வெள்ளி, 11 அக்டோபர், 2024

மைக் செட் காரர்களும் ,ரெக்கார்டு பிளேயர்களும்

எங்களுடைய சின்ன வயசுக் காலங்களில்.... சினிமாப் பாடல்கள், இசை முரசு நாகூர் ஹனிபா , மகாதானபுரம் உசேன் பாகவதர் , திருச்சி இசைமணி யூசுப் பாடல்கள்....
 தியாகராஜபாகவதர், பி யு சின்னப்பா, டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி பி ஸ்ரீனிவாஸ், பி லீலா, சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, ஜானகி, எஸ் பி பாலசுப்ரமணியம் இவங்க பாடல்களை கேட்கணும்ன்னா  ரேடியோல தான் கேட்கணும். அல்லது ரெக்கார்டு பிளேயர்களில் இசைத் தட்டு போட்டு தான் கேட்கணும்.

 அந்தக் காலத்து ரேடியோக்களில் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் காலையில்  அல்லது அவங்க போடுற நேரங்களில் தான் கேட்க வேண்டும்.

அல்லது
 கொழும்பிலிருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலி மூலமாக ஒலிபரப்புகளைக் கேட்க வேண்டும். 

காலை 7 மணி முதல் 10 மணி வரையும் மதியம் 12 முதல் மாலை 6 மணி வரையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்புகள் எங்க திருநெல்வேலியில் தெளிவாகக் கேட்கும். 
ஆமடே... கிழக்க காயல்பட்டினம் ஒரு முப்பது மைல்.... அங்கருந்து கொழும்பு 40 மைல்... வேற கேட்காம என்ன செய்யும். ஆனா கொழும்பு கேட்கிற மாதிரி நம்ம திருநவேலி தெளிவா இல்லியே... 

கொட்டுச் சத்தம்லாம் அதான் .... தபேலா...மியூசிக் லாம் என்னமா போடுறான். திருநவேலி அப்படி இல்லையே. என்று சொல்வார்கள். 

கொழும்பு ரேடியோ கிடைக்கணும்னா வீட்டுக்கு மேல ரெண்டு மூங்கில் களைகளைக் கட்டி அதற்கு இடையில் கருப்பு தார் மொழுகப்பட்ட வயர் கட்டி..
. அதிலிருந்து நேரா ரேடியோ பெட்டியில் பொறுத்த... ஏரியல் என்று எழுதப்பட்டுள்ள துளையில் அந்த வயரை கொண்டு சேர்ப்பார்கள். 

தப்பித்தவறி அந்த வயர் தொடர்பு அறுந்து போய்விட்டால் வானொலியை கேட்க இயலாது. டர்ர்ர்..ன்னு எறஞ்சிக் கிட்டே இருக்கும்.

மேலப்பாளையத்தில் அந்தக் காலத்துத் தெருக்கள் 64 என்று சொல்லுவார்கள். 

ஒரு தெரு மூன்று துண்டாக இருந்தால் அதையும் மூன்று என்று பெருக்கிக் கொள்வார்கள். 
யானை போற 64 தெரு என்று சொல்வார்கள்.

அந்த 64 தெருக்களுக்கு யானை சுத்தி வரணுமே.... எவ்வளவு நேரம் ஆகும் என்று யான காரனும்.... யானை கூட வருகிற மகா ரசிகர்களும் கவலைப்படுவார்கள். 

 கடைசியில் யானை வருகிற தெருவில் உள்ளவர்களிடம்... ... எங்க தெருவுக்கெல்லாம் காலையிலயே வந்திடும்..வெளிச்சத்தோட யானை வரத பாக்கணுமே ஆஹா அப்படின்னு பெரிய கிளவி கீழாப் பாளையத்தா சொல்லிக் கொள்வாள்.

கீழப்பாளையம் ஒன்னும் ரொம்ப மைலுக்கு அப்பால் உள்ள இடமில்லை.

 .மேலப்பாளையத்தில் உள்ள ஜின்னா மைதானத்திற்கு வடக்க.... குண்டு தெருவுக்கு கிழக்க.... உள்ள பகுதிதான் அது. 

ஆனாலும் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சங்களில்.... யானை நடந்து வருவது அதுவும் இரண்டு யானைகள் நடந்து வருவது சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு கொஞ்சம் பீதியவே கொடுக்கும்.

பெருசுகள்... என்னா ஜோரா இருக்குன்னு சொல்லுவார்கள்.
யானைக்காரனிடம் கெஞ்சி கொடி மேல் இருக்கிற மல்லிகை பிச்சப் பூவை வாங்குற கோஷ்டிகளும் உண்டு. 

கொஞ்சம் வசதியான வீடுகள் பார்த்து யானை மூக்கில் தண்ணீர் ஊற்றி அங்கே நிற்கிற பெரியவங்க ...சின்னவங்க மொகரையில் பீச்சி அடிக்க ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு யானைப்பாகங்கள் போவார்கள். 

சில தெருக்களில் குழந்தைகளை யானையின் மீது ஏற்றி கொஞ்ச தூரம் போவதற்கு ஐந்தோ பத்தோ ரூபாய் வாங்கிக் கொள்வார்கள்.
அப்படியா பட்ட 64 தெருக்களில்... தெருவுக்கு நாலோ ஐந்தோ வானொலிகள் இருக்கும். 
சில வீடுகளில் அந்த ரேடியோ பெட்டிகளில் இணைத்துக் கேட்கக்கூடிய ரெக்கார்டு பிளேயர்களும் இருக்கும்.

 அதுக்கு ரேடியோகிராாம் என்று பெயர். அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் சில வீடுகளில் கிராம போன் பெட்டியும், சில வீடுகளில் ரெக்கார்டு பிளேயரும் இருந்தன. 

எங்கள் வீட்டில் இருந்ததனால் எனக்கு சிறிய வயது முதல் அது அறிமுகம்.

அதத் தாண்டி அந்த ரெகார்ட் பிளேயர் 
 மைக் செட் காரர்களிடம் மட்டுமே இருந்தன. 

கல்யாண வீடுகள் திருவிழாக்கள்  இங்க ரெக்கார்டுகள் போட வேண்டுமென்றால் மேலப்பாளையத்தில் ஒலிபெருக்கி உரிமையாளர்கள் சிலர் இருந்தார்கள். 

அந்தக் காலத்து பேமஸ் ஒலிபெருக்கி ஆர் எம் ஏ அப்துல் சமது வைத்திருந்த அன்வர் ஒலிபெருக்கி, மைலக் காதர் தெரு மூப்பன் அத்துக்கா சாகுல் மீது சகோதரர்கள் வைத்திருந்த அக்பர் ஒலிபெருக்கி, காஜா நாயகம் தெருவில் கல்வத் ஒலிபெருக்கி , இன்றைய தன்ஷித் ஓட்டல் உள்ள வரிசையில் கணபதி கடைக்கு அடுத்து அன்பு ஒலிபெருக்கி இருந்தது. அன்பர் ஒலிபெருக்கி என்றும் ஒன்று உண்டு. சித்தர் நாகூர் தன்னுடைய பெயரில் நாகூர் ஒலிபெருக்கி என்று வைத்திருந்தார். 

பிந்திய காலங்களில் சேப்பிள்ளை குடும்பத்தில் காஜா மொய்தீன் ரஹ்மத் ஒலிபெருக்கி வைத்திருந்தார். 
அதுக்கு எலலாம் பிற்பாடு தான்
 ரகுமான் வந்தார். 

அந்தக் காலத்து சவுண்ட் சர்வீஸ் காரர்கள் தங்களை ஒலிபெருக்கி என்கின்ற பேரோடு மட்டும் அழைத்துக் கொண்டார்கள். சிலர் ஒளி ஒலி அமைப்பாளர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள். 

ஒலிபெருக்கி சர்வீஸ் மட்டும் வைத்துக் கொள்ளாமல் அலங்காரமாக சீரியல் விளக்குகள் அமைப்பது,  டியூப் லைட்டுகளை  V வடிவில் பந்தல் தூண்களில் ஒரு பக்கமாக சாய்த்துக் கட்டுவது , ஒரு போர்டில் விளக்குகள் அமைத்து அதைப் பல விதமான வண்ணங்களில் மிளிரச்செய்வது போன்ற வேலைகளையும் செய்தார்கள்.

மைக் செட் உரிமையாளர்கள் மத்தியில் யார் பெரிய ஆள் என்று கொஞ்சம் வியாபாரம் போட்டி மனப்பான்மையும் அவ்வப்போது இருக்கும். 

அப்படி வியாபாரப் போட்டி மேலப்பாளையம் ஆர் எம் ஏ அப்துல் சமது சவுண்ட் சர்வீஸுக்கும் அக்பர் ஒலிபெருக்கி அத்துக்கா சாகுல் அமீது சவுண்டு சர்வீஸ்க்கும் நடக்கும். 
அக்பர் ஒலிபெருக்கி உரிமையாளர் தன்னுடைய பணியாள் மூலமாக "நான் போட்டால் தெரியும் போடு.... தமிழ் பாட்டால் அடிப்பேன் ஓடு"  என்கிற டி எம் சௌந்தராஜன் பாடிய எங்க பாப்பா படத்தின் பாடலை முதலாவதாக போடுவார். 
அதற்கு பதில் சொல்லும் விதமாக ஆர் எம் ஏ அப்துல் சமது அவர்களின் அன்வர் ஒலிபெருக்கி காரர்கள் " வாடா மச்சான் வாடா.... ஏடா ..
மூடா... உந்தன் ஜம்பம் எங்கிட்ட பலிக்குமாடா"  என்கிற டிஎம் சௌந்தரராஜன் அன்று கண்ட முகம் படத்தில் பாடிய பாடலை பதிலுக்கு போடுவார்கள். 

மைக் செட் காரர்களிடம் சண்டை வந்துவிடும் அளவிற்கு போட்டிகள் இருந்தன. 
பொதுவாக.... அல்லது
அனேகமாக கம் செப்டம்பர் என்கிற ஆங்கில பெயரில் வெளிவந்த ஆல்பத்தில் உள்ள இசையமைப்பாளர் அமைத்த அந்த டியூன் முதலில் போடுவார்கள். 

திருமண வீடுகள் என்றால் அங்கே உசேன் பாகவதர் பாடிய தக்கலை பீர் முஹம்மது அப்பாவின் ...தனைத்தேரும் காயம் சூழலும் என் நாவில் தான் தொலைந்தால்.... என்கிற ஞானப் புகழ்ச்சி பாடல், அல்லது அல்லாஹு எண்ணுங்கள் சதாகாலம் என்கிற பாடலும் ஒலிக்கும்.

சகோதர சமுதாய நிகழ்வுகளுக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஏ பி என் சேதுராமன் பொன்னுசாமி வாசித்த நகுமோ மு... நாதஸ்வர தவில் இசை ஒலிபரப்பாகும். அதை மாதிரி கடைசி இசையும் அதுதான்.

ஒரு காலத்து மேலப்பாளையத்தில் திருமணங்கள் நடக்கும் போது குழாய் வைத்து பாடல்கள் ஒலிபரப்புவது வழக்கமாக இருந்தது. 

கொஞ்சம் பெரிய ஆட்கள் வீட்டில் நாகூர் ஹனிபா, உசேன் பாகவதர் திருச்சி இசைமணி யூசுப் பாடல்கள் போடுவார்கள். 
திமுக அபிமானிகள் வீட்டில் எம்ஜிஆர் பாடல்களும் , காங்கிரஸ் குடும்பத்து வீடுகளில் சிவாஜி பாடல்களும் தெருவில் ஒலித்துக் கொண்டே இருக்கும். 

என்னா சத்தம் ....என்னா சத்தம் காதே செவிடாகி விடும் போலிருக்கிறது என்று சொல்லிக் கொள்வார்கள். 

கல்யாண வீட்டுக்காரன் பாட்ட போட்டா... போட்டுத் தொலைகிறான். என்று சொல்பவர்களும் உண்டு. 

சில தெருக்களில் கந்தூரி வந்துவிட்டால் அப்பொழுதும் போடுவார்கள். 

மேலப்பாளையத்தின் சவுண்ட் சர்வீஸ் காரர்கள் பக்கத்து ஊர்களில் உள்ள கோயில் சர்ச் திருவிழாக்களுக்கு சென்று நாட்கணக்கில் தங்களுடைய ஒளி ஒலி அமைப்பு வேலைகளை செய்வார்கள். 

முஸ்லிம் சமுதாய மக்கள் வாழும் பகுதிக்கு பக்கத்தில் உள்ள சகோதர பெருமக்கள் வாழக்கூடிய பகுதிகளில்,  கல்யாணம் எல்லாம் வீட்டு வாசலில் வைத்து தான் நடக்கும் அல்லது வீடுகளுக்கு உள்ளே வைத்து முற்றங்களில் பந்தல் போட்டு நடத்துவார்கள். 
இப்ப மாதிரி கல்யாண மண்டபங்களுக்குப் போய் நடத்துவது என்பது ரொம்ப அபூர்வம். 
குறுக்குத்துரை முருகன் கோயில், நெல்லையப்பர் கோயில், சாலைக் குமாரசாமி கோயில் என்று போய் தாலி கட்டி விட்டு இங்கே வந்து சடங்குகள் செய்வார்கள். 
கொஞ்சம் பேரு அமர்ந்து சாப்பிடுவார்கள் அவ்வளவுதான். 
அங்கேயும் ரெக்கார்டுகள் ஒலிபெருக்கிகள் மூலமாக ஒலிக்கும். 

எங்கப் பக்கத்து அம்மன் கோயில் வருஷ கொடை நடக்கும் போது.... ஒரு ரெண்டு மூணு நாளைக்கு பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். 
பெரும்பாலும் டி எம் சௌந்தர்ராஜன்,  சீர்காழி கோவிந்தராஜன் , தண்டபாணி தேசிகர் பாடுகிற பாட்டாகவே இருக்கும். 

பிற்காலத்தில் பி சுசிலா பாடிய மாணிக்க வீணை ஏந்தும் பாடலும் எல் ஆர் ஈஸ்வரி பாடிய செல்லாத்தா ....மாரியாத்தா பாடலும் ரொம்ப ஃபேமஸ். 

ஒரு காலத்தில் வெளிவந்த ஒரு ரெக்கார்டில் டி எம் சௌந்தரராஜன் முருகா என்றழைக்கவா.... முத்துக்குமரா என்றழைக்கவா ....கந்தா என்றழைக்கவா கதிர்வேலா என அழைக்கவா.... எப்படி அழைப்பேன்..
 உன்னை எங்கே காண்பேன் என்று பாடியிருப்பார். 

அதே ரிக்கார்டில் அடுத்த பக்கம் முருகனென்ற ழைத்தால் என்ன.. குமரன் என்று ரைத்தால் என்ன....
கந்தன் எனச் சொன்னால் என்ன ....
கார்த்திகேயன் என்றால் என்ன ....எப்படியும் அழைக்கலாம் எங்கிருந்தும் பார்க்கலாம்...
என்று சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருப்பார். 
அந்தப் பாட்டைக்கேட்பதற்கு எங்கள் பக்கம் உள்ள பல பெருசுகள் கோயில் வாசலில் இருப்பார்கள். 
அது ஒரு ரெக்கார்டு தான். 

கந்தூரி நாட்களில் மீரா பள்ளிவாசல் மினாராவின் மேல்தட்டில் மிக நீண்ட குழாய் ஒலிபெருக்கி வைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து வருகிற பாட்டுச் சத்தம் பாதி ஊருக்காவது கேட்கும். 
10 நாட்கள் தொடர்ந்து அந்தச்சத்தம் ஓயாது.
காலையிலும்  மாலையிலும் நாகூர் ஹனிபா பாடல்கள் ஒலிக்கும். 
இரவு 8 மணிக்கு மேல் சினிமா பாடல்கள் தான். 
விளம்பரம் செய்கின்றவர்கள் இடையிடையே மேலப்பாளையம் வியாபாரிகளின் விளம்பரத்தை சொல்லிவிட்டு மவுத் ஆர்கன் வைத்து ஒரு சவுண்ட் கொடுப்பார்கள். அது வித்தியாசமாக இருக்கும். 

ஒரு எம்ஜிஆர் பாட்டு,  ஒரு விளம்பரம்... அப்புறம் சிவாஜி பாட்டு , விளம்பரம். சில வேலைகளில் ஜெய்சங்கர் , ரவிச்சந்திரன் பாடல்களும் போடுவார்கள். 
என் சிறு வயதில் அங்கே கேட்ட எம்ஜிஆர் சிவாஜி பாடல்கள் அல்லது நாகூர் அனிபா பாடல்கள் இன்று கேட்டாலும் மீரா பள்ளிவாசலும் அதன் குழாயில் ஒலித்த பாடல்களும் தான் நினைவுக்கு வருகின்றன. 

மீரா பள்ளிவாசலில் இருந்து ஒரு 100 அடி தூரத்தில் தான் என் தாய் வீடு இருந்தது. 
விழாக்கள் நடக்கின்ற காலங்களில் அங்கே இருந்து ,அந்த கந்தூரி கடைகளை எல்லாம் பார்ப்போம். 
இன்றைக்கு பொருட்காட்சிகளில் என்னென்ன கடைகள் எல்லாம் போடுகிறார்களோ அதே கடைகளை, மலிவு விலை சாமான்கள் விற்பதற்காக அங்கே போடுவார்கள். 
பெண்கள் அணியும் வளையலிலிருந்து... கொண்டையில் மாட்டுகின்ற  சமாச்சாரங்கள்.... குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள் என்று வியாபாரங்கள் பரபரப்பாக நடக்கும். 
அந்த காலத்தில் மேலப்பாளையத்தில் பேமஸ் ஆக இருந்த அலாவுதீன் ஸ்டோர் லாலா மிட்டாய் கடை தகர கொட்டகை அமைத்து ஒரு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குநடத்துவார்கள். சிறிய அளவிலான ராட்டினம், கொடைராட்டினம் அங்கே இருக்கும். 
1975- 80 காலகட்டங்களில் எங்கிருந்து வருகிற நாடோடி கூட்டத்தினர் கதாநாயகர்கள் போல வேசமிட்டு கொண்டு பாடல்கள் பின்னணியில் ஒலிக்க ஆடல் பாடல் நடத்துவார்கள். 
அப்படி ஆடுவோர்களை பார்க்கும்போது அவர்கள் சோகமே இல்லாதவர்கள் என்று தோன்றும். எப்போது முகத்தில் ஒரு செயற்கையாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் கூட பளபளப்பாக இருக்கும். சில வேளைகளில் சிறிய அளவிலான சர்க்கஸ் காட்சிகள் கூட அங்கே நடக்கும். 

இன்னைக்குப் பிள்ளைகளிடம் ரெக்கார்டு பிளேயர் என்று விளக்கம் சொன்னால் அவர்களுக்கு புரிவதில்லை. 
ஒன்னரை சான் வட்ட வடிவில் கருப்பு நிற அரக்கு தட்டுகள் ஒரு மோட்டாரில் ஓடும். ஓடுகிற அந்த தட்டின் மீது ஊசி ஒரு கைப்பிடியோடு உரசி செல்லும். 
அதிலிருந்து வருகின்ற ஒலி ஆம்ப்ளிபையர் மூலமாக ஸ்பீக்கர்களுக்கு செல்லும். 
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடக்கும்போது காலையிலிருந்து ரெக்கார்டு பிளேயர் வைத்து தங்கள் கட்சி கொள்கை பாடல்களை போடுவார்கள். திமுக கூட்டங்களில் நாகூர் அனிபா கொள்கை பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும். 
கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே, 4 கோடி மக்களுக்கு தலைவன், கழகம் நல்ல கழகம், ஓடி வருகிறான் உதயசூரியன் தமிழகத்தின் தவப்புதல்வன் தரணி போற்றும் செயல் வீரன் அமுத வாஞ்சை நிறைந்த அன்னை அஞ்சுகத்தின் செல்வ மகன் அண்ணாவின் தம்பி அவன் என்று நீண்ட எடுப்புக்களோடு உள்ள பாடல், எஸ் சி கிருஷ்ணன் பாடிய திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பாடல் பிற்காலத்தில் இறையன்பன் குத்தூஸ் பாடுகிற பாடல் ஒலிபரப்பாகிறது.

முஸ்லிம் லீக் கூட்டங்களில் நாகூர் ஹனிபா பாடல்கள் மட்டும் போடுவார்கள். ஒரு காலகட்டத்தில் அத்தோடு ஏ ஆர் ஷேக் முகம்மது பாடல்களும் ஒலிக்கும்.

1972 ஆம் ஆண்டு துவக்கம் செய்யப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுக் கட்டங்களில் 1977 வரை எம்ஜிஆர் சினிமா படப் பாடல்கள் தான் ஒலிக்கும். 

1977 பொதுத் தேர்தலுக்காக அதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் மக்களாட்சி மலர வேண்டும் அண்ணா திமுகவுக்கு ஆதரவு தாருங்கள் என்று அவரது பேச்சை பதிவு செய்த இசைத்தட்டு எல்லா கூட்டங்களிலும் ஓடிக் கொண்டிருக்கும். வாசலெங்கும் இரட்டை இலை கோலம் போடுங்கள்....,
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் எந்த கரங்களோ..., புரட்சித் தலைவர் வழி நடப்போம் ...புதிய சமுதாயம் இனி அமைப்போம் என்ற பாடலும் ஓடிக் கொண்டிருக்கும் 

காங்கிரஸ் கட்சிக்கூட்டங்களில் பெருந்தலைவர் காமராசரை வாழ்த்திப் பாடுகிற பாடல்கள் ஒலிக்கும். அவை மிகக் குறைவானதாக இருக்கும். 

நர்மதை ஆற்றின் கரையில் பிறந்தார் காந்தி மகான் என்று டி எம் சௌந்தராஜன் பாடுவார். பெரும்பாலும் சிவாஜி நடித்த படங்களில் உள்ள பாடல்கள் தான் போடுவார்கள். 
திமுக நண்பர்களைப் பார்த்து கேள்வி கேட்கிற மாதிரி உள்ள சில பாடல்களும் ஒலிக்கும். தங்கப்பதக்கம் படத்தின் வசனங்களை காங்கிரஸ் கூட்டத்தில் ரெக்கார்டு போடுவார்கள். 
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் காங்கிரஸ் கூட்டத்தில் " என்னய்யா பாட்டுகள் கட்டியிருக்கீங்க....

 திமுக காரனை பாருங்க. ஓடி வருகிறான் உதயசூரியன் என்று நாகூர் ஹனிபா பாடும் போது திமுக காரங்கள் எல்லாம் ஓடி வருவார்கள். அழைக்கின்றார் அண்ணா பாட்டைக் கேட்கின்றவர்கள் அண்ணா பக்கத்தில் நின்று அழைப்பதாக எண்ணிக் கொண்டு போவார்கள். 
நம்ம கட்சியிலும் பாட்டை போடுகிறார்கள். உன்னைப் போல் ஒருவன் உண்டோ உத்தமனே.... என்கிற பாடல் ஒப்பாரி வச்சி அழுவது  போல் இருக்கிறது"...... 
என்றெல்லாம் கேலி கிண்டல் செய்வார். 

ஒரு காலத்தில் ஒரு பக்கத்தில் 3.20 நிமிஷங்கள் போடக்கூடிய பாடல்கள் மட்டுமே அமைந்திருக்கும். 
அந்த அளவுக்குள் தான் பக்தி பாடல்கள் ,அரசியல் கட்சி பாடல்கள்,  சினிமா பாடல்கள் அமைந்திருக்கும். அதன் பிறகு ஒரு பக்கத்தில் ஒரு பாடல் என்கிற நிலைமை மாறி ஒரு பக்கத்தில் நான்கு அல்லது ஐந்து பாடல்களும் மறுபக்கத்தில் நான்கு அல்லது ஐந்து பாடல்களும் பதிவு செய்து ரெக்கார்டுகள் வெளிவந்தன. 
அதன் பிறகு ஒரு பக்கத்தில் பத்து பாடல்கள் மறுபக்கத்தில் பத்து பாடல்கள் என்று சொல்லப்படக்கூடிய அளவில் எல் பி லாங்க் பிளே ரெக்கார்டுகள் வந்தன. ஒரு காலகட்டத்திற்கு பிறகு சிடி பதிவுகள் மிகத் துல்லியமான அளவோடு ஒரு பக்கத்தில் 10 அல்லது 15 பாடல்களோடு வந்தன. 
அதற்குப் பின்னணி mp3 சிடிகள் 150 பாடல்களுக்கு மேலாக பதிவு செய்யப்பட்டு வந்தது அதிசயமாக பார்க்கப்பட்டது. 
தற்போது பென்டிரைவ் மூலமாக ஆயிரக்கணக்கில் பாடல்களை சேகரித்து கேட்க முடிகிறது. 
ஆனாலும் அந்த கருப்பு அறக்கு தட்டு ரெக்கார்டுகள் தந்த இனிமையை இப்போதைய mp3 சிடி தட்டுகள் பென்டிரைவுகள் தர முடியவில்லை. 
இன்றும் மேலை நாடுகளில் இசை விற்பன்னர்கள் தங்களது பாடல்களை அரக்கு தட்டுகளில் பதிந்து பாதுகாத்து வெளியிடுகிறார்கள். 
அரக்குதட்டு ரெக்கார்டுகளை பார்த்தவுடன் இத்தனை சிந்தனைகள் நினைவுகளோடு வந்தன.

திங்கள், 23 செப்டம்பர், 2024

வரிச்சோறு

"வரி வைக்கனுமே "....
"அப்படியா.... ரொம்ப சந்தோசம்... வரி வச்சிடுவோம்". 
"எப்ப வைக்கனும்....
சொல்லுங்களேன், என்னைக்கு வைக்கலாம்? "....
" நீங்க ஊர்ல இருப்பியள்ள?
ஞாயித்துக் கிழமை சரியா இருக்குமா?.....
அன்னைக்கே ரசூலுல்லாஹ் கந்தூரி ஊர் வரி வச்சுக்கிடுவோம்" . 

எவர் ஊர் வரி தருகிறார்களோ அவங்க வீட்டு நல்லது பொல்லதுகளுக்குத் தான் ஊர்க்காரங்க போய் நின்னு நடத்துவாங்க. எங்க ஊர் பக்கம் எல்லாம் தனித்தனி தெருக்களைக் கூட ஊர் என்று சொல்வார்கள்.

இப்போ உள்ள இளைஞர்கள் சிலர்  சோத்துக்கு என்று வரி தர மாட்டோம் .....ஆனாலும் நல்லது நடக்கட்டும் என்று நன்கொடையாகவும் பல தெருக்களில் கொடுத்து விடுகிறார்கள். மகனுக்கு தெரியாமல் சாப்பாட்டை வாங்குகிற தாய், தந்தைமார்களும் உள்ளார்கள்.

எங்க இஸ்மாயில் பெத்தாப்பா சொல்லுவார், " வே.... பேரப்பிள்ளே ...இந்த வரியை வாங்கி சோறு மட்டுமாவே ஆக்குறோம்... இல்லவே ....
யாராவது செத்துப் போயிட்டா மய்யித்தை எடுக்க..... சில குடும்பங்கள்ள‌ கொடுக்க காசு இருக்காது... நாம ஒரு அரை மணி நேரம் பாக்கணும். அதுக்குள்ள தரலன்னா.... அதுக்குப் பொறவு மையத்து செலவுக்கு ....  ஊர் கணக்குல இருக்கிற பணத்தை எடுத்து மையத்துக்கு துணிமணி எடுக்கணும் .....குழி வெட்டனும் .....குழி வெட்டுறவனுக்கு உண்டான கூலியை நாமளே கொடுத்துடனும்.... அதுக்கெல்லாம் ஊர் வரி மிச்சம் வர தொகையை தான்வே வச்சிருக்கோம்.... உமக்கு புரியுதா?
எவராவது அசலூருக்  காரங்க வந்து சாப்பிட வழியில்லை,..... ஊர் போறதுக்கு காசு இல்ல என்று கேட்டாலும் ஊர் பண்டில இருந்து தான்வே.... கொடுக்கணும்.... சில வீட்ல குடும்பத்தில் பெரியவன் திடீர்னு செத்து போயிட்டான்னு வச்சுக்கோ... அந்தக் குடும்பத்து சாப்பாட்டு செலவுக்கு காசு இல்லன்னா, அதுவும் நாமதான்வே கொடுக்கணும்......தெரியுதாவே?" 
 என்று என்னுடைய சின்னஞ்சிறிய வயதில் சொல்லி இருக்கிறார். ஆக சோறாக்குறதுக்கு மட்டும் இந்த வரி இல்லை என்பதும் புரிந்து கொண்டேன்.... 

பலவகையான பஞ்சாயத்துக்கள் ஊர் வரி வைக்கிற கூட்டத்தில் தான் அரங்கத்துக்கு வரும். 

ஊரை விட்டு ஓடிப் போனவன்.... ஊருக்குத் தெரியாமல் தாலி கட்டியவன்..... இதற்கெல்லாம் அங்கீகாரம் கொடுப்பதற்கு பஞ்சாயத்துகளும் நடக்கும். ...

 பாகப்பிரிவினை.... பங்காளித் தகராறு..... பொதுச்சுவர் சண்டை..... கொடுக்கல் வாங்கல்.... இவையெல்லாம் தீர்த்து வைக்க , குடும்பப் பலத்தை.... செல்வாக்கை சில பேர்கள் காட்டுவதும் உண்டு. 
100 க்கு  99 சதவீதம் நேர்மையான தீர்ப்புகளே வழங்கப்படும்.

எங்க வாப்பா இருக்கிற வரை நானும் என் தம்பியும் ...."எதுக்கு வாப்பா இந்த பஞ்சாயத்துக்கெல்லாம் போறீங்க  "  ?......என்று குறை சொல்வோம். 

எங்கள் வாப்பா சொல்வார்...
 " நம்மள மாதிரி குடும்பத்து க்காரங்க சொல்றத மத்தவங்க கேட்பாங்கங்கிற நம்பிக்கையில தாங் கூப்பிடுறாங்க ......நாம போய் சொல்றோம். அதப் பல நேரங்கள்ள ஒத்துக்கிறாங்க ..... ஏத்துக்கிடும் போது எம்புட்டு நெறைவு மனசுக்கு வருமோ.... அத மாதிரி அவன் ஏத்துக்கிடாட்டாலும் மனசு ஒத்துக்கிடனும்.... நமக்கு என்ன யாரும் ஃபீசா தர்றப் போறாங்க?...
நமக்கு தெரிகிற நியாயத்தை சொல்லுறோம். அவ்வளவுதான். 
என்று என் தந்தை சொல்லுவார். 

என் தந்தை காலமானதற்குப் பிறகு இது மாதிரி ஜமாத் கூட்டங்களுக்கும்.... வரி வக்கிற கூட்டங்களுக்கும் அழைப்பார்கள் . 

நல்ல மாதிரியா எல்லாம் நடக்கட்டும்ங்கிற நம்பிக்கையோடு தான் போவோம். சில நேரங்களில் எடக்குமடக்கான கேள்விகளும் வரத்தான் செய்யும். அதையும் மனதில் வாங்கிக் கொண்டு தான் வந்துடுவோம். 

ஊர் ஜமாத் , பள்ளிவாசல் ஜமாத் பல இடங்களில் இருக்கும்.

யாருக்குக் கட்டுப்படுகிறானோ இல்லையோ ......ஊர் ஜமாத்துக்கு கட்டுப்பட்டே இருப்பான்.
ஜமாத்தை நம்பித் தான் அவர்களுடைய வீட்டில் வயதான தாயையும் ..... தகப்பனையும்.....மனைவி.... மக்களையும் .....பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பிக்கையோடு வெளிநாடுகளிலே பலர்  வேலை செய்கிறார்கள். 

அவ்வாறு இருக்கும் இளைஞர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை ஊருக்கு அனுப்பி.... இன்று தெருவுக்குத் தெரு பைத்துல் மால்கள் என்று சொல்லப்படும் வட்டி இல்லாத , பலன் எதிர்பார்க்காத கடன்கள் வழங்கும் சங்கங்கள் பலவற்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
 சில இடங்களில் மருத்துவச் செலவுவிற்கு ....படிப்புச் செலவிற்கு.... மாதம் தோறும் அரசு கொடுக்கும் பென்ஷன் போன்று வழங்குவதற்கு.... ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முன்வந்துள்ளார்கள். 

பசியோடு யாரும் உறங்கக் கூடாது என்ற வைராக்கியத்தில் பசி தீர்க்கும் பணியிலும் மகத்தான உள்ளங்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

முன்னெல்லாம் பள்ளிவாசல் மோதியார் வந்து வீடு வீடாக  அழைப்பார்....
இப்ப அப்படி இல்ல. பள்ளிவாசல் மைக்ல சொன்னாலே போதும். 
ஊர் வரி வக்கிற போது தான்.... ஆறு மாசத்து ஆவலாதிகள் எல்லாம் வந்து போகும். 

அடுத்த வரி ஷாபி  இமாம் கந்தூரி வரிதான்... என்னைக்குடா வரி வைக்கிற கூட்டம் நடக்கும் என்று சிலர் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். 

ஊர்க் கணக்க வாசிங்க.... கேப்போம்...
அரிசி பருப்பு, காய்கறிகள் சாப்பாடு ஆக்குற பண்டாரிகள் கூலி உட்பட இம்புட்டுச் செலவு...

 இறந்து போனவங்க வீட்டுக்கு கேக்கும் டீயும் வாங்கி கொடுத்த செலவு..... கல்யாணப்பந்தல் போடுற வீட்டுக்காரன் கொடுத்த வரி பணம்.... அடுத்த தெரு பையன் மாப்பிள்ளை ஆக தெருவில் வருவதற்கு நிக்காஹ் பதிவுப் புத்தகம் கொடுக்கிற ஊர் வரிப்பணம்.... சுன்னத்து கல்யாணம் பண்ணுகிறவன் கொடுக்கிற பணம்..... நன்கொடையாக வந்த பணம் என்று வரவு இனம் காட்டும். 

பெரும்பாலும் ஊர் ஜமாத்களில் பணத் தாவாக்களே இருக்காது. பெருந்தன்மையோடு செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள். எவர் மீதும் எவருக்கும் நம்பிக்கை குறைபாடுகளே வராது. 
நபிகள் நாயகம் கி.பி. 570 ஆம் ஆண்டு சவுதி அரேபியா புனித மெக்கா நகரில் , ஒரு திங்கட்கிழமையில் ரபியுல் அவ்வல் என்கிற அரபி மாதத்தின் பனிரெண்டாம் நாளில் பிறந்தார்கள்.
தமது அருபத்தி மூன்றாம் வயதில் 633 ஆம் ஆண்டு மதினா நகரில் அவர்கள் மறைந்தார்கள்.... அவர்கள் இறந்ததும் அதே ரபியுல் அவ்வல் அரபி மாத 12 ஆம் நாளாகும். 

நபிகள் நாயகம் பிறந்த நாள் ரபியுல் அவ்வல் 12 என்று அறிவித்தே பல இடங்களில் மீலாதுப் பெருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. 
சில இடங்களில் ரபியுல் அவ்வல்  12க்குப் பின்னர் வருகின்ற திங்கள் கிழமை நாளை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். 

தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் சின்னஞ்சிறிய ஊர்களிலும் பேரூர் களிலும் நபிகள் நாயகத்தின் பெயரால் அனைத்து மக்களும் நல்ல உணவு உண்ண வேண்டும் என்பதற்காகவே ஊரில் பொதுவாக சமையல் செய்து வழங்கப்படுகின்றது.
1975 ஆம் ஆண்டு வரை பிரியாணி சாப்பாடு என்பது இஸ்லாமிய சமூகத்தின் உயர்த்தட்டு மக்கள் மட்டும் சாப்பிட்டு வந்ததாகும் என்பதைச் சொன்னால் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 பெரும்பான்மையான திருமணங்களில் வெண்சோறும் ஆட்டி இறைச்சியும் புளிப்பு சுவையுடன் கத்தரிக்காய் சாம்பாரும் வழங்கப்படும். 
மாப்பிள்ளையை ஸ்பெஷலாக கவனிக்க வேண்டும் என்பதற்காக மறு வீடுகளில் தேங்காய் சோறு என்று தேங்காய் பாலில் நெய்ச் சோறு தயார் செய்வார்கள். 
இன்று தேங்காய் சோறு என்கின்ற முறையே மாறி நெய் தாளிச சோறு பல இடங்களில் வழங்கப்படுகிறது.
ஏழையும் பணக்காரனும் ஒரே வகையான சாப்பாட்டை சாப்பிடுகிற முறை உள்ளது .அத்துடன் பல இடங்களில் உணவு தயாரிப்பதற்கு அல்லது இறைச்சி அத்துடன் சேர்த்து வழங்குவதற்கு, கத்திரிக்காய் சாம்பார் எங்க ஊரு பக்கம் கத்தரிக்காய் ஆணம் என்று சொல்வார்கள் அதையும்  வழங்குவதற்கு தாராளமாக நன்கொடை வழங்கக்கூடிய குடும்பத்தினரும் உள்ளார்கள். 
சில குடும்பங்களில் அந்த சாப்பாடு தயார் செய்வதற்குரிய அரிசியையும் வாங்கிக் கொடுப்பார்கள்.

இப்போதெல்லாம் தலைக்கட்டு வரி என்று யாரும் கொடுப்பதில்லை. கும்பா என்று சொல்லப்படும் ஒரு பாத்திரத்தின் அளவிலேயே வாங்குகிறார்கள். 

 திருமணத்தின் போது சில வீடுகளில் ஏழு அல்லது ஒன்பது சாமான்கள் கொடுப்பார்கள். இரண்டு செப்பு க் குடங்கள், ஒரு தவலைப் பானை, ஒரு அரிசிக் கட்டி, ஒரு சொம்பு, ஒரு குழுவட்டு, ஒரு கும்பா... இத்தோடு ஜமுக்காளம் ,பாய் தலையணை, ஒன்று இரண்டு ஐந்து ஏழு பதினொன்னு என்று வாழைக்குலைகள் அனுப்புவார்கள். 
அதில் உள்ள கும்பா என்கின்ற பாத்திரம் பித்தளையால் ஆனது. ஒரு காலத்தில் கும்பா நிறைய சம்பா சாப்பாட்டை ஒரு நபர் சாப்பிட முடியுமாம். இரண்டு கும்பா சாப்பாடு இருந்தால் ஒரு தலைக்கட்டு என்று சொல்வார்கள். ஒரு குழந்தை மேல அதிகமாக இருந்தால் ஒன்னறை தலைக் கட்டு என்று வரி வாங்குவார்கள். இப்போதுள்ள உணவுப் பழக்க வழக்கத்தில் ஒரு கும்பா சாப்பாட்டை இரண்டு அல்லது இரண்டரை பேர் சாப்பிட முடியும். 
அந்த அளவுக்கு வயிறு சுருங்கி போய்விட்டதோ தெரியவில்லை. 

ஆகவே தெருவில் வினியோகிக்கப்படும் ஊர் வரிச் சாப்பாட்டிற்கு ஒரு கும்பா 130 140 150 என்று நிர்ணயம் செய்து வாங்குகிறார்கள்.
ஊர் சமூகத்தை நம்பி வாழ்கின்ற சிகை அலங்காரம் செய்வோர், துணிமணிகளை துவைத்துக் கொடுப்போர்,  இன்று அயர்ன் செய்து கொடுப்போர்.... தெருவில் தூய்மைப் பணி செய்யக்கூடிய துப்புரவு பணியாளர்கள் என்று உள்ளோருக்கு இலவசமாகவே வழங்குவார்கள். 
இந்த வரிச் சாப்பாட்டின் பெருமை என்னவென்றால் முஸ்லிம் சமூக மக்களோடு இணைந்து வாழக்கூடிய சகோதர இந்து சமுதாய பெருமக்களும் ஒரு கும்பாவிற்கு இவ்வளவு என்று கணக்கிட்டு கொடுத்து.... ஜமாத்துகளிடம் அவர்கள் உண்ணும் அதே சாப்பாட்டை தம்முடைய குடும்பத்துக்கும் பெற்றுக் கொள்வது தான்.

புதன், 18 செப்டம்பர், 2024

10 ஆம் நம்பர் 22 ஆம் நம்பர் பஸ்


 நடப்பது என்பது குழந்தை பருவத்தின் நிமிர்ந்த வளர்ச்சி.

தவள்வது, நிற்பது,நடப்பது, அப்புறம் ஓடுவது எல்லாம் மனித உடலின் வளர்ச்சிகளில் ஒன்று.

வீட்டுக்குள்ளேயே நடந்து வீதிக்கு வெளியில் நடந்து  வாய்க்காலுக்கு.... ஆத்துக்கு போவது என்பது எங்க பக்கம் எல்லாம் சகஜமாகும்.

மனுஷன் நடந்து கொண்டிருந்த வரையில் அவனுக்கு வியாதிகள் எல்லாம் குறைவாகவே இருந்தன. இப்ப நோய் வந்த பிறகு அல்லது வராமல் இருக்க நடந்து கொள்கிறான். 
இன்னைக்கு 5 km 10 கிலோமீட்டர் நடந்தேன் என்பதெல்லாம் பெருமையைப் பீத்திக் கொள்ளத்தான். அல்லது என்னால் இம்புட்டுத் தூரம் நடக்க முடியும் என்பதை காட்டிக் கொள்ளத்தான்.

ஒரு எழுபது எண்பது வருச காலத்துக்கு முந்தி வரை எங்க போறதாக இருந்தாலும்  நட தான்....
வெளியில எங்கயாவது போகணும்னா இளமையான காலத்தில் நடந்து போறது அதுல ஒரு சொகம் இருந்தது...  பொட்டல்புதூர் கொடிக் 
கட்டு பாப்பதுக்கு சாயந்திர வேளைக்குப் பிறகு நடக்க ஆரம்பிச்சு பொலபொலன்னு விடிய முந்தி அங்க போய் சேர்ந்து சந்தனக்கூடு பாத்து வந்த கதை எல்லாம் உண்டு.

மனுசனாகப் பெறந்தவன் நடந்துக்கிட்டு இருந்தா தான் அவனுக்கு மரியாதை.

நட மொடங்கிட்டா அம்புட்டுத் தான். அப்புறம் சீன்ட்ரம் ஆரம்பிச்சுரும்..... நட நட  தான்.

கொஞ்சம் காசு உள்ளவங்க, பணம் நடமாட்டம் இருந்தவங்க வீட்ல சைக்கிள் வாங்கி வச்சார்கள். அந்த காலத்துல அதுக்கு லைசென்ஸ் வேற. 
சைக்கிள் இருப்பதை பெருமையாக பேசிக் கொண்டார்கள்.

திருநவேலி டவுன் ஒரு அஞ்சு ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்ததால் நடப்பது லேசா இருந்தது. 
அதுவே கொஞ்சம் தூரம் ஆகிவிட்டால் மாட்டு வண்டி குதிரை வண்டி தான் என்று இருந்தது. 
டவுன்ல இருந்து சரக்கு வாங்கிட்டு வரவும் இருக்கிற ஜவுளிகளை அங்கு கொண்டு லாரி ஆபீஸ் சேர்க்கவும் மாட்டு வில் வண்டிகளும் சக்கடா வண்டிகளும் தேவைப்பட்டது.

எப்படியோ கொஞ்சம் கால வளர்ச்சியில் பஸ்கள் அறிமுகமாகச்சி.

அதுக்குக் காத்து கிடந்து போறதிலும் ஒரு பெருமை இருந்தது. விட்டுக்கொடுத்தால் யாரும் ஏறலாம் இந்த சமத்துவம் வேறு. 
ஆம்பளைய ஆட்கள் மட்டும் போய்க் கொண்டிருந்த பஸ்ஸில் பொம்பளைகளையும் கூட்டிட்டு போக ஆரம்பித்தார்கள். 
சில குடும்பங்களில் அதுவே சந்தோசமாக இருந்தது. 

திருவிழா நாட்களில் பண்டிகை நாட்களில் டவுனுக்கு போய் தனக்கும் பிள்ளைகளுக்கும் துணி எடுத்து வருவது ஒருவகையான ஆனந்தம். அதுக்காகவாவது தன்னுடைய பெண்டு பிள்ளைகளை பஸ்களில் அழைத்துச் சென்றார்கள்.

.அப்போவெல்லாம் டவுணுக்கு எங்க ஊர் மேலப்பாளையத்திலிருந்து  போக....22  ஆம் நம்பர் பஸ்ஸில் ஏற வேண்டும்.

 அந்த பஸ் வி.எஸ்.டி பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு.... அப்படியே அபுல் கலாம் ஆசாத் வீதி, அண்ணா வீதி, கொடிமரம்,  வாய்க்கால் பாலம், என்று  போய்..... நத்தம் ,கருப்பந்துறை, குறுக்குத்துறை, வாகையடி முக்கு, மேலரதவீதி என்று தளவாய்  அரண்மனை வாசல் முன்பாக நிற்கும்.

கருப்பன் துறை ஏற்றத்தில் இருந்து ,குறுக்குத்துறை திருப்பம் வரை, ரோடு மிகக் குறுகலாகவும்....  கிழக்குப் பகுதி  பள்ளமாகவும், மேலப் பகுதி வயக்காடாகவும் இருக்கும்.

பஸ் முழுக்க ஆள் நெருக்கடி அதிகமாகி...ஒரு பக்கமா சாஞ்ச படி திக்கித் திணறி....போகும்.

சாலையின் விளிம்பை தொட்டுக்கொண்டு பஸ் செல்வதை , உள்ளிருந்து பார்ப்பதற்கு கொஞ்சம் பீதியாகவே இருக்கும்.

 அதற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு, இன்றைய வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி,வாகையடி முக்கு, குறுக்குத்துறை தொட்டு.... பழையபடி மேலப்பாளையம் ஊருக்குள் அண்ணா வீதியில் நுழைந்து... இடது புறம் திரும்பி பஸ்டாண்ட் மருத்துவமனை வாசலில் நின்று, குறிச்சி   இப்போதைய ரவுண்டானா ,விஎஸ்டி பள்ளிவாசல்..... என்று போய்க்கொண்டிருக்கும்.

 அந்தக் காலத்தில் தாஜ்மஹால் டிரான்ஸ்போர்ட் என்று பெயரை வைத்து அந்த பஸ் ஓடிக்கொண்டிருந்தது...

 அந்த பஸ் ஒரு டிரைவர் பாட்டையா ஓட்டிக்கொண்டு இருப்பார்.

 அதற்குப் பிறகு பேரின்பவிலாஸ் பஸ் ஓடத்துவங்கியது.  பின்னர் MPR ட்ரான்ஸ்போர்ட் , அரசு  பஸ்... அதுவும் கட்டபொம்மன் போக்குவரத்து கழகத்தில் இருந்து ஒரேநேரத்தில் பஜார் அண்ணா வீதியில் எதிரும் புதிருமாக 2 பஸ்கள் நுழைந்து செல்லக்கூடிய காலம் ஒன்று இருந்தது.

 இன்றைக்கு 2 கார்கள் சிக்கி முக்கிக் கொண்டு செல்வதை உணர்கின்றோம்.

மேலப்பாளையத்தில் மேற்கு புறத்தில் உள்ள எங்கள் தெருவில் இருந்து  கொடி மரம், அண்ணா வீதி, காயிதே மில்லத் பள்ளிக்கூடம் ரோடு.... உள்ளே நுழைந்து, எதிரே இன்னொரு வேன் அல்லது சிறிய வகை லாரி வந்து விட்டால் அந்த சாலையில் இருந்து வெளியேறுவதற்கு போக்குவரத்தின நெருக்கடியினால் பத்து நிமிடங்கள் ஆகின்றன.

அதற்காகவே வாய்க்கால் பாலம் சென்று கால்வாய் கரை உள்ள சாலையின் வழியாக குறிச்சி வந்து முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி... ஜங்சன், பாளையங்கோட்டை அல்லது அம்பை ரோடு செல்வதற்கு முடிகிறது. 

இந்தச் சாலை விரிவு படுத்தப் பட்டு வருவது.... மேலப்பாளையத்தில் மேற்கு பகுதியில் உள்ள மக்களுக்கு, இன்னும் நத்தம் பகுதியில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பாளையங்கோட்டை போய் வருபவர்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக உள்ளது

 இதற்கெல்லாம் காரணம் அண்ணா வீதி பழைய வீதியாக இருப்பதே.....

அதே நேரம் முன்னர் நடந்தோ....

 சைக்கிளிலோ வந்துதான்  மீன், இறைச்சி, காய்கறிகள் ,பல சரக்குகள் வாங்கி செல்வார்கள்.

 இன்றைய காலம் அனைத்து வீடுகளிலும் ஒன்று இரண்டு பைக்குகள் உள்ளன.

 அந்த பைக்கு களில் வரக்கூடியவர்கள்.... எங்கெல்லாம் செல்கிறார்களோ.... அந்தக் கடை வாசல்....சாலை, அவர்களுக்கு பார்க்கிங் ஆக மாறிவிடுகிறது.

அதுவே அனைத்து போக்குவரத்துகளுக்கும் இடையூராய் மாறிப்போகிறது...

அரசு பஸ் ஊருக்குள் வந்து செல்வது ஒரு நாளைக்கு  பகலில் 12 முறையும்  இரவில் 5 முறையும் வந்து செல்ல வேண்டும் என்பது குறைந்த பட்ச விதியாகும்....

 ஊரில் நெருக்கடியான போக்குவரத்து உள்ளதால்  அரசு பஸ்சை ஓட்டக்கூடிய டிரைவர்கள் எவரும் மேலப்பாளையம் ரூட்டில் வந்து ஓட்ட விரும்புவது இல்லை.

 அண்ணா வீதியில் உள்ள ஹோட்டல்களுக்கு முன்பாக மாலை 7 மணிக்கு பிறகு மிகுந்த சிரமப்பட்டே செல்ல முடிகிறது.

 காரணம் அங்கும் நிறுத்தப்பட்டு உள்ள பைக்குகள் தாம். யாரையும் எதுவும் கேட்க முடிவதில்லை.

 மேலப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பாக 10 ஆம் நம்பர் பஸ் திருநெல்வேலி ஜங்ஷனுக்கு கொக்கிரகுளம் வழியாகச் செல்லும். 

ஒவ்வொரு மணி நேரமும் சொல்லி வைத்தாற் போல் சரியாக வந்து செல்லும் டிவிஎஸ் பஸ் சர்வீஸ் இருந்தது.

 அப்புறம்....  IR, SGKR, GMT கம்பெனி பஸ்கள்.... பாளையங்கோட்டை வழியாகச் சென்று.... திரும்பி... மீண்டும் அதே வழியில் வரும்.

 ஐ ஆர் பஸ் ஓட்டக்கூடிய டிரைவர்கள் பெரும்பாலும் மிக வேகமாக ஓட்டிக்கொண்டு வருவார்கள்.

 ஒரு காலத்தில் மேலப்பாளையத்தில் இருந்து 18 ஆம் நம்பர் பஸ் என்று ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு பஸ் சர்வீஸ் இருந்தது.

 அந்த  பஸ் ஏறி ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு சென்று வந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

 இன்றைக்கு 18 ஆம்  நம்பரையும் காணோம்.

 10 /30 என்று ஒரு பஸ் இருந்தது.

 அந்த பஸ் மேலப்பாளையத்திலிருந்து கோபாலசமுத்திரம் வரை சென்று வரும்.

 நான் விவசாயம் செய்து வருகின்ற காடுவெட்டி கிராமத்திற்கு பஸ் வேண்டும் என்று கேட்டு 14 என்கிற ஒரு பஸ் சர்வீஸ் மேலப்பாளையத்தில் இருந்து சிங்கிகுளம் காடுவெட்டி...

வெங்கட்ரங்காபுரம் வரை சென்று வந்தது.இப்போது 14 A என்று போய் வருகிறது...

 படத்தில் உள்ள பஸ் போன்றே தான் ....தாஜ் மஹால் டிரான்ஸ்போர்ட் பஸ் மேலப்பாளையத்தை சுற்றி வரும்.

 அந்த நினைவுகள் எல்லாம் மனதில் வந்தன.

செவ்வாய், 20 ஜூன், 2023

நாங்க பார்த்த பாளையம் கால்வாய்

 


வியாழன், 2 ஜூன், 2016

பாளையங் கால்வாய்.... அது ஒரு கனாக்காலம் ....

மேலப்பாளையத்தில் நீச்சல் தெரியுமா என்று கேட்கனுன்னா...தப்பட்டா அடிக்கதெரியுமான்னு தான் கேப்பாக..

நாங்கள் சின்ன வயசுப் பய்யங்களா இருந்த போது .....விடுமுறைகள் வந்து விட்டால் எங்க வீட்டுக்குப் பொறத்தாலே ஓடுகிற  பாளையம் கால்வாயில் நீந்தி அழிச்சாட்டியம் பண்ணுவதுதான் எங்க செட்டுகளின்  பொழுது போக்கே.....எங்க ஊரைச்சுத்தி ஓடி....பயிர் பச்சைகளை விளைய வைக்கிற.......அந்தக் கால்வாய்க்கு ஊரு  வச்ச பேருதான் “நம்மாறு”....தாமிரபரணிக்கு பெரியாறுன்னு தான் பேரு.
சேக்காளிகள் ...சங்காத்திகள் ஒன்னு சேர்ந்து கோடைக் காலங்களில் பெரியாத்துலே  தாமிரபரணி ஆத்திலே போய் மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டே  குளிப்பது.....அடடா.....சொல்ல முடியாத சொகத்தைக் கொடுக்கும்....அதுக்கு நிகரா என்னத்த சொல்ல முடியும்?....
டவுசர் போட்டகாலங்களில் அத...... கழ்ட்டி வச்சுட்டு மணிக்கணக்கில் கண்கள் சிவக்க தலைமுடிஎல்லாம் பஞ்சு போலாகி காற்றில் பறக்கும் அளவுக்கு குளிப்போம் குளிப்போம் .....அம்புட்டு நேரம் குளிப்போம்... இதே கோலத்தில் வீட்டுக்கு போனால் அங்கே எங்க வாப்பும்மா தலைமையில் விசாரணை நடக்கும்....
வீட்டுக்கு போக முன்னாலேயே கோணத்து கடையில் மூனு பைசாவுக்கு கரண்டி நிறைய ஸ்டார் ஆயில் வாங்கி தலையில்..... தேச்சிட்டு...அது . ஒழுகி நெத்தி,மூஞ்சி பூராவும் படருகிற அளவில் தான் வீடு போய் சேர்வோம்...
எதுக்காம்?.....குளிச்சது தெரியக்கூடாது என்பதுக்காம்...
ஏதாவது சேட்டை கீட்டை பண்ணி, வழக்கமா எங்களுக்கு விழுகிற அடிகளை தடுத்து நிறுத்தி எங்களைப்  பாதுகாக்கும் வேலைகளை வாப்பும்மா ரொம்ப கவனமா செய்வா.....
ஆனா வாய்க்காலில் குளிச்சு முடிச்சு....தும்மல் விழ வீட்டுக்கு போனால்......அஞ்சாறு அடிகள் அவ கிட்டே இருந்துதான் விழும்..வீட்டுக்குள் நுழைந்தவுடன் கேப்பாள்....
“எலே.....எங்கல போன”?....
“நா....இங்கன தானம்மா நின்னேன்...”
“பொய் சொல்லப்படாது.....மறைக்காம சொல்லு”..... என்று அவ கேக்கும் போது .....வேற எதையும் பேச  முடியாமல் ‘ கல்லூளிமங்கான் ‘ முழி தானாவே வந்துடும்...
போவியா?.....போவியா?....வாயில் இருந்து வார்த்தைகள் வரும்போதே....முதிகில் ரண்டு விழும்......வீராப்பா அடி விழுந்த வலியை..... வெளியே காட்டாமல் .....கண்ணைக் கசக்கிட்டே நிப்பேன்.....கொஞ்சமாவது கண்ணில தண்ணி வந்தாத்தானே....அவ முறைக்கிரதை விடுவா...”.மூஞ்சியப் பாரேன்....மூஞ்சிய...”....அதோடு...... அவளோட.... தாக்குதல் முடிஞ்சிடும்.
“இனி அப்படிப் போகப்டாது...” என்பாள்.
“ உன்ன எங்கனைஎல்லாம் போய்த்  தேட?...நீ ஊடு வந்து சேருற வரைக்கு பயமா இருக்கு.....நெல கொள்ள மாட்டேங்கு........இனிமே இப்பிடி போனே?....அவ்வளோதான் பாத்துக்கோ....பெர்னா சார்கிட்டே போய் சொல்லிடுவேன்.......நீ படிச்சுக் குடுத்த ஆ.....க்கம் இது தானா?....ன்னு   போய் கேட்டுட்டு வந்துடுவேன் ”..... என்று சொல்லி கடும் மிரட்டல் விடுவாள்..
பெர்னா சார் பகவதியா பிள்ளை எங்க பக்கம் கடுமையான வாத்தியார்.....நாங்கல்லாம் அவர்கிட்டே எத்தனை வருஷம் படிச்சோம்னு சொல்லிக்க முடியாது....நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து பொளுகிற வேளையில் பள்ளிக் கூடம் விட்டு, வந்து அவர் வீட்டுக்கு டீயுசன் படிக்க அனுப்பிருவாங்க..
அதென்ன பெர்னா சார்?....ஆங்கில மேதை ,அறிஞன் பெர்னாட்ஷா பேர் அவருக்கு யாரும் வச்சாங்களோ?....இல்ல அவராவே அத வச்சிகிட்டரோ?....ன்னு யாருக்கும் விளங்கியதில்லை.அந்த பெர்னாட்ஷா பேருதான் பெர்னா சார்வாள்ன்னு பரவிடுச்சு....


அந்த மாபெரும் மேதை அவர்கிட்ட படிக்கிற பையங்க கையெழுத்தை ரொம்பநல்லாஆக்கிப்புடுவார்.... சும்மா இருக்கிற நேரம்......தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,திருக்குறள்.....பாரதியார் பாடல்கள், விநாயகர் பாடல்கள் பாடுவார்....திருவாசகம் பாடும்போது பல நேரங்களில் குரல் கம்மிப் போய் அழுதுவிடுவார்....சார்வாள் ஒரு கண் பார்வை கொண்டவர்..... ஆகையால்...அந்த நேரம் .......அவர் அழும்போது நாங்களும் சேர்ந்து  அழுதுடுவோம்...மழை வந்தால் பள்ளிக் கூடத்துக்கு லீவு தான்....காரணம் அவர் வீட்டில் வகுப்புகள் நடந்த இடம் ஒலைக்கூரைகளால் ஆனது....எப்படியும் மழைக் காலத்திலேயே மாசம் பாதி நாள்..... வகுப்பு நடந்தாலே ஆச்சரியம் தான்..
இதெல்லாம் எதுக்கு சொல்ல வந்தேன்னா?........வீட்டில பெத்தும்மா.....உம்மா, வாப்பா கண்ணைத்தப்பி நம்மாத்திலே போய் நீச்சலடிச்சு.....குளிச்சு வந்த கதையை சொல்லும் போது வருவது ....
ஒரு ஆறு...... ஏழு  படிக்கிற காலத்தில்....உள்நீச்சல்..... எதிர் நீச்சல்..... மழைக்காலத்தில் வேகமாக பெருகி வெள்ளம் ஓடும் ஆத்தில்  ....நீச்சல் போடும் தைரியம் கொண்டு இருப்போம்...
ஆனா....எல்லா மக்களும் அவ...... அவ வீட்ல பாத்  ரூம் கட்டி.....  குளிக்க ஆரம்பிச்ச பொறவு ....ரண்டு நடந்துது.....ஒன்னு ஒவ்வொரு வீட்டில இருந்தும் ஏராளமா....... கழிவு நீர் பெருகி ஓடி....  மலச்சாக்கடை  தண்ணியும்....வாறுகாலில் சேர்ந்து  மேலப்பாளையம் காட்டுத்தெருல ஆரம்பிச்சு....ஊர் முழுக்க 80 க்கும் மேற்பட்ட கழிவு நீரோடைகள் ....கால்வாய்  தண்ணியில்   கலந்து ....மொத்தமா பெருகி ........ பாளையங்கால்வாயை ...நம்மாத்தை கூவமாக்கிடுச்சு.....இந்தக் கொடுமை 1987 ஆம் வருஷத்தில் தான் துவக்கம் கொண்டது....
இப்போ யாரும் வாய்க்கா பக்கம் போறதும்  இல்லை...சட்டிப்பானைகள் கழுவ.....துணிமணிகள் துவைக்கக் கூட அங்கே செல்வதில்லை...செல இடங்களில் ...தூண்டி போட்டு ...அல்லது வல வீசி மீன் பிடிக்கிற ஆட்கள் கூட ....தூரமாய் போகிற அளவுக்கு நம்மாறு ஆகிவிட்டது... ...இந்த கொடுமைக்கு யார் காரணம்?.....
மையித்துகள் குளிப்பாட்ட....சோறாக்க.....பாளையங்கால்வாயில் ..... இளைஞர்கள்....கொடத்த வச்சு தண்ணி மெத்திக்கிட்டு  போவாங்க..... கல்யாணத்துக்கு மறுநாள் புதுப்பெண்கள்.......குளிச்சு முடிச்சு ....அந்த ஆத்து நீரை செப்புக்குடத்தில்  பிடித்து..... தூக்கி இடுப்பில் கொண்டு போவார்கள்.........
சாக்கடை கலந்த அநியாயம் ..... இப்போது..... அந்தத்  தண்ணிய சீண்டுவார் யாருமில்லை...அந்த தண்ணீர் என்ன பாவம் செய்தது?
இன்னொன்னு 1987க்கு பொறகு பொறந்த மேலப்பாளையத்து....பையங்களுக்கு  நீச்சல் என்பதே தெரியாமப் போச்சு....அதனாலே ஒரு முப்பது வருஷத்திலே....80 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மூச்சு திணறி தாமிரபரணியிலும் ....பாளையங்கால்வாயிலும்  மூழ்கி இறந்து போய் இருக்கிறார்கள்....
வீட்டுக்கு வீடு நீச்சல் தெரிஞ்சவர்கள் இருந்த ஊரா இன்னைக்கு இப்படி  ஆயிடுச்சு?.....இத மாத்த வழியே இல்லையா?....
பாதாள சாக்கடைகள் அமைக்கப்பெற்ற தெரு வாசிகளும் ....அவர்கள் வீட்டு சாக்கடை தண்ணியை வீட்டுக்கு வெளியே தான் விடுறாக...பல வீட்டு கழி ப்பறைகளுக்கு “ செப்டிக் டாங்கே ”.....வச்சு கட்டுறதில்லை...அவன் வீட்டு கழிவுகள் ....அடுத்தவன் வீட்டுக்கு பக்கத்தில் போய் ....நாத்தக் காடாக்குவதை யாரும் கண்டிக்க முடியவில்லை...இதையெல்லாம் ஒட்டு மொத்தமா சரி செய்ய எத்தனை வருஷங்கள் ஆகப் போகுதோ?..தெரியல்லை...அது முடிஞ்சா பொறவு நம்மாத்திலே போய் மக்கள் குளிக்க ஆரம்பிச்சு....எப்பிடி தப்பட்டா அடிக்க பழகுவாங்களோ?.....
ஆனா....ஒன்னு செய்யலாம்.....ஊரில் நீச்சல் குளங்கள் ஏற்படுத்தலாம்....அதிலே பிள்ளைகள் நீஞ்ச..படிக்கலாம்.. நீச்சல் குளம் ஒன்று அமைக்க வேண்டுமென கட்டாயப் படுத்தி  இருக்கிறேன்.....நிதி தான் வேண்டும்....அரசு தான் அதனை ஏற்படுத்த வேண்டும் .

1 கருத்து:

  1. வாய்காலில் நீச்சலடிக்கும் கதையை சொல்லி,எங்களை பழைய காலத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள் அண்ணே

    பதிலளிநீக்கு

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

" நல்லா இருப்ப......நிப்பாட்டு ".

 அப்போவெல்லாம்..... ரயில் பயணங்கள்ன்னா ....கனவுகள் மாதிரி இருக்கும்.

பக்கத்திலே உள்ள ஊர்களுக்கு போறதா இருந்தாலும்...

மணிக்கணக்கில் பயணங்கள் நீண்டு நெடுப்பமா இருக்கும்....

நினைவு தெரிந்து என்னுடைய தந்தையை பெற்றெடுத்த வாப்பும்மா மற்றும் அவளை ஒத்த வயதுக்காரங்களோடு சிறுவயதில் பொட்டல்புதூர் போக...

ரவண சமுத்திரம் ரயில் நிலையம் போய் இறங்கி உள்ளேன்.

திருநவேலி வீராவரம் ஸ்டேஷனில் இருந்து 45 கி.மீ.தூரத்திற்கு.... அந்தக் காலத்தில் குறைந்தது 3 மணி நேரமாவது ரயில் போகும்.

மதியம் 12 மணி சுமாருக்கு புறப்படும் அந்த ரயில் வண்டி மூனு அல்லது மூனரை மணி வாக்கில் அங்கே போய்ச் சேரும்.

அந்த வண்டி போய்க்கிட்டே இருக்கும் போது....வீட்டுல இருந்து கொண்டு போன...சாப்பாட்டை ஊட்டி விடுவாள்...

சேர்மாதேவி கத்திப் பாலம் அம்பாசமுத்திரம் போளி... இது எல்லாம் கண்டது... அப்போதுதான்.

அந்த வண்டியை ....கரி என்ஜின் பெரும் சப்தமிட்டுக்கொண்டு... புகையை கிளப்பிக் கொண்டு இழுத்துச் செல்லும்.... ஒரு அஞ்சு ஆறு பெட்டிகள் இருப்பது அந்த காலத்தில் பெரிய விஷயம்.

அந்த ரயில் பெட்டியின் உள்ளே புகை வாடையும்....நீராவி வாடையும்....

கலந்த ஒரு கலவையான வாசனை மூக்கில் ஏறிக் கொண்டிருக்கும் .

போகிற போக்கில் நீராவி எஞ்சினின் நீராவியை உண்டாக்கும் நிலக்கரி எரியும் போது ....குப்குப்ன்னு புகை பெருகி வந்து ....ஜன்னல் ஓரம் இருக்கக்கூடியவர்களின் கண்களில் கரித்தூசி வந்து விழும் .

ஜன்னலோரம் இருந்து பராக்கு பார்த்துக் கொண்டிருப்பவர்கள் புகை வந்து கொண்டிருக்கும் போது முகத்தை வேற தெசையில் திருப்பிக் கொள்வார்கள். 

அது ஒரு இளம் பிராயக் காலம்.

அதுக்குப் பொறவு.... பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது மாசிலாமணி சார்வாள் தலைமையில் குற்றாலத்திற்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி இரயில் நிலையம் வரை புகை வண்டியில் சென்று, குற்றாலம் வரை அந்தா இந்தான்னு...

சொல்லி நடத்தியே....

கூப்பிட்டு போன கதை எல்லாம் உண்டு.

அதுக்குப் பொறவு 1981 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்த போது ஜனவரி மாதம் 5 6 தேதின்னு நெனைக்கேன்.... அப்பொழுது எம்ஜிஆர் இரண்டாவது முறையாக ஆட்சியில் ஏறி இருந்தார். நான் பள்ளி மாணவனாக இருந்த காலகட்டத்தில் எங்களை எல்லாம் ஆசிரியர் கோமதிநாயகம் தலைமையில் அன்றைக்கு பணியில் இருந்த அகமது மீரான் , ஹபீப் சார்வாள்கள் பொறுப்பில் கூப்பிட்டுப் போனாங்க....

. மதுரையிலிருந்து புதூர் அருகில் உள்ள அல் அமீன் உயர்நிலைப் பள்ளியில் எங்களை எல்லாம் தங்க வச்சாங்க.....

அப்வவும் கரி வண்டி.... புகையை எழுப்பிக் கொண்டு சென்ற நீராவி எஞ்சின்தான்.

160 கி.மீ.தூர மதுரைக்கு போய்ச் சேருவதற்கு 6 மணி நேரத்திற்கு மேலாக ஆகும். நாங்கள் போன வண்டியோ... இரவில் 11 மணிக்கு புறப்பட்டு விடியக்காலை அஞ்சரை மணி வாக்குல மதுரைல கொண்டு போய் விட்டான்.

அப்படி என்றால் எவ்வளவு நேரம் அந்த கரி வண்டி எடுத்து இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

எனது மாமா மேலப்பாளையம் முன்னாள் சேர்மன், வழக்கறிஞர் எல் கே எம் அப்துல் ரஹ்மான் அவர்கள், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக 35 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்தவர்கள்.

ஒரு காலகட்டத்தில் கல்லூரியின் பொறுப்பு செயலாளராகவும் இருந்தவர்கள்.

மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் 30 ஆண்டு கால தாளாளராக பணி செய்தவர்கள்.

அவர்களுக்கு மிக நெருக்கமாக காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் ஷாம் சிகாபுதீன் ஹாஜி யார் என்று ஒரு பெருந்தகை அதுவும் இலங்கையில் வணிகம் தொழில் செய்து வந்த பெருந்தனக்காரர் இருந்தார்.

அவர்களை அடிக்கடி சந்தித்து வரக்கூடிய வாய்ப்பு என் மாமா அவர்கள் மூலம் ஏற்பட்டது.

மேலப்பாளையத்தில் இருந்து கடிதம்.... காயல்பட்டினத்தில் இருந்து திரும்பவும் கடிதம் என்று தகவல் தொடர்பு பரிமாற்ற பணியில் என்னை அனுப்பி வைப்பார்கள்.

காயல்பட்டினம் செல்வதற்கு பஸ்ஸை விட.... திருச்செந்தூர் ரயில் வண்டியைத் தான் அதிகம் விரும்புவேன்.

இன்னும் ஆசை அதிகம் கொண்டு.... மேலப்பாளையம் குரிச்சியில் அந்த காலத்தில் ரயில் நிலையம் ஒன்று இயங்கி வந்தது.

அங்கே என்னுடைய பள்ளித் தோழன் கிருஷ்ண னின் தந்தை தான் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். 

ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய காலகட்டங்களில் கிருஷ்ணன் என்னோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் தேர்வு நடக்கின்ற காலங்களில் அந்த ரயில் நிலையத்தில் இருந்து கொண்டு படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம் 

அது 12-ஆம் வகுப்பு வரை தொடர்ந்தது .

ஆகவே மேலப்பாளையம் குறிச்சி ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து காயல்பட்டினத்திற்கு அல்லது திருச்செந்தூருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு அந்த ரயிலில் ஆவலோடு ஏறி அமர்ந்து காயல்பட்டினம் செல்வேன்.

அது ஒரு காலம்.

1981 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தான் திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் என்று ரயில் பாதை அமைந்தது.

முதன்முதலாக நாகர்கோவிலில் இருந்து பெருத்த உருவத்தினுடைய நீராவி எஞ்சின் இரண்டு மூன்று பெட்டிகளோடு திருநெல்வேலி ஜங்ஷனை நோக்கி வந்தது.

கொக்கிறகுளம் ரயில் பாலத்தைத் தாண்டிச் செல்ல முடியாமல்.... இந்தக் கரையிலேயே நின்று விட்டது.

காரணம் ...தண்டவாளப் பணிகள் முடியாமல் இருந்த காலம் அது.

அந்த ரயில் பாதை அமைந்ததற்கு பின்னால் நாகர்கோவில் திருவனந்தபுரம் செல்வதற்கும்.... அதையும் தாண்டி கொல்லம், எர்ணாகுளம், கொச்சின் செல்வதற்கும் போய் வந்துள்ளேன்.

இன்னும் பொறுப்புக்கள் பல வந்ததற்குப் பின்னர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலமாக.... சாவக்காடு பகுதிகள் தாண்டி மலப்புறம், பொன்னானி மஞ்சேரி செல்வதற்கும்... கண்ணனூர் வரை போய் வருவதற்கு அந்த பாதையை பயன்படுத்தி இருக்கிறேன்.

சென்னைக்கு வந்து செல்வது என்பது என்னுடைய மாணவப் பருவத்திலேயே துவக்கம் ஆகி விட்டது .

அதுவும் ரயில் ...பஸ் பயணங்கள் என்பவை என்னோடு பின்னிப்பிணைந்தவை.

ஒரு காலத்தில் திருநவேலியில் இருந்து ரயிலில் மாலை நாலு மணிக்கு புறப்பட்டால் மறுநாள் காலை 8:30 அல்லது 9 மணி அளவில் தான் சென்னை எக்மூர் போய் இறங்க முடியும். 

630 கி.மீ....16 மணி நேரங்கள் ரயில்ல போகணும். அப்படி இருந்த காலங்கள் அகல ரயில் பாதை வந்தபோது 14 மணி நேரம் 12 மணி நேரம் என்று குறைஞ்சி... தற்போது பத்தரை மணி நேரத்தில் சென்னை எழும்பூர் போய் சேர முடிகிறது 

1992 93 காலகட்டங்களில் திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வதற்கு உள்ள விருது நகர் வரை மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் மீட்டர்கேஜ் மூலமாக சென்னை செல்வதற்கு திருநெல்வேலி- பேட்டை- தென்காசி என்று போய் சிவகாசி- ராஜபாளையம் என்று தொடர்ந்து விருதுநகரை தொட்டு அந்தப் பாதையில் சென்னை போய் சேர்ந்த நாட்கள் உள்ளன.

ஒரு காலகட்டத்தில் சென்னை செண்ட்ரலில் இருந்து பயணப்பட்டு ஜோலார்பேட்டை அரக்கோணம் ஜோலார்பேட்டை வழியாக எங்கெல்லாமோ சுற்றிக்கொண்டு  திண்டுக்கல் மதுரை வந்து திருநெல்வேலி வரவேண்டிய சூழ்நிலையிலும் இருந்தது.

தற்போது மின் மயமாக்கப்பட்ட பாதையின் மூலமாக மிக வேகமாக ரயில் மூலம் சென்னைக்கு செல்ல முடிகின்றது.

இவையெல்லாம் எதற்காக இங்கே சொல்றேன்னா....ரயில் பயணங்களில் ஒரு காலத்தில் பக்கத்தில் இருப்பவர்களோடு பேசிக் கொண்டிருக்க முடியும். பேச வாய்ப்பு இல்லாத சூழ்நிலைகளில் கைகளில் கொண்டு செல்லும் புத்தகங்கள் நமக்கு பயணங்களில் அதுவும் குறிப்பாக ரயில் பயணங்களில் மிகச்சிறந்த வாசிப்பு அனுபவங்களை கொடுக்கும்.

சில சில வேளைகளில் பக்கத்தில் இருக்கின்ற பேர்வழிகள் பேசுகின்ற தொல்லைகள் தாங்க முடியாமல் கூட புத்தகங்களில் கவனம் செலுத்தி வாசிக்க முடியும்.

அதே நேரத்தில் பல்வேறு பயணங்களில் பக்கத்தில் இருக்கின்ற அதிகாரிகள் அலுவலர்கள் மூலமாக பல்வேறு தகவல்களும் ரயில் பயணத்தில் பெற முடியும் .

ரயில் சினேகம் என்பது 12 மணி நேரத்திற்குரியது மட்டுமல்லாமல்.... சில நட்புகள் நீண்ட நெடிய நாட்கள் வருடங்கள் தொடர்ந்தே வந்திருக்கின்றன .

இப்பவெல்லாம் கிழடுகள் முதல்...

குமரிகள்... சிறுசுகள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு செல் போன்ல பாட்டுகள் கேட்டுகிட்டு ..

முகத்தை ஒரு தினுசா வச்சிக்கிட்டு வருகிற லட்சணத்தைப் பார்த்தாலே சிரிப்புகள் வந்து கொண்டிருக்கும்.

கதைக்கு வருவோம்...... நேற்றைய தினம் திருநெல்வேலியில் இருந்து கல்விப் பணிகள் தொடர்பாக சென்னைக்கு பயணப்பட்டேன்.

வரும்போது இருக்கட்டுமேன்னு.... அடிக்கடி நான் வாசித்து மகிழும்... என்னுடைய அருமை சகோதரர் நெல்லை சுகா அவர்களின் புத்தகமாகிய ...தாயார் சன்னதியையும் , அன்பு அண்ணன் நாறும்பூ நாதனின் வேணுவன மனிதர்கள், அண்ணன் எம்.எம்.தீன் அவர்களின் சந்தனத் தம்மை, கலாப்ரியா அவர்களின் பேரருவி புத்தகங்களையும் எடுத்து வந்தேன்.

என்னை விட ஓரிரு வயதுகள் இளையவரான சுகா அவர்கள் திருநவேலி ஊரைச் சேர்ந்தவர்.


அவர் குடும்பத்தோடு.... தலைமுறைகளான தொடர்பை கொண்டவன்.


அவருடைய தந்தை தமிழ்க் கடல் ஐயா  நெல்லை கண்ணன் அவர்களை... நாங்கள் எல்லாம் வாப்பா முறை வைத்து அழைப்போம்.... அவரும் எத்தனையோ இடங்களில் என்னை மகனே என்று தான் அழைப்பார்.

என்னுடைய பிள்ளைகள் திருமணத்திற்கு முன்னதாகவே வருகை தந்து... ஒரு பாட்டன் அந்தஸ்திலிருந்து குழந்தைகளை எவ்வளவு தூரம் வாழ்த்தி மகிழ்விக்க முடியுமோ அவ்வாரெல்லாம் செய்தார்.

அதுபோல எங்களுடைய வீட்டில் எத்தனையோ முறை அவர்கள் உணவருந்தி சென்றதெல்லாம் மிகப்பெரிய கொடுப்பினை எங்களுக்கு.

அன்புத் தம்பி சுகா அவர்கள் தன்னுடைய சிந்தனையாலும், உழைப்பாலும், எழுத்தாலும், தமிழ்த் திரையுலகத்தின் தகுதியான ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.

இயக்குனர் பாலு மகேந்திராவின் அறிமுகம் பெற்று ...அவர்களுடனே பல்வேறு திரைப்படங்களில் உதவியாளராகப் பணியாற்றினார். அதற்குப் பின்னர் ஓரிரு படங்கள் இயக்கி ...முழு நேரமும் கதை வசனகர்த்தாவாக தன்னுடைய பணியை சென்னையில் நெல்லையில் தொடர்கிறார் .

அவருடைய கதை வசனத்தில் வெளிவந்த நடிகர் கமலஹாசன் அவர்கள் நடித்த பாபநாசம், தனுஷ் நடித்த அசுரன் முதலானவை அவருடைய எழுத்தின் எழுச்சியை வசனங்களில் காட்டித் தந்தன.

திருநெல்வேலி பாஷையில் அவர் எழுதுகின்ற அந்த எழுத்துக்கள் சினிமாவில் மட்டுமல்லாது பார்ப்பவர், கேட்பவர்கள் மனசில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.

அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதி வந்த மூங்கில் மூச்சு என்கின்ற கட்டுரைத் தொகுப்பு உலகளாவிய அளவில் பெருமை சேர்த்தது.

அதனைப் போலவே தாயார் சன்னதி என்கின்ற திருநெல்வேலி பதிவுகள் அற்புதமானவை .

வாசித்து ....வாசித்து மகிழத்தக்கவை.

அதனை நேற்றைய தினம் ரயிலில் சென்னைக்கு வரும்போது வாசித்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் புத்தகத்தில் ஜெயன்ட் வீல் என்கின்ற ஒரு பதிவு உள்ளது.

திருநவேலி பகுதியில் உள்ள குடும்பங்கள் பலவற்றில்...

சினிமா.... பொருட்காட்சி... சர்க்கஸ் ....பார்க்க,  சின்ன ஊரார் போகனும்ன்னா....குடும்பத்தில் உள்ளவர்கள் போக அக்கம் பக்கத்தில் உள்ள பெரிய மனுஷாட்களிடம் ஒப்படைத்து பத்திரமாக கூப்பிட்டு போய்ட்டு வாங்கன்னு.... அனுப்பி வைப்பார்கள்.

என்னையும் அவ்வாறு பலமுறை பொருட்காட்சி, சர்க்கஸ் ,சினிமா.... குறிப்பா எம்ஜிஆர், சிவாஜி சினிமா பார்க்க அனுப்பிச்சு வச்சு இருக்காங்க.

அத மாதிரி ....சுகாவை இளம் வயதில் பொருட்காட்சிக்கு அழச்சிக் கிட்டுபோன பெரியப்பா பற்றி

ஜெயண்ட் வீல் ராட்டிணம்....ங்கிர பதிவை வாசிச்சுக் கிட்டிருந்தேன்.

அதிலே சுந்தரம் பிள்ளை பெரியப்பா என்கின்ற ஒரு கமிஷன் கடை பெரியவர்...

சிவப்பழம் போல இருந்த அவர்,  டி எஸ் பாலையா மாதிரி முழிப்பு உள்ளவர் ... பனியன் மாதிரி மூன்று பித்தான்கள் மட்டும் உள்ள கழுத்தில் வழியாக போடும்  ... அந்தச் சட்டையை அணிந்து திருநெல்வேலி பொருட்காட்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பொருட்காட்சியில் இருக்கின்ற அந்த பெரிய ராட்டினத்தில் ஏறுவதற்கு கொஞ்சம் பெரியவனாக இருந்த சுகா ஆசைப்பட்டதை எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு.... அதில் ஏறி விட்டார்.

மனதளவில் மிகப் பயந்த குணமுடைய சுந்தரம் பிள்ளை பெரியப்பா அந்தராட்டில் ஏறி உட்காரும்போது... ஆண்டவனை துணைக்கு அழ ச்சிகிட்டு... அவருடைய வழக்கப்படி சிவாய நம என்று சொல்லி... கண்களை இறுக்கமாக மூடி ராட்டினம் சுற்றுவத எதிர்கொண்டு இருந்திருக்கிறார்....

ஒரே ஒரு சுற்று தான் போயிருக்கும்...

அந்தப் பெரியப்பா.... ஏ நிறுத்து சின்னப் பையன் பயப்படுதான் னு. பக்கத்தில் இருந்த சுட்டியான சுகாவ பார்த்துக்கிட்டே சொல்லி இருக்கார்.

பெரியப்பா எனக்கு ஒன்னும் பயமில்லை ...ஜாலியாத் தான் இருக்கு ...என்று சொல்லவும் அவர் பார்த்த பார்வை வேறுவிதம் .

இன்னும் கொஞ்சம் வேகம் பிடிச்சதும்.... ஏய் நிறுத்த போறியா இல்லியா? ..ன்னு ஒரு சவுண்டு கொடுக்க... அது ராட்டுக்காரன் காதில் விழவே இல்லை.

இன்னும் வேகம் கூடியதும் ....ஏ ஐயா ....நல்லா இருப்ப.... கூட கொஞ்சம் துட்டு தரேன்... இறக்கி விடுறான்னு சொல்லி.... அழுகை...பீதி....வியர்வை வடிய அவர் போட்டக் கூச்சல் கீழே நின்ற ....மோட்டார் மூலமாக ராட்டு ஓட்டுநவன் காதில் விழவே இல்லை.

அவருக்கு பயத்தில் வேர்த்து விறுவிறுத்து ...இறங்கிப் போய் இருந்த விதத்தை ....அன்பு இளவல் சுகா அவர்கள் தன்னுடைய தாயார் சன்னதி புத்தகத்தில் உள்ள கட்டுரை பதிவு ஒன்றில் ....சிரிக்க சிரிக்க எழுதி இருந்ததை பார்த்து படித்து வாசித்துக் கொண்டிருக்கும் போது.... திருநெல்வேலி பொருட்காட்சிக்கு நான் நேரில் சென்றது.... பார்த்தது போல் உணர்ந்தேன் ....

என்னை அறியாமல் நீண்ட நெடிய நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.

என் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மனிதர் அவரைப் பார்த்தால் பிராமண குடும்பத்தில் உள்ளவர் போல் தெரிந்தது.

அவரும் அவருக்கு எதிரே அவருடைய மனைவியும்  என்னைப் பார்த்துக்கொண்டு ....தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள்.

நான் சிரிச்ச சிரிப்பை பார்த்துவிட்டு.... அடக்க முடியாமல் இருந்த என்னுடைய நிலையை பார்த்துவிட்டு.... அவர்கள் இருவரும் என்னை பார்த்து முறைச்ச முறைப்பு இருக்கே...


புத்தகத்தை மூடி வச்சுக்கிட்டு அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தேன்.

.. சுகா என் கண் முன்னே கதை சொல்லிக் கொண்டிருந்தார் .

சுந்தரம் பெரியப்பா முழுசா.... பே முழி... முழிச்சது என் கண் முன்னே வந்து போய்க் கொண்டிருந்தது.

பக்கத்தில் இருந்தவர் தலையில் அடிச்சிக்கிட்டு...மூஞ்சியை வேற பக்கமா திருப்பிக்கிட்டார்.