புதன், 16 ஜனவரி, 2019

அன்பின் அழைப்புக்கள்


அன்று......கீழக்கரையிலிருந்து ஊருக்குப் புறப்படத் தயாராக இருந்த போது, நெல்லையின் பரந்த அறிமுகமான, கல்வியாளர் , பட்டிமன்ற நடுவர், இலக்கியவாதி, கவிஞர், ரோட்டேரியன் , தொலைக்காட்சி தொடர்களில் நடிகர் என்று பல்வேறு தளங்களில் தடங்கள் பதித்தவருமான,  எங்கள் குடும்ப நண்பர் , மாமா புத்தனேரி கோ.செல்லப்பா அவர்கள் அலைபேசியில் என்னை அழைத்தார்கள்....

"மாமா...எங்க இருக்கிய ? "

" இப்போ கீழக்கரையில் இருந்து கிளம்புறேன் மாமா " என்றேன்  ...
" எந்த வழியா வாரிய ? "
 "சாயல்குடி , தூத்துக்குடி ரோட பிடிச்சு நம்ம ஊர் வாறன்."

" அப்போ ரொம்ப நல்லதாப் போச்சு......வல்லநாடு தாண்டி, வசவப்பபுரத்துக்கு அடுத்து பாறைக்குளம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் ரோட்டோரமா...எங்க தோட்டம் இருக்கு...அங்க வந்துடுவீங்களா..." ?என்று கேட்டார்..

" மாமா...என்ன விசேஷம்...உங்க தோட்டத்துல ? "

" வருஷா வருஷம் நடக்கிற..பொங்கல் சந்திப்பு அங்க  நடக்கு...எங்க வீட்டுல எல்லோரும் வாரங்க...நம்ம வக்கீல் தீன் சார்வாள்... வாரா.. நீங்களும் வந்துடனும்.சாப்பாடெல்லாம் அங்க தாம் ".. என்றார்.

" அவசியம் வந்துருதேன்...ஆனா...சாப்பிட ஊருக்குப் போகணும்..எங்க மச்சினன் வகைல உள்ள கல்யாணத்துக்கு...காலைல போக முடியல....உறவுகள் எல்லாம் சேரும் விருந்துக்காவது போகணும்...என்னை உட்டுருவியளா ?." என்று கேட்டேன்.

" தாராளமா...போங்க.." என்று அனுமதித்தார்.

முன்னெல்லாம்...திருனவேலியில் இருந்து 160 கிலோ மீட்டர் தூரமுள்ள ராமநாதபுரம் பக்கம் உள்ள கீழக்கரைக்கு போகனும்ன்னா,சுமார் 6 மணி நேரமாவது...ஆகும்.
அம்புட்டு பள்ளம் மேடு..பள்ளம் ...நொடி இருக்கும்.

இப்போ...கிழக்கு கடற்கரைச் சாலை T. R. பாலு மத்திய அமைச்சராயிருந்த காலத்தில் ...ஜம்முன்னு பள பளன்னு ரோடாக்கி வச்சதால்.. இரண்டரை மணி நேரத்தில் போகலாம் , வரலாம்.

ஒரு...12.30 மணி இருக்கும்...மாமா சொன்ன இடத்துக்கு... பக்கமா நின்னு...போன்ல கூப்பிட்டேன்...
அடுத்தநிமிஷம் பன்னூல் ஆசிரியர் வக்கீல் தீன் சார், தோழர் பிரின்ஸ் சகிதம் , திருநெல்வேலி தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் என் வருகையை எதிர் பார்த்து நிற்பதைப் பார்த்து அவர் பக்கம் போய் நின்றேன்
மாமாவுக்கு அம்புட்டு சந்தோசம். நண்பர்களுக்கும் தான்.

காரை..ஒரு ஓரமா...நிப்பாட்டிவிட்டு அந்தத் தோட்டதுக்குள் நுழைந்தோம்...

புத்தனேரி செல்லப்பா மாமா குடும்ப ஆண் பெண் மக்கள் , பேரன்,  பேத்திகள் , முன்னாள் இந்நாள் இளைஞர்கள் , குழந்தைகள் என்று அந்தக் குடும்பத்தின் தலைமகன் 93 வயது பெரியவர் கோபால் ஐயா  தலைமையில் கூடி குதூகல மகிழ்வுடன் அங்கே இருந்தார்கள்.

மாமா குடும்பமும் திருனவேலியில் செல்வாக்கு மிக்க பண்ணையார் குடும்பம் தான்; இவர்களின் நிறுவனமும்,  பொறியாளர்களும் ஸ்ரீ வைகுண்டம் அணை க்கட்டினை உருவாக்கத் துணை நின்றார்கள்.


முந்தைய தலை முறையிலிருந்து தான் இளைய தலைமுறையினருக்கு ,  பண்பாடு கற்றுத்தரப்படுகின்றது..வயதில் சிறியவர்களான எங்களை அந்த மூத்த ஆசிரியர் ,  கல்வியாளர் எழுந்து நின்று கரங்குவித்து வரவேற்றார்...நான் குறுகிப்போனேன்....

அத்தோடு 70 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் குடும்ப மூத்தவர்கள் District Board தேர்தலில் நின்ற ...காலம் பற்றியெல்லாம் அவர்கள் சொன்னது...என்னை பிரமிக்க வைத்தது.அவ்வளவு நினைவாற்றல்...
அங்கே தோழர்கள் வீரபாகு , ராமலிங்கம் இருந்தார்கள்.

அந்த இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முத்தாலங்குறிச்சியில் எங்கள் குடும்ப நிலங்கள் பற்றி நண்பர் வழக்கறிஞர் தீன் அவர்கள் ,  அங்கே இருந்தவர்களிடம் சொல்லிக்காட்டினார்கள்.

புத்தனேரி மாமா அந்தத் தோட்டத்தை சுற்றிக்காட்டினார்...பம்பு செட்டை போடச்சொன்னார்...பெருகி சீறிவந்த அந்தக் குழாய்த் தண்ணீரை என்னுடைய கரங்களைக் குவித்து குடித்துப் பார்த்தேன்...தாமிரபரணியின் சுவை...அந்தத் தண்ணீரில் இருந்தது.

மாமாவின் குடும்ப உறுப்பினர்கள், புதுமாப்பிள்ளைகள் ,  புது மணப்பெண்கள் தத்தம் துணைகளோடு அந்தத் தோட்டத்திற்கு  கார்களிலும் மோட்டார் சைக்கிள் களிலும் வந்து இறங்கிக்கொண்டு இருந்தார்கள்.

வருகை தந்த எல்லோருக்காகவும் மேலப்பாளயத்தின் இஸ்லாமிய பண்டாரிகள் இருவர் பிரியாணி தயாரித்துக்கொண்டு இருந்தார்கள்.

முன்னதாக வந்தவர்கள் ,  அங்காங்கே விரிப்புகள் விரித்து அமர்ந்து இருந்தார்கள்.


சிலர் பம்ப் செட் கிணற்றில் ஆனந்தமாக குளித்தபடி இருந்தார்கள்...சிலர் வயல் ,  தோட்டத்தின் ஒவ்வொரு கோணத்திலும் நின்று,  படமாக்கிக் கொண்டு இருந்தார்கள்.
இவற்றை பார்த்துக்கொண்டே நானும் அண்ணன் தீன் அவர்களும் ஒரு மரத்தடியில் புல் தரையில் அமர்ந்து கொண்டோம்...எங்களைப்பார்த்து மாமா புத்தனேரி செல்லப்பா அவர்களும் தரையில் அமர்ந்து கொண்டார்கள்...

நான் வழக்கமாக எங்கள் தோட்டத்தில் இவ்வாறு பல நேரங்களில் புல் தரையில் இருப்பேன் என்றேன்...

" காலையில் கல்லும் , மாலையில் புல்லும் அமர்வதற்கு உகந்தது " என்று... எங்க வாப்பா சொல்லுவார்கள்...நன் பகலில் நாங்கள் அமர்ந்து இருந்த புல் தரை...நீண்ட பயணம் தந்த சூட்டைத் தணித்து... குளிர்ச்சியை வழங்கியதை உணர முடிந்தது.ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக அங்கிருந்தேன்.

" மாமா...கல்யாண வீட்டு நிக்காஹ் அரங்கில்,  என்னைக் காணாத உறவினர்கள்..
என்னவோ ஏதோ என்று போனில்  விசாரிக்கின்றார்கள்...நான் கிளம்பட்டுமா ? "
என்று கேட்டு விடை பெற்றேன்.

" சைவமாவது சாப்பிட்டு போங்களேன்.. என்று சொன்னார்கள்."
"..இல்ல மாமா ....போய்...  கல்யாண வீட்ல சாப்பிடணும் " என்று வந்துவிட்டேன்.

Family Getogether எல்லாம் கீழக்கரை ,  காயல்பட்டினம் , அதிராம் பட்டினம் தாண்டி முஸ்லிம் குடும்பங்களில் இல்லாமல் போய்...எங்காவது சில குடும்பங்களில் மட்டுமே நடக்கிற கதை ஆகிவிட்டது...

எதையாவது ஒன்றை  வைத்து குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இருப்பது... விருந்து உண்பது.....என்பதெல்லாம் ஒய்ந்தே போய் விட்டது....

என் மனசெல்லாம் நிறைந்த , அந்த மூத்த 93 வயது  பெரியவர்...கோபால் மாமா தான் குடும்ப ஒற்றுமை சின்னமாக என் கண் முன்னே தெரிகின்றார். அந்த ஆல மரத்தில் கிளைகளாக.... விழுதுகளாக அங்கே பூட்டன் பூட்டி வரை அந்த உறவுகள் ...உள்ளன.

அதற்கு சாட்சிகூற அங்கே நின்ற பல கார்களில் அவரது பெயரே கண்ணாடியில் ஜொலிக்கிறது....மகன்கள் , மகள்கள் பேரப்பிள்ளைகள் தாத்தாவின் பெயரை வெளிப்படுத்தி பெருமை அடைகிறார்கள்.

இன்னும் சொல்வேன்.

பொங்கல் 2018







1 கருத்து:

Jamesha habibullah சொன்னது…

எனக்கும் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் போகும் நினைவு வந்தது அண்ணா