திங்கள், 26 ஜனவரி, 2015

தூக்கம் தழுவாத இரவுகள்.


திருநெல்வேலி மேலப்பாளையம். டாக்டர்...பிரேமச்சந்திரன்....எப்போதும் எல்லோரோடும் கலகலப்பாகப் பழகக் கூடியவர்....எங்கள் குடும்ப நண்ப ரும் கூட.


நான் அவரிடம் பலவிதமான சந்திப்புகளுக்காகச் செல்வதுண்டு....சில நேரங்களில், ஏழை எளிய மக்களின் மருத்துவ மற்றும் கல்வி உதவிகள் கேட்பதும் உண்டு...மனசு நிறைய உதவிகள் செய்வார்...

மத நல்லிணக்கம், இலக்கியம்,விளையாட்டு,ரோட்டரி,இசை அரங்குகள் ,தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவுகள் என்று டாக்டர் எப்போதும் பிசிதான்.....

ஒருநாள் .......அன்றைய தினத்தில் நான் சென்றது எனக்காக....
வழக்கமான நல விசாரிப்பிற்குப் பின்னர்...

“டாக்டர்.....ராத்திரி அல்லது அதிகாலை  வேளைகளில் திடும்.....திடும்..... என எனக்குத்  தூக்கம் கலைந்து போகுது....” என்று ஆரம்பித்தேன்.

“கரைக்ட்டா..... டைம் சொல்லுங்க....”

  சுமாரா 2-3 ….மணிக்கு...”

“ராத்திரிக்கு......நிறைய தண்ணி குடிப்பீங்களோ?......அதிகமா தண்ணி குடிச்சா முழிப்பு வந்து டாய்லெட் போக வச்சிடும்..அதான் கேட்டேன்.....”

“இல்லையே சார்..... எட்டு மணிக்குப்பிறகு நான் அதிகமா தண்ணி குடிப்பது இல்லையே......”

“அப்போ..... எதுவும் கவலையோடு தூங்கப்போவீங்களோ.?...”

“..கவலைகள் இல்லாமல் யார் சார் இருக்காங்க?..”

“அப்போ.... எதனால எப்படி முழிக்கீங்க?....காரணம் ஏதாவது தெரியுதா?..... “

“சார்......கொஞ்ச நாளா.....ரயில் சத்தம் கேட்டதும் முழிச்சிடுதேன்...எங்க வீட்டுப்பக்கத்தில், அது போற சத்தம் ரா வேளைகளில் கேட்குகும்...அப்ப எப்படித்தான் முழிப்பு வருதுன்னு தெரியல சார்.....”என்றேன்.

“அப்புறம்”...

 “முகமெல்லாம் வேர்க்குது....சார்.”

“தூக்கம் வருவது இல்லை....”

“அப்படியா.....நாளைக்கு வாங்க ....அதப் பத்தி உங்க கிட்ட நிறைய பேசனும்....”  என்று சொல்லி டாக்டர் அனுப்பி வைத்தார்....

மறுநாள் டாக்டரிடம் போனேன்...என்னை கடைசியா வரச்சொன்னார்...

நிறையக்கேட்டார்....

 " புதிய பறவை "  சினிமாப் படத்தில்  நடிகர்திலகம் சிவாஜிகணேசன் , அவரது காதலி ,   சரோஜாதேவி கிட்ட ரயில் தண்டவாளத்தைப் பார்த்ததும்....  பதட்டம் கொண்டு அதற்கு பின்னணிக் காரணம் சொல்வாரே ....அதுக்கு நிகரான ஒரு சம்பவத்தை டாக்டரிடம் சொன்னேன்....டாக்டர் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டார்....

அப்புறம் ”சொல்லுங்க...”என்றார்

"  அன்னைக்கு காலையில் வழக்கம் போல.... 7 மணியளவில் எங்க வீட்டு கல் திண்ணையில் தினசரி பேப்பர்கள் வந்துவிட்டது....., 
எங்க வாப்பாவோடு கூட இருந்து, அன்றைய தினசரி செய்தித்தாள்கள் படிக்கிற சொந்தக்காரர்கள் இரண்டு மூன்று பேர்கள் எப்போதும்... இருப்பார்கள்... 

என் தாயார் கொடுக்கும்  சாயவை குடித்துக் கொண்டே, முந்தினநாள்  ராத்திரி முதல், காலை வரை ஊரில் நடந்த பலகதைகளைச்  சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
பல வகை பஞ்சாயத்துகளும் எங்க வீட்டு வாசலுக்கு, திண்ணைகளுக்கு  வரும்......

ஒரு மணி நேரத்தில் எல்லாப்பிரச்சினைகளும் அந்த சபையில், “பைசல்” ஆகிடும்...

அந்த சமயத்தில்..... எங்க ஊரின், “பெரியாறு” தாமிரபரணியில் வருஷக்கணக்கில்..... ஒரே வேளையில் குளித்துவிட்டே மத்த சோலிகளை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்த , சேப்பிள.மம்மது மைதீன் படபடப்போடு அந்த சபையில் ஒன்றை சொல்லிக்கொண்டு இருந்தார்.... 

 வயதில் எங்க வாப்பாவுக்கு அவர் மூத்தவர்.....நல்ல குரல் வளம் கொண்டவர்....பாகவதர் பாடல்களைப்பாடுவதில் எங்க ஊரில் அவருக்கு தனிப்பெரும் பெயர் உண்டு....

அவர் எங்க வாப்பாவுக்கு ஒருவகையில் உறவுக்காரர்....அண்ணன் முறை...

நெசவுத்தொழிலில் தறிகளுக்கு நூல் போகும் முன்னே, அதை பாவாக ஆக்கிக் கொடுக்கும் வேலையை அவர் செய்து வந்தார். எம்.ஜி.ஆர்.நடித்து வெளிவந்த ‘படகோட்டி’ படம் வந்ததற்குப் பின்னர் பொதுவாக பாவோட்டும்  தொழில் செய்து வந்தவர்களை எங்கபக்கம், எங்க ஊர்க்காரர்கள்,  “பாவோடி” என்றே அழைக்க தொடங்கியிருந்தார்கள்....அந்தப்பெயரால் யாரும் அவரை  அழைத்தால் அவர் கோபம்  கொள்வது இல்லை.....மாறாக சிரித்துக் கொள்வார்...

கேலிகளும்,  கிண்டல்களும் அவர் கூடப் பொறந்தது..மாதிரி .மனுஷன் எப்போதும் கலகலப்பாகவே இருப்பார்...நிறைய வரலாறுகள் அவர் கிட்டயிருந்து என்னை  மாதிரி ஆட்களுக்குக் கிடைக்கும்.....

நான் அப்போதுதான் எங்கோ வெளியில் கிளம்ப மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து கொண்டு இருந்தேன்..படபடப்போடு அந்த திண்ணை சபையில் இருந்த மாமா சேப்பிள.லத்தீப்பிடம் கொஞ்சம் மெதுவா....அதே நேரம் படபடப்போடு ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார்....

அதைக்கேட்டதும்.....லத்தீப் மாமா அதிர்ச்சி கொண்டவராக..... “உனக்கு வேற வேலையே இல்லையா..?...உன் சோலியப்பார்த்துக் கிட்டு போறியா....நமக்கு எதுக்கு இந்தப் பொல்லாப்பு?.”..என்று என்று சத்தம் குறைவா வார மாதிரி சொல்லிக்கொண்டார்....

எங்க வீட்டுத் திண்ணையைத்தாண்டி, கொஞ்ச எட்டு வச்ச பின்னர்...... ,என்ன நினைத்தாரோ.....மோட்டார் சைக்கிளை இயக்கி கியர் போடும் நிமிடத்தில் , இருந்த என்னை  நோக்கி வந்து “எப்பா....கொஞ்சம் கேளுடே”என்றார்.

அவர் என் பக்கம் வந்து காது கிட்ட ஒரு பகீர் செய்தியை சொல்லிவிட்டு என் முகத்தைப்பார்த்தார்....“என்ன பெரியாப்பா...,,என்ன சொல்றிய?..... நீங்க நேர்ல  பார்த்தீயளா... “என்றேன்...

“ஆமாம்...நான் ரண்டு கண்ணாலும் பார்த்தேன்”... என்றார்...

நான் அதிர்ச்சி அடைய..... அவர் சொன்னது கேட்டு எங்க வாப்பாவும் கைகளில் இருந்த காலைப்பத்திரிக்கையை கீழே வைத்துவிட்டார்கள்.....

கிட்ட இருந்த லத்தீப் மாமாவிடம்....”முதல்ல உன்கிட்ட வந்து பாவோடி காக்கா...ஏதோ சொன்னார்...அப்புறம் அவன் கிட்ட ஏதோ சொல்லுறாரே?.....என்னப்பா நடக்குது” என்றார்.....

“வேறு ஒன்னுமில்லைப்பா.....அவர் குளிக்கப்போகும்போது .....நம்மூர்ப் பெண் ஒன்னு ....வேகமா ஓடிப்போய் ரயில்ல விழுந்து செத்துடுச்சாம்....அதப் பார்த்துப் பேதலிச்சுபோய் நம்ம கிட்ட வந்து சொல்றார்...”ரயில்வே போலீஸ்ல யார் இதப் போய்ச்சொல்ல?” என்றார்....

மேலப்பாளையம் ஊரில் மோசமான நிலை இருந்த கால கட்டம்...அது.நமக்கு எதுக்குப் பொல்லாப்பு?  என்று போலிஸ் ஸ்டேசன் பக்கம் போகவே பயம் ஆட்கொண்டு இருந்த நேரம்...

“ஆப்புட்டவன் தொலைஞ்ஞான்”..... கதைதான்....ஒரு சில ஜமாஅத் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் மட்டும் எது வந்தாலும் வரட்டும் சந்திப்போம் என்று போய் வந்தார்கள்..

“நம்மூர் பிள்ளைகள் இப்படியெல்லாம் செய்யாதுவோ.... பேசாமா.....போய் உங்க வேலயைப்பாருங்க......” இப்படி ஒரு தீர்ப்போட அந்த சபை அன்னைக்கு கலைந்தது....

மனசெல்லாம் கனத்து ...நான் செல்ல வேண்டிய வேலைகளுக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுப் போய்விட்டேன்...

மதியம் ...ஒரு மூணு மணி சுமாருக்கு வீட்டுக்கு சாப்பிட வந்தேன்.....சாப்பிட்டு முடிச்சு,கைகள் கழுவும் போது எங்க வீட்டின் பின் பகுதி மேகரையில்....ஆட்கள் நிறையபோவதைச்  சொல்லுகிற அளவில் நிறைய பேச்சுச் சத்தங்கள் கேட்டது....அதைப்பார்க்க கதவைத் திறந்தேன்.பத்து இருபது பேர்களாக ரயில் தண்டவாளம்  இருக்கிற மேற்கு திசை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.....

“நாமளும் போயிடனும்”..... என்று அந்தப்பகுதிக்குச்சென்றேன்.....என்னோடு என் உறவினர்கள் சிலரை கூட அழைத்துக் கொண்டேன்.

அய்யோ........பாவோடி பெரியாப்பா சொன்னது நெசம் தான்....அங்கே..... மூனு துண்டா....ஒரு பொண்ணு அலங்கோலமா....தண்டவாளத்தின் மேல்பக்கமும் கீழ் பக்கமும் கிடந்தாள்........அதைப்பார்த்து....நானும் கூடப்போனவங்களும் அதிர்ந்து  போய்விட்டோம்...

நான் போனதும்.....முதல் காரியமாக.....பிறந்த மேனியாகக் கிடந்த அந்தப்பெண் மீது அங்கே கிடந்த அவளது சேலையை எடுத்து எடுத்துப் போட்டேன்.....”

“..காலையில் இருந்து இவள் இப்படிகிடக்காளே.....யாராவது மூடக் கூடாதா?..”...என்று அங்கே நின்று வேடிக்கைப்பார்த்தவர்களிடம் கேட்டேன்... ஒருத்தரும் பதில் சொல்லக் காணோம்....

ஒரு மரத்தடியில் நான் செய்வதைப்  பார்த்துக் கொண்டு இருந்த ரயில்வே போலிஸ்காரர்....” சார்....சார்........ நீங்க யாரு?.... அங்க என்ன பண்ணுறீங்க?”.....என்று கேட்டார்.

....“ செத்துப் போனாலும் அந்தப்பெண் மானத்தைக் காபபாத்த நமக்கு கடமை இருக்குசார்....” என்றேன்.....அப்புறம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்...

அந்த போலிஸ்காரர் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்.....

“சார்...... காலையில் இந்தப்பெண் ரயில்ல அடிபட்டதா...கேள்விப்பட்டோம்...யாரோ? எவரோ தெரியல்லியே....நாங்க என்ன சார் செய்யனும்?.....”நான் கேட்டேன்.

“தம்பி....இந்த ரயில்வே ஸ்டேசன் எல்லை....திருவனந்தபுரம் கோட்டம் பகுதியைச் சேர்ந்தது....போஸ்ட்-மார்ட்டத்துக்கு போகனும்ன்னா....சாயந்திரம் வருகிற நாகர்கோவில் பாசஞ்சரில் தூக்கிப்போட்டு நாகர் கோவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவோம்....அங்கே வந்து பாடியை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்....”என்று அவரது வழக்கப்படியான பதிலைச்சொன்னார்...

“அது முடிஞ்சு பாடியைக் கொடுக்க ரண்டு நாள் ஆகிடுமே....எங்க ஊருக்கு கிழக்கே...7 கிலோ மீட்டரில் உள்ள ஹைக்கிரவுண்ட் பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகனும்ன்னா என்ன செய்யணும்?”. என்று அங்கே கூடி நின்ற ரயில்வே போலிஸ்காரர்களிடம்  கேட்டேன்..

:”அப்படீன்னா...அம்புலன்ஸ் கொண்டு வாங்க...அதில் வேண்டுமானால் பாடிய , ஹைக்கிரவுண்ட் கொண்டு போங்க  ”என்று சொன்னார்கள்....

இன்னைக்கு இருக்கிற அம்புலன்ஸ் வசதிகள் எதுவும் அப்போது  அந்த நேரத்தில் மேலப்பாளையத்தில் இல்லை....குற்றுயிரும் குலைஉயிருமாக...
  ஆம்புலன்சுகள் ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் மட்டுமே இருந்தன....அதிலும் ஓட லாயக்கற்றவைகளாக வரிசையாக காட்சிப்பொருளாக ஆம்புலன்சுகள் ஆஸ்பத்திரி வாசலில் நிற்கும்...காட்சிகளை எப்போதும் பார்க்கலாம்..

என்ன செய்ய?.... என்று யோசித்து விட்டு அன்றைய முஸ்லிம் லீக் முன்னோடித் தலைவராக எங்க ஊரில் இருந்த செ.கா.மு.யூசுப் அவர்களைப் பார்த்து, காலையில் இருந்து நடந்த கதைகளைச்சொன்னேன்...பின்னர் அவர் அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரி சென்று பார்த்த போது அம்புலன்ஸ் எதுவுமே கிடைக்கவில்லை....”வேறு என்ன பண்ணப்பா..?...”என்று செ.கா.மு.கேட்டார்...

“சரி.....பக்கத்தில் தானே நம்ம அநாதை நிலையம் உள்ளது அங்கே போய் அதன் தலைவர், ஜமால் முஹம்மது முதலாளியிடம் சொல்வோம்” என்று சொன்னேன்..

“நல்ல யோசனைதான் ....வாப்பா...” என்றார்.

காலையில் இருந்து நடந்த கதைகள் அனைத்தையும் ஜமால் முகம்மது முதலாளியிடம் சொன்னேன்....” நீங்க போய் ஜங்ஷன் ஷிபா ஆஸ்பத்திரி ஷாபி அவர்களிடம்  சொல்லுங்கள்.....நானும் போனில் சொல்லுகிறேன்”.....என்றார்...

அங்கிருந்தே நேராக...... ஷிபா ஆஸ்பத்திரி முதலாளி ஷாபி அவர்களிடம் சென்றேன்...

“பிரதர்....ஜமால் முதலாளி பேசினாங்க....எங்க அம்புலன்ஸ் தருவதில் ஒன்னும் கஷ்ட்டம்  இல்லை....வேறு  ஒன்னும் பிரச்சினை.....ஏதும் இதில் வந்து விடக்கூடாது....பார்த்துக்கோங்க....”என்று ஷாபி சொன்னார்...

“ஒன்றும் இல்லை...காக்கா கவலைப்படாதீர்கள்........அது தற்கொலைதான் ....காவல்துறையின் உரிய  அனுமதி பெற்றுத்  தான் அந்தப்பெண்ணின் உடலை உங்கள் அம்புலன்ஸ் மூலம் ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரி கொண்டு செல்லுகிறோம்”.... என்று நானும் செ.கா.மு.வும்.சொன்னோம்.

மிகச்சிரமப்பட்டு ஷிபா ஆஸ்பத்திரி அம்புலன்சை அந்தப்பெண் அடிபட்டுக்கிடந்த ரயில்வே ட்ராக் பக்கம் கொண்டு போய்விட்டோம்.... அம்புலன்சோடு மைலக்காதர் தெரு  தி.மு.க பிரமுகர் கி.மு.சாகுல் ஹமீதும் வந்தார்...இதையெல்லாம் இறந்து போன அந்தபெண்ணின்  உறவினர்கள் சிலர் அதை வேடிக்கைப்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.....கிட்ட வரவில்லை...

ரயில்வே  போலீசார்  விசாரணையின்  முடிவில்  தற்கொலைதான் அது என்று முடிவுக்கு வந்த பின்னர்...... அந்தப்பெண்ணின் உறவினர்களும் கொடுத்த வாக்குமூலமும் சரியாக ஒத்துப்போக அந்தப்பெண்ணின் உடலை எடுக்க அனுமதித்தார்கள்...

என்கூட வந்த எங்கள் உறவுக்கார இளைஞர்கள் அந்தப்பெண்ணின் கூறாய்ப்  போய்விட்ட உடலைத்  தைரியமாகத்தூக்கி எடுத்தார்கள்....நானும் அவளது உடலின் பாகம் ஒன்றைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்தேன்...அதுவே எனது தூக்கத்தை பல இரவுகளில் தொலைக்க வைத்தது....

டாக்டர் அதற்கே மனோதத்துவ ரீதியில் பதில் சொன்னார்...



”நீங்க எதற்கு மனதுள் அதிர்ச்சி கொண்டீர்கள்?....நல்ல காரியம் தானே செய்தீர்கள்......மனதை எப்போதும் சீராக வைத்துக் கொள்ளுங்கள் ..அதையே நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்..”.......என்றார்...

போர்க்களங்களில், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி புரியும் சேவைகளைப்பற்றி...விளக்கி, என் ..மனதிற்கு ஆறுதல் சொன்னார்....

அதோட சரி....அப்புறம் அதற்குப்பின்னர்....எங்கள் வீட்டிலிருந்து ஆயிரம் அடி தூரத்தில் உள்ள ரயில் தண்டவாளங்கள்....அதிலிருந்து........இரவு நேரங்களில் எழும் ரயில்களின்  சப்தங்கள்   என் தூக்கத்தைக் கலைக்க வில்லை....நான் நள்ளிரவு நேரங்களில் கூட அந்தப்பாதையில் தனிமையில் கடக்கிறேன்....
முன்பு தூக்கத்தைக் கலைத்து......வேறு ஒன்றும் மனதில் வந்து போகவில்லை....நான் தூக்கிய உடலின் பாகம்....அதன் தோற்றம் எடை.....இவற்றைப்பற்றியது....

நான் தூக்கி ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்தது  .......ரயிலில் விழுந்து தற்கொலை செய்து.... இறந்து போன ....அவளின் துண்டு பட்ட தலையைத் தான் ....

திங்கள், 12 ஜனவரி, 2015

அவன்.....


அவன்...

செய்யது அகமது கபீர்...எங்க அண்ணன்.....

எங்கள் குடும்பத்தில் எங்க பெரியவாப்பாவின் மகன்...என்னைவிட ஒரு எட்டு வயசு மூப்பு.....மென்மையும் ,எளிமையான வாழ்க்கை முறையும் கொண்டவன்.

எங்க குடும்பத்தில் சின்னஞ்சிறிய வயதில் நாங்கள்  கொண்ட பாசமும் பிரியமும் மகத்தானது....ஒரு போதும் பகைமை உணர்வு எதிலும் வந்ததில்லை...1977 வரை எங்கள் குடும்பத்தின் மூன்று பெருந்தலைகளின் பேரன்களாக  மொத்தம்  நாங்கள் 7 பேர்கள்தான்..

எங்கள் இளமைக் காலத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்தது...அதற்கு முந்தியெல்லாம் நூல் வியாபாரமும்  மற்றும் கைத்தறி தொழிலும்  இருந்து வந்தது

எங்களுக்கெல்லாம் மோட்டார் சைக்கிள், ரேடியோ, டேப் ரிக்கார்டர் பித்துப் பிடித்து இருந்த பருவ காலங்களில், அவனுக்கு மாடுகளும், ஆடுகளும், பயிர் பச்சைகளும் மட்டுமே பிடித்திருந்தது...

எம்.ஜி.ஆர்.,சிவாஜி படங்கள் மேல் நாங்கள் கொண்ட மோகம் அவனுக்கு இல்லை.....ஜெமினி கணேசன் படங்கள் மட்டுமே அவனுக்கு பிடிக்கும்.சிவாஜி எல்லாம் அவனுக்கு ஜெமினிக்குப் பிறகுதான்....

பைக்குகள் ஓட்ட வேண்டும் என்று ஒருபோதும் சொல்லியது இல்லை...கற்றுத்தாருங்கள் என்று கேட்டதும் இல்லை...

ஊர் உலகமெல்லாம் சுற்றவேண்டும் என்று ஆசையும் அவனுக்கு வந்ததில்லை...ஆனால் வயக்காடுகள், தோட்டம் போகவேண்டுமென்றால்.....ஓடோடி வந்து விடுவான்...

சைக்கிள் மட்டுமே அவனுக்கு பிடித்தமான வாகனம்...அதவிட அவனுக்கு எங்கள் வீட்டில் எங்களின் இளம்  பிராயத்தில் இருந்த மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் மீது மாபெரும் காதலுண்டு....

எங்களூரில் கூடும் சந்தைக்கு எங்களோடு அவன்  வந்தால் மற்ற பகுதிகளுக்குப் போகவே மாட்டான்...மாடுகள் பட்டியில் நின்று கொள்வான்... ஏதாவது ஒரு காளைகள் ஜோடி அவனுக்குப் பிடித்து விட்டதென்றால்.....அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பான்.... அவற்றின் கொம்பு ,திமில்,தோற்றம் ,பொலிவு,உயரம்,கால்களின் நேர்த்தி இவைகளைப் பற்றி சொல்லிக்கொண்டே இருப்பான்...

“இத வாங்குறியாப்பா?”

என்னிடம் கேட்டுப்பார்ப்பான்....” ட்ராக்டர் ..வந்தபிறகு மாடுகளுக்கு ஜோலிகள் இல்லாமல் போய்விட்டதை” சொல்லுவேன்...

“மாட்டு வண்டியாவது வாங்குப்பா” என்பான்....

“பழைய காலத்து மோரிஸ் மைனர் கார், மாருதி ஜிப்சி ,அம்பாஸடர் ,இன்னோவா வரை கார்கள் நமக்குத் தந்துள்ளார்கள். மாட்டு வண்டியை எவம்பா ஒட்டுவான்?”.... என்று வெறுப்போடு சொல்வோம்.

ஏதாவது ஒரு வருஷத்தைச்சொல்லி...... “அந்த வருஷத்தில்  நம்மூர் மாட்டுவண்டிப்போட்டியில், நம்ம வண்டி தான் ஜெயிச்சிது....அந்த மாடுகள் இந்த ஜோடிய மாதிரித்தாம் இருக்கும்.....அதெல்லாம் உனக்கென்ன தெரியப்போகுது”?..என்பான்..

“சரி....உனக்கு என்ன வேணும்? சொல்லு” என்று கேட்டால்....”ஒத்த மாடு போடுற மாதிரி தட்டு வண்டி வாங்கிக்கொடு” என்றான்.

ரொம்பத்தான் ஆசப்படுகிறான்...தட்டுவண்டி எங்காவது கிடைக்கிறதா?என்று அலைந்து திரிந்து தோண்டித்துருவி விலைக்கு கேட்டால்....அந்த விலைக்கு புது ஹோண்டா மோட்டார் பைக்கே வாங்கிடலாம்... என்று பதில் வந்தது......அப்புறம் மாட்டை   தினமும் தீவனம் கொடுத்து பாது காக்கனும்...

“சரி..... மாட்ட வாங்கி யாரு கட்டி மேய்க்க ? .....நமக்கு உண்டான பசு மாடுகளையே மேய்க்க,பால் கறக்க ஆள் கிடைக்க மாட்டேங்குது ....நீ என்ன செய்வே?”....என்று நான் கேட்டேன்.

“அப்போ ஒன்னு செய்...உம் மகன் வச்சிருக்கானே....அந்த மாதிரி ஒரு ஆக்டிவா....வாங்கிக் கொடு அதில தோட்டத்துக்குப் போய்.... வாரேன்” என்றான்..

ஒரு நாள் என் மகன் வண்டியையே அவன்கிட்ட கொடுத்து, “தோட்டத்துக்கு நீ போயிட்டு வாரியாப்பா?” என்று கேட்டேன். “இந்தா...இப்பவே போறேன்” என்று கிளம்பி விட்டான்...

 “இவம் எப்படித்தனியா ...ஆக்டிவாவில  போவான்”?....என்று பயந்து கிருஷ்ண சாமி அண்ணாச்சிய  அவன் கூட அனுப்பி வைத்தேன்....கிருஷ்ணசாமி சின்ன வயசில் இருந்தே எங்க வீட்டில் ஒரு ஆள்...என் பிள்ளைகளுக்கு எங்க அண்ணன் மாதிரி...எங்க வீட்டை,தோட்டத்தை தவிர அவருக்கு ஒன்னும் தெரியாது...

எங்க குடும்ப விஷயங்களை யார் கேட்டாலும் செவிடு மாதிரி இருப்பதில் அண்ணாச்சிக்கு நிகர் அவரேதான்....தெரிஞ்ச ஆளோ....புது ஆளோ யாராவது வந்து என்னுடைய செல் நம்பர் கேட்டால் கூட...ஏதாவது சொல்லி மழுப்பிவிடுவார்..மறந்தும் கூட என்னுடைய நம்பரை கொடுத்துவிட மாட்டார்...

அவனை வலத்துல கட்டினா....கிருஷ்ண சாமிய இடத்துல கட்டனும்...

என்னாச்சோ.?...ஏதாச்சோ ?....இருபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் பண்ணைக்கு போகும் முன்னரே....அவனோடு ஆக்டிவாவில் கூடப் போன அண்ணாச்சி ,வண்டி போன லட்ச்சனத்தை பார்த்து,மிரண்டு,பயந்துபோய்.....ஊரைத்தாண்டும் முன்பே,....வண்டியில் இருந்து குதிச்சிருக்கிறார்....

“நீ...ஒரு மனுஷனா?....கிஷ்ணனைப் போய் எங்கூட அனுப்பலாமா?.....”என்று எப்பவோ வந்த கோபம் அடங்கி..... ரொம்ப சப்தமும்....இல்லாமல் குறைவாகவும் இல்லாமல், என்கிட்டே அவன் கேட்டான்...

“ஏம்பா...அண்ணாச்சி கூட வந்தால் நல்லது தானே?......ன்னு கூட அனுப்பி வச்சேன்...அதுக்கு என்னப்பா”? என்று கேட்டேன்....

“நான் வண்டி ஹாரன் அடிக்கும் முன்னே....பின்னால இருந்துகிட்டு கிருஷ்ண சாமி ஓரம்.... ஓரம்”..ன்னு சத்தம் போட்டால் நான் வண்டி ஓட்ட முடியுமா?”...என்று கேட்டான்..

நல்ல கேள்விதான் .இதுக்கு அண்ணாச்சி ஒரு விதமா பதில் சொன்னார்...

“அண்ணாச்சி நீ எதுக்குப்பா இப்பிடி சப்தம் போட்டே”?..நான் கேட்டேன்.

“....நீ......ங்க ஒரு ஆளு....இவருக்கு வண்டி ஓட்டத்தெரியாதுங்குற கதையை....என்கிட்டே சொல்லவே இல்லையே....இவரு ஓட்டுன வண்டிய.... போற, வார ஆள் மேல எல்லாம் விடப்பார்த்தாரு....என்னவோ..... நல்ல காலம் யாருக்கும் அடிகிடி விழல்லை....இவரை நம்பி எவம் போவான்?....

“ஆமா...நீ மட்டும் ஒழுங்கா எம் பின்னால இருந்தியாக்கும்?....என் தோளைப் பிடிச்சு ஆட்டிக்கிட்டு...பின்னால கிடந்து சப்தம் போட்டுக்கிட்டு...ஏ..பைய...ஏ....பார்த்துன்னு கூப்பாடு போட்டுக்கிட்டு.வந்தே........ஒன்ன வச்சுக்கிட்டு எவம்ல....வண்டிய ஒழுங்கா ஓட்டமுடியும்?..” இப்படி ஒரு பதில் அவம்கிட்ட இருந்து வந்தது...

அந்த இரண்டு பேரும் பேசிய பேச்சைக் கேட்டு நான் சிரித்த சிரிப்பால்....அவனுக்கு வந்த கோபம்...நான் முன்பின் பார்த்து அறியாதது...

இவங்க ரண்டு பேரும் வண்டியில் போன கதையை என் தாயார் முன்னால நான் கேட்டதும்....”ரண்டு அப்பாவிகளை இப்படி தனியே...தோட்டத்திற்கு அனுப்பலாமா?”....என்று எனக்கு அவகிட்ட இருந்து கடும் கண்டனங்கள் வேறு வந்தது...

இப்படி அவனை நினைத்து நினைத்துப் பார்ப்பதற்கு நிறைய உள்ளது...

கொஞ்ச நாளாவே....என் கிட்ட அவம் வரும்போது...கொஞ்சம் சோர்வடைஞ்ச மாதிரியே வருவான்...'உனக்கென்ன சுகர் இருக்கா?....ஒரு மாதிரி முழிக்கியே..... என் கூட டாக்டர்கிட்ட வா...போலாம்" என்று கூப்பிடுவேன்...”எனக்கு ஒண்ணுமில்லை....உன்னை செக் பண்ணிக்கோ”... என்று வீம்பு பேசுவான்...

எங்க சின்ன அண்ணன் ஒரு முறை அவனை மைசூருக்கு அனுப்பும் போது “...இவம் முழிக்கிற முழிப்பு சரி இல்லை....ரயிலில் பார்த்து அனுப்புப்பா.....இவனுக்கு என்னவோ செய்யுதுப்பா...”...என்று பொதுவாகவே சொல்லி வைத்தேன்....

9.1.15 வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தேன்...முந்தைய நாளில் கீழக்கரை வள்ளல் பி.எஸ்.அப்துர் ரகுமான் அவர்கள் உடல் நல்லடக்கத்தில் கலந்து விட்டு  சனிக்கிழமை ஊர் திரும்ப ரயில் டிக்கெட் எடுத்துவிட்டு, சென்னை ஹோட்டல் மாசாவில் தங்கி இருந்தேன்...அந்த நாளில் நண்பர்களைச் சந்திக்கவும்..மறுநாள் நந்தனம் புத்தகக் கண்காட்சியைப் பார்த்துவிட்டு நூல்கள் வாங்கவும் திட்டமிட்டு இருந்தேன்...

மாலை 6 மணிக்குப்பின்னர் ....மனது என்னவோ போல இருந்தது....ஊருக்குப் புறப்படவேண்டுமென ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது...புறப்பட்டுவிடவேண்டுமென முடிவுடன், விடுதி அறையைக் காலி செய்துவிட்டு கோயம்பேடு வந்துசேர மணி இரவு 10.00  ஆகிவிட்டது...

வழக்கமாக திருநெல்வேலியிலிருந்து சென்னை வரவும், மீண்டும் ஊர் திரும்பவும்  ரயில் டிக்கட்டை முன்பே எடுத்துவைத்திருப்பேன்...எப்போவாவதுதான் பஸ் பயணம்.நடக்கும்...

இந்த முறை மதுரைக்கு  குடும்பப் பெரியவர் ஒருவரை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சந்திக்கக்  காரில் வரும் போது தான் கீழக்கரை வள்ளல் பி.எஸ்.அப்துர் ரகுமான் அவர்களின் இறப்புச்செய்தி கிடைத்தது....அதற்குப் பிறகு என்னோடு வருகை தந்தவர்களை மதுரையில் இருந்து ஊர் செல்ல ஏற்பாடுகள் செய்து விட்டு, காரை மதுரையில் உறவினர் வீட்டில் நிறுத்தி விட்டு சென்னை வந்தேன்..

கோயம்பேடு பஸ் நிலையம் வந்து மதுரை செல்லும் பஸ் பிடித்து ஏறி அமர்ந்து கொண்டேன்... அதில் அமர்ந்து  கோயம்பேடு பஸ் நிலையம் தான் தாண்டி இருப்பேன்...

சின்ன அண்ணன் புகாரி போனில் அழைத்தான்...

“எங்க இருக்கே?” அவன் கேட்டான்.

“இப்போதான்பா..... பஸ்சில்  புறப்பட்டு ஊருக்கு வந்து கொண்டு இருக்கிறேன்..”..என்றேன்.

“நம்ம கபீருக்கு....கொஞ்சம் மூச்சு தினறுகிறது....எந்த டாக்டரிடம் கூட்டிப்போக”?...என்று படபடப்புடன் கேட்டான்..

“நம்ம பிரேமச்சந்திரன் சாரிடம் கூட்டிக் கொண்டு முதலில் காட்டு.... அவர் என்ன சொல்லுறாரோ....அப்படிச்செய்”...என்று சொல்லிவிட்டு டாக்டரிடம் அண்ணன் வரும் தகவல் சொன்னேன்...

“வரட்டும்.... உடனே கவனிக்கிறேன்” என்று டாக்டர் சொன்னார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் ...புகாரியிடமிருந்து மீண்டும் போன்... “கபீர் மூச்சு திணறல் நிற்கவில்லை....தோள்பட்டை...முதுகு எல்லாம்...வலிக்கிறது என்கிறான்...குளிச்ச மாதிரி அவனுக்கு வேர்க்குதுப்பா...”...என்றான்.

“தோள் பட்டைகள், முதுகெல்லாம் வலித்து ...வியர்த்து மூச்சுத் தினறினால்...மாரடைப்பின் அறிகுறிப்பா...பெரிய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிபோப்பா .....” என்று படபடப்புடன்  சொல்லிமுடித்தேன்...

அதற்குள் பஸ் பெருங்களத்தூர் வந்துவிட்டது....

புகாரியிடமிருந்து மீண்டும் போன்....

“என்னப்பா....கபீர் காக்கா எப்படி இருக்கிறான்?....”.நான் கேட்டேன்.

கொஞ்ச நேரத்திற்கு பதில் வரவில்லை...புகாரி நாவெல்லாம் தழுதழுத்தது....

“அவன் போய் விட்டாம்பா”....

நான் பதிலே சொல்ல வார்த்தைகள் வரவில்லை...

காலமெல்லாம் வேடிக்கையாகவும்....அன்பாகவும் பேசிவந்த அவன் போய் விட்டானா?....எவ்வளவு நேரம் அழுதேன் என்பது எனக்குத்தெரியாது...

எனக்கு அடுத்து இருந்த பெரியவர்....”ஏன் தம்பி அழுறீங்க?....” என்று கேட்டார்...

“அண்ணன் போய்ட்டான் சார்..”...என்றேன்.

மறுபடியும் பல செல் போன் அழைப்புக்கள்... அபுஷஹ்மா மாமா ஊரில் இருந்து...கேட்டுக் கொண்டே இருந்தார்.

எல்லோரும்...“எப்போ அவனை எடுக்க?”....என்று கேட்டார்கள்...

நான் ஊருக்கு வந்து அவன் முகத்தைப் பார்க்கணும்...அப்புறம் எடுங்கள் என்றேன்....

எனக்காக எல்லோரும் காத்து இருந்தார்கள்...
ஊர் வந்து சேர்ந்தேன்...

கபீரும்..... அவன் முகத்தை என்னிடம் காட்ட சலனமில்லாமல் படுத்து இருந்தது போல இருந்தான்...

நான் புதிதாக அழுவதற்கு...என்னிடம் கண்ணீரும் இல்லை...இரவெல்லாம் அழுது களைத்து இருந்தேன்...

நானே நின்று, உறவினர்கள் சூழ அவனை குளிப்பாட்டினேன்.....மையித்துக்கான ஆடைகளை அணிவித்தேன்....வாசனைத்திரவியங்களைப் அந்த ஆடைகளில் தடவினேன்..கண் இமைகளுக்கு சுர்மா பூசினேன்..தலையில் தலைப்பா கட்டி துணிக்குள் சுற்றி பாயில் வைத்து சந்தூக்கில் தூக்கிச்சென்றேன்...திரும்பிப் பார்த்தேன் அவ்வளவு கூட்டம் பின் தொடர்ந்தது...

பள்ளிவாசலில் தொழுகை நடந்தது...இதோ பக்கத்தில் எங்கள் குடும்பத்துப் பெரியவர்களை அடக்கம் செய்கிற பகுதி... என் வாப்பாவை அடக்கம் செய்த இடத்துக்கு அருகில் அவனின் உறைவிடம் தோண்டப்பட்டு இருந்தது..என் தோள் அளவு தோண்டப் பட்ட குழியில் அவன் தலைப்பகுதி வைக்கப்படும் இடத்தில் நான் நின்று கொண்டு,அவன் உடலை வாங்கினேன்....

குனிந்து மெதுவாக அவன் உடலை வடக்கே தலை வைத்து, மேற்கு நோக்கி மக்காவின் திசை நோக்கி சரித்து வைத்தேன்...அவன் முகத்தைபார்த்தேன்...என்னோடு பக்கத்தில் படுக்கும் போது எப்படிப் முழிப்பானோ.....அப்படி முகம் காட்டினான்..

வழக்கமாக அவன் மெல்லிய சிரிப்புச்சிரிப்பான்....உடன் இருக்கும் நாங்களெல்லாம் பலமாகச்சிரிப்போம்...

அன்று.... அவன் முகம் புன்னகைக் காட்டியது.... அன்று அவனின் புன்னகை பூத்த முகத்தைப் பார்த்து நாங்கள் அழுதோம்இப்படி திடீர் என்று அவன் மூச்சு அடங்கிவிட்டதே என்று.......

மாறாத சிரிப்பை அவன் இறந்தும் மறக்கவில்லை...
ஒன்று நிச்சயம்........

அதே புன்னகையோடு..... ஒரு நாள்.....எங்க செட்டில் முன்னாடியே போய்விட்ட .....எங்க லெப்பை காக்காவோடு, எங்களைக் காண அவன்.. காத்திருப்பான்.