செவ்வாய், 5 ஜூலை, 2016

பெருநாள் வந்தாச்சு.......எங்க ஊர் பெருநாள்


பெருநா கொண்டாட்டம்


அப்போ எல்லாம் ஒரு பத்து பதினான்கு வயசு வரை பெருநாள் சட்டைத்துணி மற்றும் வேஷ்ட்டியை எங்க வாப்பாவும்,உம்மாவும் உடன் வர நாங்களே தேர்ந்தெடுப்போம்.
நினைவு தெரியாத காலத்திலே....அவுக எடுத்து தாரத உடுத்தி இருக்கோம்.
டெரிக்காட்டன், பாலிஸ்டர் துணிகளை சட்டைக்கு எடுத்து விட்டு எங்க பக்கம் யாதவாள் தெரு, கொம்பையா டெய்லர் வீட்டுக்கு போய் சேர்வோம்.
சட்டைக்காலர் எவ்வளவு பெருசா இருக்கோ அவ்வளவு பெருமையா இருக்கும்.
பெல்பாட்டம் எவ்ளோ அகலமா இருக்கோ அந்த அளவில் சட்டையின் வயிறு,முதுகின் கடைசியில் அகலமா விரிந்து இருக்கும்...பட்டி வைத்து பிரெஸ் பட்டன்களோடு தைப்பார்கள்.
" பெருநாளைக்கு மூணு நாளைக்கு முன்னாடியே தாறேன்" னு .....சொன்ன கொம்பையா, பெருநாள் அதிகாலை தான் தருவார்.
பல பெருநாள் ராவு தூக்கங்கள் கொம்பையா வீட்டு திண்ணையில் தான் நடந்தேறும்.
அவர் வீட்டின் தொழுவத்தில் , .... எருமை மாடுகள் மோழுகிற மூத்திர சிதறல்கள் திரேகம் முச்சூடும் தெளிக்கும்...
வீட்டுக்குப் போனால் சட்டை வேஷ்ட்டியில ஒரு மாதிரி வீச்சம் அடிக்கும்.
ஒரு மட்டும் காலை 6 மணிக்கு முன்னால சட்டை கிடைச்சிடிடும்....ரண்ண்டு சட்டை தைக்க கொடுத்தால் இன்னொன்னு 6 நோன்பு பெருநாளைக்குத்தான் கிடைக்கும்.
அந்த சட்டையை போட்டுக்கிட்டு தொழுதுட்டு வந்து கழட்டி வச்சிட்டுத்தான் மறு சோலி.....
உள்ளுக்குள்ளே மஞ்சக்கலரில், அரக்கு பார்டர் வச்ச துபாய் பனியன் நல்லா இருக்கும்..வெய்ட் கிளப் போற வார பையன்களை , அது எடுப்பா காட்டும்
அந்தக் கோலத்தில் என் போன்றவர்கள்,வீட்டுக்கு வெளியே நிப்பதைப் பார்த்தால் ,எங்க வாப்பும்மாவும், அவளோடு சேர்ந்த மீத்தீன் பெத்தும்மாவும் "மூத்தவளே.... இப்பிடி பாடிய போட்டுக்கிட்டு வெளிய , ஆத்துக்கு கீத்துக்கு போகாத..கண்ணு பட போவுதுலே,"என்று செல்லிவைப்பாக....
எங்க வாப்பா அந்தக் கோலத்தை ரொம்ப ரசிப்பா....." இது நல்லா இருக்குப்பா" என்பார்கள்.
பெருநாள ஒட்டித்தான்...கல்லூரி க்கு போக வரதுக்கு ,பேண்ட் தைக்கிற வழக்கம் உண்டு....
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வாசல் பக்கம், ஒரு மாடியில் பிரின்ஸ் டெய்லர் என்று ஒருவர் இருந்தார்.
திருனவேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பேட்டை வட்டார இளைஞர்கள் , மாணவர்கள் , நடுத்தர வயசுக்காரர்கள் அங்கே சென்று பேண்ட் தைத்து போடுவதை பெரிய கெளரவமாக வைத்திருந்தார்கள்...
இடுப்புக்கு கீழே இரண்டு கால்களும் பிரியும் இடத்தில்..... அழுத்தி , கைகளில் அளவு டேப் வைத்துக் கொண்டு... அவர் பேண்டின் கால் அளவு எடுப்பார்....கொஞ்சம் கூச்சமாக இருக்கும்...சிலர் நெளிவார்கள்....சிலர் குதிப்பார்கள்....அவ்வளவு சரியாக இருக்கும்...அவர் தைத்து தருகிற பேண்ட்.
இன்றைக்கு கொம்பையா...வாய்க்கால் பாலம் அருகே....ஒரு சின்னக் கடை வைத்து தொழில் நடத்துகிறார்...
"தாஸு...எப்படி போகுது "? என்று கேட்டேன்...
"பொன்பிளைங்க...சட்டை துணி மணி தச்சுக் குடுக்கேன்யா.." என்றார்.
ராம்ராஜ் இருக்கா...?
ஷெல்டன் இருக்கா..?
ஹேரி வில்லியம்ஸ் இருக்கா..?என்கிற கேள்விகள் எழுந்ததனால்...
எங்க ஊர் பக்கம் கொம்பையா....தையக்கடை ஜமால் , கோம்பை டெய்லர் ,திருமலை பேர் எல்லாம் மறந்து போச்சு....
தைய்யக்கடையோடு...சட்டை பேண்ட் துணியும் வச்சு யாவாரம் பண்ணுற டெய்லர்கள் நல்ல முன்னேறியிருக்கிறார்கள்.அதில் பலர் என் நண்பர்கள்.
வளரட்டும் பெருநாட்கள்...
மலரட்டும் மகிழ்ச்சிப் பெருக்கு!முப்பது நோன்பு வச்சு பெருநா பாக்கிற மனசின் குஷி....
அது ஒரு தனி ரகம் தான். அதுக்கு வேற என்னத்த 
பகரமா பார்க்கமுடியும்?நாற்பது வருஷத்துக்கு முந்தி....பாப்ளின் சட்டையும் ...மல்லு வேஷ்ட்டியும் பெரிய ஆட்களுக்கும்.....கலர் துப்பட்டாவும் மூட்டி தச்ச வேஷ்ட்டியும்பொம்பிளைகளுக்கும், ...டவுசர் சட்டை,பாவாடை தாவணிஇதெல்லாம் இள வயசுப்பிள்ளைகளுக்கும்...கிப்ஸ் ,சங்கு மார்க்,கே.ஏ.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன்,உஸ்மான் பிராண்ட் லுங்கிகள்,துபாயில் இருந்துவந்த மஞ்சள்....அரக்கு கலர் பனியன்கள்,பிரஸ் பட்டன் வச்சு தச்ச சட்டைகள் இளவட்டங்களுக்கும்  போதுமானதாக இருந்தது.இப்ப மாதிரி ரெடிமேட் சமாச்சாரங்கள் 
எதுவும் அப்போ கிடையாது.டவுன் ஆர்.எம்.கே.வி...அதுக்குப்பக்கத்தில் நாவல்ட்டி கிளாத்,திருநெல்வேலி ஜங்ஷனில்  த.மு.பில்டிங்கில் 
ஜீனத் செல்வ மகால்.அது மாடியில் அதுக்கு கீழே ஏ.பி.சி.துணிக்கடைஅப்புறம் ராஜா காம்ப்ளக்சில் கல்பனா சங்கீதா ஜவுளிக்கடைஎன்று தான் திருனவேலி இருந்தது.


அங்கேயே அப்படி என்றால் மேலப்பாளையத்தை

 சொல்லணுமோ?பசார் ஹக்கீம் ஜவுளிக்கடை, ஆர்.எம்.ஏ. அப்துல் சமத் கடைஇந்த இரண்டும் ஆள் நிக்க இடம் இல்லாமல் 
பெரு நா ராவு வரை இருக்கும்.அதுக்கு பிறகு சாச்சப்பா காஜா கடை,  
காட்டுவா ஜவுளிக்கடை என்று விரிந்தது.வகை வகையா,  கலர் கலரா தொப்பிகள் 
பஜாரில் குவிந்து கிடக்கும்.அரபு நாட்டு புண்ணியத்தில் இன்னைக்கு 
வெள்ளை சீனா தொப்பிபோதும்ன்னு ஆகிப்போச்சு.இன்னும் பல பேருக்கு 
வேண்டாமேன்னு மாறிடுச்சு.இன்னைக்கு திருனவேலியில் உள்ள ஜவுளிக்கடைகளை 
எண்ணி முடிக்கமுடியாது .ஆர்.எம்.கே.வி.,போத்தீஸ்,சென்னை சில்க்ஸ்,
தொடங்கி பேர்சொல்ல த்தெரியாத அல்லது வாயில் 
நுழையாத பெயரில் எல்லாம்ஜவுளிக்கடைகள் வந்து விட்டன.


கருத்துகள் இல்லை: