புதன், 23 அக்டோபர், 2019

மத நல்லிணக்க மேலப்பாளையத்திற்கு கீழக்கரை வள்ளல் B.S.அப்துல் .ரகுமானின் பரிசு.


நட்பின் பரிசு.
" நீங்க எல்லாம் இருந்துமா  ஒரு பள்ளிக்கூடத்தை இப்படி வச்சிருக்கீங்க.?"

" என்னத்த கேக்க ...சொல்லு மாப்பிள்ளை...." என்று கேட்டான் என் அருமை நண்பன் அம்பிகாபுரம் முத்துப்பாண்டியன். 1992ஆம் ஆண்டு நான் இந்த கேள்வியை என் நண்பனிடம் கேட்டேன்.

 நாங்கள் இருவரும் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ,ஆறாம் வகுப்பு தொடங்கி......,  சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பட்டம் முடிகின்ற வரையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகப் படித்தவர்கள்.

கல்லூரி வகுப்புகளின்  மதிய இடைவேளையில் , என் வீட்டு உணவை அவனும், அவன் வீட்டு உணவை நானும் ஒன்றாக அமர்ந்து உண்டு பரிமாறி பாசத்தை வளர்த்துக் கொண்டோம்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் நகர் பெரும்பான்மையான அளவில் முஸ்லிம் மக்களைக் கொண்டது. அதே ஊரில் இரண்டு தெருக்களோடு ,அம்பிகாபுரம் ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளியும் உள்ளது.

" நான் நேற்று உங்கள் அம்பிகாபுரம் தொடக்கப்பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு மேற்கே உள்ள ரோட்டில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது வகுப்பறையில் பாடம் நடத்த இடமில்லாமல் பிள்ளைகளோடு ஒரு ஆசிரியை அந்தக் கோயிலுக்கு மேற்புறம் உள்ள மரத்தடியில் வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார் .

தரையில் 20 அல்லது 25 பிள்ளைகள் இருந்தார்கள். அந்தப் பொழுதில் அவர்கள் இருந்த இடத்திற்கு ஒரு 20 அடி தொலைவில் சாக்கடைக்கு பக்கம் இரண்டு பன்றிகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு கடும் சீற்றத்துடன் ஊளையிட்டுக்கொண்டே...பிள்ளைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன .
இதனைப் பார்த்த பிள்ளைகள்.... ஓவென்று கத்தவும்.... அந்த ஆசிரியை கைகளில் ஒரு பிரம்பை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நிலைமையும் ....பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்." இதைத்தான் என்னுடைய நண்பனிடம் சொன்னேன்.

" என்னசெய்வது மாப்பிள்ளை?.... எங்கள் பள்ளிக்கு போதுமான இடங்கள் இருந்தும் வகுப்பறைகள் இல்லையே கட்டுவதற்கு பணம் ஒன்றுமே இல்லையே" என்று சொன்னான்.
" ஏன் நீங்கள் சென்று வசூல் செய்தால் நன்றாக இருக்குமே" என்று கேட்டபோது இல்லை... "நாங்கள் இங்குள்ள முதலாளிகளிடத்தில் சென்று நன்கொடைகள் கேட்டால் ....மிக குறைந்த தொகையை தந்து எங்களை அனுப்பிவிடுகிறார்கள்" என்று சொன்னான்.
" நாங்களும் எங்களால் இயன்ற அளவு போய்விட்டோம்.... ஒரு உதவி செய்வியா ? நீ எங்களோடு வந்து பணம் வசூல் வசூல் செய்து தர முடியுமா? என்று என் அருமை நண்பர் முத்து பாண்டியன் கேட்டார்.

 "அப்படியா நான் ....வருகிறேன் நாம் சென்று வசூல் செய்வோம் என்றேன்.
நண்பர் அம்பிகாபுரம் முத்துப்பாண்டியன் இன்றைக்கு நெல்லை ஆவின் பால் நிலையத்தில் மிகப்பெரிய தணிக்கை அதிகாரியாகப் பணி செய்து வருகிறார் .

அன்றைக்கு அவரோடு என்னுடைய நண்பர்கள் சிவாஜி திருநாவுக்கரசு, மயில்வாகனன் முதலானவர்கள் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தார்கள்.

என்னை அவர்கள் மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். நானும் அவர்களை மாப்பிள்ளை என்றுதான் மறுமொழி அழைப்பேன்.
நானும் என்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு நிர்வாகிகளாக அன்றைக்கிருந்த என்ஆசிரியர் கோமதி நாயகம் அவர்களின் அண்ணன் கருப்புசாமி , அன்றைய அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் நல சங்கத்தின் செயலாளர் அருணாசலம் உள்ளிட்டவர்களையும் சேர்த்துக்கொண்டு நன்கொடைகள் கேட்கச் சென்றேன்.

நன்றாக நினைவில் இருக்கிறது அன்றைய பொழுதில் இன்ஜினியர் எஸ்கே செய்யது அகமது அவர்கள் மேலப்பாளையம் ஆசாத் ரோட்டில் சப்பாணி ஆலிம் தெரு விற்கும் , எக்கின் பிள்ளை தெருவிற்க்கும் இடையே, மாடியில் ஒரு அலுவலகத்தை வைத்திருந்தார்கள் .
அவர்கள் மட்டும் ஓரளவு கண்ணியமான முறையில் நிதி உதவி செய்தார்கள்.

மற்றவர்களெல்லாம் 500 ரூபாய்க்கு கீழே உதவிசெய்து அன்றைய பொழுதில் எனக்கு மனதளவில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி தந்தார்கள்.

என்ன செய்யலாம்? என்று யோசித்தோம் .

"எனக்காக ஒன்று செய்ய வேண்டும் .சென்னையிலிருந்து மணிச்சுடர் என்று ஒரு நாளிதழ் வருகிறது .அதற்கு முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது அவர்கள் ஆசிரியராக இருக்கிறார்கள் .அந்த நாளிதழில் நம்முடைய பள்ளிக்கூட தேவையை வெளியிட்டு நாம் நிதி கேட்கவேண்டும்" என்று சொன்னபொழுது... நண்பர்களும் அந்த பெரியவர்களும் உடன் பட்டார்கள் .
அன்றைய காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய் அளவில் கடைசிப் பக்கத்தில் மேலப்பாளையம் அம்பிகாபுரம் துவக்கப் பள்ளிக்கு உதவி செய்யுங்கள் என்று ஒரு விளம்பரம் செய்தோம்.
"கல்விப் பணிக்கு கனிவான வேண்டுகோள்" என்கின்ற தலைப்பில் வேண்டுகோள் விளம்பரம் செய்தோம்.

நம்புங்கள் தோழர்களே அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு நிதி வரும் என்று நினைத்தேன் ஆனால் ஒரு புதையலே வந்தது. அதுவும் ஓரிடத்திலிருந்து மட்டும்.

1992 ஆம் ஆண்டு மத்தியில் நான் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் கல்வி குழு உறுப்பினராக மறைந்த சேர்மன் அல்ஹாஜ் எம் ஏ எஸ் முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர் ஆனேன்.
1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேர்மன் எம் ஏ எஸ் முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்கள் பள்ளியின் தாளளராக தேர்வு செய்யப்பட்டார்கள் .
அதற்குப் பின்னர் பள்ளியின் வளர்ச்சிக்காக தமிழகமெங்கும் அதையும் தாண்டி , அண்டை மாநிலங்களிலும் நிதி வசூல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம் .
அவ்வாறு நிதி திரட்டுவதற்கு ஒரு குழுவாக சென்று பணியைத் தொடர்ந்தோம்.
செலவை மிச்சப்படுத்த சேர்மன் அவர்கள் வைத்திருந்த, அம்பாசிடர் காரில், எரிபொருளை மட்டும் பள்ளிக்கூட செலவில் போட்டுக்கொண்டு, தமிழ்நாடு, கேரளா ,கர்நாடகம் என்று சுற்றி வந்தோம் .
கார் ஓட்டுவதற்கு ஆள் இல்லை. அதனால்...நானே கார் ஓட்டி ஆனேன். பல மாதங்கள் அப்பணியை செய்தேன் .
அதனால் மேலப்பாளையத்தில் "காரோட்டி ...தேரோட்டி" என்று பட்டம் கொடுத்து முஸ்லீம் கல்விக்கமிட்டியை கிண்டல் செய்து ஒருவர் போர்டு... கூட வைத்தார்.

சென்னையில் கீழக்கரை வள்ளல் ஈடிஏ கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களைச் சென்று பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டோம் .

நாங்கள் சேர்மன் அபூபக்கர் சாஹிப் அவர்கள் தலைமையில் பள்ளியின் பொருளாளர் உசேன் உதுமான் , பேராசிரியர் முஹம்மது பாரூக் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஎஸ்டி சம்சுல் ஆலம், வயதில் இளையவனான நானும் சென்று இருந்தோம்.

 பி எஸ் ஏ ரகுமான் அவர்களை சந்திக்க காத்திருந்த பொழுதில், மதுரை பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்களுடன், நீண்ட நெடிய நேரங்கள் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் சென்றதும் நாங்கள் பி.எஸ்.ஏ. அவர்களை பார்ப்பதற்கு உள்ளே நுழைந்தோம்.

எங்களை கல கலப்போடும், மகிழ்ச்சியோடும் பிஎஸ்ஏ ரகுமான் அவர்கள் வரவேற்றார்கள். மேலப்பாளையம் பள்ளிக்காக, உங்களிடம் நிதி கேட்க வந்து இருக்கின்றோம் என்பதையும் சொன்னோம்.
"அப்படியா மிக்க மகிழ்ச்சி.... நானும் மேலப்பாளையம் பள்ளிக்குத் தான் உதவி செய்யப் போகிறேன்" என்றார்.
என்னோடு வந்தவர்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சிக் கடலில் இருந்தார்கள்.

நாம் கேட்கும் முன்பாகவே பிஎஸ்ஏ ரகுமான் அவர்கள் , நம் பள்ளிக்கு உதவிகள் செய்யப் போகிறார் என்கிற எண்ணம் குடி கொண்டு இருந்தது .

"சேர்மன் அவர்களிடம் உங்களுடைய ஊரில்.... யாரெல்லாம் கல்விப் பணி செய்து கொண்டு இருக்கிறார்கள் ? "
என்று கேட்டார் .

" நாங்கள் 1941இல் இருந்து கல்வி குழு மூலமாக கல்விப்பணிசெய்து வருகிறோம். முகம்மது லெப்பை தெருவைச் சேர்ந்த MLM.முகம்மது லெப்பை அவர்கள் 1988 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு என்று பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார் .வேறு சில தனியார்களும்  உயர்நிலை, நடுநிலை, துவக்கப்பள்ளி களை நடத்தி வருகின்ற விதத்தையும் சொல்லி காட்டினோம்.

" இல்லை.... இல்லை... இன்னொருவர் பெயர்... எனக்கு நினைவில் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறது... அவர் யார்?" என்று கேட்டார் .
அப்போது அருகில் வந்த அவரது உதவியாளர் ஹஸன் அவர்களிடம், "அந்தப் பேப்பரை எடுத்து வாருங்கள்" என்றார்.
ஒரு ஐந்து நிமிடத்தில் அவரது உதவியாளர் கைகளில் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு நாளிதழ் இருந்தது .
அது ஆயிரம் ரூபாய் செலவழித்து விளம்பரம் கொடுக்கப்பட்ட மணிச்சுடர் நாளிதழ். அதனைப் பிரித்து பார்த்தார்கள். படபடப்போடு நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

"மீரான் முகைதீன் என்றால் யார் அவர் ? "என்று கேட்டார்.
எங்கள் சேர்மன் "எந்த மீரான் முகைதீன் ?"என்று திரும்ப அவரிடத்தில் கேட்டார்.
" எல் கே எஸ் மீரான் முகைதீன் என்றால் யார் அவர்?" என்று கேட்டார்.
என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்த விஎஸ்டி சம்சுல் ஆலம் அவர்கள்..." நீங்கள் சொல்லுகிற மீரான் மைதீன் ...சாட்சாத் இவர் தான்" என்று என்னை தூக்கி நிறுத்தி அவர்கள் முன்னால் நிற்க வைத்தார்.
" தம்பி நீங்களா இந்த விளம்பரத்தை கொடுத்தீர்கள்? "உங்க வயசு என்ன ?"
"என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று புன்னகையோடு அடுக்கடுக்கான கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.
நான் படபடப்போடு... பயந்து... வார்த்தைகளை மென்று.... விழுங்கி... பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

" நான் பெரிதாக ஒன்றும் தொழில் செய்யவில்லை. எங்கள் குடும்பத்து முன்னோர் பெரியவர்கள் வைத்து சென்றிருக்கிற நிலங்களில், வயல்களில், நெல், வாழை முதலான விவசாயம் செய்து வருகிறேன். ஆடுமாடுகள் வளர்த்து வருகிறேன். என்று சொன்னேன்"

என்னை அவர்கள் இருந்த இருக்கையில் பக்கத்தில் வரவைத்து ,அமர்த்திஅவர்கள் சிரித்துக் கொண்டார்கள்.

அம்பிகாபுரம் பள்ளிக்கூடத்தை பற்றி அதில் படிக்கின்ற 710 மாணவர்களைப் பற்றி..... மேலப்பாளையத்தில் நகரில் அமைந்துள்ள அதன் நிலைமையை பற்றி ....என்னிடத்தில் கேட்கும்போது ஒவ்வொன்றாகச் சொன்னேன்.
" சரி ....நான் இந்த தம்பிக்கு தான் உதவி செய்ய போகிறேன். முஸ்லிம் மேல்நிலைப் பள்ளிக்கு அடுத்து பார்க்கலாம் என்றார்கள். என்னோடு வருகைதந்த பொருளாளர் உசேன் உதுமான் அவர்கள் "என்னப்பா இது? நம்ம பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டிய பணம், உன்னுடைய விளம்பரத்தால் மாறிப் போய்விடும் போலிருக்கிறதே.. என்று என்னோடு காதோடு கேட்டார்கள்.

கொஞ்ச நேரத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஒரு கட்டாக கட்டி என்னிடம் தந்து ,இந்தப் பணத்தைக் கொண்டு அரைகுறை நிலையில் இருந்த மூன்று வகுப்பறை களுக்கும் கான்கிரீட் கூரை அமைத்து , அதற்கு மேல் மூன்று வகுப்பறைகளும் எழுப்பி கட்டிடத்தை முடிக்கவேண்டும் என்று சொன்னார்கள் .

நான் மகிழ்ந்து போனேன். ஆனால் அவர்களிடம் அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டேன்.

இதனை மூன்று அல்லது நான்கு பிரிவுகளாக ஒவ்வொரு கட்டத்திலும் அந்தப் பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு நேரடியாக அனுப்பி வையுங்கள். நான் இதனை வாங்கி கொண்டு செல்வது சரியாக இருக்காது. வீணான சந்தேகங்களை ஏற்பட்டுவிடும் .என்று திரும்ப கொடுத்து விட்டேன்.

" பணத்தை சும்மா கொண்டு போங்க தம்பி ....பணம் தருபவன் நான்.... உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. யார் கேட்டாலும் நான் பதில் சொல்வேன்." என்று சொன்னார்கள்.
" இல்லை வாப்பா" என்று மீண்டும் மறுத்த உடன், வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் நான் சொன்னது போல் நான்கு பிரிவுகளாக அந்த பணத்தை கட்டிடம் கட்டுவதற்கு மேலப்பாளையம் அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஒரே ஒரு நிபந்தனை மட்டும் என்னிடம் சொன்னார்கள்.....

 இந்தக் கட்டிடத்தை திறக்கும்போது ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அருணாசலம் அவர்களை அழைத்து அதனை திறந்து வைத்தால் , முஸ்லிம் சமுதாயமும், ஆதிதிராவிடர் சமுதாயமும் நெருக்கமாக இருக்கக்கூடிய நிலைமையை உலகமெல்லாம் அவர் சொல்லிக் கொள்வார். செய்யுங்கள் என்றார்கள்.

அவ்வாறு அவர்கள் ஆசைப்பட்ட படியே அமைச்சர் எம் அருணாசலம் அவர்கள் அந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்கள் .
வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களுடைய பெயரும் , திறந்து வைத்த அமைச்சர் அருணாசலம் அவர்களுடைய பெயரும் மட்டுமே அந்த கல்வெட்டில் அமைந்திருக்கும் .

என்னுடைய பெயர் என்னுடைய நண்பர்களின், இதயத்தில் மட்டும் என்ற அளவில் உள்ளது.
இதனைத் தெரிந்த நண்பர்கள் குறிப்பாக முத்துப்பாண்டியன், சிவாஜி திருநாவுக்கரசு , பெரியவர் கருப்பசாமி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஎஸ்டி சம்சுல் ஆலம் என்று சிலர் இருக்கிறார்கள்.

இத்தனையும் செய்து கொடுத்த பின்னர்.... நான் எந்த நிர்வாகத்தில் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்தேனோ.... அந்த நிர்வாகம் கட்டிடத் திறப்பு விழாவில் இல்லை .
வேறு ஒரு நண்பர் நிர்வாகியாக மாறி விட்டார்.
நான் அந்தத் திறப்பு விழா மேடையில் அமர்வதற்கு கூட எனக்கு நாற்காலி எதுவும் இல்லை. தூரத்தில் காருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன் .
வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்கள் .
அப்போது அவர்கள் கேட்டார் "எங்கே எல் கே எஸ் மீரான்?... அவருக்குத்தான் இந்த பொன்னாடை பரிசு அளிக்கப்படவேண்டும் .
அவர் பெயரைகூட இந்தப்பட்டியலில் காணோமே? சரி போய் வருகிறேன்... என்று சில வார்த்தைகள் முடித்து விட்டு என்னோடு கிளம்பி வந்து விட்டார்.

கிளம்பி கீழே வரும்போது... அங்கே போர்த்தப்பட்ட பொன்னாடையை எனக்கு போர்த்தி அழகு பார்த்தார்.
கட்டி அணைத்துக்கொண்டார்.

அதற்குப் பின்னர் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக அவர்கள் தந்த லட்சோபலட்சங்கள் என் மூலமாகவே தாளாளர் அவர்களிடம் கொடுக்கப்பட்டன, என்பது காலமெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டியவையாகும்.

இன்றைக்கும் மேலப்பாளையம் ஆசாத் ரோடு வழியாகச் செல்லும் போதெல்லாம், வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் உதவியால், அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் பள்ளிக்கூடத்திற்கு, "யுனைடெட் எக்கனாமிக் போரம் பிளாக்" என்கிற பெயரில், சீதக்காதி அறக்கட்டளை சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்டது என்று பொறிக்கப்பட்ட அந்த வாசகம் என்னை மகிழ்வு படுத்திக் கொண்டே இருக்கிறது.

அந்த வள்ளல் BS.அப்துல் ரகுமானின் கொடைத் தன்மையை புரட்சித் தலைவர் MGR. அவர்கள் தாம் நடித்த, சிரித்து வாழ வேண்டும் என்ற படத்தில்
 ஒன்றே சொல்வான்...நன்றே செய்வான்...
அவனே அப்துல் ரகுமானாம்....என்று கவிஞர் வாலியை வைத்து பாட்டெழுதி  மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் இசையமைத்து TM.சவுந்தார் ராஜனை வைத்து பாட வைத்தார்..



5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மகிழ்ச்சி. அருமை சார்

Rathnavel Natarajan சொன்னது…

மகிழ்ச்சி. அருமை சார்

Rathnavel Natarajan சொன்னது…

மகிழ்ச்சி. அருமை சார்

பெயரில்லா சொன்னது…

வழிபோக்கனாக நீங்கள் பார்த்து சென்ற ஒரு நிகழ்விற்கு நீங்கள் செய்த பணி மகத்துவமானது. அந்த அரசமரத்தடியில் கல்வி பயின்றவர்களில் நானும் ஒருவன். 1992 காலங்களில் ஆரம்ப கல்விக்கான சிறந்த பள்ளிக்கூடம் அது,கீழாபாளையம்,குறிச்சி,
கருங்குளம்,எல்லா இடங்களிருந்தும் மாணவர்கள் கல்வி பயின்றனர்.இன்றைய நிலை பரிதாபகரமானது.உள்ளுர் வாசிகளே (அம்பிகாபுரத்து மக்கள்)தங்கள் பிள்ளைகளை சேர்பதில்லை including ur frds.750 பிள்ளைகள் படித்த பள்ளியில் 150க்கும் குறைவான பிள்ளைகள் பயில்கின்றனர்.
98%இஸ்லாமிய கண்மணிகள்

பெயரில்லா சொன்னது…

உங்கள் பணி மகத்தானது, தன்னலமற்றது