும்.அவருக்கு மோட்டார் சைக்கிள்கள் மேலே ரொம்பவும் காதலும் மோகமும் உண்டு.திருநெல்வேலி வட்டாரத்தில் பி.எஸ்.எ.மோட்டார் சைக்கிள் அவர் மட்டுமே வைத்திருந்தார்.

   திருனவேலி பக்கம் அப்போதெல்லாம்1970 களில்மோட்டார் சைக்கிள்களை அவர்மாதிரி ஆட்களும்,பண்ணையார்களும்,போலீஸ் இலாக்காவைச் சேர்ந்தவர்களும் .பெரிய வியாபாரிகளும் தான்  வைத்திருந்தார்கள்.
       அது அந்தஸ்த்தின் சின்னமாக பார்க்கப்பட்டது.அவர்கள் எல்லோரும் திருநெல்வேலி எஸ்.என்.ஹைரோட்டில் தியாகராஜன் ஆட்டோ ஒர்க்ஸ்  பரமன் அண்ணாச்சி கடையில் ஒன்று கூடுவார்கள்.
      அங்கே எங்கள் குடும்பத்தில் இளையவரான எங்கள் வாப்பாவும் அவரின் அண்ணன் வைத்திருந்த ராஜ்டூட் மோட்டார் சைக்கிளை கொண்டு செல்வார்.அந்த மோட்டார் சைக்கிள்கள் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வைத்தது.
      அந்தக் கடையில் த.பி.சொக்கலால் ராம் சேட் பீடி  முதலாளி, ஹரிராம் சேட் படம் இருக்கும்.அவர் தான் அந்த கடையை உருவாக்கியதாகச்சொல்லுவார்கள். எங்க வாப்பா சில நேரங்களில் என்னையும் மோட்டார் சைக்கிளில் அங்கே அழைத்துச் செல்வதுண்டு.அங்கே தான் ஊத்துமலை என்னை பல முறைப்பார்த்துள்ளார்.பாசமுறையில் கொஞ்சுவார். நான் வளர்ந்த பிறகும் போற வாற இடங்களில் கண்டால் விடமாட்டார். .
    "யோவ்... மருமகனே"என்று.தான் பெரும்பாலும் அழைப்பார்.திருநெல்வேலித் தமிழின் பாசம் அதில் இருக்கும்.
   "யோ....வ்வ்...எங்கய்யா  உன்ன ஊர்ல பாக்கவே முடியல்லே?என்னய்யா பண்ணிக்கிட்டுருக்கே?" என்று பார்த்த இடத்தில, பஸ்சில் என்னை விசாரித்துக்கொண்டார்.
    நான் ஒரு கேஸ் விஷயமா மெட்ராசுக்கு வந்ததை மட்டும் சொன்னேன்."ஒங்க அப்பா சுமையை நீர் சுமக்கீராக்கும் ".
    எங்க வாப்பா மற்றும் நில விபரங்கள் கேட்டு முடிக்கும் போது வண்டி தாம்பரத்தை நெருங்கி இருந்தது.
"யோவ்,மருமகனே,........... என்னைய்யா இது .அரை மணி நேரத்துல இந்த டிரைவர் இங்க வந்துட்டாநேய்யா?"
"ஆமாம் ராஜா".
அப்போதுதான் அந்த டிரைவர் பஸ் ஓட்டுகிற 'அழகை' கவனித்தேன்.மோசமான ட்ரைவிங் .மனசு என்னவோ போல் இருந்தது.
"வோய்....... இவன் நம்மள ஊர் கொண்டு சேப்பானாயா"?
"விழுப்புரத்துல பஸ் மாறிட வேண்டியது தான்யா"
இப்படி அவர் சொன்னதும் எனக்கு பக் என்று இருந்தது.

       பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்த பஸ் விழுப்புரத்தில் ஒரு ஓட்டல முன்பாக  வந்து  நின்றது.சுற்றிலும் ஆம்பிளைகள் மூத்திர நெடியில் தங்களுடைய ;கட்டாயக் கடமையை'முடித்துக்கொண்டிருந்தார்கள் .

    மனசு என்னவோ போல் இருந்தது.வேற ஏதாவது பஸ்சில் மூணு டிக்கெட் கிடைக்குமான்னு, 'ஊத்து மலை' அக்கம் பக்கம் நின்ற பஸ்களில் விசாரித்தார்.எல்லாம் புல்.
    "பேசாம திருச்சி போய், வேற பஸ்ல போய் விட வேண்டியது தாங்கற" முடிவுக்கு வந்தோம்.விழுப்புரம் வரையிலும் ஒரு மாதிரியாக வந்த பஸ் அதைத் தாண்டியதும் இன்னும் வேகம் எடுத்தது.
      ஒரு கட்டத்தில்  டிரைவரை சப்தமாக எச்சரித்த ஊத்துமலை, வண்டி ஓட்டுகிற இடத்துக்கே போய் டிரைவரிடம் "எப்பா நீ ஓட்டுவது கொஞ்சமும் சரியில்லை.பாத்துப்போப்பா"என்றார். டிரைவர் எதையும் காதில் வாங்க வில்லை.
    எதிரே கண்கூசும் விளக்குகளோடு வரும் ஒவ்வொரு வாகனத்தையும் நாங்கள் பயணித்த வண்டி கடக்கும் வரை, அடிவயிறு ஒரு கலக்கு கலக்கி நின்றது..
     அந்த டிரைவர் யார் சொல்லியும் கேட்கவில்லை.நான் இருந்த இருக்கைக்கு அடுத்து இருந்த இரும்புத் தூணை பக்கவாட்டில் சேர்த்துப் பிடித்துக்கொண்டேன்.தூக்கம் வரவே இல்லை.என்றைக்கும் இல்லாத பீதியும் பயமும் அடிக்கடி வந்து போனது.

     திருச்சி வரப்போகிறது. அப்பாடி இறங்கிட வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது ஒரு மேம்பாலத்தில் வண்டி ஏறியது. பின்னர் கடும் வேகத்தில் பஸ் இறங்கியது.எங்கள் கண் முன்னேசைக்கிள் டயர் பொருத்திய தள்ளுவண்டியும், அதை ஒருவர் தள்ளிக் கொண்டு போவதும் தெரிந்தது.
  
     அடுத்த கணம் பஸ்சின் முன் கண்ணாடியில் தள்ளுவண்டிக்காரர் வந்து விழுவதும்,பஸ் டிரைவர் சடன்பிரேக் பிடித்ததும் தெரிய முடிந்தது.யாரும் எதிர் பாராத நேரத்தில், இறக்கத்தில் வேகமாக இறங்கிய பஸ் வலது புறமாகச் சாய்ந்தது.ஒரு ஆயிரம் வயலின் சப்தம் ஒரு சேரக் கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு
சப்தம் வந்தது.
      இடது கையை அந்த இரும்புத்தூனோடு சுற்றி வளைத்து வலது கையைச் சேர்த்து தலையோடு கட்டிக் கொண்டேன்.முதலில் ஒரு பல்டி அடித்த பஸ் மறுபடியும் உருண்டு பக்கத்தில் இருந்த பள்ளத்தில் பக்கவாட்டில் சரிந்தது.கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே புரியவில்லை.என்ன நடந்தது? என்று அங்கே இங்கே பார்க்கும் போதுதான், தலைக்கு மேலே பஸ்சின் வாசல் படி இருப்பது தெரிந்த்தது.
எனக்கு பக்க வாட்டில் இருந்தவருக்கு இடப்புறம் நான் கிடந்தேன்.என் காலுக்கு ஊடே வேறு இருவர் குப்புறக் கிடந்தார்கள்.எழ  முயற்சித்தேன்.முடியவில்லை.

"தம்பி எழுந்திரியுங்கள் என்று நான் என்பக்கத்து சீட் ஆளை எழுப்பும் போது தான் அவர் உயிருடன் இல்லை என்பது தெரிந்தது.
பாலத்தில் பஸ் முட் செடிகளின் மேல் கவிழ்ந்ததால் அதில் வலுவான ஒரு கிளை அந்த இளைஞரின் நெஞ்சுக்குள்ளே நுழைந்து தெரிந்தது.அவர் இருக்கும் இடம் நாம் இருக்க வேண்டிய இடம் அல்லவா,என்ற அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது.

எப்படி எழுவதுஎன்றே புரியவில்லை.ஒரு வழியாக சுதாரித்து தலைக்கு மேலே பார்த்தபோது ஊத்து மலையும்.வக்கீல் முருகவேல் அவர்களும் சீட்டுகளின் மேல் கால வைத்து ஏறி பஸ்சின் வாசல் படிப்பக்கம் நின்று கொண்டுஎன்னைத் 'தம்பி' 'தம்பி' என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள்.எனக்கு முன் சீட்டில் இருந்தவர்களும் பிழைக்கவில்லை.

நீ ஏறுகிறாயா?இல்லையா?பஸ் தீப்பிடிச்சுடும்.ஏறுய்யாஎன்று ஊத்து மலை உரத்தகுரலில் என்னை அழைத்தார்.
ஒருவழியாக சமாளித்து மேலே ஏற  எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.இதில் ஊத்து மலை எப்படி ஏறினார் என்று யோசிக்கும் போது தான் அவர் காடு மேடுகளில் வேட்டைக்குப் போன அனுபவம் கொண்டவர் என்பது நினைவில் வந்து போனது.
எங்கய்யா அவன்?நம்மள இப்படி இந்த கதிக்கு ஆக்கின டிரைவரைப் பிடிய்யா” என்றார் மிடுக்கோடு.".

   பஸ் கவிழ்ந்ததும் ஓட்டம பிடித்தவர்கள் எங்கே போனார்களோ தெரியவில்லை என்றார்கள்.பஸ் விழுந்த இடத்தில் இருந்த S.K.எஜன்ஜீஸ் என்கிற பெட்ரோல் பல்க் காரர்களும் அதுக்கு பக்கத்தில் இருந்த ஒர்க் ஷாப் தொழிலாளிகளும் பஸ்சில் மாட்டிக்கொண்ட ஒவ்வொருவரின் உடைமைகளை எடுத்து வந்து கொடுத்தது வாழ் நாளில் மறக்க முடியாததது

   பின்னர் ஒருவழியாக திருச்சி பஸ் நிலையம் வந்து வேறு பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்தோம்.கைகளில் இருந்த மணி பர்ஸ் ,பணமெல்லாம் தொலைந்து நாற்பத்து ரூபாய் மட்டும் பெட்டிக்குள் சில்லரைகளாய் இருந்து அவற்றை கொடுத்து டிக்கட் எடுத்து ஊர் வந்தது   தனிக்கதை.

வீட்டுக்கு வந்து கதவைத்தட்டினேன்...காலை  வேளையில் ,நோன்போடு விழித்த கண்களோடு ,  கிழிந்த சட்டை பேண்டோடு என்னை அந்தக் கோலத்தில் பார்த்த என் வாப்பா பதறிப்போய் அதிர்ச்சி ஆகிவிட்டார்....

நடந்ததைச் சொன்னேன்.அழுதேவிட்டார்.