ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

எங்களை மனிதர்களாக்கிய சதக்கத்துல்லாஹ் அப்பாக்கல்லூரி.


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை,ரஹ்மத் நகரில் அமைத்துள்ளது  சதக்கத்துல்லா அப்பாக் கல்லூரி.....
என் போன்றவர்கள்...மனிதனாக வாழ அடிப்படை அமைத்துத்தந்தது எங்கள் கல்லூரி ...என்றே எப்போதும் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்...
பேராசிரியர் நசீருதீன்,பேராசிரியர் முஹம்மது பாஸி ஆகிய இருவரும் முதல்வராக இருந்த காலத்தில் இளங்கலை கற்கும் வாய்ப்பு..... எங்களுக்குக் கிடைத்த காலத்தின் பரிசு என்றே சொல்லலாம்........
கல்லூரியில் சேரத் தகுதிக்குரிய பிளஸ் டூவின் மதிப்பெண்கள் என்று வைத்து இருந்ததைவிட இரண்டு மதிப்பெண்கள் குறைவாகவே எடுத்து இருந்தேன்....
நான் கல்லூரியில் நுழைவுப்படிவம் வாங்கச்சென்ற அன்று என்னோடு என் மைத்துனர் எஸ்.எம்.தாஜூதீனும் வாங்க வந்து இருந்தார்..
கடுமையாகக் காற்றடித்த, ஜூன் மாதத்தின் ஒருமதிய வேளையில், நானும் தாஜூதீனும் ஆளுக்கொரு சைக்கிளில் மேலப்பாளையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த எங்கள் கல்லூரிக்குச் சென்றோம்..
தாஜ் எனக்கு முன்னால் படிவம் கேட்க, நானோ வரிசையில் அவனுக்கு அடுத்ததாக நின்று கொண்டு இருந்தேன்..
என் முறை வந்தது....ரூபாய் ஐம்பதைக் கைகளில் வைத்துக் கொண்டு காத்து நின்றேன்...
"எந்த குரூப்"? அங்கே கவுண்டரில் இருந்தவர் கேட்டார்.
"பி.ஏ ".....என்றேன்.
என் பக்கத்தில் நின்ற மைத்துனர் தாஜுதீன்.,"என்னது பி.ஏ.வா ?.....வெளங்கும்.......நீ மட்டும்தான் ஒத்த காக்காயா....அங்க போய் இருக்கணும்...நாங்கள்லாம் பி.காம் போறோம்...நல்லா யோசித்துக்கோ"....என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டான்.
அந்த ஒரு வார்த்தை..... என் வாழ்வை....படிப்பின் தலைவிதியையே மாற்றி ......அங்க இங்கசுத்தவச்சி.....அரசியல்மேடைகளில் ஏற்றி......பொதுவாழ்வில்.....கல்விப்பணியில்....போகவைத்து என்னைக் காடுவெட்டி விவசாயத்தில் கொண்டு வந்து விட்டுள்ளது....
நானோ பி.ஏ..படித்து பின்னர் பி.எல்.முடித்து வழக்கறிஞர் ஆகவேண்டும் என, நீண்ட நாட்கள் கனவுகள் கண்டு வந்தேன்....அந்தக்கருப்புக் கோட்...மற்றும் கவுனையும்,அணிந்து யாராவது சென்றால்...என் மனதுக்குள் இனம் புரியாத ஏக்கம் வந்தே செல்லுகிறது...என்னால் தாங்க முடிவதில்லை...வக்கீலாக ஆகணும் என்று நினைத்த ஆசை நிறைவேறாமல் .....கனவாகவே போய் விட்டது......
பி.காம்.பாடப்பிரிவில் சேர்ந்தேன்...கல்லூரி முதலில் பயத்தைத் தந்தது....பிரமிப்பாய் இருந்தது....கலகலப்பாய் இருந்த நட்பின் வட்டங்கள் விரிந்தது...
நாங்கள் சதக்கத்துல்லா அப்பாக கல்லூரியில் மாணவர்களாக இருந்தபோது “அக்கால வழக்கப்படி” ஸ்ட்டெப்...கட்டிங் ....ஸ்டைல் எங்களையும் பற்றிப் பிடித்திருந்தது...என்னோடு கல்லூரிக்கு உடன் வருகிற தாஜுதீன்,முத்துப்பாண்டி, மைதீன் அப்துல் காதர்,,அயூப்கான்,செய்யதுதாமீம்....உள்ளிட்ட அனைவரும் அதே ஸ்டைலில் தான் முடியை அலங்கரித்து இருந்தோம்.....
அதற்கு ஒருதலைராகம்.... வாழ்வே மாயம் முதலான தமிழ் சினிமா படங்களும்..இந்தியில் வெளி வந்த குர்பானி...ஷான்....தி பர்னிங் ட்ரெயின் .படங்களும் காரணமாய் அமைந்தன...
எங்களின் ஸ்டெப் கட்டிங் தலையழகை.... கலையழகை பேராசிரியர் நசீருதீன் ஒரு போதும் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்....ஒருநாள் கல்லூரி நுழைவாயில் அருகே நின்று கொண்டு இருந்த அவர், கடும் வேகமாகக் கடக்க முயன்ற எங்கள் கோஷ்ட்டியை தடுத்து நிறுத்தினார்.... .....
”என்ன.... கொண்டையை...வளர்ப்பதில்....போட்டியா வச்சு இருக்கீங்க?”...என்று கடும் சிரிப்பின் ஊடே என்னை பார்த்து கர்ஜித்தார்..... .... "ஒழுங்கு மரியாதையா....நாளைக்கு காலேஜ் வரும்போது....முடிய வெட்டிக்கிட்டு வரணும்"....
“சரி சார்”....
“நான் சொன்ன மாதிரி....அப்படி முடி வெட்டாம...வந்தீங்கன்னு வச்சுக்கோ.....நானே உங்க முடியவெல்லாம் வெட்டிப்புடுவேன்...வெட்டி.... ”.....
மனுஷன் பயங்கரமான ஆளாச்சே....செஞ்சாலும் செய்திடுவார்...என்று பயந்துபோய் அடுத்தநாளே நான் தலைமுடி அமைப்பை மாற்றிக்கொண்டேன்....
மத்த நண்பர்கள் எல்லாம் அவர் சொன்னதைக் கண்டு கொள்ளவே இல்லை...அடுத்து வந்த மாதங்களில்.எங்கள் முதல்வர் பேராசிரியர் நசீருதீன் உடல் நலிவுற்று இறந்து போனார்.
அவர்கள் காலத்திற்குப்பின்னர் பேராசிரியர் முஹம்மது பாஸி அவர்கள் முதல்வர் ஆனார்கள்...அவர்கள் முதல்வர் பணி முடித்து இன்று அமெரிக்காவில் உள்ளார்கள்....
இன்றும் என்னோடும்.... என் சகோதர சகோதரிகளோடும் தொலைபேசியின் மூலமாகத்தொடர்பு கொண்டும்,...ஒவ்வொரு முறை ஊர் வரும்போதும் எங்கள் விருந்துக்கு வருவதையும், வழக்கமாக வைத்துள்ளார்கள்...அதையும் தாண்டி முகநூலில் என்னோடு எப்போதும் தொடர்பில் அவர்கள் இருக்கிறார்கள்....
அவர்களுக்குப் பின்னர் முதல்வராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் முகம்மது பாரூக் அவர்களும் அப்படித்தான்....என் கல்லூரி முதல்வர்கள் மூவரோடு பாசமான நட்பு கொள்ளவைத்த காலங்களை அடிக்கடி... மனக்கண் முன் நிறுத்திப் பார்க்கிறேன்...
கல்லூரியின் எல்லா விழா நிகழ்வுகளுக்கும் அழைப்புகள் வருகின்றன....கல்லூரி உருவாக்கம் பெற உழைத்த எங்கள் மாமா மேலப்பாளையம் முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் அவர்களின் பிள்ளையாக, நானும் அவர்களோடு வலம் வந்ததால் கிடைத்த அன்பாகவும் அது இருக்கலாம்.
முன்னாள் மாணவர்கள் கூடும் கூட்டங்கள்,மற்றும் கல்லூரியின் அழைப்புக்கள் வருகிற அனைத்துக் கூட்டங்களிலும், பெரும்பாலும் கலந்து கொள்கிறேன்...கல்லூரியின் அழைப்பை தாய் வீட்டின் வரவேற்பாகவே எப்போதும் நான் எண்ணிக் கொள்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த வாரம் கல்லூரியில் இருந்து வந்த கடிதம் ஒன்றை இரவில் நெடு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன்....Board Of Studies in Commerce (Finance) என்கிற படிப்பிற்கு பாடத்திட்டம் அமைக்கிற குழுவில் உறுப்பினராக என்னையும் இணைத்து இருந்தார்கள்...என் கல்லூரி எனக்குத்தந்த மிகப்பெரிய கண்ணியமாக எண்ணுகிறேன்...அதைச்சொல்ல வேண்டுமென நினைத்து ஒரு வாரம் கழித்து இன்று தான் எழுதுகிறேன்..(கல்லூரியப்பற்றி எழுத இன்னும் நிறைய உள்ளது)


கருத்துகள் இல்லை: