பக்கங்கள்

புதன், 18 செப்டம்பர், 2024

10 ஆம் நம்பர் 22 ஆம் நம்பர் பஸ்


 நடப்பது என்பது குழந்தை பருவத்தின் நிமிர்ந்த வளர்ச்சி.

தவள்வது, நிற்பது,நடப்பது, அப்புறம் ஓடுவது எல்லாம் மனித உடலின் வளர்ச்சிகளில் ஒன்று.

வீட்டுக்குள்ளேயே நடந்து வீதிக்கு வெளியில் நடந்து  வாய்க்காலுக்கு.... ஆத்துக்கு போவது என்பது எங்க பக்கம் எல்லாம் சகஜமாகும்.

மனுஷன் நடந்து கொண்டிருந்த வரையில் அவனுக்கு வியாதிகள் எல்லாம் குறைவாகவே இருந்தன. இப்ப நோய் வந்த பிறகு அல்லது வராமல் இருக்க நடந்து கொள்கிறான். 
இன்னைக்கு 5 km 10 கிலோமீட்டர் நடந்தேன் என்பதெல்லாம் பெருமையைப் பீத்திக் கொள்ளத்தான். அல்லது என்னால் இம்புட்டுத் தூரம் நடக்க முடியும் என்பதை காட்டிக் கொள்ளத்தான்.

ஒரு எழுபது எண்பது வருச காலத்துக்கு முந்தி வரை எங்க போறதாக இருந்தாலும்  நட தான்....
வெளியில எங்கயாவது போகணும்னா இளமையான காலத்தில் நடந்து போறது அதுல ஒரு சொகம் இருந்தது...  பொட்டல்புதூர் கொடிக் 
கட்டு பாப்பதுக்கு சாயந்திர வேளைக்குப் பிறகு நடக்க ஆரம்பிச்சு பொலபொலன்னு விடிய முந்தி அங்க போய் சேர்ந்து சந்தனக்கூடு பாத்து வந்த கதை எல்லாம் உண்டு.

மனுசனாகப் பெறந்தவன் நடந்துக்கிட்டு இருந்தா தான் அவனுக்கு மரியாதை.

நட மொடங்கிட்டா அம்புட்டுத் தான். அப்புறம் சீன்ட்ரம் ஆரம்பிச்சுரும்..... நட நட  தான்.

கொஞ்சம் காசு உள்ளவங்க, பணம் நடமாட்டம் இருந்தவங்க வீட்ல சைக்கிள் வாங்கி வச்சார்கள். அந்த காலத்துல அதுக்கு லைசென்ஸ் வேற. 
சைக்கிள் இருப்பதை பெருமையாக பேசிக் கொண்டார்கள்.

திருநவேலி டவுன் ஒரு அஞ்சு ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்ததால் நடப்பது லேசா இருந்தது. 
அதுவே கொஞ்சம் தூரம் ஆகிவிட்டால் மாட்டு வண்டி குதிரை வண்டி தான் என்று இருந்தது. 
டவுன்ல இருந்து சரக்கு வாங்கிட்டு வரவும் இருக்கிற ஜவுளிகளை அங்கு கொண்டு லாரி ஆபீஸ் சேர்க்கவும் மாட்டு வில் வண்டிகளும் சக்கடா வண்டிகளும் தேவைப்பட்டது.

எப்படியோ கொஞ்சம் கால வளர்ச்சியில் பஸ்கள் அறிமுகமாகச்சி.

அதுக்குக் காத்து கிடந்து போறதிலும் ஒரு பெருமை இருந்தது. விட்டுக்கொடுத்தால் யாரும் ஏறலாம் இந்த சமத்துவம் வேறு. 
ஆம்பளைய ஆட்கள் மட்டும் போய்க் கொண்டிருந்த பஸ்ஸில் பொம்பளைகளையும் கூட்டிட்டு போக ஆரம்பித்தார்கள். 
சில குடும்பங்களில் அதுவே சந்தோசமாக இருந்தது. 

திருவிழா நாட்களில் பண்டிகை நாட்களில் டவுனுக்கு போய் தனக்கும் பிள்ளைகளுக்கும் துணி எடுத்து வருவது ஒருவகையான ஆனந்தம். அதுக்காகவாவது தன்னுடைய பெண்டு பிள்ளைகளை பஸ்களில் அழைத்துச் சென்றார்கள்.

.அப்போவெல்லாம் டவுணுக்கு எங்க ஊர் மேலப்பாளையத்திலிருந்து  போக....22  ஆம் நம்பர் பஸ்ஸில் ஏற வேண்டும்.

 அந்த பஸ் வி.எஸ்.டி பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு.... அப்படியே அபுல் கலாம் ஆசாத் வீதி, அண்ணா வீதி, கொடிமரம்,  வாய்க்கால் பாலம், என்று  போய்..... நத்தம் ,கருப்பந்துறை, குறுக்குத்துறை, வாகையடி முக்கு, மேலரதவீதி என்று தளவாய்  அரண்மனை வாசல் முன்பாக நிற்கும்.

கருப்பன் துறை ஏற்றத்தில் இருந்து ,குறுக்குத்துறை திருப்பம் வரை, ரோடு மிகக் குறுகலாகவும்....  கிழக்குப் பகுதி  பள்ளமாகவும், மேலப் பகுதி வயக்காடாகவும் இருக்கும்.

பஸ் முழுக்க ஆள் நெருக்கடி அதிகமாகி...ஒரு பக்கமா சாஞ்ச படி திக்கித் திணறி....போகும்.

சாலையின் விளிம்பை தொட்டுக்கொண்டு பஸ் செல்வதை , உள்ளிருந்து பார்ப்பதற்கு கொஞ்சம் பீதியாகவே இருக்கும்.

 அதற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு, இன்றைய வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி,வாகையடி முக்கு, குறுக்குத்துறை தொட்டு.... பழையபடி மேலப்பாளையம் ஊருக்குள் அண்ணா வீதியில் நுழைந்து... இடது புறம் திரும்பி பஸ்டாண்ட் மருத்துவமனை வாசலில் நின்று, குறிச்சி   இப்போதைய ரவுண்டானா ,விஎஸ்டி பள்ளிவாசல்..... என்று போய்க்கொண்டிருக்கும்.

 அந்தக் காலத்தில் தாஜ்மஹால் டிரான்ஸ்போர்ட் என்று பெயரை வைத்து அந்த பஸ் ஓடிக்கொண்டிருந்தது...

 அந்த பஸ் ஒரு டிரைவர் பாட்டையா ஓட்டிக்கொண்டு இருப்பார்.

 அதற்குப் பிறகு பேரின்பவிலாஸ் பஸ் ஓடத்துவங்கியது.  பின்னர் MPR ட்ரான்ஸ்போர்ட் , அரசு  பஸ்... அதுவும் கட்டபொம்மன் போக்குவரத்து கழகத்தில் இருந்து ஒரேநேரத்தில் பஜார் அண்ணா வீதியில் எதிரும் புதிருமாக 2 பஸ்கள் நுழைந்து செல்லக்கூடிய காலம் ஒன்று இருந்தது.

 இன்றைக்கு 2 கார்கள் சிக்கி முக்கிக் கொண்டு செல்வதை உணர்கின்றோம்.

மேலப்பாளையத்தில் மேற்கு புறத்தில் உள்ள எங்கள் தெருவில் இருந்து  கொடி மரம், அண்ணா வீதி, காயிதே மில்லத் பள்ளிக்கூடம் ரோடு.... உள்ளே நுழைந்து, எதிரே இன்னொரு வேன் அல்லது சிறிய வகை லாரி வந்து விட்டால் அந்த சாலையில் இருந்து வெளியேறுவதற்கு போக்குவரத்தின நெருக்கடியினால் பத்து நிமிடங்கள் ஆகின்றன.

அதற்காகவே வாய்க்கால் பாலம் சென்று கால்வாய் கரை உள்ள சாலையின் வழியாக குறிச்சி வந்து முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி... ஜங்சன், பாளையங்கோட்டை அல்லது அம்பை ரோடு செல்வதற்கு முடிகிறது. 

இந்தச் சாலை விரிவு படுத்தப் பட்டு வருவது.... மேலப்பாளையத்தில் மேற்கு பகுதியில் உள்ள மக்களுக்கு, இன்னும் நத்தம் பகுதியில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பாளையங்கோட்டை போய் வருபவர்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக உள்ளது

 இதற்கெல்லாம் காரணம் அண்ணா வீதி பழைய வீதியாக இருப்பதே.....

அதே நேரம் முன்னர் நடந்தோ....

 சைக்கிளிலோ வந்துதான்  மீன், இறைச்சி, காய்கறிகள் ,பல சரக்குகள் வாங்கி செல்வார்கள்.

 இன்றைய காலம் அனைத்து வீடுகளிலும் ஒன்று இரண்டு பைக்குகள் உள்ளன.

 அந்த பைக்கு களில் வரக்கூடியவர்கள்.... எங்கெல்லாம் செல்கிறார்களோ.... அந்தக் கடை வாசல்....சாலை, அவர்களுக்கு பார்க்கிங் ஆக மாறிவிடுகிறது.

அதுவே அனைத்து போக்குவரத்துகளுக்கும் இடையூராய் மாறிப்போகிறது...

அரசு பஸ் ஊருக்குள் வந்து செல்வது ஒரு நாளைக்கு  பகலில் 12 முறையும்  இரவில் 5 முறையும் வந்து செல்ல வேண்டும் என்பது குறைந்த பட்ச விதியாகும்....

 ஊரில் நெருக்கடியான போக்குவரத்து உள்ளதால்  அரசு பஸ்சை ஓட்டக்கூடிய டிரைவர்கள் எவரும் மேலப்பாளையம் ரூட்டில் வந்து ஓட்ட விரும்புவது இல்லை.

 அண்ணா வீதியில் உள்ள ஹோட்டல்களுக்கு முன்பாக மாலை 7 மணிக்கு பிறகு மிகுந்த சிரமப்பட்டே செல்ல முடிகிறது.

 காரணம் அங்கும் நிறுத்தப்பட்டு உள்ள பைக்குகள் தாம். யாரையும் எதுவும் கேட்க முடிவதில்லை.

 மேலப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பாக 10 ஆம் நம்பர் பஸ் திருநெல்வேலி ஜங்ஷனுக்கு கொக்கிரகுளம் வழியாகச் செல்லும். 

ஒவ்வொரு மணி நேரமும் சொல்லி வைத்தாற் போல் சரியாக வந்து செல்லும் டிவிஎஸ் பஸ் சர்வீஸ் இருந்தது.

 அப்புறம்....  IR, SGKR, GMT கம்பெனி பஸ்கள்.... பாளையங்கோட்டை வழியாகச் சென்று.... திரும்பி... மீண்டும் அதே வழியில் வரும்.

 ஐ ஆர் பஸ் ஓட்டக்கூடிய டிரைவர்கள் பெரும்பாலும் மிக வேகமாக ஓட்டிக்கொண்டு வருவார்கள்.

 ஒரு காலத்தில் மேலப்பாளையத்தில் இருந்து 18 ஆம் நம்பர் பஸ் என்று ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு பஸ் சர்வீஸ் இருந்தது.

 அந்த  பஸ் ஏறி ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு சென்று வந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

 இன்றைக்கு 18 ஆம்  நம்பரையும் காணோம்.

 10 /30 என்று ஒரு பஸ் இருந்தது.

 அந்த பஸ் மேலப்பாளையத்திலிருந்து கோபாலசமுத்திரம் வரை சென்று வரும்.

 நான் விவசாயம் செய்து வருகின்ற காடுவெட்டி கிராமத்திற்கு பஸ் வேண்டும் என்று கேட்டு 14 என்கிற ஒரு பஸ் சர்வீஸ் மேலப்பாளையத்தில் இருந்து சிங்கிகுளம் காடுவெட்டி...

வெங்கட்ரங்காபுரம் வரை சென்று வந்தது.இப்போது 14 A என்று போய் வருகிறது...

 படத்தில் உள்ள பஸ் போன்றே தான் ....தாஜ் மஹால் டிரான்ஸ்போர்ட் பஸ் மேலப்பாளையத்தை சுற்றி வரும்.

 அந்த நினைவுகள் எல்லாம் மனதில் வந்தன.