திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் புகைப்பட நிபுணர், கவிஞர், பாடலாசிரியர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் அன்பு அண்ணன் எம் அப்துல் ரகுமான் என்கிற வீரை ரஹ்மான் அவர்களுடன்...
இசை முரசு நாகூர் அனிபா அவர்களுக்கு காலத்தால் அழியாத பாடல்கள் பல்வேறு கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்..
அவர்களில் ஒருவர் திருநெல்வேலி வீரை எம் . அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆவார்கள்.
கைகளை ஏந்தி விட்டேன்..
கண்ணீரை சிந்தி விட்டேன்... கல்புக்குள் உன்னை நினைத்து இறைவா...
உன் கருணைக்கு ஏங்குகின்றேன் தலைவா...
இறைவா...
வரம் தருவாய்...
நலம் பெறவே அருள் புரிவாய்...
சரியா...
இது முறையா...
என்னை ஏங்க வைத்து நீ இருப்பது.
சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே...
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே...
ஏந்தல் ரசூலுல்லாஹ் சொன்ன சொல்லை...
கேட்டால் இன்பத்துக்கெல்லை இல்லை...
நினைத்தாலே அருட் கதவு திறந்து விடும்...
உன்னை துதித்தாலே அருள் மழை பொழிந்து விடும்...
வானோங்கும் மார்க்கம்...
வளமான மார்க்கம்...
தீனோரின் நெறி அல்லவா...
இந்த வரிசையில் மிகவும் சிறப்புக்குரிய இன்னொரு பாடலாகிய
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்....
அத்தனையும் சொர்க்கத்தின் சங்கை மிகு முத்திரைகள்...
தீனோரே கேளுங்கள்
திரு நபிவழி வாருங்கள்.
என்ற பாடல் மிகவும் புகழ்வாய்ந்த ஒன்றாகும்.
இதற்குப் பின்னால் ஒரு செய்தியும் உண்டு.
1990 காலகட்டங்களில் வருடத்தில் பாதி நாட்கள் சென்னையில் இருந்து எங்கள் குடும்பச் சொத்துக்கள் தொடர்பாக ட்ரிபுயூனல்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் ,அதனையும் தாண்டி உச்சநீதி மன்றம் வரையிலும் வழக்குகள் நடத்திக் கொண்டிருந்தேன்.
அந்தக் காலகட்டங்களில் இசை முரசு நாகூர் அனிபா அவர்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள , கென்னட் தெரு, லட்சுமி மோகன் லாட்ஜில் தங்கி இருப்பார்கள். அதுவும் ஒரு வாரம் பத்து நாட்கள் என்று அவர்கள் அங்கே இருப்பார்கள்.
நான் சென்னையில் பணிகள் முடித்து ஓய்வாக இருக்கும் போது அங்கே சென்று விடுவேன்.
பக்கத்தில் எங்காவது இசை நிகழ்ச்சிகள் நடத்த இருந்தால் அங்கும் என்னை அழைத்துக் கொண்டு செல்வார்கள்.
சில நேரங்களில் நான் தங்கி இருக்கும் ரீகல் ஓட்டல் அறைக் கே இசை முரசு அவர்கள் வருகை தந்து விடுவார்கள்.
இரவு 8 மணிக்குப் பின்னர் சென்னை கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் சென்று காற்று வாங்குவது அவர்களின் வழக்கமாக இருந்தது.
அவரின் புகழ்வாய்ந்த பென்ஸ் காரில் கடற்கரையில் மணலில் சென்று அமர்வதற்கு வசதியாக போர்வைகள் விரிப்புகள் வைக்கப்பட்டு இருக்கும்.
அத்தகைய கடற்கரை இரவுகளில் சமூக ஊழியரும், முஸ்லிம் குரல் மாத இதழ் ஆசிரியருமான கனிஜிஸ்தி அவர்களும் உடன் வருவார்கள்.
கனி சிஸ்தி அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்கள்.
என்னையும் என் குடும்பத்தினரையும் மிக நன்றாக அறிவார்கள்.
கல்லூரிக் காலங்களில் நான் மேடைகளில் பேசுவதையும், எழுதுவதையும் அவர்கள் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டிருப்பார்கள்.
இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களுக்கும் இவையெல்லாம் தெரியும்.
ஒருமுறை கனி ஜிஸ்தி அவர்கள் ஏந் தம்பி... நீங்க அண்ணன் பாடுகிற மாதிரி....ஏதாவது பாடல் எழுதக் கூடாதா? என்று என்னிடம் கேட்டார்கள்....
பக்கத்திலிருந்து இசை முரசு அவர்கள் ....இவர் எழுதித் தந்தால்
நான் என்ன பாடவா மாட்டேன்... கொடுங்கத்தா என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டார்கள்.
நள்ளிரவு வரும் முன்பு கடற்கரையில் இருந்து கிளம்பி அன்றைய சாந்தி தியேட்டர் அருகில் இருந்த மவுண்ட் ரோடு பிலால் ஹோட்டலில் இரவு உணவு முடித்துவிட்டு இருப்பிடம் சென்று விட்டோம்.
மறுநாள் காலையில் 11 மணி அளவில் இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களை சந்திப்பதற்காக லட்சுமி மோகன் லாட் ஜ் சென்றேன்.
நிறைய தலையணைகளை முதுகுக்கு தாங்கல் கொடுத்துவிட்டு... இசைமுரசு அன்றைய தினத்தில் வந்த நாளிதழ்களையும் வார இதழ்களையும் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.
நான் அதிகாலையில் சில வரிகள் எழுதி ....இசை முரசு அவர்களிடம் இஸ்லாமிய சரித்திரத்தை ....நபிகளாரை... இன்னும் இறை நேசச் செல்வர்களை.... தமிழை... பெரியாரை .... காயிதே மில்லத் அவர்களை...அண்ணாவை ...கலைஞரை பாடி இருக்கிறீர்கள்.
நபிகள் நாயகத்தின் மகளார் பாத்திமா நாயகி அவர்களைப் பற்றியும் பாடி இருக்கிறீர்கள்.
ஆனால் தாய்மையை ப் போற்றும் வகையில் நீங்கள் பாட வேண்டும்... அதனை நான் கவிதை வடிவில் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன்.
வாசித்துப் பாருங்கள் என்று அவர்களிடம் கொடுத்தேன்.
பல்லவியாக....
தாய்மை என்றாலே...
தூய்மை அல்லவா....
தியாக நெஞ்சையே
நானும் சொல்லவா....
பத் துத் திங் கள் உதிரம் கொடுத்து உயிரை வளர்த் தாய் நித் தம் இன் பம் துன் பம் யாவும் ஒன்றாய் நினைத்தாய்
இன்னும் சொல்லவா
என் உயிரே அல்லவா..
என்று அந்த வரிகள் அமையப்பெற்று இருந்தன.
ம்ம்ம்ம்... ஹாம்... என்று அந்த வரிகளை சுரம் கூட்டி எனக்கு கேட்கின்ற அளவில் இசை முரசு அவர்கள் பாடிக் காட்டினார்கள்.
நல்லா எழுதி இருக்கியத்தா...
இன்னும் சரணங்களை எழுதிக் கொண்டு வாருங்கள்...
என்று என்னை என் கவிதை வரிகளை வாங்கி வைத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்கள்.
நான் கிளம்பும் முன்னே...அத்தா பத் துத்...
நித் தம் என்றெல்லாம் சுர வரிசைகள் எழுதியிருக்கிறீர்களே என்று மீண்டும் மீண்டும் பாடி என்னிடம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் பாடல் சரணங்கள் அனைத்தையும் ...
வயிற்றில் கரு உண்டானதில் இருந்து...
தவழ்வது.... நடப்பது... பேசுவது பள்ளிக்குச் செல்வது... பட்டம் பெறுவது...மணமகனாக ஆவது..
பெற்றெடுத்த பிள்ளை பேரனை பெற்றெடுக்கின்ற காலம் வரை உள்ளவற்றை பதினாறு வரி யாக எழுதி அவர்களிடம் கொடுத்து வந்தேன்.
ஒரு பத்து நாட்கள் கழித்து குற்றாலத்திற்கு இசை முரசு அவர்கள் வருகை தந்திருந்தார்கள்.
மெயின் அருவி மேட்டில் உள்ள ஆறாம் எண் அறையில் அவர்கள் இருக்கும் போது அவர்களை சந்திப்பதற்காக நான் சென்றிருந்தேன்.
பக்கத்தில் அருமையான கவிஞர் வீர எம் அப்துல் ரகுமான் அவர்கள் இருந்தார்கள்.
அந்த இடத்தில் இசை முரசு அவர்கள் அவர்களுக்கு நான் எழுதிக் கொடுத்த பாடலை பாடி காட்டினார்கள்.
கவிஞரிடம் தம்பி மீரான்..
நான் இளமையில் இருப்பது போல நினைத்துக் கொண்டு தத் தித் என்று வார்த்தைகள் போட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்... என்று என்னுடைய பாடலைச் சொல்லிக் காட்டினார்கள்.
மறுநாள் காலையில் குற்றாலத்தின் அதே அறையில் கவிஞர் வீரை எம் அப்துல் ரகுமான் அவர்கள்..
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்...
அத்தனையும் சொர்க்கத்தின் சங்கை மிகு முத்திரைகள்...
தீனோரே கேளுங்கள்
திரு நபிவழி வாருங்கள்..
வித் தகன் அல்லாவின்
உத் தமத் தூதர் நபி
இத் தரையோர்க் குரைத்த போதம்..
சத்திய இஸ்லாத்தின்...
முத்தான கொள்கையில்
சொத்தாகக் கிடைத்திட்ட வேதம் .....
என்று அந்தப் பாடல் அமைந்திருந்தது.
இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களுக்கு இசை அமைப்பதற்காக இன்பராஜ் என்கின்ற ஹார்மோனிஸ்ட் இருந்தார்.
அவரே மேடை நிகழ்ச்சிகளுக்கும் வாசிப்பார். பாடலின் வரிகளையும் இடை இசையையும் அவரின் ஹார்மோனியம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.
இன்னொரு ஹார்மோனிஸ்ட் சேதுராமன் மென்மையாக இசைக் கோலங்கள் வரும் படி செய்வார்.
எத்தா... நீங்களும் எழுதி இருக்கிறீர்கள்.
நம்ம ரஹ்மானும் எழுதி இருக்கிறார். இரண்டையும் வைத்துக் கொள்கிறேன்.
பயன்படுத்திக் கொள்வேன் என்று... இசை முரசு சொன்னார்கள்.
அண்ணன் வீரை எம் அப்துல் ரகுமான் எழுதிய பாடல் இசை முரசு அவர்களால் பாடப்பட்டு ஒலிப் பேழையாகவும், கேசட்டாகவும் வெளிவந்து இன்றளவும் அந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
என்னுடைய பாடல் இன்னும் அரங்கேற்றப்படாமலேயே ஆகிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக