சனி, 4 நவம்பர், 2017

மழை தான் பெய்யட்டுமே.

எங்க சின்ன வயசுல மழைக்காலங்கள் அவ்வளவு அழகா இருக்கும்..

எங்க ஊர் திருநெல்வேலிச்சீமை  மேலப்பாளையம் கிராமியம் கலந்த நகர் ஜாடை .அவ்வளவு தான்.

இப்பவுள்ள தார் கான்க்ரீட் ரோடெல்லாம் அப்ப எந்த தெருவிலும் இல்லை.
செம்மண் சாலைகள் தாம்.
நெசவுத்தொழில் செறப்பா இருந்தகாலம் அது.

காலை வேளைகளில், போடப்படும் பாவுகள் மீது நூலின் விரைப்புக்காக கஞ்சி வாளிப்பு இருக்கும்.பாதி கஞ்சி தரையில் தான் கொட்டியிருக்கும்...அதுவே தெருக்களை சுத்தமா பூசி மொழிகின மாதிரி வச்சி இருக்கும்.

நூல் பாவின் நிறத்தோடு....சில நேரம் கஞ்சி வடிஞ்சி தெரு முழுக்க பச்சையோ, செவப்போ, நீலமோ தரையில் தெரியும் .

நல்லா மழை பெய்யிற காலத்தில அப்படியே அம்புட்டு கஞ்சி தரையும், அடிச்சிட்டு போயிடும்.

அநேகமா மழைக்காலத்தில் நெசவுத்தொழில் கொஞ்சம் ஓய்வெடுக்கும்....ஏன்.....பாவு லெகுவா இருக்காது...ஊடு பண்ணு ல சிக்கிக்கும்.அதனால மழை விட்டு கொஞ்சம் கூதாப்பு குறைஞ்ச பெறகு தான் தறில இறங்குவாக.

இடுப்பு வரை ஒரு பள்ளம் தோண்டி நின்று கொண்டு கால்கள் உள்ளே இருப்பது காக்குழி தறியாகும்.

காலை வெளிச்சம் வந்து பொழுகிற சூரியன் வெளிச்சத்தை கொறைக்கிற வரை இடுப்பை தறி குழி திண்ணையில் சாய்த்துக் கொண்டு கால்கள் இரண்டையும் மாறி மாறி மிதித்துக்கொண்டு, ஒரு கையால் நூல் ஓடத்தை அடித்துக்கொண்டு, இன்னொரு கையால் நூல் பண்ணை பலமாக  இறுக்கி அழுத்திக் கொண்டு வேஷ்ட்டியை,  சேலையை எங்கள் நெசவாளப்பெருமக்கள் உருவாக்குவார்கள்.

அவர்கள்  வருஷத்தில் ஒரு 10 நாட்கள் தொழில் முடக்கம் செய்வதே ரொம்ப அபூர்வம்.

ஆனால் எனக்கு தெரிந்து.....மழைக்காலங்கள் வந்தால் வீட்டுக்குள்ளே  தறிக்குழிகளில் அது முங்குகிற அளவில் தண்ணீர்  ஊறி கால்களை உள்ளே வைக்க முடியாத அளவுக்கு நிரம்பி நிற்கும்....அது வடிய 10 நாள் 20 நாள்ன்னு.....ஆகும் .

அப்பசி அட மழை காலம் வந்தால்....பல வயசான தலைக்கட்டுகள் " கதை முடிஞ்சு போய்டும்".

அது குளிர் காலமாக கூட இருக்கும்.ரொம்ப வேதனைப்பட்டு ஆட்கள்  இறந்து போனது குறைச்சல் தாம்....

ஊனு,  தண்ணி கொறைஞ்சி அவங்க காலம்.... ஆடி  அடங்கி....  முடிவுக்கு வரும்.

ஆறு வாய்க்கால் முங்கி தண்ணி ஓடும்...

பெரியாறு தாமிரபரணி வெள்ளத்தைப் பார்க்க கூட்டம் கூட்டமாக ஆணும் பெண்ணும் போய் வருவாக.
இப்போ  வெள்ளம்  வருவதே கனவாய்ப் போச்சு....

வாழ்கிற இந்த தலைமுறை  மழைக்காலம் வந்தால்  வெறுக்கிறார்கள்....

பிள்ளைகள் மட்டுமே  பள்ளிக்கூடங்களுக்கு லீவு என்று அடிக்கடி வந்தால் சந்தோஷம் கொள்கிறார்கள்.

மழைக்காலங்கள் வந்தால் பைக்கில் போகமுடியாது........
தேங்குகிற போக்குவரத்து நெரிசல் .....சட்டை பேண்ட் நனைவதால்  மழை மீது ஒரு வெறுப்பை  கொண்டுள்ளார்கள்....அவங்க நினைக்கிற இடத்துக்கு ஒடனே போகமுடியல்லைங்கிரத தவிர வேற ஒன்னுமில்லை.

ஆகவே அடைமழை, கடும் மழை,   பேய்மழை என்று எழுதுகிறார்கள்.

மழை இல்லைன்னா.....குடிக்க, குளிக்க, சமைக்க ,விளைய வைக்க , தண்ணிக்கு எங்க போக?....ஆடு ,மாடு ,பறவைகள், மத்த வாயில்லா ஜந்துக்கள் எங்கே போக?

மழை என்ன ....புதுசா இப்ப மட்டுமா பேயுது.?பூமி உண்டான காலம் தொடங்கி  எம்புட்டோ  வருஷமா பெய்யுது.

மழை தண்ணி வாற போற கால்வாயை  மரிச்சு வழிய  செறத்தா.....என்ன ஆவும்?.பொறவு தேங்குது... தெவுங்குதுன்னு கூப்பாடு போட்டா என்ன ஆவும்?

வருஷம் 365 நாளில் ஒரு 20 நாள் மழை யை கூட தாங்கி மகிழ்ச்சி அடைய விவசாயிகளை தவிர யாரும் தயாரா இல்லை.அதுவும் காலம்  மாறி பொழிந்தால் அவனுக்கும்  பிடிக்கப்போவதில்லை.

மழையை  ரசிப்போம்.வரவேற்போம்.அதனால் தான் நாமும் மரம் செடி கொடிகளும் ஆடுமாடுகளும்....பறவைகளும் ஊரும் வாழ முடியும்.

கருத்துகள் இல்லை: