வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

” டே...மீரா “.


அருந்தலைவர் முன்னாள் வெளிவிகாரத்துறை , ரயில்வே துறை அமைச்சர் E.அகமது அவர்கள்
My Dear Young Friend….What is your name….?
இது தான் அவர் என்னிடம் பேசி ......நான் அவரிடம் அறிமுகமானது.
1983 ஜூன் மாதம் 4,5 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டை ஒட்டி , ஒரு சமூக நல்லிணக்க ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மேலரத வீதி காந்தி சதுக்கத்தில் அந்த ஊர்வலத்தை ....சிவந்த நிறமும் அழகும் நிறைந்த.... இளைஞர் வயதைக்கடந்து முதிர் இளைஞர் வயதை தொட்ட ஒருவர் , துவக்கம் செய்ய , உரையாற்றும் மேடையில் நின்று கொண்டு இருந்தார்.
அவர் தலையில் , தமிழக இஸ்லாமியர்கள் வழக்கமாகப் போடும் தொப்பியைப் போலல்லாமல் எம்.ஜி.ஆர்.போட்டு அவருக்கு அழகு சேர்த்த புஷ் குல்லாவைப் போல் தொப்பி இருந்தது..
சரளமான ஆங்கிலத்தில் அந்தப்பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினார்...அவரது உரையை அன்றைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் ,மிகச்சிறந்த ஆங்கிலப்புலமை பெற்ற அப்துல் லத்தீப் சாகிப் தமிழாக்கம் செய்து , மொழி பெயர்த்துக் கொண்டு இருந்தார்.
லத்தீப் சாகிப் பக்கத்தில் நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் பிரபலங்களான முன்னாள் எம்.எல்.ஏ. தென்காசி மேடை முதலாளி மகன் சாகுல் ஹமீது, அவரது சகோதரர் முன்னாள் எம்.பி. ஏ.கே.ரிபாஈ , முன்னாள் எம்.எல்.ஏ,க்கள் கோதர்முகைதீன் ,சம்சுல் ஆலம் உள்ளிட்டோர் நின்று கொண்டு இருந்தார்கள்.
இன்னொரு பக்கத்தில் அன்றைய இளைஞர் களான காயல் மகபூப், கடையநல்லூர் கமருதீன் , மேலப்பாளையம் நிஜாமுதீன் ஆலிம் ,தீன் சுடர் சம்சு ஆகியவர்களோடு, மிக இளைய வயதினனான நானும் நின்று கொண்டு இருந்தேன்.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு...பக்கத்தில் நின்ற காயல் மகபூபிடம் ....” யாருண்ணா....இவர்” என்று கேட்டேன்.
“ டே...அவர் அகமது சாகிபுப்பா...கேரள அமைச்சர் ...அருமையா பேசுவார்....வக்கீல் வேற.” என்றார்.
எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்ட அந்த அழகான தலைவர் “My Dear young Friend….What is your name…. என்று ஆங்கிலத்திலும் ....எடோ...பேர் என்னோ ?..என்று மலையாளத்தில் கேட்டார்....நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன்...பேரைச்சொன்னேன்...அது எந்தா மீரான்....மீனிங் என்னோ?....” ஞான் அறியில்லா..”.என்றேன்.
மலையாள பட வசனங்கள் தந்த தைரியத்தில் ..குறைந்த மலையாளத்தில் பேசினேன்....பக்கத்தில் நின்ற சாகுல் ஹமீது எம்.எல்.ஏ....இதனைப்பார்த்து விட்டு என்னை அவரிடம் என்னுடைய குடும்பத்தைச்சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். அப்புறமா என் முதுகில்.... செல்லமாக ஒரு தட்டு தட்டினார்....
அதிலிருந்து என்னை எங்கே பார்த்தாலும்...” டே...மீரா “....என்று மட்டுமே அழைப்பார்....எப்படித்தான் என்னை இவ்வளவு தூரம் நினைவில் வைத்துள்ளார் என்று ஆச்சரியப்பட வைக்கும்.
என்னை வேறு யாரும் அவ்வாறு அழைத்ததே இல்லை. முகம்மது....... மீரான்..........மீரா முகைதீன் என்று தான் மற்றவர்கள் அழைப்பார்கள்..மிக நெருக்கமானவர்கள் மட்டும் எல்.கேஸ் என்று அழைப்பார்கள்.
அன்று தொடங்கிய பாசம் தான்...பல்வேறு மாநாடுகள்...பொதுக்கூட்டங்கள்....கல்லூரி பட்டமளிப்புக்கள்....புது டெல்லி, கேரள பயணங்களின் போது ....சந்திப்பேன்...மிக மகிழ்வாக என்னிடம் நலம் விசாரித்துக்கொள்ளுவார்.
1993 ஆம் வருடத்தை ஒட்டி முஸ்லிம் லீக்கின் அன்றைய தமிழகத்தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் சமத் சாகிப் அவர்களோடு கேரளாவின் வட மாவட்டங்களுக்கு , ஒரு வார கால பயணமாக உடன் சென்ற என்னோடு....மிக நெருக்கமாகிவிட்டார்....” ஏ டோ..மீரா...... கெட் ரெடி சமத் சாப் “ ...என்று சொல்லிக்கொள்ளுவார் .
அந்தப் பயணத்தில் மங்களூர் ஓட்டல் ஒன்றில் லிப்ட் உடைந்து....நாங்கள் கீழே தரையில் மாட்டிக்கொண்டு....வெளியே வரமுடியாமல் தவித்த சம்பவங்கள் எல்லாம் தொடர்ந்து என்னைப்பார்க்கும் போதெல்லாம் ...சொல்லிக்காட்டுவார்.....
கிண்டல் செய்வார்.
நான் பாளையங்கோட்டை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது , இன்றைய காலம் வரை என்னைப்பற்றி அறிவார்.
அவரைப்பற்றிச் சொல்ல நிறைய உள்ளது.
2006 ஆம் ஆண்டில், அகமது அவர்கள் ரயில்வே துறை இணை அமைச்சராயிருந்தார்... காயல் பட்டினம் ரயில் நிலையத்தைப் பார்வையிட , தற்போதைய கடையநல்லூர் எம்.எல்.ஏ.வும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , மாநிலப் பொதுதச் செயலாளருமாகிய முகம்மது அபூபக்கர் ஏற்பாடுகள் செய்து வருகின்றார் என்பதனை அறிந்து ,திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ரயில் நிலையத்தின் கதியினையும் அவரிடம் காட்ட நினைத்து....அவரை அழைத்தோம்....எப்படியும் வந்து விடுவேன் என்று சொன்னதோடு , இருட்டையும் பொருட்படுத்தாது மேலப்பாளையம் ஊருக்கு வருகை தந்து , நூருல் ஆரிபீன் அரங்கில் , நான் உட்பட பல்வேறு இயக்கங்கள் கொடுத்த மனுக்களைப்பெற்றுகொண்டு உரையாற்றினார்.
எங்கள் ஊரில் திருநெல்வேலி- திருவனந்தபுரம் வழித்தடம் போட்டு 25 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் ஒன்றுமே இல்லை என்று.... நான் கோரிக்கைவைத்து பேசியதை எடுத்துக்கொண்டு....இவ்வளவு காலம் அந்த ரயில் வே நிலையத்திற்கு எவ்விதமான வளர்ச்சியும் செய்யாத , முன்னாள் , இந்நாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களை , நீயும் உங்க ஊரும் என்னசெய்ய முடிந்தது....என்று கேட்டு விட்டு அவர்களை ஒரு பிடி பிடித்தார்...
அதோடு நிற்காமல் , அந்தப்பகுதி மாமன்ற உறுப்பினராக இருந்த என்னுடைய மனைவி மற்றும் பல்வேறு அமைப்புக்கள் கொடுத்த மனுக்கள் யாவற்றுக்கும் ஆவண செய்வதாக பதில் கடிதமும் எழுதினார்.
அதன் அடிப்படையில் மேலப்பாளையம் கிராசிங் ஸ்டேசன் என்கிற தகுதியைப் பெற்றதோடு , அது வரை அமையப்பெறாத நடைமேடை, கழிப்பறை , தண்ணீர் வசதி இவையாவும் செய்ய ரூபாய் 2 கோடி கிடைக்க பணிகள் செய்தார்....
அடிப்படை பணிகள் நடைபெற்றன...தற்போது ஏனோ பணிகள் தொடராமல் கால தாமதமாகின்றது .
இந்திய நாட்டிலிருந்து சவூதி அரபியாவிற்கு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுகிற ஹாஜிகள் எண்ணிக்கை வரம்புகள் , இவர் காலத்தில் தான் இரட்டிப்பாகியது.
இந்தியாவுக்கும் , பாலஸ்தீனத்திற்கும் இணைப்புப் பாலமாக இருந்த யாசர் அராபாத்தோடு மிக நெருக்கமான நட்பினைபெற்று இருந்தார்.
அகமது அவர்களின் ராஜ தந்திர நடவடிக்கைகள் மூலம் சிரியா நாட்டில் போராளிகளிடம் சிக்கித் தவித்த இந்தியத்தொழிலாளர்கள் மீட்கப்பட்டார்கள்.
பல்வேறு அரபு நாடுகளில் பணி செய்கின்ற பல லட்சம் பேர்களுடைய வேலைவாய்ப்புக்கள் பறி போய் விடாமல் பாது காக்க பல்வேறு பாது காப்புச்சட்டங்கள் வர உழைத்தார்.
பல்வேறு அரபு நாடுகளின் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அழுது கிடந்த ஆயிரக்கணக்கான , சிறு சட்ட மீறல்கள் செய்தவர்களை , தாய் நாட்டிற்கு வரச்செய்தார்.
இன்னும் அவரைப்பற்றிச் சொல்ல நிறைய உள்ளது.அவரது மறைவு நாட்டிற்கு , மத நல்லிணக்கம் பேணுகின்ற நட்புகளுக்கு பேரிழப்பாகும்.
அவரைப்பற்றிய குறிப்பு.:
1938ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாளன்று E.அகமது அவர்கள் பிறந்தார்.
தனது இளங்கலை பட்டப்படிப்பை கேரள மாநிலம் தெள்ளிச்சேரியிலுள்ள அரசு ப்ரென்னென் கல்லூரியிலும், பின்னர் சட்டப்படிப்பை திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியிலும் முடித்துப் பட்டம் பெற்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக குலாம் மஹ்மூத் பனாத்வாலா இருந்தபோது, இவர் தேசிய பொதுச் செயலாளராகவும், அவரது மறைவுக்குப் பின் அதன் தேசிய தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
1967, 1977, 1980, 1987 ஆகிய பருவங்களில் நான்கு முறை கேரள சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள மாநிலத்தின் தொழிற்சாலைகள் துறை அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
1971 முதல் 1977 வரை, கேரள மாநிலத்தின் Rural Development Boardஇன் நிறுவனத் தலைவராகவும்,
1979 முதல் 1980 வரை, கேரள மாநிலத்தின் சிறுதொழில் வளர்ச்சித் துறை செயல் தலைவராகவும்,
1981 முதல் 1983 வரை - கேரள மாநிலம் கண்ணூர் நகர்மன்றத் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
1991, 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய பருவங்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004-2014 பருவத்திலான இந்திய நாடாளுமன்றத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி அமைத்திருந்த நிலையில், கேரளாவின் மலப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அவர், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில், தொடர்வண்டித் துறை (ரயில்வே) இணையமைச்சராகவும், பின்னர் வெளியுறவுத் துறை இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
2004-2009 பருவத்தில் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராகவும், 2009 ஏப்ரல் முதல் 2011 ஜனவரி வரை இந்திய ரயில்வேயின் இணையமைச்சராகவும், மீண்டும் வெளியுறவுத் துறை இணையமைச்சராக 2011 ஜனவரி 24ஆம் நாளன்றும் பொறுப்பேற்றிருந்தார். இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சராக ஜூலை 2011 முதல் அக்டோபர் 2012 வரை பொறுப்பு வகித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் அங்கம் வகித்த காலங்களில், வெளியுறவுத் துறை, ரயில்வே, விமானப் போக்குவரத்து & சுற்றுலா, அறிவியல் & தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் & காடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான சிறப்புக் குழுக்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்தியாவின் Government Assurance குழுவின் தலைவராகவும், இந்தியா - கத்தர் நாடுகளுக்கிடையிலான High Level Monitoring Mechanism (HLMM)இன் துணைத் தலைவராக நவம்பர் 2011இலும் இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில், இந்திய அரசின் பிரதிநிதியாக 1991 முதல் 2014 வரை 10 முறை பங்கேற்றுள்ளார். GCC நாடுகளில் இந்தியப் பிரதிநிதியாக - முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்டிருந்தார்.
பலமுறை புனித ஹஜ் செய்துள்ள இவர், இந்திய அரசின் ஹஜ் நல்லிணக்கக் குழு உறுப்பினராக 5 முறை சென்றுள்ளார்.
ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் 4 நூல்களை அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வல்ல அல்லாஹ் அவரின் பிழை பொறுத்து மேலான சுவன பதி அருள்வானாகவும்.







கருத்துகள் இல்லை: