புதன், 11 ஏப்ரல், 2012

மேலப்பாளையம் மினாரா.

மேலப்பாளையம், நகரின் அழகுக்கு அழகு சேர்ப்பது நவாப் கொத்துபா பள்ளிவாசல் அருகிலுள்ள மீரா பள்ளி மினாரா தான். 
எண் கோண வடிவிலான அந்த மினாரா போன்று தமிழ் நாட்டின் மற்ற இடங்கள் எதிலும் பள்ளிவாசல்களிலோ,தர்காக்களிலோ இல்லை.
அந்தக் காலத்திலேயே ஆறு அடுக்குகள் வைத்து அதற்க்கு மேல் மாடம வைத்துக் கட்டி இருப்பது தமிழர்களின் கட்டிடக்கலைக்குக்கு ஒரு அற்புதமான சான்றாகும்.
முகலாயக் கட்டிடக் கலையை உள் வாங்கி ,தமிழர்கள் கட்டிய மாபெரும் கலைச் சின்னம் இது.
1546 காலக் கட்டத்தில் நாகூரில் இருந்துவந்த இஸ்லாமிய மாமேதை நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா அவர்கள், இந்த இடத்தில் 40 நாட்கள் தங்கி இஸ்லாமியப் பிராச்சாரம் செய்தார்கள்.
."தாமிரபரணி நதிக்கரையில்,திருநெல்வேலி கலைக்டர் ஆபீசுக்கு அருகில் உள்ள பகுதியில், நாகூரில் இருந்து வந்த ,ஒரு இஸ்லாமிய செய்கு ஒருவர் மதப் பிரச்சாரம் செய்ததன் விளைவு, 1500 குடும்பங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்" இப்படி ஒரு குறிப்பு ஆர்னோல்ட் என்பவர் எழுதிய "SPREAD  OF ISLAM (IN SOUTH INDIA), மற்றும் PREACHING OF ISLAM, என்கிற நூலில் விமர்சித்ததை பன்னூல் ஆசிரியர் முன்னாள் முஸ்லிம் லீக் நாடாளு மன்ற உறுப்பினர் அ.க.ரிபாயி சாகிப் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.இதை செங்கோட்டை விஸ்வனாதபுரம் அசன் அவர்களும் பல்வேறு ஆய்வரங்கு களில் தெரிவித்துள்ளார்கள்.
அதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் மேலப்பாளையத்தில் இஸ்லாம் இருந்துள்ளது.
மிஸ்ரில் (எகிப்தில்) இருந்து 40 குடும்பங்கள் இப்பகுதிக்கு வந்தது என்றும் அவர்கள், 7 குடும்பங்களின் கிளைவழிக் கோத்திரத்தார் என்றும் சொல்லுகிற செய்திகள், பல்வேறு தரீக்காகளின் சில்சிலாக்களில் இடம் பெற்றுள்ளது.(இது சம்பந்தமாக நான் பல்வேறு கட்டுரைகளை எழுதி உள்ளேன்.பல்வேறு பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள், நான் கொடுத்தத் தகவல்களைப் பயன்படுத்தி உள்ளார்கள்.)
பாளையங்கோட்டையில் உள்ள, மாவட்ட மைய நூலகத்தில் உள்ள பல்வேறு நூல்களில், மேலப்பாளையத்தின் பெயர் "மங்கை நகர்"என்றும்."திருமங்கை நகர்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக்காலத்து நாட்டுப்புறப் பாட்டுகளில் "மங்கா நல்லூர் மாமக்கள்"என்றும் மேலப்பாளையதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஞ்சாலக்குறிச்சியை ஆண்ட மாவீரன்,முஸ்லிம் சமுதாய சூபிகளை ஆதரித்த வீர பாண்டியக் கட்ட பொம்மு துரை, ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போர் தொடுத்த போது அவரின் தளபதிகள் பெயர்களில். "மார்க்கமுள்ளமுகம்மது தம்பி, யூசூப் லெப்பை" என்கிற பெயரும் "ஹுப்ப மீரான்"என்கிற பெயரும் படை நடத்திச் சென்ற மாவீரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது.
இது சம்பந்தமாக வரலாற்று அறிவியல் மேதை, அண்ணன் செ.திவான் அவர்களுடன் விமர்சித்திருக்கிறேன்.அந்த யூசூப் லெப்பை வழிக் கோத்திரத்தார் மேலப்பாளையத்தில் தான் உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளேன்.(இன்ஷா அல்லாஹ் இது சம்பந்தமாக விரிவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்)
ஒரு காலத்தில் மேலப்பாளையம் நகரில் ,ஏதாவது பெரிய வீடுகளின் மொட்டை மாடியில் நின்று கொண்டு நான்கு திசைகளையும் நோட்ட மிட்டால்,மேற்கே நெல்லையப்பர் கோவில் கோபுரம்,ஆல் இந்தியா ரேடியோ ஒலி பரப்புக் கோபுரம்(பழைய பேட்டையில் உள்ளது)வடக்கே முருகன் குறிச்சி  ஊசி கோபுரம்,கொஞ்சம் கிழக்கே பார்தால் கோபால சாமி கோபுரம்,பாளையம் கோட்டை கிறிஸ்து ராஜா பள்ளி இயேசு நாதர் சர்ச் கோபுரம்,அந்த்தோணியார் சர்ச் கோபுரம் போன்றவைகள் தெரியும்.
வேறு என்ன தெரிகிறது என்று நோட்டமிட்டால் தாழையூத்து சிமிண்ட் ஆலையின் ஐந்து புகைப் போக்கிகளும்,அதுக்கும் முன்னாலே, தச்சநல்லூர் சீனி ஆலைகள் இரண்டின் புகைப்போக்கிகளும் தெரியும்.
இன்று தாழையூத்து சிமிண்ட் ஆலை நவீனப் படுத்தப்பட்டு பழைய புகைக் குழாய்கள் காட்சிப் பொருளாய் சிறுசா தெரிகிறது.
தச்ச நல்லூர் சீனி ஆலைகள், வெள்ளைக் காரர்கள் காலத்தில் கொடிகட்டிப் பறந்து தற்போது ஆலைகள் மூடப்பட்டு அந்த இயந்திரங்கள் அக்குவேறு ,ஆணிவேறு பிரிக்கப் பட்டு எடைக்கு எடை போட்டுவிட்டார்கள்.குடியிருப்புக்கள் வந்துவிட்டன.
ராம் முத்துராம் தியேட்டருக்கு தென் புறமும், மேல் புறமும் இந்த ஆலைகளின் கட்டிடங்கள் இருந்தன.இப்போதும் அதன் மிச்சங்களும் மீதங்களும் உள்ளன.
தச்ச நல்லூர் ரயில்வே கேட் பக்கம் பார்த்தல்.பழைய சக்கரை ஆலையின் பெயர் சிமென்டால் பூசி அமைக்கப் பட்டிருக்கும்.ஆங்கில பாணி கட்டிடங்களின் மிச்சம் தெரியும்.ஒரு காலத்தில் பேட்டை வீ.ம.குடும்பத்தால் இந்த சீனி ஆலைகள் தொடங்கப்பட்டது என்ற தகவல் பழைய வரலாறு கூறுகிறது.
இந்த மினாரவின் வயது அதன் தேக்குக்  கட்டைகள்.சுண்ணாம்பு,போன்றவற்றை வைத்தும்,வாய் வழி,தகவல்களை வைத்தும் கணக்கிடும் போது சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலான ஆண்டுகள் வருகிறது.

1955 க்குப் பக்கத்தில் பெண் ஒருத்தி அதில் ஏறி கீழே விழுந்தால்.அதன் பிறகே பார்வையாளர்கள் மாடத்துக்கு மேலே செல்லும் படிக்கட்டுகள் தற்காலிகமாக அவ்வப்ப்போது எடுக்கப்பட்டு விழாக்காலங்களில் வைக்கப்ப்படுமாம்.பின்னர் தான் கதவு போட்டுப் பூட்டப்பட்டது என்கிறார்கள்.

கந்தூரி நாட்களில் அதிலிருந்து சினிமாப் பாடல்கள் ஒலி பரப்பப் பட்டது கொடுமையிலும் கொடுமையாகும்.இஸ்லாமியச் சின்னத்தில்

இப்படியெல்லாம் செய்யலாமா?என்று யாரும் யோசிக்க வில்லை.
நான் விழாக் காலங்களில் அதன் கீழே கொடி பறப்பதையும் பார்த்துள்ளேன்.சாதாரண நாட்களில் அதன் கீழ இருந்து பார்த்துப் பார்த்து ரசித்துள்ளேன்.

என் உம்மாவின் வீட்டுக்கு நான் போகும் காலங்களில் அந்த வீட்டுக்குப் பின்னால் இந்த மினார் ஒரு நூறு அடி தூரத்தில் இருந்ததால், என் பொழுதுபோக்கெல்லாம் என் தாய் மாமாக்களோடு அங்கே தான்.

அந்த வயதில் அந்த மினாரின் கம்பீரத்தைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறேன் இன்றும் தான்.

ஒவ் வொரு வக்ப் வாரியத் தலைவர்கள்.நம் ஊர் வரும் போதெல்லாம் இந்த மினாராவைக் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை விட்டுள்ளேன்.மணு கொடுத்துள்ளேன்.

இது இஸ்லாமியர்களின் கலாச்சாரச் சின்னம். .அது நம் கண் முன்னே அழியலாமா?நெல்லையப்பர் கோவில் கோபுரமும்.முருகன் குறிச்சி ஊசி கோபுரமும் பாதுகாக்கப்படுகிறது.ஆனால் இந்த ,இந்த மினாரா?

மினாராவை பாதுகாப்பது தர்காக் காரர்கள் ஜோலி. இதில் நமக்கென்ன கவனம் வேண்டிக் கிடக்கு ?அது இருந்தா என்ன?இல்லாட்டா என்ன?என்று நண்பர்கள் பாரா முகமாக இருந்துவிடக் கூடாது என்பதே என் விருப்பம்.

பராமரிப்பில்லாமல்.கவனிப்பாரற்று, நித்தமும் சிதிலமடையும் மேலப்பாளையம் மினராவை யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா? இது கீழே விழுந்துவிட்டால் இன்னொன்று இது மாதிரி கட்டமுடியுமா?

கடைசி முயற்சி யாக இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி இலாகாவிடம் இந்த கலாசாரச் சின்னத்தைக் காப்பாற்றுங்கள் என்று கத்தியிருக்கிறேன்.என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.அது நடக்குமா?நடந்தால் இன்னொரு இரு நூறு வருஷத்துக்குக் கவலை வராது.மினாரவைப் பற்றி.







3 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

தம்பி எல்.கே.எஸ் உங்களுடைய இந்த ஆக்கப்பூர்வமான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.நானும் என் வலைப்பூவில் நம் ஊரைப் பற்றி பகிர்ந்துள்ளேன்.அது ஒரு மிக சாதாரணப் பகிர்வு.
http://www.asiyaomar.blogspot.com/2011/09/blog-post_30.html

Unknown சொன்னது…

Sir,

Really nice article, I was waiting for such information since long time,many thanks for your efforts,

Masthan

Vellimedai Plus சொன்னது…

அல்ஹம்து லில்லாஹ்..... அருமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள்.