சனி, 13 ஏப்ரல், 2013

துபாய் வாப்பா படும் பாடு...

      
      
        சமீபத்துல துபாயி லிருந்து வழக்கமான விடுமுறையில் ஊர் திரும்பிய என் நண்பன், ராத்திரி பத்துமணிக்கு மேல என்னை திடீர்ன்னு அழைச்சான்.
“என்னடா...எப்பிடி இருக்கே? .....என்ன இந்த நேரம் ஓம் போன்”வழக்கம் போல் நான் கேட்டேன்.
“கொஞ்சம் வீடு வரை வரியா?”
“எதுக்குரா?”
“வாரியா ...இல்லையா?.”...
”எதுக்குன்னு கேக்கிறேன் சொல்ல மாட்டேங்கிறியே?” 
”உடனே வாயேன்”.
“சரி வரம்ப்பா.”
    இப்ப குத்தாலம் போற சீசன் காலம் இல்லையே...எதுக்கு இந்த நேரத்திலே அழைக்கான்?...எந்த வம்புக்கு நம்மக் கூப்பிடுதானோ?......என்னவோ?.....ஏதோ?....என்ன பிரச்சனையோ?....ன்னு யோசித்துக் கொண்டே, எம் மகன் , வச்சிருக்கிற ஆக்டிவாவிலே புறப்பட்டேன்.
மீண்டும் செல் பேசி....அதில் அவந்தாம்.
“மச்சான்..... வீட்டுக்கு வந்திரு......”.. 
“ஏய்....சொல்லண்டா.....ஒன்னும் சொல்லாமல் வாயேன்னா.... எதுக்கு கூப்பிடுற?”பதிலே சொல்லாமல் டக்குன்னு போனை வச்சிட்டான்.ஒரே சஸ்பென்ஸ் மயமாகவே இருந்தது...

  "போன வாரம் தானே, அங்க வலிக்குது....  இங்க வலிக்குதுன்னு..... சொன்னான்,இப்போ புதுசா அவனுக்கு சுகர்,பிரசர்ன்னு டாக்டர் விதவிதமா மாத்திரையெல்லாம் எழுதிக் கொடுத்து வாங்கி வந்தோமே  ...வேற எங்கேயும் டாக்டர்கிட்ட கூப்பிடுதானோ?"இப்படி பல விதமா மனசில் ஓடிக்கொண்டிருந்தது.
    அவம் வீட்டுக்கு ஒரு அம்பதடி தூரத்தில்; வண்டியை நிறுத்திவிட்டு ,இரண்டு மூன்று வீடுகள் தாண்டி நான் அவம் வீட்டுக்கு போன நேரம்,வீடே நிசப்தமா இருந்தது. வேறோன்னுமில்லை...பக்கத்து  வீட்டு டிவியில், யாரோ ஒரு பொம்பள ஆவேசத்தோடு அழுகிற காட்சி வழக்கம் போல், தெருவாசல் வரையும் கேட்டது......அதிசயமாக அவம் வீட்டு டிவியில் மட்டும் அமைதி....பெருக்கெடுத்தோடியது.
தெரு வீட்டில் வழக்கமா சிரித்து வரவேற்கும் அவம் மகன், “வாங்க...மாமா”.அப்படீன்னு சொல்லிட்டு ஆவேசம்,ஆத்திரம்,பொங்க ஒரு வித மான அமைதியில் முகமெல்லாம் வாடி தலை குனிந்தவாறு உட்கார்ந்திருந்தான்.
ஆகா.....என்னவோ ஏதோன்னு நினைச்சோமே.....இவன்தாம் பிரச்னையேன்னு கொஞ்சம் யூகித்துக் கொண்டேன்.
சரி நாம தான் அவன்கிட்ட பேசனும்ன்னு...பேசினேன்.
“வே...மருமகனே  எப்படிப் போகுது  ஒங் காலேஜ்?”......
அதுக்கு சுரத்தே இல்லாமல் “இருக்குது”  என்று  ஓத்த வார்த்தையில் பதில் சொன்னான்.
நான் வந்து பேசுகிற  சப்தம் கேட்டு என் நண்பனும்,அவம் பொஞ்சாதியும் வளவு வீட்டில் இருந்து முன்பக்கம் தெருவீட்டுக்கு வந்தாங்க.
“காக்கா ...வாங்களேன்”..வழக்கம் போல் அவம்  பொஞ்சாதி.
“என்ன....நீ....இவ்ளோ லேட்டு?”.....இது அவன்.என் நண்பன்.
எடுத்த எடுப்பிலேயே எந்த பிரச்சினைக்குள்ளும் போய் பேச ஆரம்பித்தால் தோல்விதான்னு,வக்கீல் அனீபா சாகிபு அடிக்கடி சொல்லுவார்,
அதனாலே.....அங்க சுத்தி, இங்க சுத்தி பேச்ச ஆரம்பிச்சேன்....என் நண்பன் பேசினான்.
“மச்சான்...நீ தானே இவன காலேஜ்ல சேர்த்த?
‘”ஆமா”....அதுக்கென்ன?”
அவன் எந்த குரூப் கேட்டானோ அதை வாங்கிக் கொடுத்து,பணம் கட்டி எல்லாம் சென்சோம்மில்லியா?
“ஆமாம்..”
“வழக்கமா வி.எஸ்.டி.சந்தை வரையும் பஸ் வரும்.அதுல தான் எல்லாரும் காலேஜுக்கு போவாங்க.நேத்து வரைக்கும் அதுல போனவன்,இனி  அதுல போ மாட்டானாம். மோட்டார் சைக்கிள்ள தான் போவானாம்.”
அதுக்கு பதில் நான் சொல்லு முன்னாலே அவமகனை பார்த்து,” சரி... “நம்ம ஊர் வரைக்கும் காலேஜ் பஸ் தான்  வருதுல்ல?”நல்லா ஜாலியா தானப்பா போய்க் கொண்டுறிந்திய.....இப்ப திடீர்ன்னு அதுல போ மாட்டேன்னா எப்படி? அத விட்டுட்டு  மோட்டார் சைக்கிள்ள போனா தனி செலவாகுமில்லியா?....மருமனே சொல்லுவே” என்று கேட்டேன்.
“நிறைய பையங்க மோட்டார் சைக்கிள்ள தான் வாராங்க...அதுனால எனக்கும் மோட்டார் சைக்கிள் வேணும்.”அவ மகன் சொல்லும் போது அந்தக் குரலில் பிடிவாதம் தெரிந்தது.
சரிப்பா,”மோட்டார் சைக்கிள் இல்லாத பிள்ளைங்கதான்  நிறைய பேர் காலேஜுக்கு வாரங்க..அது உனக்கு தெரியத்தானே செய்யும்?”
“எங்க வாப்பாவும் துபாய்ல இருக்காருன்னு,நான் காலேஜ்ல சொன்னா,யாரும் நம்ப மாட்டேங்ராங்க”
     உடனே அவந் தகப்பன்”எவன் கேக்கான்?.....வேணும்ன்னா  என் பாஸ்போர்ட்,விசா காப்பியை ஜெராக்ஸ் எடுத்து தாரேன். அப்படி நம்பாம கேக்கிறவங்கிட்ட காட்டு”என்று படபடத்தான்.
“ஏய்....ஏய்...பொறுப்பா”என் நண்பனின் பேச்சை இடைமறிச்சேன்.
 “என்ன மருமகனே.அதுக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம்.”?
பையன் பதில் சொல்லாமல், எதுக்கோ அடிபோட்டுக்கிட்டுருந்தான்.
“வேணும்னா என் வண்டியைக் கொண்டுபோகச்சொல்லுப்பா” என்றான் என் நண்பன்.
“உங்க வண்டி எவன் ஒட்டுவான்?” என்று ஆவேசத்துடன் சொன்னான் அவம்மகன்.
“நீயே சொல்லுடே....என் வண்டிக்கு என்ன  குறை?”
வழக்குக்கு போன இடத்துல.தகப்பனுக்கும்,மகனுக்கும் இப்படி ஒரு கேள்வி,பதில் வந்ததும் எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.அதைப் பார்த்ததும் என் நண்பன் முகம் போன போக்கு .....விளக்கவே முடியாதது.”இவனப் போய்  கூப்பிட்டோமே?”ன்னு  இருந்துச்சு அவம் பார்த்த பார்வை.
“மாமா....இவர் வச்சிருக்குறது.....மொபெட்...அது TVS 50. நான் கேக்கிறது மோட்டார் சைக்கிள்.இவருக்கு, ரண்டுக்கும் உள்ள வித்யாசம் கூடத் தெரியல்லை”.என்றான்,கொஞ்சம் கிண்டலாக.
“ஆமாம்..... ரண்டு வண்டிக்கும் முப்பதுனாயிரம் ரூபாய் வித்யாசம்ன்னு தெரியும்பா” என்றான் பொருளாதாரம் படிச்ச என் நண்பன்.
சரீ.....இப்ப நான் சொல்லுரதைக் கேளுங்கப்பா.....“புள்ள ஆசப்படுறான்..ஏதாவது மோட்டார் சைக்கிள் எடுத்துக் குடுப்பா...ஆனா அதக் கொண்டுட்டு காலேஜ்லாம் போகவேண்டாம். ......வழக்கம் போல காலேஜுக்கு  பஸ்லதான் போகணும்.தெரியுதா?” என்று சொல்லிவச்சேன். என் நண்பன் பரிதாபமா பார்த்தான்.
நான் சொல்லி முடிச்சது தான் தாமதம் .”மாமா கொஞ்சம் இருங்க.நான் ஒரு வண்டி கொன்டு  வரேன்.அந்த மாடல் தான் வேணும்”ன்னு சொல்லிட்டு, பதிலை எதிர் பார்க்காமல் அவம் மகன் ,வெளியே புறப்பட்டுப் போனான்.
ரொம்ப நேரம் மவுனமாக சபையைக் கவனித்துக் கொண்டுருந்த என் நண்பனின் மனைவி என்னிடம் ” காக்கா....நானும் ரொம்ப நாளா எம்புள்ளை மோட்டார் சைக்கிள் கேக்கிறான்..வாங்கிக் கொடுங்கோன்னு சொல்லிக் கொண்டுதான் இருக்கேன். மனுஷன் அசஞ்சிக் கொடுக்கலே. மத்த பையங்க மாதிரியா அங்கயும் இங்கயும் இவன் அலையிறான்?”என்று சொல்லி முடிக்கும் போது மகனுக்காக ஒரு தாயின் பரிந்துரை தெரிந்தது.
“நல்லா இருக்குப்பா இவ சொல்லுறது. இவ இப்படி சொல்லிச் சொல்லியா நான் இவனுக்கு கம்ப்யூட்டர்  வாங்கிக் கொடுத்தேன்?”
“ஆமா.அது இவர் என்கிட்டயும், அவ புள்ளைங்க கிட்டயும் பேசத்துக்குன்னு அனுப்பினார்.”
“செல் போன்....இங்க கிடைக்காததா?...அதையும் அவன் சொன்ன மாடல்லாம் அனுப்பினேன்..அது என்ன விலை தெரியுமா?அதுவும் ஒன்னு ரண்டா?.....எவ்வளவோ  அனுப்பியிருக்கேன்.”
நான் மௌனமாகப் பார்த்துக் கொண்டுருந்தேன்.
”இந்தபாரு..என் செல் போன்.....நான் என்னத்த வச்சிருக்கேன் பாரு நாலு வருஷத்துக்கு முந்தியது.”என்று சொல்லிய நண்பன் தொடர்ந்து பேசினான்.
“சரிப்பா செல் போன்ல என்னத்தை தான் பாப்பானுவோளோ?.....அல்லது யாருக்குத் தான் என்ன கொடுப்பானுவோளோ?...... தெரியல்லே..ராத்திரியில் தூங்க மாட்டானுவ போல .....ஒரே எஸ்.எம்.எஸ்.தான்......உடனே பீப் பீப் சப்தம் பதிலுக்கு வருது.. ராத்திரி பூரா பேஸ்புக்,டுவிட்டர்ன்னு..இருக்கனுவோப்பா.......நாம என்னத்த சொல்ல?....”என் நண்பனின் கவலையோடு கலங்கிய கண்களும் தெரிந்தது.
“சரிப்பா...நம்ம இளமயிலே இதெல்லாம்.கிடையாது.இப்ப வந்திருக்குது.  நல்லதே நினைப்போம்”ன்னு சொல்லி ரண்டு பேர் பேச்சையும் நிறுத்தினேன்.
அப்போது வாசலில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்கும் சப்தம் கேட்டது. என் நண்பனின் மகன் ,அவனோடு கல்லூரியில் படிக்கும் ,நண்பனோடு வீட்டுக்குள் வந்தான். வாசலில் அவன் கொண்டு வந்த புது மாடல் பைக் கம்பீரமா நின்றது.
“சொல்றா.....இந்த வண்டியைப் பற்றி” என்று கூட வந்த நண்பனிடம் சொல்லச்சொன்னான்.
அந்த இளைஞனும் எங்க ரண்டு பேருக்கும் உறவினந்தான்.அவன் தகப்பனும் துபாயில் தான் இருக்கிறான்.
“மாமா... ....இந்த வண்டி பேரு.YAMAHA Fesar….அப்படியா?.....நான் புஸ்தகம் எதிலுமே இதப்பார்க்கல்லியே.... என்றான் என் நண்பன்.”
“மச்சான் இந்த வண்டி விலையை கொஞ்சம் கேளன்”...என்றான்.
நான் விலையை கேக்கும் முன்பே என் நண்பனிடம்...”சரிப்பா  வாங்கிக் கொடுடே....நீ கொடுக்காம அவனுக்கு அவம் மாமா கொடுக்கனும்ன்னு நினைக்கிறியா?"என்று கேட்டேன்.
“அது வொன்னும் கூடுன விலையில்லை......தொன்னூத்து எட்டாயிரம் தான் மாமா”...அப்போ என் நண்பன் முகத்தைப் பார்க்க நான் என்ன ஒன்னும் தெரியாதவனா?
அதக் கேட்டுட்டு நான் போன வேகம் எனக்கும் என் ஸ்கூட்டருக்கும் தான் தெரியும்.
மறு நாள் ஞாயிறு. திங்கள் கிழமை காலை.என் நண்பனின்.போண்.
“மச்சான்....எங்க இருக்க?”.....கலகலப்பே இல்லாமல் என் நண்பனின் குரல்.
“தோட்டத்துல”....
அதுக்கு பிறகு அவன் சொன்ன பதிலைக் கேட்டு நான் ஒண்ணுமே பேசலை.
”....இன்னைக்கி போய் எம் மகன் கேட்ட வண்டியை,வங்கிக் கொடுத்திருவோம்..ஊருக்கு வந்தா நிம்மதி  வேண்டாமா?....நம்ம கஷ்ட்டம் இங்க இவங்களுக்கு தெரியுமாப்பா?........என்ன ...செய்ய எம் மகளுக்குன்னு  நான் வாங்கிவந்த 5 பவுன் தங்க செயினை வித்துற வேண்டியதுதான்.”
 
 
 

சனி, 9 பிப்ரவரி, 2013

அதிர்ச்சி அலைகள்

     
      உலகத்தில் குழந்தை பிறந்ததும் அழுகிறதே அது என்னவாம்? தாய்க்கு துன்பத்தின் வாசலில் இருந்து வெளியே வந்து விட்டோம்என்கிற தவிப்பின் முடிவைச் சொல்லவா ?; ஆகா... பிள்ளை பெத்தாச்சு.ஆணோ? இல்லை பெண்ணோ? என்று அறிகிற ஆவல் அந்தக்குரலில் இருந்து சில நிமிடங்களில் தெரிகிறதாலா? . வந்த குழந்தை உயிருடன் இருகிறதா? அந்தக் குழந்தையால் பேச முடியுமா? என்கிற பல்வேறு கேள்விகளுக்கு பதிலே  அழுகுரல் தான் என்று  பலரும் நம்பிக் கொண்டிருக்கும் போது ,மருத்துவம் மட்டும் வேறு வித மாகச் சொல்லுகிறது, நீங்கள் நினைப்பது தவறு என்று. 

ஒரு பத்து மாசம் தாயின் வயிற்றில் அங்கும் இங்கும் அசஞ்சிக் கொண்டும்,தொப்புள் கொடி மூலம் உயிரை வளர்த்த, குழந்தை பூமியில் வெளி வந்து  பிரான வாயுவை உள்ளே இழுத்து வெளியே விட முதல் முயற்சியே அதிர்ச்சியில் தான் துவங்குகிறதாம். ஆக எல்லா மனுஷாட்களும் பூமியில் வந்ததும் முதன் முதலில் அடைவது அதிர்ச்சியே. என்று  இப்போ கண்டு பிடிச்சிருக்கான்.

மனுஷன் என்ன மனுஷன்? மத்த உயிர்களுக்கு   என்னவாம்? அதுகளுக்கும் இந்த அதிர்ச்சிதான்னு விஞ்ஞானம் சொல்லுது.

எல்லாத்திலும் தானே உசத்தி, என்று பேசுகிற மனிதன் சிந்தித்துப் பார்த்தால்  உண்மையிலே அற்பன் தான்..  நாலு காலும் ,ஒரு வாலும் கொண்ட மிருகங்கள் கூட, பிறந்து சில நிமிட நேரங்களில் தானே, எழுந்து தாய் மடி தேடி, முட்டி மோதி,அதன் பாலை அருந்தி வளர்கிறது. சில வகை மான்கள் பிறந்த  சில நிமிடங்களில்  சுமார் பதினைந்து கிலோ மீட்டர் வேகத்தில் கூட ஓட முடியும்ன்னு அனிமல் பிளாநெட் அறிஞர் ஒருவர் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஆனா மனுஷன்?..... தீ சுடும்ன்னு தெரிகிற வரைக்கும் தாய் அல்லது பிறர் தான் அவனுக்கு பாலையும்,சோற்றையும்,மருந்து மாத்திரைகளையும் ஊட்டிவிட்டு.பீயைக் கழுவி, ஆடை அணிய வைத்து கடமையைச் செய்ய வேண்டியது உள்ளது. அவன் கீழே உட்கார மாசக்கணக்கும்,தவளவும் ,நடக்கவும் வருஷத்தை தாண்ட வேண்டுமே.இது தானே நிசம்.

அதிர்ச்சியிலே பிறக்கிற உயிரினம் சில அதிர்ச்சிகளில் உறைந்து போய்விடுகிறது. நாளைப் பொழுது விடியுமா? என்பது மனிதர்கள் கையிலும் ,வாழ நினைக்கிற விலங்குகள் கையிலும் இல்லை. அது எங்கோ இருந்து நம்மை ஆட்டிவைக்கிரவன் கைகளில் உள்ளது..தன்னை  விரட்டுகிற வேட்டை மிருகங்களின் வாயிலிருந்து  மிருகங்கள் தப்பிப் பிழைப்பது , தினம் தினம் செத்துப் பிழைப்பதுக்கு சமம்.  மனுஷன் மட்டும் கொஞ்சம் வித்யாசம்.

நான் தத்துவம் எல்லாம் படிக்க வில்லை.சித்தர் பாடல்களும் பட்டினத்தார் பாடல்களும் கூட ரொம்பம்பத் தெரியாதவன் என்பதை மிக அடக்கத்தோடு சொல்லக் கடமைப் பட்டவன்.

தடுப்பு ஊசியும் காச்சல் வந்து போடும்போது ஊசியும் குழந்தைகளுக்கு நாம் தருகின்ற முதல் புற வலியாகக் கூட இருக்கலாம்.தட்டுத் தடுமாறி கீழே விழுவதை இதில் சேர்க்கக் கூடாது.

பள்ளிக்கூடத்தில் சேர இப்பவெல்லாம் சின்னஞ் சிறு பச்சை மழலைகளுக்கு பரீட்சை வைக்கிறாங்களே .அது முடிஞ்சு சில பிள்ளைகள் தங்கள் பேர் இல்லைன்னு  பார்த்துட்டு மனம் கலங்குகிற அதிர்ச்சியை பார்த்து நான் பலமுறை கலங்கிப் போய் அழுதுள்ளேன்.

வழக்கமா என் குழந்தைகளுக்கு நான் சென்றது ஆரம்ப.உயர் நிலை,மேல்நிலை,அளவில் மூன்று முறை இருக்கலாம். ஆனால் ஊரில் பல தரப்பு பிள்ளைகள் பலர் வருகிறார்களே, அவர்களை அழைத்துக் கொண்டு நான் வருடம் தோறும் சென்று வருகிறேன். அது துவக்க,உயர்நிலை,மேல்நிலை,கல்லூரி அளவில் உள்ளது..

சில பள்ளிக் கூடங்களில் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் அறை முன்னே, கால்கடுக்க நின்று காரியம் சாதிக்க வேண்டும்.  சில வேளைகளில் வஞ்சப் புகழ்ச்சி அணியை  கையில் எடுக்கவேண்டியது வரும். “இது என்னுடைய சொந்தக்காரரின் பிள்ளை,இவன் என் மைத்துனன்,மருமகன்.தம்பி,என்று ஏதாவது சொல்லி அவனின்  பிள்ளை இது” என்று துவங்க வேண்டும்.

பெரும்பாலும் பலர் போய் முட்டி மோதி காரியம் நடக்காமல்  முத்திய நிலையில் சீட் இல்லை என்கிற நிலை வரும் போது தான் நண்பர்கள் என்னைத்தேடி வருவார்கள். பத்துக்கு எட்டு சேர்த்திடுவேன். அல்லது மற்ற  இடங்களில் சேர்த்து விடுவேன்.

அது வேற கதை.நான் சொல்ல வருவது வேற.

அதிர்ச்சிகள் தெரியாத அளவில் என்னை என் வாப்பும்மாவும்,தாயும்,மாமியும், தந்தையும் வளர்த்தார்கள். மிக மென்மையான மனதளவில் தான் வளர்ந்தேன்.

நீச்சல் தெரிந்தும்  தெரியாமலும் கத்துக் குட்டியாய் நம்ம ஆத்தில் நீந்திய போதுஆத்து வேகம் என்னை  இழுத்துச் சென்ற போது என் நண்பன் மைலக்காதர் தெரு அபுல் காசிம் கைபிடித்து இழுத்து அதிர்ச்சியில் இருந்து மீட்டான். அதை வீட்டில் சொல்லவே இல்லை.

சில நேரங்களில் மின்சாரக் கம்பிகள் தந்த அதிர்ச்சி.

சில பயணங்கள் தந்த விபத்துக்களின் அதிர்ச்சி....

.தேர்வுகள்,தேர்தல்களின்  முடிவுகள் தந்த அதிர்ச்சி....இவையெல்லாம் சர்வ சாதாரண நிகழ்வுகளாக இப்போ தெரிகிறது.

நள்ளிரவு நேரங்களில் அடிக்கும் போனின் மணியோசை கேட்டாலே பல நேரங்களில் எனக்கு பதட்டம்,அதிர்ச்சிதான்.....என்னவோ? ஏதோ?.....என்ற பதற்றத்துடன் தான் போனையே எடுக்கிறேன்

ஆனால் சில இறப்புக்கள் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்ல.அவை தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவே இல்லை.

ஆறாம் வகுப்புக்கு மேல் என்னை பாசத்தோடு வளர்த்த என் தந்தையுடன் உடன் பிறந்த தாத்தா (தமக்கை)  அன்னை ரபீக்கா அவர்களின் திடீர் மறைவு, என் தாயின் உடன் பிறந்த தங்கை, நினைவிழந்து மறைந்தது, இன்னொரு சாச்சி, புற்று நோயால் பாதிக்கப் பட்டு பொலிவிழந்து கொஞ்சம் கொஞ்சமாக இறந்தது.என்னை ஆளாக்கிய எங்க வாப்பா என்னை அழைத்து  "என்ன வாப்பா?"... என்று நான் கேட்டு பதில் சொல்ல முடியாமல் நிரந்தரமாக கண்மூடியது,.....என்னிடம் பாசமும் நேசமும், காட்டிய என் அப்பாம்மா, என் கைகளைப் பற்றியவாறு மௌத்தாய் போனது,......இவை எல்லாம் இன்று நினைத்தாலும் பதறி விடுகிறேன்.ஒவ்வொரு இறப்பும் வேதனை தான் ஆனால்,இவை எனக்கு அதிர்ச்சியை தந்தவை.தனிமையில் அழுதிருக்கிறேன்.

  என் பெரிய வாப்பாவின் மகன்,என்னை விட பதினைந்து வயது மூத்த, பெரிய காக்கா அப்துல்லா லெப்பை. அண்ணன் என்பதை விட பாசம் மிக்க நண்பன்னு அவரைச் சொல்லலாம்.அம்புட்டு பாசம் பிரியம்.

எனக்கு விவசாயத்தின் மீதும் .ஆடு,மாடு,பறவைகளின் மீதும் காதல் வரச்செய்தவரே அவர்தான். “லண்டனுக்கே போரதாக இருந்தாலும் எனக்கு மோட்டார் சைக்கிள் இருந்தால் போதும் போயிட்டு வந்திடுவேன்” ,என்பார்.

எப்பவும் நான் அவருடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்.  ஒரு காலகட்டத்தில் எங்கள் உறவினர் ஒருவர் கத்தார் நாட்டில் அவருக்கு உதவியாக வேலைக்கு அழைக்க,ஏதோ ஒரு நினைப்பில், "சரி" என்று சொல்லிவிட்டார்..அவரைப் பிரிய யாருக்கும் எண்ணமில்லை.
மனசை ரொம்ப கல்லாக்கிவிட்டு கத்தார் நாட்டுக்கு சென்றார்."வரல்லை"ன்னு சொன்னா,அவரை அழைத்தவருக்கு பண நஷ்ட்டம் வந்திடுமேன்னு போனார்.
திருனவேலி ரயில் நிலையத்தில் வழிஅனுப்ப வந்த எங்களிடம் ,பிரியாவிடையில் அவர் அழுத அழுகை இன்னைக்கு நினைச்சாலும் வேதனை தரும்.அந்த நேரத்து மதராஸ் சென்ட்ரலில் வேறு வண்டி புடிச்சு ,அங்கிருந்து பாம்பே போய் கத்தர்நாட்டிலும் இறங்கிவிட்டார்.
இப்போ மாதிரி, ,நினைச்ச நேரமெல்லாம் போனில் பேசிக்க முடியாது.எப்பவாவது பெருநாளைக்கு அவர் பேசினாலே அதிசயம் தான்.ஆனால் கடிதப் போக்குவரத்து உண்டு.  ஒவ்வொரு கடிதத்திலும் “நல்லா படி” என்றே எழுதுவார்.  “உனக்கு என்ன வேண்டும் ? சொல்லு;அனுப்புகிறேன்” என்பார்.

எங்கள் இளமைக் காலத்தில் வால்வு ரேடியோ.,ரிக்கார்டு பிளேயர்,  டேப் ரிக்கார்டர்கள் ,  மற்றும் வால்க்மன் பிளேயர்கள் மீது  தான் ஆசை இருக்கும்.  நம்ம ஊரில் அப்போதெல்லாம் பழைய பாடல்கள் கேசட்டுகளாக கிடைப்பது பெரிய விஷயம். இசைத்தட்டுகள் மட்டுமே அதிகம் கிடைத்த காலம் அது.

 திருனவெலி ஜங்ஷன் பக்கம் போய் ரிக்கார்டிங் சென்டர்களில் கேசட்டில் பதிவு  செய்து வாங்கி வரவேண்டும். குறைந்தது பத்து நாட்கள் ஆகும்.

இதை அவரிடம் கடிதம் மூலம் சொன்ன போது "ப்பூ.....இவ்வளவு தானா? இங்கே தாராளமா...கிடைக்குதுப்பா உனக்கென்ன வேண்டும்?" என்று கேட்டு வாங்கி அனுப்புவார். அந்தக் காலத்தில் அது ஒரு பொக்கிஷமாகத் தெரியும்.
நான் எது கேட்டாலும்,ஊருக்கு வரும் யாரிடமாவது கொடுத்து அனுப்பிவைப்பார்.  அம்புட்டு  பிரியம் என் மீது.   நல்ல துணிமணிகள், கூலிங் கிளாஸ் கண்ணாடி, நய்லான் பனியன்கள்,வாசனை திரவியங்கள் அதில் இருக்கும்.
சாதாரணமாக அவர் கத்தார் நாட்டுக்கு போய்வரும் காலங்களில், ஊருக்கு வந்து விட்டால் ஒரே அமர்க்களம் தான்.வந்தவுடன், அவர்  வெளிநாடு போன நாளில் இருந்து ,குடும்பத்தில், ஊரில் நடந்த நிகழ்வுகளை விலா வாரியாக சொல்ல வேண்டும். எப்படியும் திண்ணையில் உட்கார்ந்து பேசி முடித்து தூங்கப் போக ராத்திரி நள்ளிரவு தாண்டி அதிகாலை ரண்டு மணியாவது ஆகிவிடும்.சபையே கலகலப்பு தான்.
 எங்க வாப்ப மாதிரி ஆட்கள் ,"இன்னும் தூங்கப் போகாமல் என்னல  இங்க உக்காந்து சலம்பிக்கிட்டு இருக்கியோல ?  என்னத்த விடிய விடிய   பேசிக்கிட்டு.இருக்கானுவோ ." அப்படீன்னு சப்தம் கொடுத்த பிறகு தான் மத்த காக்கா மார்க்களும் ,நான் உட்பட எல்லோரும் ஓட்டம் பிடிப்போம்.அதிலும் புகாரி காக்கா, எப்படித்தான் எங்க வாப்பா வருவதை மோப்பம் பிடிப்பானோ?... தெரியாது.முதல் ஆளாக அவன் தான்   நைசா நடையைக் கட்டுவான்.
 .கார்,மோட்டார் சைக்கிளில் சுற்றுவதும்,வயக் காட்டுக்கு போறதும், வீட்டில் நிற்கும் ஆடு, மாடுகளோடு பாசம் காட்டுவதும்,அதுகளை தினசரிக் குளிப்பாட்டி வயிறு நிறய தீவனம்,தண்ணீர் கொடுத்து அதன் மேனி அழகை ரசிப்பதும் அவரது அன்றாட பொழுது போக்கு.சில நேரங்களில் மாட்டு வண்டிப் பயணங்களும்  உண்டு.

“சந்தைக்கு வர்யாலே? நல்ல ஓட்டா மாடு வந்திருக்காம்.பாப்பமாலே? சிந்தி பசு கொண்டு வந்திருக்கானாம்ல...... புடிச்சா கொண்டு வந்திரலாம்ல”,இப்பிடி ஏதாச்சும் சொல்வார். இல்லன்னா  ஒரு மாசத்துக்கு தேவையான மீன் கருவாடு,குத்தை எதாச்சும் வாங்க சந்தைக்கு கூட்டிட்டு போயிருவார்.

குடும்ப மற்றும் விவசாயத்தின்  எல்லா வேலைகளையும்  இழுத்துப் போட்டுச் செய்து விட்டு அவருக்கு   மீண்டும் கத்தார் நாட்டுக்கு திரும்ப லேசில் மனசு வராது.

பயண நாளும் வரும்.  அங்கே போக பெட்டி இதர சுமைகளோடு ஏர் போர்ட் வரையும் போவார்.  “சின்னாப்பா, ஒரு பதினைந்து நாள் கழிச்சிப் போறேன்” என்று, எங்க வாப்பாவிடம் போனில் சொல்லிவிட்டு,எங்க வாப்பா பதிலை கேட்காமல்,படார்ன்னு போனை வைத்துவிட்டு பாஸ் போர்ட் விசா பேப்பரோடு சிரித்த முகத்தோடு மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார். ஏன்னா எங்க வாப்பா தான் அவரை அதிகமாகக் கண்டிப்பார். செல்லம் கொடுப்பார்.அவருக்கு ஆதரவாகவும் இருப்பார்.எங்க பெரிய வாப்பா  ஒண்ணுமே சொல்ல மாட்டார்.

“சரி சரி விடுங்கலே”,இது மட்டும் தான் பெரிய வாப்பா அவர்கள்,காக்கா  விஷயத்தில்  அதிக பட்சமாக சொல்வது. அதை இன்று  நினைத்தால் கூட வேடிக்கையாக இருக்கும். 

இப்படி ஒரு பத்து முறையாவது இந்தக் கதை நடந்திருக்கும்.ஒரு முறை விசா முடியும் கடைசி நாளில் சென்னை விமான நிலையத்தில் இருந்து  புறப்பட்டார்.  நான் அவரை வழி  அனுப்பப் போய் இருந்தேன்.

உள்ளே நுழைய இன்னும் பத்து நிமிடம் தான் பாக்கி இருந்தது.  “காக்கா கத்தார் நாட்டு விமானப் பயணிகளுக்கு கடைசி அறிவிப்பு கொடுக்கிறாங்க உள்ளே .போங்க..” என்றேன். 
"நீ கொஞ்சம் பொறுடா.....நான் போக இன்னும் எனக்கு மனசு வரலை" என்றார் மிகச் சாதாரணமாக..எனக்கு பகீர் என்றது .எமிகரேசன் கதவும் பூட்டியாச்சு.  அதைப் பார்த்து  வழக்கம் போல் ஒரு மெல்லிய சிரிப்பு சிரித்தார்....
"ஏலே....வாலே ஊட்டுக்கு போலாம்."..
“என்ன காக்கா சொல்லுறிய?.... ஊட்டுல கேட்டா என்ன சொல்ல ?”

“என் விசா முடிஞ்சு போச்சு...வேற விசாலதான் போலாம்ன்னு ஏர் போட்டுல சொல்லி நிப்பாட்டிட்டான்னு சொல்லுல....வேற எதையாவது சொல்லி மாட்டிவிட மாட்டேல்ல”....இப்படி சொல்லிக் கொண்டே கார் நிக்கும் இடத்துக்கு கூட்டிவந்துட்டார். புறப்புடுப்பா.....”

“எங்கே?”  

“நம்ம ஊருக்குத்தான்”.... என்று ரொம்ப சந்தோஷமா சொன்னார்.

“ஊரில் கேட்டால் என்ன சொல்ல?” மீண்டும் கேட்டேன்.

“விசா முடிஞ்சு போச்சுன்னு சொல்லு....”  "நீ சொன்னா நம்ம வீட்டில் எல்லாரும் நம்பிக்குவாங்க".
நான் ரொம்ப யோசித்துக் கொண்டிருந்தேன். சரி,சரி வா ஊட்டுல போய் சமாளிச்சுக்கல்லாம்.
வீட்டுக்குப் போனால் அவரை விட எனக்குத்தான் "வரவேற்பு" கிடைக்கும்.சரி பார்த்த்கிடுவோம்ன்னு ஊருக்கு வந்தோம். வீட்டுக்குள் நுழையும் போது அப்போதான் அரபு நாட்டில் இருந்து ஊர் வந்தவரைபோல் முகமலர்ச்சியுடன் வந்தார் .

அடுத்து .....என்ன நடக்கும்?.....வீட்டில் விசாரணை .....முடியும். கொஞ்ச நாட்கள் கழித்து வேறு ஒரு விசா வந்து மீண்டும் புறப்பட்டுப் போவார்.
"என்னலே அரபு நாடு ..போதும்டா....."
ரொம்ப காலம் கத்தார் நாட்டில் வேலை பார்த்துட்டு “இனி அங்க எனக்கென்ன வேலை?”போதும்ப்பான்னு ஊர் வந்து விட்டார்.எங் ளுக்கெல்லாம் மகா சந்தோசம் .
அடுத்து  என்ன? வழக்கம்போல் சந்தை,தோட்டம்,வயக்காடு, ஆடு மாடு,மோட்டார் சைக்கிள்,கார்,மாட்டுவண்டி...மாமூல் நிலைமை தான்.
"என்னடா இங்க வண்டி ஓடுது? அங்க அரபு நாட்டு அரபி பையங் கள் யமகா,ஹோண்டா,சுசூகி,கவாசாக்கின்னு மோட்டார் சைக்கிள் ஒட்டுரானுவோ.நம்ம ஊர்ல இப்ப தான் அது வருதாம். பேசாம இந்த ராஜ்தூத் மோட்டார் சைக்கிளையும்,லம்ப்ரீட்டா ஸ்கூட்டரையும் வித்துட்டு சுசூகி வாங்கிற வேண்டியது தான் .  சின்ன வாப்பா கிட்டையும்,பெரிய வாப்பட்டையும் யார் சொல்ல ?  நீ தான் சொல்லணும்" என்று சொல்லி முன்னே தள்ளிவிடுவார்.
எங்க பெரிய வாப்பா புத்தம் புதுசா ராஜ்டூட் மோட்டார் சைக்கிளை,அத வாங்கின களத்தில் இருந்தே அத புதுசு மாறாம வச்சிருந்தார்.எங்க வாப்பவிடமும் ,சின்ன வாப்பா விடமும் அதே மோட்டார் சைக்கிள்கள் இருந்தன..  
பிள்ளைகள் விரும்புகிறார்களே என்று நாங்கள் கேட்ட எல்லா ரக மோட்டார் சைக்கிளும் வாங்கித்தந்து சந்தோசப் பட்டார்கள்,
அந்த வாகனத்தைக் கொண்டு தான் விவசாயப் பணிகளுக்கும் மற்ற இடங்களுக்கும் போவோம்.
ஒரு முறை காலை வேளையில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவரைப் பார்க்க அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டோம்.  கிராம அதிகாரி எங்கள் கிராமத்தில் இல்லை. கொஞ்ச தூரத்தில் உள்ள இடத்திற்கு போய் இருந்தார். காக்கா....கொஞ்சம் இருங்கோ நான் போய் அவரைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு உடன் தலையாரி தலையாரி ஒருவரை அழைத்து போய் விட்டேன்.
 கிராமத்துக்கு மீண்டும் திரும்ப  மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது.  "காக்கா,...... மதியம் என்ன சாப்பிட்டீங்க"ன்னு கேட்டேன்.
  அதற்க்கு அவர் ,கொஞ்சம் கூட கோபமோ,வருத்தமோ இல்லாமல்,
" காலையில் நீ கூப்பிட்டாயேன்னு வரும் போது   மணிபர்ஸ் எடுத்துவர மறந்துட்டேன். ஒன்னும் சாப்பிடல்லை.இப்போ தான் நம்ம உழவன வீட்டில் நான் பட்டினி கிடக்கேன்னு தெரிஞ்சு சிறு பயிறு அவிச்சித் தந்தாங்க .....அதைத் தின்னுட்டு ஒரு டீ அடிச்சிட்டு நிக்கேன்ன்னு சிரிச்சிக்கொண்டே சொன்னார்."
நான் திகச்சிப் போனேன் , என்ன இது இப்படி ஒரு தப்பு பண்ணிட்டோமே? ன்னு பதறிப் போய் விட்டேன்.
"காக்கா, தப்பா எடுத்துக் காதீங்க.அங்க போன இடத்தில் ரொம்ப லேட்டாகிட்டது. நீங்க சாப்பிடாம இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாம போயிடுச்சு"
அன்னையில் இருந்து யாரை நான் கிராமத்துக்கு அழைத்துச் சென்றாலும் சாப்பிட ஏற்பாடு பண்ணாமல் போனதே இல்லை.அவர் தந்த பாடம் அது.

நேருக்கு நேராக உள்ள எங்கள் இருவரின் வீடுகளிலும் கல் திண்ணைகள் இருக்கும்.அங்கிருந்து பார்த்தால்,பசுமையான வயக்காடுகளும், மேற்குத்தொடர்ச்சி மலையும்,அதன் தொடரும் தெரியும். அன்றைய தினத்தில் அவங்க  வீட்டுத் திண்ணையில் மாலை சுமார் ஐந்து மணி வாக்கில் அவர் உட்கார்ந்திருந்தார். என்னைப்  பார்த்ததும் கூப்பிட்டார்.

“இங்க வா....இன்னிக்கு பொளுகிற எங்கப் போப்போற?”....

“எங்கப் போகனும் சொல்லுங்க காக்கா”

“மோட்டார் சைக்கிள் எங்கே? எங்க சின்ன வாப்பாட்ட சொல்லிடு.வண்டியை நான் கேட்டேன்னு.ஜங்ஷனுக்கு போய் சப்பாத்தி குருமா சாப்பிடனும் போவம்மா?”

“சரி காக்கா.” போவோம்.

அது தான் காக்கா பேசிய கடைசி வாத்தைகள்.

நானும் அவரும் அடுத்து அடுத்து அமர்ந்திருந்தோம். நான் செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு திண்ணையில் கால்களை ஆட்டிக் கொண்டு அவருக்கு அடுத்து ஒரு சாண் தூரத்தில் இருந்தேன். அவரும் கால்களை ஆட்டிக் கொண்டு இருந்தார்.கொஞ்ச நேரம் அமைதி.  அப்போது தான் அது நடந்தது.

திடீரென மூஞ்சி குப்புற காக்கா நாலடி உயரத்தில் திண்ணையில் இருந்து கீழே விழுந்தார். நான் பதறிப் போய் தூக்கிப் பார்த்தேன். பேச்சும் இல்லை; மூச்சும் இல்லை.  நான் போட்ட சப்தம் எங்க தெரு பூராவும் எதிரொலித்தது.

அவரைக் காரில்  தூக்கிக் கொண்டு டாக்டர்.பிரேமச் சந்திரன் செல்வன் ஆஸ்பத்திரி போனோம்.வலி நெடுகும்  அவர் நெஞ்சத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டே வந்தேன். காதை வைத்தும் கேட்டேன்.  ஒரு சிறு துடிப்பும் கேட்க வில்லை.  டாக்டர் பார்த்து விட்டு கடுமையான மாரடைப்பு.  இறந்து விட்டார் என்றார்.
நான் துடித்த, துடிப்பும் அழுகையும் என் நெஞ்சை விட்டு நீங்கவே இல்லை.

நான் அடைந்த அந்த அதிர்ச்சி இன்னும் என் நெஞ்சை விட்டுப் போகவே வில்லை.1999 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அவரது திடீர் இறப்பு தாங்க முடியாதது.

இந்த அதிர்ச்சியை தாண்டி இன்னொரு கொடுமையான அதிர்ச்சி. அதை இன்னும்  சொல்ல வேண்டியதுள்ளது.
(தொடர்ந்து பேசுவோம