புதன், 5 ஜூன், 2019

பெருநா ராத்திரி

முப்பது நோன்பு வச்சு பெருநா பாக்கிற மனசின் குஷி....அது ஒரு தனி ரகம் தான். அதுக்கு வேற என்னத்த பகரமா பார்க்கமுடியும்?

நாற்பது வருஷத்துக்கு முந்தி....பாப்ளின் சட்டையும் ...மல்லு வேஷ்ட்டியும் பெரிய ஆட்களுக்கும்.....கலர் துப்பட்டாவும் மூட்டி தச்ச வேஷ்ட்டியும் பொம்பிளைகளுக்கும், ...டவுசர் சட்டை,பாவாடை தாவணி இதெல்லாம் இள வயசுப்பிள்ளைகளுக்கும்...கிப்ஸ் சங்கு மார்க்,கே.ஏ.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன், உஸ்மான் பிராண்ட் லுங்கிகள்,துபாயில் இருந்து வந்த மஞ்சள்....அரக்கு கலர் பனியன்கள்,பிரஸ் பட்டன் வச்சு தச்ச சட்டைகள்  இளவட்டங்களுக்கும்  போதுமானதாக இருந்தது.

இப்ப மாதிரி ரெடிமேட் சமாச்சாரங்கள் எதுவும் அப்போ கிடையாது.
டவுன் ஆர்.எம்.கே.வி...அதுக்குப்பக்கத்தில் நாவல்ட்டி கிளாத், திருநெல்வேலி ஜங்ஷனில்  த.மு.பில்டிங்கில் ஜீனத் செல்வா மகால்.அது மாடியில் அதுக்கு கீழே ஏ.பி.சி.துணிக்கடை அப்புறம் ராஜா காம்ப்ளக்சில் கல்பனா சங்கீதா ஜவுளிக்கடை என்று தான் திருனவேலி இருந்தது.

அங்கேயே அப்படி என்றால் மேலப்பாளையத்தை சொல்லணுமோ?
பசார் ஹக்கீம் ஜவுளிக்கடை, ஆர்.எம்.ஏ. அப்துல் சமத் கடை இந்த இரண்டும் ஆள் நிக்க இடம் இல்லாமல் பெரு நா ராவு வரை இருக்கும்.
அதுக்கு பிறகு சாச்சப்பா காஜா கடை,  காட்டுவா ஜவுளிக்கடை என்று விரிந்தது.
வகை வகையா,  கலர் கலரா தொப்பிகள் பஜாரில் குவிந்து கிடக்கும்.அரபு நாட்டு புண்ணியத்தில் இன்னைக்கு வெள்ளை சீனா தொப்பி போதும்ன்னு ஆகிப்போச்சு.இன்னும் பல பேருக்கு வேண்டாமேன்னு மாறிடுச்சு.


கருத்துகள் இல்லை: