புதன், 19 மார்ச், 2014

கடைப் பலகை.



கிராமப்புறங்களில் டீக்கடை பலகைகள் என்பவை முக்கியமான ஒரு பகுதியாகும்.  டீக்கடைகளுக்கு வந்தோமா டீய, கீய குடிச்சோமா போனோமான்னு இல்லாம ஊர்கதைகள் உலகத்து நடப்புகள் வரை பேசுவதற்கு ரொம்பத் தோதுவாக இருக்கும்.....

எவம் ஊருக்கு புதுசா,  அசலூரிலிருந்து வந்துருக்கான்?.....யார்வீட்டுல கடன், கன்னிகள் இருக்கு?.....சொத்துக்கள், வண்டி மாடுகள்,,சைக்கிள் ,மோட்டார் வண்டி, மண்டு மனைகள், புதுசா வாங்கிறவன்,  விக்கிறவன், "போனவன்-வந்தவன்"  ‘கதைகள்’  அங்கே தான் அலசப்படும்.

அது போக ‘ஒசுக்கு’ காலையில் வருகிற பத்திரிகைகள் பார்க்க வருகிற கூட்டங்களும் உண்டு.

இப்போ கலைஞர் கொடுத்த டி.வி.புண்ணியத்தில், ஜெயா டி.வி.யோ.கேப்டன் டிவியோ பார்த்துக் கிட்டு, ஊர் வம்பு பேசுற ஆட்கள் நிறைய இருப்பார்கள்..எப்போ முழிச்சாங் களோ? .எப்போ தின்னாங்களோ?.....என்று கேக்கிற அளவு எப்போதும் டீக் கடைகளிலேயே சதா....குடிஇருப்பவர்களும் உண்டு...

ஆனா...மேலப்பாளையத்தில்....டீக்கடை பெஞ்சுகள் உண்டு.அதில் கொஞ்ச நேரத்துக்கு மேல யாரும் நிரந்தரமா இருந்ததை  யாரும் பார்த்ததில்லை..

டீக்கடை வாசலில் டீயக் குடிச்சிட்டு, பக்கத்தில் இருக்கும் கடைப்பலகைகளில் காலை,  ஒரு அறு ,ஏழில் இருந்து,  எட்டுவரை கதை பேசும் சங்காத்திகள் நிறைய பேரை  பார்க்க முடியும்....என்னவோ அந்தக்கூட்டத்தில் பெரும்பாலும் ‘ஐம்பதை’க் கடந்தவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்..

இதுக்கு நேர மாறா, ராத்திரி பத்து மணிக்கு மேல் 'அங்க இங்க' நின்னு பேசுகிற சங்காத்திகளும் உண்டு.
புதுசா கல்யாணமானவன், அரபு நாட்டில் இருந்து வந்தவன், பொண்ணு பேசியதை சொல்பவன், மகனோ மகளோ, பிறந்ததை சொல்பவன்...அப்படீன்னு நிறைய நண்பர்கள் ராத்திரி வேளைகளில், பசார் முகைதீன் ஸ்டோர்அல்லது  சீனி லாலா  அல்வாயைத் தின்னு முடிச்சிட்டு,  அங்கனயே நின்னு,  அல்லது அந்தப்பக்கம் உள்ள கடைப்பலகைகளில் உக்கார்ந்து தம் சொந்தக் கதை சோகக்கதை பேசுகிற நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

முன்பெல்லாம் அநேகமாக எல்லாக் கடைகளிலும்,


கடைப் பலகைகள் உண்டு.கடையின் அகலத்துக்கு ஒன்றடியில் இருந்து மூனடி வரை கட்டில்களைப் போல நிரந்தரமாகப் போட்டிருப்பார்கள்.

என்னைக்காவது “ஆக்கிரமிப்ப தூக்கப்போறோம்’,.... அப்படின்னு அதிகாரிகள் படையெடுத்து வரும்போது தான் அந்தக் கடைப் பலகைகளை எங்கயாவது, ஒரு ரண்டு நாளைக்கு நவட்டி வைப்பார்கள்.

இப்பவெல்லாம் “எவம் வரப்போரான்னு?” துணிந்து கடைப்பலகைகளை தூக்கிட்டு சிமிண்ட் போட்டு செங்க கட்டே கட்டிட்டாங்க.

பல்வேறு உள்ளாட்சித் தேர்தல் ,மற்றும் சட்ட மன்ற, நாடாளுமன்றத்  தேர்தல் முடிவுகளை, கடைப்பலகைகளே முன்னறிவவிப்புச்  செய்த வரலாறுகள் உண்டு.

கடைப்பலகைகளில் முந்திய நாள் இரவில், பசார் திடலிலோ, ஜின்னா “மைதானத்திலோ” கொட்டிக் குளம் ,அல்லது கொடி மேடை திடலிலோ யாராவது ஒரு பேச்சாளர் பேசியது பற்றி, கார சார விவாதங்கள் நடக்கும்..

ஒவ்வொரு கட்சிக்கும் எங்க சின்ன வயசில், நட்சத்திர பேச்சாளர்கள் இருந்தார்கள். முஸ்லிம் லீக் கட்சியின் அப்துஸ் சமத், ஏ.எம்.யூசுப், காங்கிரஸ் கட்சியின் நெல்லைக் கண்ணன்,சின்ன அண்ணாமலை,பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க.வின்,ஆ.திராவிட மணி,.வெற்றி கொண்டான், நன்னிலம் நடராஜன், தீப்பொறி ஆறுமுகம், (அவர் போகாத கட்சி எதுவுமில்லை) நெல்லை புகாரி, ரகுமான் கான், ஆடலரசு,தஞ்சை கூத்தரசன், அண்ணா தி.மு.க.வின் நெல்லை பாலாஜி, கே.ஆர்.பி.மணி மொழியன், தொடர்ந்து  மூணு மணி நேரம் பேசி கொண்டே இருந்த  ஜனதாக் கட்சியின் நெல்லை ஜெப மணி, கம்யுனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா, தா.பாண்டியன் முதலானோருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

அதுபோல ஊரில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசிய ‘சின்னாமது’ அப்துல் காதர், செ.கா.மு.யூசுப், கி..மீ.காஜா,மணியாச்சி காஜா, பழக்கடை அப்துல்காதர், நாறங்கி அபுல் அசன்,எம்.ஒ.எ.சுக்கூர், இந்தியக்கம்யுனிஸ்ட் அப்துல் ஜப்பார், மார்க்சிஸ்ட் கிருஷ்ணன், பட்டக் கண்ணு ஆசாரி, முத்துக் கண்ணு செட்டியார் போன்றவர்கள்  நிறைய ரசிகர்களைக் கொண்டு இருந்தார்கள்.



லீக் கூட்டத்தில் மணியாச்சிகாஜா "எக்கு தப்பா" பேசினால், அவ்ளோதான்.......ஒரு வாரத்தில் சின்னாமது அப்துல் காதர் கண்டிப்பா காங்கிரஸ் கூட்டத்தில் பதில் சொல்லுவார்.

இரண்டு பேரும் என்ன பேசப் போகிறார்கள்?..... என்பதைக் கேட்க, நூற்றுக் கணக்கில் கூட்டங்களுக்கு திரண்டு வந்தவர்களும் இருந்தார்கள்.

சில வேளைகளில் மணியாச்சியை பிடிக்காத சிலர், சின்னாமது அத்துல் காதரிடம் போய், மணியாச்சி அதப் பேசினார் ,இதப் பேசினார் என்று கொளுத்திப் போடுவதும், அதே போன்றே மணியாச்சியிடம் சென்று சின்னாமது உங்க கிழி கிழின்னு கிழிச்சுத் தள்ளி விட்டார்ன்னு சொல்லி,  “இழுத்து’ விடுவதும்  உண்டு.

அப்புறம் என்ன கச்சேரி களை கட்டிவிடும். இப்படியெல்லாம் “நல்ல வேலைகள்” பல செய்ததில், கடைப்பலகைகள் கோஷ்ட்டிகளுக்கு தனியிடம் உண்டு"......

அவர்கள் பேசிய பேச்சுக்களைப் பற்றி, கடைப் பலகைகளில் காரசார விவாதங்கள் நடக்கும். சில வேளைகளில் மேடைகளில் பேசிய பேச்சுக்கள் ,அடிதடி வரைக் கொண்டு போய் உள்ளது....

1992 க்குப் பிறகு கடைப் பலகைகளில் உட்கார்ந்து பேசவே நடுக்கம் வந்து, யாருமே போகாத நிலைமை வந்துவிட்டது..

“பாழாப்போன டி.வி.வந்துலப்பா மனுஷங்களை, வீட்ட விட்டு வெளியே போக விட மாட்டேங்குது”...இப்படியும் சிலர் அங்கு வாரத மனுஷாட்களைப் பற்றி பேசுவதை நானே கேட்டேன்.

3 கருத்துகள்:

ஹுஸைனம்மா சொன்னது…

கடைப் பலகைகள் போல, தெருக்களில் வீட்டுத் திண்ணைகளும் பெண்களால் நிரம்பப் பெற்றிருக்கும். அதுவும் இப்போது டிவியால் காலியாக இருக்கீறது. (திண்ணைகளே இருப்பதில்லை... )

இருப்பினும் கெட்டதிலும் நன்மையாக, டிவியால் புறம் பேசுதல் பெருமளவு குறைந்துள்ளது என்று எடுத்துக் கொள்ளலாமோ? :-)

shamsuyousuff சொன்னது…

சங்காத்தி , நவட்டி போன்ற சொற்கள் மறைந்தேவிட்டது ... அன்று எல்லோருக்கும் எல்லா குடும்பங்களையும் தெரியும் பிள்ளைகளையும் தெரியும் அதுபோல பேசவந்த பேச்சாளர்களையும் தெரியும் இன்று தலைவர்களை தவிர யாருக்கும் யாரையும் தெரியாது ஒரு நாள் முதல்வர் போல ஒருநாள் அமைச்சர்கள் வருவதும் போவதும், எப்படி தெரியும் இதோ இவர்களை இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்தும் நினைவில் நிற்கிறார்கள் ட்சத்திர பேச்சாளர்கள் இருந்தார்கள். முஸ்லிம் லீக் கட்சியின் அப்துஸ் சமத், ஏ.எம்.யூசுப், காங்கிரஸ் கட்சியின் நெல்லைக் கண்ணன்,சின்ன அண்ணாமலை,பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க.வின்,ஆ.திராவிட மணி,.வெற்றி கொண்டான், நன்னிலம் நடராஜன், தீப்பொறி ஆறுமுகம், (அவர் போகாத கட்சி எதுவுமில்லை) நெல்லை புகாரி, ரகுமான் கான், ஆடலரசு,தஞ்சை கூத்தரசன், அண்ணா தி.மு.க.வின் நெல்லை பாலாஜி, கே.ஆர்.பி.மணி மொழியன், தொடர்ந்து மூணு மணி நேரம் பேசி கொண்டே இருந்த ஜனதாக் கட்சியின் நெல்லை ஜெப மணி, கம்யுனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா, தா.பாண்டியன் முதலானோருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

Unknown சொன்னது…

Nalla thagavalgal sir